Sunday, October 30, 2016

தேவாரம் - காம்பில்லா மூழை போல்

தேவாரம் - காம்பில்லா மூழை போல் 


ஒரு ஊரில் ஒரு தவளை இருந்தது. அந்தத் தவளைக்கு பல ஆசைகள். தான் இருக்கும் அந்தச் சின்ன குளத்தை விட்டு வேறு ஒரு பெரிய குளத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள தாமரை, அல்லி போன்ற மலர்களின் நறுமணத்தை நுகர வேண்டும். அங்குள்ள மற்ற தவளைகள் எப்படி வாழ்கின்றன என்று அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள நல்ல முறைகளை தானும் கடை பிடிக்க வேண்டும் என்று பலப் பல எண்ணங்கள்.

இந்த எண்ணங்கள் எப்போது என்றால், அந்தத் தவளையை ஒரு பாம்பு தன் வாயில் பிடித்துக் கொண்ட பின்.

முட்டாள் தவளை.

பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டால் பிழைக்க முடியுமா ? இருக்கப் போவதோ சில நிமிடங்கள்தான். அதற்குள் , எப்படி பிழைப்பது என்று சிந்திக்காமல் , வேறு எதை எதையோ நினைத்து பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

முட்டாள் தவளை.

தவளை மட்டுமா அப்படி ?

நாம் மட்டும் என்ன வித்தியாசம்.

மரணம் என்ற பாம்பு நம்மை பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் என்று பிறந்தோமோ அன்றே மரணம் நம்மை பிடித்துக் கொள்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது. அந்த இடைப் பட்ட நேரத்தில் என்னவெல்லாம் கனவு காண்கிறோம்....

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், திருமணம், பிள்ளைகள், அவர்கள் படிப்பு,  புகழ், செல்வாக்கு, மதிப்பு என்று ஆயிரம் சிந்தனைகள்....

பாம்பின் வாய் தேரைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சிந்திக்கிறார் நாவுக்கரச ஸ்வாமிகள்.

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

சீர் பிரித்த பின்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளது ஓர்  கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின் வாய் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே .

பொருள்

ஓம்பினேன் = பாதுகாத்தேன்

கூட்டை = இந்த உடல் என்ற கூட்டை

வாளா = அலட்சியமாக

உள்ளது = மனதில்

ஓர்  கொடுமை வைத்துக் = பல தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு

காம்பிலா = காம்பு இல்லாத

மூழை போலக் = அகப்பையைப் போல

கருதிற்றே = கருதினாலும், நினைத்தாலும்

முகக்க மாட்டேன் = முடக்க முடியாததைப் போல

பாம்பின் = பாம்பின்

வாய் = வாயில் அகப்பட்ட

தேரை போலப் = தவளையைப் போல

பலபல = பலவிதமான

நினைக்கின் றேனை = எண்ணங்களை நினைகின்றவனை

ஓம்பி = காத்து

நீ = நீ

உய்யக் கொள்ளாய் = காப்பாற்றி கொள்வாய்

ஒற்றியூர் = திரு ஒற்றியூர் என்ற தலத்தை

உடைய கோவே = உடமையாக கொண்ட அரசனே

அகப்பைக்கு பெரிய காம்பு இருக்கும். சூடானவற்றை அகப்பையில் எடுக்கும் போது , நம் கையில் சூடு அடிக்காமல் இருக்க அந்த நீண்ட கைப்பிடி தேவை. கைப் பிடி இல்லை என்றால் அந்த அகப்பை என்னதான் நினைத்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் , என்ன தான் முயற்சி செய்தாலும், படித்தாலும், பெரியவர்கள் பேசுவதைக் கேட்டாலும், இறைவன் திருவருள் என்ற ஒன்று இல்லாவிட்டால் (கைப்பிடி) ஒன்றும் நடக்காது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லை என்றால், அவன் தாளை வணங்குவதும் நிகழாது.

தவம் உடையவர்க்கே தவம் செய்ய முடியும் என்பார் வள்ளுவர்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 

புத்தகத்தை படித்து விட்டு நானும் தவம் செய்யப் போகிறேன் என்றால் நடக்காது என்கிறார் வள்ளுவர். தவம் என்பது பிறவி தோறும் சேர்த்துக் கொண்டே வருவது என்பது அவர் முடிவு.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது அழுதார். பார்வதி வந்து பால் தந்தாள் என்கிறது பெரிய புராணம். நம் வீட்டுப் பிள்ளைகளும் தான் தினம் அழுகிறது. ஏன், பார்வதி வந்து பால் தரவில்லை ?

முன்பே உன்னை நான் பணிந்து போற்றினேன். நீ அருள் புரிந்தாய், இப்போது என்கிறார் திரு ஞான சம்பந்தர்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


"வாளா உள்ளது". அது என்ன வாளா ? வாளா என்றால் அலட்சியம். ஒரு நோக்கம் இன்மை. குறிக்கோள் இல்லாமல் இருத்தல். அவசரம் தெரியாமல் , முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருத்தல்.

"வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் " என்பார் மணிவாசகர்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

என்பது திருவெம்பாவை

ஒற்றியூர் உடைய கோவே என்று உருகி உருகி நாவுக்கரசர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தேடித் பிடித்துப் படியுங்கள்.

சமயம் தாண்டி, இறை பக்தி தாண்டி, நம்பிக்கைகளைத் தாண்டி, தமிழின் சுவைக்காக படிக்கலாம். படியுங்கள்.






2 comments:

  1. தவளை நல்ல விஷயங்களைத்தனே நினைக்கிறது?

    பிறந்தவர் எல்லோரும் இறப்பது நிச்சயமே. வாழ்நாளில் நல்ல விஷயங்கள் செய்வதில் தவறில்லை. சும்மா அடுத்தவனைக் கேடுப்ப்பதுவும், பொறாமையும், வஞ்சனையும் போன்ற செயல்கள்தாம் தவறு.

    ReplyDelete
  2. நல்ல தெளிவான விளக்கம்.

    ReplyDelete