Monday, September 19, 2016

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு


பாடல்

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

பொதுவாக எல்லா பாடல்களுக்கும் முதலில் கொஞ்சம் முகவுரை எழுதிவிட்டு பின் பாடலும், பொருளும் எழுதுவது என் வழக்கம்.

அபிராமி அந்தாதி மட்டும் விதி விலக்கு . இவ்வளவு அழகான , உணர்ச்சிமயமான பாடலை முதலில் நீங்கள் படித்து விடுங்கள். பொருள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

அபிராமி அந்தாதிக்கு பொருள் எழுதுவது என்பது அதை அவமதிப்பதாகவே கருதுகிறேன். அது அதுதான். அதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

இருந்தும், ஒரு சேதி சொல்ல ஆசை.

முதலில் பொருள் ,பின்னர் சேதி

சிறக்கும் = சிறந்து கொண்டே இருக்கும்

கமலத் = தாமரை மலரில் இருக்கும்

திருவே = திருமகளே

நின் சேவடி =   உன்னுடைய செம்மையான திருவடிகளை

சென்னி = தலையில்

வைக்கத் = வைக்க

துறக்கம் தரும்= துறக்கம் தரும்

நின் துணைவரும் = உன் கணவரும்

நீயும் = நீயும்

துரியம் அற்ற = துரியம் அற்ற

உறக்கம் தர வந்து = உறக்கத்தை தர வந்து

உடம்போடு = உடலோடு

உயிர் உறவு அற்று = உயிர் தன் தொடர்பை அறுத்துக் கொண்டு

அறிவு = அறிவானது

மறக்கும் பொழுது  = மறக்கும் போது

என் முன்னே வரல் வேண்டும் = என் முன்னே வரவேண்டும்

வருந்தியுமே = உனக்கு அது கடினமாக இருந்தால் கூட

அது என்ன துறக்கம், துரியம் ?

மனிதர்களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

உடல் சார்ந்தார்கள். உணவு, புலன் இன்பம், உறக்கம், இதுதான் இவர்களுக்குத்  தெரியும். இதுதான் இவர்களுக்குப் பிரதானம். தன்    சுகம்.  அது உடல் சார்ந்த சுகம்.  உடலை வைத்துத்தான் எல்லாம் அவர்களுக்கு. விலங்குகளுக்கு சற்று மேலே. அவ்வளவுதான்.

அதை அடுத்த உயர்ந்த நிலை,  அறிவு சார்ந்த நிலை. சிந்தனை, யோசனை, என்பது இவர்களின்   பிரதானம். அவர்கள் தங்களை அறிவால் செலுத்தப் படுபவர்களாக  காண்பார்கள்.  They identify themselves with intelligence.  எதையும் அறிவு பூர்வமாக   அணுகுவார்கள்.  இசை, இலக்கியம், ஓவியம், கணிதம், அறிவியல், தர்க்கம்,  நடனம், என்று இவர்களின்  உலகம்    விரியும்.

அதை அடுத்த உயர்ந்த நிலை, மனம் சார்ந்தவர்கள். உணர்ச்சியை மையமாக  கொண்டவர்கள். அன்பு, காதல், பக்தி, பாசம், உறவு என்பது  இவர்கள் உலகம்.

யாரும் ஒரு நிலையில் மட்டும் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு நிலையில்  அதிகமான நேரம் இருப்பார்கள். ஒரு அறிவியல் அறிஞர் கூட  காதலிக்கலாம். ஆனால் அந்த உணர்வு சார்ந்த நேரங்கள் மிக   மிக கொஞ்சமாக இருக்கும்.

இந்த நான்கு நிலைகளையும் கடந்த நிலை துரிய நிலை. துரிய என்றால்  நான்காவது.

அது என்ன நான்காவது ? அது எதை சார்ந்து நிற்கும் ? தெரியாது. அதனால் தான்   அதை "நாலாவது நிலை " என்றார்கள்.

இந்த மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

உடல், அறிவு, மனம் என்ற மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

அந்த நிலையில்  கூட தெரியாது.  கடவுள் தெரிய வேண்டும் என்றால்  அறிவு   வேலை செய்ய வேண்டும்.

இது கடவுள் என்று  அறியும் அறிவு வேண்டும்.

துறக்க நிலை இந்த மூன்றையும் கடந்த நிலை.

நான் அந்த நிலை அடையும் போது , அபிராமி நீயே வந்துரு. உன்னை நினைக்க வேண்டும், கூப்பிட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது.   எனவே,இப்பவே சொல்லி  வைக்கிறேன். அந்த சமயத்தில் நீயும் உன் கணவரும் வந்து விடுங்கள்.

நீங்கள் வந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்ள மாட்டேன்.உனக்கு அது  ஒரு சிக்கல் தான்.  வருத்தம் தான். இருந்தாலும்   வந்துரு.

என்று பதறுகிறார் பட்டர்.


(தொடர்ந்தாலும் தொடரும் )

1 comment:

  1. துரியத்துக்கும் இறப்புக்கும் என்ன தொடர்பு? புரியவில்லையே?

    ReplyDelete