Thursday, October 27, 2016

இராமாயணம் - பரதன் 2

இராமாயணம் - பரதன் 2 


இராமாயணம் என்பதே தவறான தலைப்பு. பரதாயணம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏன் ?

உலகில் இந்த ஒரு கதையோ, நாவலோ, இலக்கியமோ அதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் அதில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மேலான குண நலன்கள் உள்ளவர்களாக கட்டுவது இல்லை - இராமாயணத்தைத் தவிர.

ஒரு இடத்தில் அல்ல, மூன்று இடத்தில், மூன்று வெவ்வேறு முக்கியமான பாத்திரங்கள் மூலம் பரதன் இராமனைவிட பல மடங்கு உயர்ந்தவன் என்று சொல்ல வைக்கிறான் இராமன்.

கம்பனுக்கு இராமன் மேல் அளவு கடந்த வாஞ்சை உண்டு. இருந்தும், பரதன் இராமனைவிட மிக மிக உயர்ந்தவன் என்று சொல்கிறான்.

சொல்வது யார் ? இராமனின் தாய்.

இராமனின் செயல்களைக் கூட சரியா தவறா என்று வாதம் செய்யலாம்.

தாடகை என்ற பெண்ணைக் கொன்றது,  வாலியை மறைந்து நின்று கொன்றது, சீதையை தீ குளிக்க  சொன்னது, கும்பகரணனோடு சண்டை போடும் போது கை நடுங்கியது,  தந்தை சொன்னார் என்பதற்காக அரச கடமையை துறந்து  கானகம்  சென்றது என்று இராமனின் சில செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது.

பரதனின் ஒரு செயல் கூட , ஒரு நூல் கூட பிறழாதது. அதை பற்றி விரிவாக பார்க்கப்  போகிறோம்.

அதற்கு முன்னால் , ஒரு சின்ன முன்னுரை.

பரதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டு அவனைப் பற்றி படிப்போம்.

ஒரு நாள், வள்ளுவரிடம் ஒரு மாணவன் சென்று

மாணவன்: ஐயா, நீங்கள் எதையும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வீர்கள் தானே.

வள்ளுவர்: ஆமாம்

மா: அப்படியானால், வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் ? எந்தத் துறையானாலும்.....மாணவப் பருவம் ஆனாலும், வேலை செய்தாலும், தொழில் முனைந்தாலும், ஆன்மீகத் துறையில் சென்றாலும், பொது வாழ்வில் ஈடு பட்டாலும் ....முன்னேற என்ன வழி.

வ:  அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னால் , என்னோடு கூட நடந்து வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு குளத்தைக் காண்பித்தார்.

பார்த்தாயா, எவ்வளவு தாமரை மலர்கள் இருக்கின்றன.

மா: ஆமாம் ஐயா..அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே

வ: புன்னகைத்துக் கொண்டே, தம்பி, அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன ?

மா: ஐயா அது தண்ணீரில் மிதக்கின்றன...எனவே அவை நீரின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமே இருக்கும்

வ: சரி, அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் ..செய் பார்ப்போம் என்றார்.

மா: இது என்ன பிரமாதம் என்று குளத்தில் இறங்கி, ஒரு மலரை பிடித்து தூக்கிப் பிடித்தான்...அந்தோ, அது தண்டில் இருந்து பிரிந்து வந்து விட்டது.  சரி, இது சரி வராது என்று ஒரு உயரமான குச்சியை நட்டு, ஒரு தாமரை மலரை பிடித்து  உயர்த்தி, அந்த குச்சியின் மேலே வைத்து கட்டினான். பிடித்து இழுத்து கட்டியதில் தாமரை மலரின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்து அது வாடிப் போய் விட்டது.....

மாணவன் குழம்பிப் போய் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே...சரி நாளை வா உன் கேள்விக்கு விடை தருகிறேன் என்றார்.

அன்று இரவு நல்ல மழை பொழிந்தது.   குளத்தின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து இருந்தது.

மாணவனை அழைத்து வந்து வள்ளுவர் காண்பித்தார்....பார்த்தாயா நேற்று பெய்த மழையில் நீர் மட்டம் உயர்ந்து இருக்குறது என்றார்.

மா: ஆமாம் ஐயா.

வ: பார்த்தாயா, தாமரை மலரின் உயரமும் உயர்ந்து இருக்கிறது .

மா: ஆமாம் ஐயா. அதற்கு என்ன இப்போ. மழை வந்தால் குளம் நிறைவதும், அதனால் பூக்கள் உயர்வதும் இயற்கை தானே என்றான்.

வ: அது தான் உன் கேள்விக்கு விடை.

எப்படி மலரின் உயரம் நீர் மட்டத்தைப் போல இருக்கிறதோ, வாழ்வில் நீ அடையும் உயரம் உன் மனத்தைப் பொறுத்து இருக்கிறது.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

உன்னுடைய உயரம் , உன் உள்ளத்தின் உயரம்.

யோசித்துப் பார், ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னாலும், நீ அந்தக் காரியத்தைப் பற்றி யோசிப்பாய் , அதை எப்படி செய்வது, எவ்வளவு காலம் ஆகும், என்ன என்ன இடையூறு வரும், யார் துணை செய்வார்கள் என்று எல்லாம்  யோசிப்பாய் அல்லவா. உன் மனம் அந்த வேலையை முடிப்பதைப் பற்றை  சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் முதலில் உயர்ந்து விடுகிறது. பின் வேலை நடக்கிறது. நீ எவ்வளவு நினைத்தாயோ, அவ்வளவு செய்கிறாய்.

மா: ஐயா புரிந்த மாதிரி இருக்கு. முழுவதும் புரியவில்லை.

வ: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளியில் சேர்கிறான். அவன் மனம் எப்படி இருக்கும் ? நல்லா படிக்கணும், நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும், வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும், நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்க வேண்டும் என்றெல்லாம்யோசிப்பான் அல்லவா ? பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். சந்தேகம் இருக்கும். இருந்தும், மனம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறது அல்லவா ? நினைத்தால் மட்டும் நடந்து  விடாது. ஆனால், நினைக்காவிட்டால் நடக்கவே நடக்காது.

மனிதனின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயர்கிறதோ, அவ்வளவுக்கு அளவு அவன் உயர்வான்.

கூர்ந்து சிந்தித்தால் ஒன்று தெரியும்.

வள்ளுவர், மனிதன் எவ்வளவு படிக்கிறானோ, எவ்வளவு உழைக்கிறானோ, எவ்வளவு  மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானோ அவ்வளவு உயர்வான் என்று சொல்ல வில்லை. உயர வேண்டுமானால், மனம் உயர வேண்டும். அவ்வளவு தான்.

பரதன் , உயர்ந்தான், உயர்ந்தான், உயர்ந்து கொண்டே போனான். காப்பியம் பூராவும் அவன் உயர்வை காட்டுகிறது.

பரதனின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம்.

என்னென்ன பாடங்கள் ?





1 comment:

  1. நல்லதையே நினை ; நல்லதையே பேசு ; நல்லதையே செய் ;
    தடைகள் பலவரினும் மனம் உயர்ந்தால் வாழ்வு உயரும்.

    ReplyDelete