Saturday, August 13, 2016

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம் 


நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான். 

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான். 

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான். 

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள். 

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று. 

பாடல் 

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள் 


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு 

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த 

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும் 

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும் 

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும் 

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும் 


உ ண்மையான = உண்மையான 

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் 

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான் 

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை 


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று மதத்தவள் என்பதால் அவளின் அழகு குறைந்து விடுமா ?

உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் வாயை அடைப்பதற்காக கூட அவன் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், அவன் மூலம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்கிறார் வில்லிபுத்தூரார். 

அறிவோம். 

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம். 

அறிவோம். உயர்வோம். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post.html

1 comment:

  1. இவர்களுக்கு மட்டும் அல்ல, பிறருக்கும் ஏன் சாதி இருக்க வேண்டும்?!

    ReplyDelete