Friday, March 18, 2016

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும்

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும் 



பாடல்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எளிமையான குறள் . அன்பும் அறமும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அதுவே அந்த குடும்பத்தின் பண்பும் பயனும் ஆகும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். 

ஒரு குடும்ப வாழ்கை இனிமையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். இருப்பினும், எத்தனை குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன ?

ஏதோ ஒரு சில நேரம் சந்தோஷமாக இருந்தாலும், அந்த சந்தோஷம் எவ்வளவு நாள் நீடிக்கிறது ?

எப்போதும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் ?


இல்வாழ்கை என்பது என்ன - குடும்ப வாழ்கை என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் , சுற்றத்தார் இவர்கள் அனைவரும் சேர்த்ததே ஒரு குடும்ப வாழ்கை.

இந்த குடும்ப வாழ்கை அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

ஒவ்வொருவருக்கும் ஒரு  தேவை இருக்கும். இந்தத் தேவைகள் ஒன்றோடு ஒன்று முட்டி  மோதும். அப்போது சிக்கல் பிறக்கும்.

இந்த குடும்ப வாழ்க்கைக்கு இரண்டு விஷயங்களை வள்ளுவர் சொல்கிறார்.

முதலாவது அன்பு.

கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் இவர்கள் ஒருவரோடு ஒருவர் இடையறதா அன்பு செலுத்த வேண்டும். அன்பு அனைத்து சிக்கலையும் விடுவிக்கும். சுயநலம் வரும்போதுதான் சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போய் மன வருத்தம் வருகிறது.  நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற ஆணவ மனப் போக்கு, என் தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டும், மற்றவர்கள் தேவைகள் எப்படியும் போகட்டும் என்று சுயநலமாக நினைப்பது போன்ற அன்பற்ற செய்கைகளால் குடும்பத்தில் சந்தோஷம் குறைகிறது.

சரி, அன்பு மட்டும் இருந்தால் போதுமா ?

போதாது.

அந்த குடும்பம் அற வழியில் செல்ல வேண்டும். அற வழியில் செல்லாத யாருக்கும் இன்பம் இருக்காது. அறத்தை விட்டு விலகினால் கட்டாயம் துன்பம் வந்து சேரும்.

எனவே, குடும்பத்தில் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி, குடும்பத்தில் அனைவரும் அற வழியில் நின்றால் ....

நின்றால் என்ன ஆகும் ?

அன்பு குடும்பத்தின் பண்பாக இருந்தால், அந்த குடும்பம் அற வழியில் சென்றால், அதனால் விளைவது எதுவோ , அதுவே அதன் பயன் ஆகும்.

அதாவது நிரந்தர இன்பமே அதன் பயனாக விளையும்.

ஒருவர் மேல் அன்பு செலுத்துங்கள்.

அற வழியில் செல்லுங்கள்.

இன்பத்தை அடைவீர்கள்.

(For other poems http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_18.html )




No comments:

Post a Comment