Friday, May 13, 2016

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?

ஔவையார் தனிப்பாடல் - எது அழகு ?


எது அழகு என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம் ?

காதலியின் முகம் அழகு, அவளின் வெட்கம் அழகு, குழந்தையின் முகம் அழகு, அப்போது பூத்த பூ அழகு, மழை அழகு, கடல் அழகு என்று அடுக்குவோம்.

ஔவை வேறு ஒரு பட்டியல் தருகிறாள்.

வறுமை அழகு, சாப்பிடாமல் இளைத்த தேகம் அழகு, ஏன் மரணம் கூட அழகு என்கிறாள் கிழவி.

நம்ப முடிகிறதா ?


உலகிலேயே மிக அழகானது, முதல் இரவு முடிந்து வெளியில் வரும் பெண்ணின் முகம் மிக அழகானது என்கிறாள்.

அடுத்து, விரதம் இருந்து இளைத்த ஞானியாரின் மேனி அழகு. காய்ச்சல் வந்து, உடல் நிலை சரியில்லாமல் இளைத்த மேனி அல்ல, ஞானம் வேண்டி ,ஊண் உறக்கம் இன்றி தவத்தால் விரதத்தால் இளைத்த மேனி அழகு. யோசித்துப் பார்ப்போம். அளவுக்கு அதிகம் தின்று தொந்தியும் தொப்பையும் உள்ள உடல் அழகா, விரதத்தால் இளைத்த மேனி அழகா ?


அடுத்து, கொடுத்து இளைத்த ஒருவனின் வறுமையும் கூட அழகு என்கிறாள் அவ்வை. ஒரு காலத்தில் பெரிய தனவந்தனாக இருந்து , எல்லோருக்கும் உதவி செய்து அதனால் வறுமையின் வாய்ப்பட்டாலும் , அந்த வறுமை கூட அழகுதான் என்கிறாள்.


இது எல்லாவற்றையும் விட அழகு, நாட்டுக்காக சண்டையிட்டு, அதில் மார்பில் புண் ஏற்று இறந்த வீரனின் சமாதியின் மேல் இருக்கும் அந்த கல் அழகு என்கிறாள்.


பாடல்


சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த
விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்லபிர மம்


பொருள்

சுரதம் = கூடல் , புணர்ச்சி

தனி = தனிமையில்

விளைந்த = சுகித்த, தோய்ந்த

தோகை = இளம் பெண்

சுகிர்த = ஞானம் (வேண்டி, தேடி)

விரதம் = விரதம் இருந்து

தனி விளைந்த மேனி = இளைத்த மேனி

நிரதம் = நித்தம்

கொடுத்திளைத்த தாதா =கொடுத்து இளைத்த செல்வந்தன்

கொடுஞ்சமரிற் = கொடும் + சமரில் = கொடிய சண்டையில்

பட்ட = இறந்து பட்ட

வடுத்துளைத்த = வடு துளைத்த = விழுப் புண் ஏற்ற

கல்லபிர மம் = கல் + அபிரமம் = அந்த நடு கல் அழகானது.

அபிரமம் என்றால் அழகானது என்று அர்த்தம். அபிராமி என்றால் அழகானவள் என்று பொருள்.


அழகு என்பது வேறு உடல் வனப்பில் மட்டும் அல்ல.


என்ன ஒரு அருமையான பாடல்.

கிழவி பெரிய ஆள் தான்.

(மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/05/blog-post_13.html )



1 comment:

  1. இந்த மாதிரி, அழகு எது, கொடியது எது, இனியது எது, என்பது போல இன்னும் அவ்வையார் பாடல்கள் பற்றி எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete