Monday, August 1, 2016

குறுந்தொகை - கை இல்லாத இதயம்

குறுந்தொகை - கை இல்லாத இதயம் 




அவர்களால் சந்திக்க முடியவில்லை. தங்கள் காதலை whatsapp லும் ,  குறுஞ் செய்திகள் (S M S ) மூலமும் பரிமாறிக் கொள்கிறார்கள். என்ன இருந்தாலும் ,நேரில் சென்று அவள் கை பிடிப்பது போல வருமா ? கட்டி அணைக்கும் சுகம் கை பேசி தகவல் பரிமாற்றத்தில் வருமா.

வராது.

இதயம் , நினைத்த மாத்திரத்தில் அவளிடம் போய் விடுகிறது. போய் என்ன செய்ய ? கை கோர்க்க, கட்டி அணைக்க கை வேண்டாமா ? அது தெரியாமல் இந்த இதயம் ஊருக்கு முந்தி அவளிடம் சென்று விடுகிறது.

இது இன்றைய நிலை. குறுந்தொகை காலத்திலும் இதே கதை தான்.

பொருள் தேடி காதலன்  வெளி நாடு சென்று திரும்பி வருகிறான்.  அவளை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல். எத்தனை வருடம் ? அவன்  போவதற்குள் அவன் இதயம் அவளிடம் ஓடிப் போய் விட்டது.

காதலன் , தன்னுடைய தேர் பாகனிடம் சொல்கிறான்....

"நாம் நம் தலைவியின் இருப்பிடம் நோக்கிச் செல்கிறோம். போகிற வழியோ ஆபத்து நிறைந்தது. புலிகள் நிறைந்த காட்டுப் பாதை. கடல் ஆரவாரித்து எழுவது போல அந்த கொலை நோக்கம் கொண்ட புலிகள் பாய்ந்து வரும். இடைப்பட்ட தூரமோ அதிகம். என் இதயம் இருக்கிறதே , அது என்னை கேட்காமல் அவளைக் காண ஓடி விட்டது. போய் என்ன செய்யப் போகிறது ? அவளை கட்டி பிடிக்க முடியுமா அதனால் ? நான் எதை நினைத்து வருந்துவேன் " என்று மயங்குகிறான் காதலன்.

காதலியைத் தேடும் அவன் ஆர்வத்தை, அவனுக்கு முன்னால் சென்ற அவன் இதயத்தை, புலி நிறைந்த கானகத்தின் சாலைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்....

பாடல்


அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 

நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
   
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
    
சேய வம்ம விருமா மிடையே 

மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
    
கோட்புலி வழங்குஞ் சோலை 
    
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள் 


அஞ்சுவ தறியா = அஞ்சுவது அறியாமல்

தமர்துணைதழீஇய = நாம் விரும்பும் தலைவியை தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் நெஞ்சானது

நப் பிரிந்தன் றாயினு = என்னை பிரிந்து அவளை காண சென்றாலும்

எஞ்சிய = மீதியுள்ள
 
கைபிணி = கையால் பிணித்தல் (கட்டித்த தழுவுதல்)

நெகிழினஃ தெவனோ = நெகிழ்ந்து விடுமாயின் , தவறி விட்டால். நெஞ்சத்தால் எப்படி கட்டி தழுவ முடியும் ?

நன்றும் சேய  = சேய்மை என்றால் தூரம். மிக தொலைவில்

அம்ம விருமா மிடையே = எங்களுக்கு இடையில் உள்ள தூரம்

மாக்கடற் றிரையின் = மா + கடல் + திரையின் = பெரிய கடலின் அலை போல

முழங்கி = சப்த்தம் செய்து

வலனேர்பு  =வலமாக எழுந்து
 
கோட்புலி = கொலை நோக்கம் கொண்ட புலி

வழங்குஞ் சோலை =  இருக்கின்ற சோலைகள்
 
எனைத்தென் றெண்ணுகோ = எத்தனை என்று எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைக்க

மலைவே = தடைகள்

காலங்கள் மாறலாம். மனித உணர்ச்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.

காலங்கள் கடந்தாலும் காதல் தாகம் தீர்ந்தபாடில்லை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_99.html





1 comment:

  1. இந்த மாதிரிப் பாடல் எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் எப்படி நம் மனதை வந்து தொடுகின்றன! அற்புதம்! நன்றி.

    ReplyDelete