Monday, October 24, 2016

நாலடியார் - வாழ்வின் தொடக்கம்

நாலடியார் - வாழ்வின் தொடக்கம் 


ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழவைத் தொடங்கப் போகிறார்கள்.

குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும், உறவுகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும், சேமிப்பு, சிக்கனம், என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. விட்டு கொடுத்து போவது, சமரசம் செய்து கொள்வது. இதெல்லாம் எந்த பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லித் தருவது இல்லை.

தட்டு தடுமாறி , இதை வாழ்க்கையில்  நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

தோழி கேட்கிறாள் தலைவியிடம், " செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டாய். நாளை உன் கணவன் பின்னால் கடினமான காட்டு வழியில் போக வேண்டுமே. நடந்து விடுவாயா ? உன்னால் முடியுமா ? "

அதற்கு தலைவி சொல்கிறாள் "ஒருவன் ஒரு குதிரையை வாங்குகிறான் என்றால், வாங்கிய அன்றே அதை எப்படி செலுத்துவது என்று அறிவானா ? கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பழகுவான். அது போலத்தான் வாழ்க்கையும்."

பாடல்



கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.


பொருள்


கடக்கருங் = கடக்க + அருங் = கடக்க கடினமான

கானத்துக் = காட்டில்

காளைபின் = கணவனின் பின்னால் 

நாளை = நாளை

நடக்கவும் = நடந்து செல்ல

வல்லையோ = வல்லமை உள்ளவளா

என்றி ; = என்று கேட்டாய்

சுடர்த்தொடீஇ = சுடர் விடும் வளையல்களை அணிந்தவளே (தோழியே) !

பெற்றானொருவன் = ஒருவன் பெற்றால்

பெருங்குதிரை = பெரிய குதிரை ஒன்றை

அந்நிலையே = அந்த நேரத்திலேயே

கற்றான் = கற்றான்

அஃதூரும் ஆறு = அதை செலுத்தும் வழியை

குதிரையை வாங்கிய அன்றேவா அதை செலுத்தும் வழியும்  தெரியும். தெரியாது. ஆனால், வாங்கிய அந்த நிமிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  அதை செலுத்தும் வழியை அறிந்து கொள்ளுவாள் அல்லவா அது போல   நானும் இந்த திருமண வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும்  என்று அறிந்து கொள்வேன் என்கிறாள்.

யதார்த்தத்தை பேசும் பாடல்



1 comment:

  1. சிறிய பாடலில் நல்ல கருத்து.

    ReplyDelete