Monday, October 31, 2016

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு கூட இலக்குவனும், சீதையும் போய் விட்டார்கள்.

பாட்டனார் ஊரில் இருந்து பரதன் வருகிறான். வந்தவுடன் , தாயான கைகேயிடம் "அப்பா எங்கே ?" என்று கேட்கிறான்.

அவர் இறந்துவிட்டார் என்று மிகச் சாதாரணமான ஒரு செய்தியை சொல்வதைப் போல சொல்கிறாள் கைகேயி.

துடித்துப் போகிறான் பரதன்.

"கணவன் இறந்தான் என்ற செய்தியை இதை விட சாதாரணமாக சொல்ல உன்னை விட வேறு யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள்" என்று சொல்லி அழுகிறான்.

பாடல்

வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான்.

பொருள்

வாய் = முகம்

ஒளி மழுங்கத் = ஒளி மங்கி வாடிப் போக

தன் = தன்னுடைய

மலர்ந்த தாமரை = மலர்ந்த தாமரை

ஆய் = போன்ற

அலர் நயனங்கள் = மலர் போன்ற கண்கள்

அருவி சோர்தரத் = அருவி போல கொட்ட

‘தீ எரி = எரிகின்ற தீயை

செவியில் = காதில்

வைத்து = வைத்தது

அனைய = போல

தீய சொல் = தீய சொல்லை

நீ அலது = உன்னைத் தவிர

உரைசெய = சொல்வதற்கு

நினைப்பரோ? = நினைப்பார்களோ

‘என்றான் = என்றான்

இராமாயணத்தை விமரிசிக்கும் சிலர், பரதன் , தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து கொண்டு , தாய்க்கு சொல்லிக் கொடுத்து அரசை அபகரித்துக் கொண்டான்  என்ற குற்றச் சாட்டை அவன் மேல் சுமத்துவார்கள்.

கதையில், பரதனின் செயலை உன்னிப்பாக கவனித்தால் அது எந்த அளவுக்கு ஒரு தவறான  குற்றச் சாட்டு என்று புரியும்.

இராமனைப் பொறுத்தவரை , தாயும் தந்தையும் சொல்லிவிட்டால் அது வேத வாக்கு. அது சரியா, தவறா என்றெல்லாம் அவன் ஆராய்ச்சி செய்வது கிடையாது.

"மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ" என்று சொல்லி காட்டுக்கு கிளம்பி விட்டான்.

 ஆனால்,பரதன் அப்படி அல்ல. யார் சொன்னாலும், கேட்பது இல்லை. எது அறமோ, எது தர்மமோ, எது ஞாயமோ  அதில் உறுதியாக நிற்பான்.

தாய் தானே என்று அவன் பார்ப்பது இல்லை.

"இந்த துக்கச் செய்தியை , உன்னைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்ல நினைக்கக் கூட  மாட்டார்கள்" என்று அவள் மேல் கோபம் கொள்கிறான்.

உறவுகளைத் தாண்டி , அறத்தின் பால் உறுதியாக நின்றது பரதனின் ஒரு குணம்.

மேலும் சிந்திப்போம்.



1 comment:

  1. மற்றவர் சொல்லை யாராக இருந்தாலும் அறத்தின் உரைக்கல்லில் தேய்த்து பார்த்தபின்னரே ஒப்பு கொள்ளும் குணம் பரதனிடமே இருந்தது என்பதை இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் காண்பித்து கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete