Tuesday, August 30, 2016

இராமாயணம் - வாலி வதம் - சிறியன சிந்தியாதான் - பாகம் 1

இராமாயணம் - வாலி வதம்  -       சிறியன சிந்தியாதான் - பாகம் 1



இறக்கும் தருவாயில் இருக்கும் வாலி முன், இராமன் வந்து நின்றான்.

வாலி நிறைய கேள்விகள் கேட்டான்.

ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை.

பின் என்ன நிகழ்ந்ததோ தெரியாது.

வாலி தலை கீழாக மாறிப் போனான்.

இராமனைப் பார்த்து கூறுகிறான், "நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துக் கொள்" என்று.

வாலி என்ன தவறு செய்தான் ?

பாடல்

'தாய் என உயிர்க்கு நல்கி,
      தருமமும், தகவும், சால்பும்,
நீ என நின்ற நம்பி!
      நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்பால்,
      நவை அற உணரலாமே?
தீயன பொறுத்தி' என்றான் -
      சிறியன சிந்தியாதான்.

பொருள்

'தாய் என = தாய் போல

உயிர்க்கு நல்கி = உயிருக்கு வேண்டியதைத் தந்து

தருமமும் = தர்மத்தையும்

தகவும் = நடு நிலையையும்

சால்பும் = சான்றோர்க்கு உரிய குணங்கள் யாவும்

நீ என நின்ற நம்பி! = சிறந்தவனான நீயே அவை அனைத்துமாய் நின்றாய்

நெறியினின் = நெறி என்றால் வழி. நேர்மையான வழி, வேதம் முதலியவற்றில் சொன்ன வழி.

நோக்கும் நேர்மை = நேர்மையான பார்வை

நாய் என நின்ற எம்பால் = நாய்  போன்றவனான என் மேல்

நவை அற உணரலாமே? = நவை என்றால் குற்றம். நவை அற என்றால் குற்றம் இல்லாமல். எங்களால் குற்றம் இல்லாமல் பார்க்க முடியாது.

தீயன பொறுத்தி' என்றான் - = நாங்கள் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்  என்றான்

சிறியன சிந்தியாதான் = கீழானவைகளை சிந்திக்காத வாலி


இந்தப் பாடலை நாளெல்லாம் வாசித்து வாசித்து உருகலாம்.



இங்கே சில விஷயங்களை சொல்கிறான்.

சொல்பவன் யார் ?

வாலி.

அவன் எப்படிப் பட்டவன் ?

சிறியன சிந்தியாதவன்.

எது சிறியது ?

ஆட்சி, செல்வம், புகழ், அதிகாரம், ஏன் உயிர் இவை எல்லாமே சிறியதுதான்.

இதைப் பற்றியெல்லாம் வாலி சிந்திக்கவில்லை.

பின் ஏதோ உயர்ந்த ஒன்றை சிந்தித்த வாலி, சொல்கிறான்....

"'தாய் என உயிர்க்கு நல்கி,"

தாய் போல உயிர்க்கு நல்கி.

நல்குதல் என்றால் அருள் செய்தல் என்று பொருள்.

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி என்பார் மணிவாசகர்


 விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

தாய் உடலுக்குத் தான் உணவு தருவாள். பாலூட்டி, சோறூட்டி உடலை வளர்ப்பாள் .

உயிரை யார் வளர்ப்பார்கள் ?

இராமன் உயிரை வளர்த்தான் என்கிறான் வாலி.

"உயிர்க்கு நல்கி"

சில சமயம் குழந்தை உணவு உண்ணாமல் அடம் பிடிக்கும். அம்மா, குழந்தையை இழுத்து பிடித்து, தன் கால்களுக்கு நடுவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு உணவை கட்டாயமாக ஊட்டுவாள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ அந்த அம்மா கருணை இல்லாத அரக்கி போலத் தோன்றும். அந்த கடுமைக்கு பின்னால் உள்ள கருணையை அந்த பிள்ளை கூட உணராது. அம்மா ஒரு இராட்சசி என்றே நினைக்கும். ஆனால், பின்னால் அந்த பிள்ளை அறிவு வளர்ந்த பின், தாயின் அன்பை எண்ணி கண்ணீர் விடும்.

இராமன் செய்தது அறம் அற்ற செயலாகத்தான் தெரியும் வெளியில் இருந்து பார்க்கும் போது.

வாலி கூட அப்படித்தான் நினைத்தான்.

ஆனால், அவன் அறிவு அடைந்தான். இராமனின் கருணையை உணர்ந்தான்.

உடலை வளர்க்கும் தாயே இந்த பாடு படுகிறாள் என்றாள் என்றால், உயிரை வளர்க்க என்ன பாடு பட வேண்டும்.

யாருக்குப் புரியும் ?

(மேலும் சொல்வேன் )

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/1.html

No comments:

Post a Comment