Wednesday, September 28, 2016

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி

குறுந்தொகை - இனித்த வேப்பங்கட்டி 


காதல் என்பது இனிமையான விஷயம் தான். காதல் புரியும் போது காதலர்கள் இருவரும் மிக மிக இனிமையாக பேசுவார்கள். நன்றாக உடுத்துவார்கள். ஒரு எதிர்பார்ப்பு  இருந்து கொண்டே இருக்கும்.

இவளோடு வாழ் நாள் எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற அவனுக்கு ஒரு கற்பனை. இவனோடு வாழ் நாள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்  அவளுக்கு ஒரு கற்பனை.

உணர்ச்சிகள் தூண்டப் பட்ட நிலையில் இருவரும் இருப்பார்கள்.

கதைகள் கற்பனைகள், சினிமாவில் பார்த்தது, என்று எல்லாம் கலந்து கலர் கலராக கனவுகள் வரும்.

கவிதை வரும். படம் வரையத் தோன்றும். உலகம் அழகாகத் தெரியும். காரணம் இல்லாமல் சிரிப்பு வரும். தூக்கம் போகும். மண்ணிலே விண் தெரியும். கால்களுக்கு சிறகு முளைக்கும்.

கடைசியில் திருமணம் ஆகும்.

திருமணம் ஆன சிறிது நாளிலேயே , பெரும்பாலான காதல் கசக்கத் தொடங்கும். பொருளாதார நெருக்கடி. எதிர்பார்ப்புகள் தீர்ந்த பின் ஒரு ஏமாற்றம் -  இவ்வளவுதானா என்று.  இதற்கா இவ்வளவு அலைந்தோம் என்று ஒரு வெறுப்பு.

பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி காதலுக்கு முன் இருந்த அந்த பாசம், நேசம், பிரியம், அன்யோன்யம் திருமணத்திற்கு பின்னும் அப்படியே தொடர்வதில்லை - பெரும்பாலான நேரங்களில்.

இது ஏதோ இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல.

சங்க காலம் தொட்டே இப்படித்தான் இருக்கிறது.

குறுந்தொகை பாடல்.

தலைவனிடம் , தோழி சொல்லுகிறாள்...

"அந்தக் காலத்தில் (காதல் செய்யும் காலத்தில்) தலைவி வேப்பங் காயைத் தந்தாலும் வெல்லக் கட்டி என்று சொல்லி அதை சுவைத்தாய். இப்போது அவளே குளிர்ந்த இனிய நீரைத் தாந்தாலும் சுடுகிறது , கசக்கிறது என்கிறாய் ...எல்லாம் அன்பு குறைந்ததனால் வந்தது " என்று சொல்லுகிறாள்.

அந்த கசக்கும் உண்மையை படம் படித்து காட்டும் பாடல்

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே’


பொருள்


வேம்பின் =  வேப்ப மரத்தின்

பைங்காய் = பசுமையான காய். வேப்பம் பழம் இனிக்கும். காய் வாயில் வைக்க முடியாது.

என் தோழி தரினே = என் தோழி (தலைவி) தந்த போது

தேம்பூங்கட்டி = இனிமையான வெல்லக் கட்டி

என்றனிர் = என்று கூறினாய்

இனியே = இன்றோ

பாரி பறம்பிற் =பாரியின் இந்த மலையில்

பனிச்சுனைத் = பனி போல சில் என்று இருக்கும், ஊற்றின்

தெண்ணீர் = தெளிந்த நீரை

தைஇத் திங்கள் = தை மாதமான இந்த மாதத்தில்

தண்ணிய = குளிர்ந்த அவள்

தரினும் = தந்தாலும்

வெய்ய = சூடாக இருக்கிறது

உவர்க்கும் = உப்பு குறிக்கிறது

என்றனிர் = என்று கூறுகிறீர்கள்

ஐய = ஐயனே

அற்றால் = அற்று விட்டதால்

அன்பின் பாலே = அன்பு மனதில்

மார்கழி அடுத்து வரும் தை மாதம் குளிர்ந்த மாதம். மலையில் இருக்கும் நீர் மிக சுவையாக இருக்கும். அதில் உப்பு வர வழியில்லை.

இருந்தும், அவன் சொல்கிறான்.

சூடா இருக்கு, உப்பு கரிக்கிறது என்று.

அன்பு இருந்தால்  குளிரும்,இனிக்கும்.

அன்பு இல்லாவிட்டால் சுடும், கசக்கும்,  கரிக்கும்.

வாழ்க்கை எரிச்சலாக இருக்கிறதா. கசக்கிறதா, கரிக்கிறதா, அன்பைக் கொண்டு  வாருங்கள். கசப்பு கூட இனிக்கும்.

வாழ்வின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் மனதில் அன்பு இல்லாமையே.

அன்பை கொண்டு வாருங்கள். வசந்தம் வரும்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_28.html







1 comment:

  1. எல்லோர் வாழ்விலும் நடப்பதை இனிமையாகச் சொல்லும் பாடல்! நன்றி.

    ReplyDelete