Tuesday, November 8, 2016

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்

இராமாயணம் - பரதன் 13 - ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்




நாடு ரொம்ப கெட்டுப் போய் விட்டது. இலஞ்சம், அராஜகம் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது. நீதி நேர்மை எல்லாம் செத்து விட்டது என்று பல பேர் நொந்து கொள்வார்கள். சரி, இதை சரி செய்ய நீ என்ன செய்தாய் என்றால் "நான் என்ன செய்ய முடியும்..தனி ஒரு ஆள் இந்த நாட்டை திருத்த முடியுமா " என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.


ஒரு அநீதி நடக்கிறது என்றால் , அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான் . ஒன்றும் செய்யாமல் இருப்பதும் , அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.


எனக்கு உன் தந்த இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கு அனுப்பி, உனக்கு நாட்டைப் பெற்றுத் தந்தேன் என்று கைகேயி கூறியதைக் கேட்ட பரதன் தவித்துப் போகிறான்.


அவன் கைகேயி தண்டிக்க முடியவில்லை ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று தெரியும் பரதனுக்கு. சரி, கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல்

‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

பொருள்

‘மாண்டனன் = இறந்தான்

எந்தை = என் தந்தையாகிய தயரதன்

என் = என்னுடைய

தம்முன் = முன் பிறந்த இராமன்

மா தவம் = பெரிய தவம்

பூண்டனன் = மேற்கொண்டான்

நின் = உன்னுடைய

கொடும் = கொடிய

புணர்ப்பினால் = சூழ்ச்சியால்

என்றால் = என்றால்

கீண்டிலென் வாய் = உன் வாயை கிழிக்கவில்லை

அது கேட்டும் = இவற்றை எல்லாம் கேட்ட பின்னும்

நின்ற யான் = இருக்கும் நான்

ஆண்டனெனே = ஆண்டேன்

அன்றோ  =  இல்லையா

அரசை ஆசையால்? = அரசை ஆசையால்

இப்படிப் பட்ட வரம் கேட்ட உன் வாயைக் கிழிக்கவில்லை. நானும் இறக்காமல் இருக்கிறேன். இது , நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு  ஒப்பாகும் என்றான்.

ஒரு தலைவன் , அவனுக்கு கீழே உள்ளவர்கள் தவறு செய்தால் , ஒன்று அவர்களை  தண்டிக்க வேண்டும். அல்லது, தண்டிக்க முடியவில்லை என்றால் அந்த தலைவர் பதவியை விடவேண்டும்.

இல்லை என்றால், அந்த தவறில் தலைவனுக்கும் பங்கு உண்டு. நான் செய்யவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியாது.

இது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல, ஒரு நிறுவனத்தின் தலைவருக்கும், ஒரு குடும்பத்தின் தலைவருக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் தவறு செய்தால் கண்டித்து திருத்த வேண்டும்.

பரதனின் சோகத்திலும் ஓங்கி நிற்பது  அறச் சிந்தனையே

No comments:

Post a Comment