Thursday, October 27, 2016

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு 


நல்லவர்கள் துன்பத்தில் , வறுமையில் வாடுவதும், கெட்டவர்கள் செலவச் செழிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதும் நாம் தினமும் காணும் காட்டுச்சியாக இருக்கிறது.

அறம் , நீதி, நேர்மை, கடின உழைப்பு என்று இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாமல் கையால் ஆகாதவன், ஒண்ணுக்கும் உதவாதவன் என்று பட்டம் பெற்று ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் தவிப்பார்கள்.

கயவர்களோ பெரும் செல்வத்துடன், எல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்வார்கள்.

நாலடியார், இதற்கு ஒரு தீர்வு சொல்லவில்லை. அடுத்த ஜென்மத்தில் அல்லது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் அவரவர்களின் செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள் என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

உலகம் அப்படித்தான் இருக்கிறது. எல்லாமே தலைகீழாக இருக்கிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணம் படைத்த செல்வந்தர்களும், படித்த சான்றோரும் கெட்டு கீழ் நிலையில் இருக்கவும். வேசிகளும், தீயவர்களும் உயரிய இடத்தில் இருப்பதும் நாளும் நடக்கிறது. குடையில், பயன்படும் துணிப் பகுதி கீழும், கைப்பிடி மேலும் இருப்பதைப் போல என்று  யதார்த்தைப் பேசிச்  செல்கிறது.



பாடல்

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருக்கிக்
கடைக்கால் தலைக்கண்ணதாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு!

பொருள்

உடைப் = உடைய. மற்றவர்களுக்கென்று உடைய 

பெருஞ் செல்வரும் = பெரிய செல்வந்தர்களும் 

சான்றோரும் = சான்றோரும்

கெட்டுப் = கெட்டு , கீழ் நிலை அடைந்து

புடைப்பெண்டிர்  மக்களும் = விலை மகளிரும் 

கீழும் = கீழான கயவர்களும்

பெருக்கிக் = செல்வம் புகழ் இவற்றைப் பெருக்கி

கடைக்கால் =    கீழே உள்ள குச்சி

தலைக்கண்ணதாகிக் = தலைப் பக்கம் வந்து

குடைக்கால்போல் = குடையில் உள்ளது போல

கீழ்மேலாய் = கீழே உள்ளது மேலேயும், மேலே உள்ளது கீழேயும்

நிற்கும் உலகு! = இருக்கும் இந்த உலகம்


உடைப்பெருஞ் செல்வரும் - அறிவுள்ளவர்களிடம் சேர்ந்த செல்வம் , ஊருக்கு பொதுவில் இருக்கும் ஊருணியில் நீர் நிறைந்தால் எப்படி எல்லோருக்கும் பயன் தருமோ அது போல எல்லோருக்கும் பயன் தரும் என்பார் வள்ளுவர்.

ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.

என்பது குறள்


4 comments:

  1. குடையை சுருட்டி வைத்தால், கைப்பிடி மேலே இருக்கிறது. அனால் துகையை விரித்துப் பிடித்தால், துணி மேலே வந்து விடுகிறது.

    ReplyDelete
  2. குடையை சுருட்டி வைத்தால், கைப்பிடி மேலே இருக்கிறது. அனால் குடையை விரித்துப் பிடித்தால், துணி மேலே வந்து விடுகிறது.

    ReplyDelete
  3. கீழ்மேலாய் நிற்கும் உலகு ---
    நாலடியார் கூறியது தற்காலத்தில் உண்மையாகவே நடபெறுகிறது.உதாரணம்-
    டிஷ் ஆன்டனா

    ReplyDelete
  4. நாலடியார் கூறியது தற்காலத்தில் உண்மையாகவே உள்ளது .
    எடுத்துக்காட்டு--------டிஷ் ஆன்டனா .

    ReplyDelete