Sunday, March 20, 2016

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன்

இராமாயணம் - ஆசை பற்றி அறையல் உற்றேன் 


கம்பன் தன் காவியத்தை தொடங்குமுன் அவை அடக்கம் பாடுகிறான்.

பாடல்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 

பொருள்


ஓசை பெற்று = எப்போதும் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்

உயர் = உயர்ந்த

பால் கடல் உற்று = பால் கடலை அடைந்த

ஒரு பூசை = ஒரு பூனை

முற்றவும் = முழுவதுமாக

நக்குபு = நக்கி குடித்து விட

புக்கு என = புகுந்தது போல

ஆசை பற்றி = ஆசையால்

அறையல் உற்றேன்; = சொல்லத் தொடங்கினேன்

மற்று = மேலும்

இக் = இந்த

காசு = குற்றம்

இல் =இல்லாத

கொற்றத்து = வெற்றி அரசனாகிய

இராமன் கதை அரோ = இராகவனின் கதையை

பாற்கடலில் உள்ள பால் அனைத்தையும் குடிக்க புறப்பட்ட பூனையைப் போல இந்த  இராம காதையை நான் சொல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார் கம்பர்.

சரி. இதில் என்ன பெரிய விசேஷம் ?

இது ஒரு புறம் இருக்கட்டும். 

குற்றவியலில், ஒரு குற்றம் முதலில் மனதில் நடக்கிறது, அதன் பின் தான் உண்மையிலேயே நிகழ்கிறது. அதாவது, குற்றம் முதலில் மனதில் அரங்கேறுகிறது. ஒரு தவறை செய்வதற்கான காரணம் (motive ), செய்யும் திட்டம், என்று பல நிகழ்வுகள் மனதில் ஒத்திகை பார்க்கப்பட்டு பின் நிஜ உலகில் நிகழ்கின்றன. 

தீமைக்கு அப்படி என்றால், நல்லதுக்கும் அப்படியே.

நல்லது நிகழ வேண்டும் என்றால், முதலில் அது மனதில் நிகழ வேண்டும். அதைப் பற்றிய   ஒரு எண்ணம், ஆசை மனதில் விதையாக விழ வேண்டும். பின் அது முளை விட்டு, வேர் பரப்பி, தளைத்து வளரும். 

சரி தானே ?

இன்னும் ஒரு படி மேலே போவோம்.

மனதில் எவ்வளவு பெரிதாக நினைக்கிறோமோ அவ்வளவு பெரிதாக நிகழும். 

40 மதிப்பெண் பெற்று எப்படியாவது தேர்ச்சி அடைந்தால் போதும் என்று நினைத்தால் அவ்வளவுதான் படிப்போம். 

நூத்துக் நூறு பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வர வேண்டும் என்று நினைத்தால், அதற்கான முயற்சியில் ஈடு படுவோம்.

மனம் விரிய விரிய செயலும் அதன் விளைவுகளும் விரியும். 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்பார் வள்ளுவர். 

எப்படி நினைக்கிறோமோ அப்படியே நடக்கும் என்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் தாப்பாகச் சொல்வாரா ?

மார்பு விரிய வேண்டும் என்றால் பளு தூக்கி, உடற் பயிற்சி செய்து மார்பை விரியச் செய்யலாம். 

மனம் உயர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ? 

உயர்ந்த இலக்கியங்களை படிக்க வேண்டும். 

இலக்கியங்கள் மனம் விரிய உதவி செய்கின்றன. 

எப்படி ?

உங்களால் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்க முடியுமா ? உங்களால் எவரெஸ்ட் மலை உச்சியை அடைய முடியுமா ? நீங்கள் எடை அதிகம் உள்ளவர்கள் என்றால், உங்களால் ஒரு வருடத்தில் 10 கிலோ எடையை குறைக்க முடியுமா ?

இப்படி பெரிய இலக்கை கொடுத்தால் நம் விடை முடியாது என்பதுதான். நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று விட்டு விடுவோம்.

பத்து கிலோ குறைக்க முயன்றால் , ஆறு அல்லது ஏழு கிலோவாவது குறைப்போம் அல்லவா ? அது நல்லது தானே. 

மாநிலத்தில் முதல் மாணவனாக முயன்று முடியாவிட்டால் மாவட்டத்தில், அல்லது குறைந்த பட்சம் பள்ளிக்காவது முதல் மாணவனாக வர முடியும் அல்லவா. 

பெரிய காரியங்களை நினைத்து பயப்படக் கூடாது. 

ஒரு ஊரில் ஒரு பூனை இருந்தது. அதற்கு , அதிக பட்சம் ஒரு டம்பளர் பால் குடிக்க முடியும். மிக முயன்றால் இரண்டு டம்பளர் குடிக்கலாம். ஆனால், அந்த பூனை என்ன செய்தது தெரியுமா ? நேரே பாற்கடலுக்குச் சென்றது. அந்த பாற்கடல் முழுவதையும் நக்கியே குடித்து தீர்த்து விடுவது என்று நக்கத் தொடங்கியது. 

நமக்குத் தெரியும், அந்த முட்டாள் பூனையால் முடியாது என்று. 

இறைவனின் புகழ் எவ்வளவு பெரியது ? அதை தனி ஒரு ஆள் சொல்லி முடியுமா ? முடியாது. இருந்தாலும் , நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கம்பன். 

பாற்கடலை பூனை நக்கி குடித்து முடித்துவிட நினைத்ததைப் போல குற்றமற்ற இராமனின் கதையை நான் சொல்ல நினைக்கிறேன் என்கிறான். 

சொல்லி முடித்தானா இல்லையா ? 

பூனையாவது, பாற்கடலை குடித்து முடிப்பதாவது என்று நினைத்திருந்தால் ? 

பெரிய விஷயங்களை கண்டு மிரண்டு விடக் கூடாது. துணிச்சலாக ஆரம்பிக்க வேண்டும். 

இது இலக்கியங்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம். 

மனம் விரிவடைய இல்லக்கியங்கள் வழி செய்யும். 

பாற்கடல் என்ற ஒன்றை நினைக்கும் போதே உங்கள் மனம் எவ்வளவு கற்பனையில் விரிகிறது ?


நல்ல இல்லக்கியங்களை தேடி படியுங்கள். 

உங்கள் மனம் விரியும். மனம்  .உயரும். மனம் உயர உங்கள் வாழ்க்கை உயரும். 

உயரட்டும். 

3 comments:

  1. கம்பரின் அவை அடக்கம் சுவையான விஷயம். அவருக்கே எவ்வளவு அடக்கம்! அதுவும் கூட நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

    ReplyDelete
  2. Wow ... Best article

    ReplyDelete
  3. கம்பரின் ஆசைபற்றி அறையலுற்றேன் என்ற அவையடக்கப்பாடல் மிக சுவையானது.

    ReplyDelete