Wednesday, October 19, 2016

திருக்குறள் - நட்பு

திருக்குறள் - நட்பு 


நண்பர்கள் என்றால் ஒருவரோடு கூடி மகிழ்வது , பேசி, பாடி, ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது நண்பன் துன்பத்தில் இருந்தால், அவனை மகிழ்ச்சி படுத்துவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டும் அல்ல, நண்பனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது, முடிந்த வரை அவனுக்கு பணமோ அல்லது ஆறுதலோ சொல்லி அவனைத் தேற்றுவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது எல்லாம் நண்பர்களின் கடமை அல்ல என்கிறார் வள்ளுவர்.

நட்புக்கு புது இலக்கணம் வகுக்கிறார்.

பாடல்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற் பொருட்டு

பொருள்


நகுதற் = சிரித்தல் அல்லது மகிழ்தல்

பொருட்டன்று = அதற்காக அல்ல

நட்டல் = நட்பு கொள்வது

மிகுதிக்கண் = அதிகமான இடத்தில்

மேற்சென்று = மேலே சென்று

இடித்தற் பொருட்டு = தடுத்து நிறுத்துவதற்கு

நண்பர்களோடு சேர்ந்து  மகிழ்வதற்காக அல்ல நட்பு என்பது. அவர்கள் வரம்பு மீறிச் செல்லும் போது  அவர்களை கடிந்து தடுத்து நிறுத்துவதே நட்பின் இலக்கணம் என்கிறார் வள்ளுவர்.

சற்று சிந்திப்போம்.

"நகுதற் பொருட்டன்று"....சந்தோஷத்திற்காகவே அல்ல என்று ஒரே போடாக போடுகிறார்.  ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது, சினிமா, பீச், என்று சுத்துவது என்பதற்காக அல்ல நட்பு.  நாம் ஒருவர்க்கு நண்பராக இருக்கிறோம் என்றால் அது சந்தோஷத்திற்காக அல்ல. பின் எதற்காக ?

மிகுதிக் கண் - மிக மிக யோசித்து எந்த வார்த்தையை கையாள்கிறார் வள்ளுவர். வரம்பு மீறி போகும் போது என்று கூறும் போது அது சட்ட வரம்பு மட்டும் அல்ல அது எந்த வரம்பாக இருந்தாலும் , அதை தாண்டினால் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு நண்பன் அதிகமாக உணவு உட்கொள்கிறான் என்று  வையுங்கள் அதனால் யாருக்கும் ஒரு துன்பமும் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமான உணவு அவனுக்கே கேடாய் முடியும். எனவே, எந்த விதத்தில் அளவை மீறினாலும், என்று பொருள் கொள்ள வேண்டும். அதிகமாக உடற் பயிற்சி செய்தாலும் தவறு தான். எதையும் ஒரு அளவுக்குள் வைக்க வேண்டும். சரி அப்படி என்றால், இரண்டு மூணு கிளாஸ் மது அருந்திய பின், அல்லது ஒரு நாளைக்கு பத்து சிகரெட் பிடித்த பின் என்று கொள்ளலாமா என்றால் அதற்கு அடுத்த சொல்லில் விடை தருகிறார். 

"மேற் சென்று" மேற் சென்று என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் என்று அர்த்தம். அதாவது, அவன் வரம்பு மீறிய செயல்களை செய்த பின், அவனை திருத்துவது சரி அல்ல. அவன் அதை செய்ய ஆரம்பிக்கும் முன்னே அவனை தடுத்து நிறுத்த வேண்டும். தண்ணி அடிக்கிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்னேயே சென்று நிறுத்தி விட வேண்டும். ஒரு பெக் தானே என்று  இருக்கக் கூடாது. நண்பன் சூதாடப் போகிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்பே நிறுத்தி விடவேண்டும்.


"இடித்தற் பொருட்டு" - அன்பாக , நட்பாக சொன்னால் சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  "வேண்டாண்டா, அது நல்லது இல்லை " என்று மென்மையாகச் சொன்னால்  கேட்க மாட்டார்கள். ஒரு ரவுண்டு தானே , என்று சொல்லுவார்கள். அவர்களை திட்டி, ஏன் , தேவை என்றால் இரண்டு அடி கூட போட்டு  அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.  இடித்தற் பொருட்டு என்றால் கடிந்து சொல்லி , முரட்டுத் தனமாக தோன்றினாலும் பரவாயில்லை என்று   கடினமான   முறைகளை கையாண்டு என்று பொருள்.

நண்பர்கள் என்ன செய்கிறார்கள் , என்ன செய்ய நினைக்கிறார்கள் என்று அறிந்து, அது தவறான வழி என்று தோன்றினால், உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி செய்யா விட்டால் அது நட்பே அல்ல.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அவனுக்கு நல்ல நண்பர்கள் இல்லை என்று அர்த்தம்.

அது மட்டும் அல்ல, நம்மை தவறு செய்வதில் இருந்து தடுத்து நிறத்த வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்று தெரிய வேண்டும் அல்லவா ? அப்படி, நல்லது கெட்டது தெரிந்த நண்பர்களை தேர்ந்து எடுங்கள்.  உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.


அப்படி செய்தால் என்ன ஆகும் ?

நம்மால் , நம் நண்பர்கள் தவறு செய்வது தடுத்து நிறுத்தப் படும்.

நம் நண்பர்களால் நாம் தவறு செய்வது செய்வது தடுத்து நிறுத்தப் படும்

தவறு செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமுதாயம்  மிக அமைதியாக,  இன்பமாக இருக்கும்.

இப்படி நட்பின் மூலம், ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறார் வள்ளுவர்.


1 comment:

  1. பல வருடங்களாகவே எனக்கு நினைவிருக்கும் குறள் இது. நல்ல உரை. நன்றி.

    ReplyDelete