Monday, March 28, 2016

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம்

இராமாயணம் - இராமவதாரம் - மழை பொழிந்த காரணம் 


திருநீறு அணிந்த சிவனைப் போல வெளுத்த மேகங்கள் கடலில் நீரைக் கொண்டு திருமாலைப் போலக் கருத்து திரும்பி வந்தன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அந்த மேகங்கள் எங்கே போயின ?

நேரே மலைக்கு மேலே சென்றன , அங்கே சென்று மலையின் மேல் மழை பொழிந்தன.

ஏன் ?

ஆறுகள் எல்லாம் மலையின் மேல் உற்பத்தி ஆகின்றன. பின் அவை எல்லாம் போய் கடலில் கலக்கின்றன. கடல் ஆறுகளுக்கு கணவன் போல. மலை என்ற பிறந்த வீட்டில் இருந்து கடல் என்ற கணவன் வீட்டுக்கு இந்த ஆறுகள் போகின்றன. அப்படி பார்த்தால் இந்த மலை , கடலுக்கு மாமன் முறை வேண்டும். பெண்ணை கொடுத்தவன் என்ற முறையில்.

மலை உயர்ந்து நிற்கும். அதனால் அதன் மேல் வெயில் நன்றாகப் படும். வெயில் பட்டு  ரொம்ப சூடாகி இருக்கும். அவன் வெம்மையை தணிப்போம் என்று கடல் மேகத்தை அனுப்பி வைத்ததாம்.

பாடல்

பம்பி மேகம் பரந்தது, ‘பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

பொருள்

பம்பி = நெருங்கி

மேகம் = மேகங்கள்

பரந்தது =சூழ்ந்து

‘பானுவால் = சூரியனால்

நம்பன் மாதுலன் = நமது மாமன்

வெம்மையை நண்ணினான்; = சூட்டினை அடைந்தான்

அம்பின் ஆற்றதும்’ = நீரால் குளிப்பாட்டுவோம்

என்று = என்று

அகன் குன்றின்மேல் = அந்தக் குன்றின் மேல்

இம்பர் = இந்த உலகில் உள்ள

வாரி = கடல்

எழுந்தது போன்றதே = எழுந்து வந்தது போன்றதே

அந்த மேகம் எங்காவது மழை   பொழிந்து விட்டுப் போயிருக்கலாம். கம்பன் கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடுகிறான்.  வெயிலில் சூடேறி துன்பப்படும் மலையின்  சூட்டை ஆற்ற அந்த மேகம் வந்தது என்றான்.

எங்கெல்லாம் துஷ்டர்கள் தோன்றி அறத்திற்கு கேடு விளவிக்கிறார்களோ , எங்கெல்லாம் நல்லவர்கள் துன்பப் படுகிறார்களோ அவர்களை காக்க யுகம் தோறும் யுகம்  தோறும் நான் அவதரிப்பேன் என்று கண்ணன் சொன்ன மாதிரி துன்பம் வந்த இடத்தில் , அதை துடைக்க அந்த மேகம் சென்றதாம்.

அவதாரம் என்றாலே அது தான். உதவி செய்ய மேலிருந்து கீழே வருவதுதானே அவதாரம். அதை மறைமுகமாகச் சொல்கிறான் கம்பன்.

இராமன் வரப் போகிறான். திருமால் அவதரிக்கப் போகிறார். தேவர்களின் துயர் துடைக்க  அவன் வரப் போகிறான் என்று கட்டியம் கூறுகிறான் கம்பன்.


மலை மேல் பொழிந்த மழை எப்படி கீழிறங்கி வந்தது  தெரியுமா ?

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_28.html )

2 comments:

  1. Arumai! - Meyyappan

    ReplyDelete
  2. அடுத்த பாடல் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    ReplyDelete