Wednesday, August 24, 2016

இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள்

இராமாயணம் - வாலி வதை - வாலியின் கேள்விகள் 


இராமன் எய்த அம்பை வாலினாலும் கைகளினாலும் பிடித்து இழுத்த வாலி, அதில் இராமனின் பெயர் இருக்கக் கண்டான்.

இல்லறத்தை துறந்த இராமன், எங்களுக்காக தன் வில்லறத்தையும் துறந்தான். வேதத்தில் சொல்லப்பட்டவைகளை யும் , தொன்று தொட்டு வரும் நல்ல அறங்களையும் ஏன் அவன் துறந்தான்  என்று கேள்வி கேட்டு, வெட்கம் வர அவன் நகைத்தான்.

பாடல்

‘இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது ‘என்னா,
    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள்

‘இல் அறம் = இல்லறமாகிய அறத்தை

துறந்த நம்பி, = துறந்த நம்பி

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில்லறத்தை துறந்த வீரன்

தோன்றலால்,= தோன்றி

வேத நூலில் = வேத நூல்களில்  சொல்லப் பட்ட

சொல் அறம் துறந்திலாத = சொல் அறங்களை துறந்திலாத

சூரியன் மரபும் = சூரிய மரபில்

தொல்லை நல் அறம் துறந்தது = பழமையான நல்ல அறங்களை  துறந்து, கைவிட்டு

‘என்னா, நகை வர, நாண் உள் கொண்டான். = என்று நினைத்து அதனால்  சிரிப்பு வர, நாணம் அடைந்தான்.


தனக்கு வந்த துன்பம் இராமனால் வந்தது என்று அறிந்து கொண்டான்.

மனைவியோடு வாழும் இல்லறம் துறந்தான்.

மறைந்து நின்று அம்பு எய்து வில்லறம் துறந்தான்.

வேத நூல் சொன்ன  சொல்லறம் துறந்தான்.

பழமையான நடைமுறை அறங்களையும் துறந்தான்.

என்று இராமன் மேல் குற்றச் சாட்டுகளை அடுக்குகிறான் வாலி.

நமக்கு ஒரு துன்பம் வரும்போது நாம் என்ன நினைப்போம்.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா ? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் ? பெரியவர்களை மதிக்கிறேன். கோவிலுக்குப் போகிறேன். புத்தகங்களில் உள்ள முறைப்படி பூஜை , விரதம் எல்லாம் இருக்கிறேன். முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுகிறேன்.

இருந்தும் எனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் வந்தது.

என்னென்னமோ தவறுகள் செய்தவன் எல்லாம் நிம்மதியாக  மகிழ்ச்சியாக இருக்கிறான்.  நான் மட்டும் ஏன் கிடந்து இப்படி துன்பப்  படுகிறேன் என்று நமக்கு ஒரு மன உழைச்சல் ஏற்படுவது இயற்கை.

கடவுள் என்று ஒன்று இல்லை. இந்த வேதம், புராணம், இதிகாசம் எல்லாம் பொய்.  நாட்டில் நீதி நேர்மை என்பதே இல்லை. நல்லது காலம் இல்லை என்று தானே புலம்புவோம்.

அதையே தான் வாலியும் செய்கிறான்.

நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்காத குறையாக   .கேட்கிறான்.


இங்கு சற்று நிதானிப்போம்.

இது வரை இராமனை பட்டு கேள்விப் பட்டிருக்கிறான்.

தாரை கூட சொல்லி இருக்கிறாள். சொல்லக் கேள்வி.

அடுத்த கட்டம், இராம நாமத்தை காண்கிறான். அந்த நாமத்தின் மகிமை அவனுக்குப் புரிகிறது. "தெரியக் கண்டான் " என்று சொல்லுகிறான் கம்பன்.

மந்திரத்தின் மகிமை புரிகிறது.

ஆனாலும், அஞ்ஞானம் தடுக்கிறது.

அறிவு குழப்புகிறது. தடுமாற வைக்கிறது.

இறைவன் நல்லவன், உயர்ந்தவன் என்றால் ஏன் வாழ்வில் இத்தனை துன்பங்கள் என்ற விடை தெரியாத கேள்வி வாலியின் மனத்திலும் ஓடுகிறது.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டான்.

அடுத்து அவன் நாமத்தை நேரில் கண்டான்.

அடுத்து...?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_24.html

1 comment:

  1. தொடர் கதையில்முக்கியமான திருப்பம் வரும் போது எழுத்தாளர்கள் தொடரும் என எழுதி வாசகர்களை என்ன ஆகுமோ என்கிற ஆவலில் விட்டு விடுவார்கள்.அதே உத்தியை நீங்களும் கையாளுகிறீர்கள். பொறுமையின்றி காத்திருக்கிறேன்!

    ReplyDelete