Sunday, March 27, 2016

இராமாயணம் - இராமன் வரவு

இராமாயணம் - இராமன் வரவு 


நம் வீட்டுக்கு திருமணமாகி மருமகளோ, மருமகனோ முதன் முதலாக வருகிறார்கள் என்றால் வீட்டை எவ்வளவு அழகு படுத்துவோம் ? முடிந்தால் வெள்ளை அடித்து, திரைச் சீலைகள் எல்லாம் மாத்தி, படுக்கை விரிப்பு, தலையணை உறை எல்லாம் மாத்தி வீட்டையே புத்தம் புதிதாக மாற்றி விடுவோம் அல்லவா ?

மருமகன், மருமகளுக்கே எந்த பாடு என்றால்,  பரம் பொருளான இறைவனே வரப் போகிறான் என்றால் என்ன செய்ய மாட்டோம் ?

கம்பனுக்குத் தெரியும் இராமன் அயோத்தியில் பிறக்கப் போகிறான் என்று. அந்த ஊரை தன் கற்பனையில் அழகு படுத்துகிறான் கம்பன். இழைக்கிறான்.

நமது திரைப் படங்களில் கதாநாயகனை அறிமுகப் படுத்தும் போது அவன் காலைக் காட்டி, கையைக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவலைத் தூண்டி முடிவில் முகத்தைக் காட்டுவதைப் போல, இராமன் பிறந்து தொட்டிலில் கிடக்கிறான், அதைக் காட்டுவதற்கு முன்னால் , கம்பனின் காமிரா எங்கெல்லாம் போகிறது , எதையெல்லாம் படம் பிடிக்கிறது என்று பார்ப்போம்.

முதலில், காமிராவை மேகத்தை நோக்கி focus பண்ணுகிறான். Long Shot .

வெண்ணிற மேகங்கள் மிதந்து செல்கின்றன. கடல் நோக்கி சென்று, கடலில் உள்ள நீரை "மேய்ந்து" அயோத்திக்கு வந்து மழை பொழிகின்றன.


பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

பொருள் 

நீறு அணிந்த = திருநீறு அணிந்த

கடவுள் = சிவன்

 நிறத்த வான் = வெண்மையான நிறம் கொண்ட மேகங்கள்

ஆறு அணிந்து சென்று = வழியே என்று

ஆர்கலி = ஆரவாரிக்கும் கடலினை

மேய்ந்து = மேய்ந்து

அகில் சேறு = சந்தன குழம்பை

அணிந்த = அணிந்த

முலைத் = மார்பகங்களைக் கொண்ட

திரு மங்கை தன் = திருமகளின்

வீறு அணிந்தவன் = சிறப்பினைக் கொண்டவன் (விஷ்ணு)

மேனியின் மீண்டதே = கருத்த மேனி போல் மீண்டு வந்ததே

சிவனைப் போல சென்று திருமாலைப் போல வந்ததாம்.

திருமால் வரப் போகிறான் என்பதை சூசகமாக தெரிவிக்கிறான் கம்பன்.

இதற்கு இடையில் மத நல்லிணக்கம் வேறு.  ஒரே மேகம் தான் - சிவனைப் போலவும் இருக்கிறது, திருமாலைப் போலவும் இருக்கிறது.

பரம் பொருளுக்குள் வேறுபாடு ஒன்றும் கிடையாது.  வடிவங்கள்தான் வேறு வேறே தவிர  அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் என்று சொல்கிறான்.

மேலும், பெண்ணின் சக்தியை போற்றுகிறான்.

திருமகளின் வீறு அணிந்தவன் - சிறப்புகளை, வீரியத்தை, சக்தியை கொண்டவன் என்று பெண்ணின் பெருமையை போற்றுகிறான்.

வெண் மேகம் கடலில் சென்று நீரைக் குடிக்கிறது. அதனால் அது கறுத்துப் போகிறது. அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஏதோ கருத்த எருமை மாடு புல் மேய்வது  போலத் தோன்றுகிறது. கடல் நீரை மேய்ந்து என்கிறான்.

அந்த மேகம் எங்கே போயிற்று தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_27.html )

2 comments:

  1. வெள்ளையாகப் போய், கறுப்பாக வந்தது என்பதை என்ன அழகாகச் சொல்லி இருக்கிறார்! அருமை.

    ReplyDelete
  2. //இதற்கு இடையில் மத நல்லிணக்கம் வேறு. ஒரே மேகம் தான் - சிவனைப் போலவும் இருக்கிறது, திருமாலைப் போலவும் இருக்கிறது.// அருமை :)

    ReplyDelete