Sunday, November 13, 2016

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?

இராமாயணம் - பரதன் 14 - ஐய! நீ அறிந்திலை போலுமால்?


தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிழைக்க தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

பின், கோசலையை பார்க்கச் செல்கிறான்.

இங்கே, கொஞ்சம் நிறுத்தி யோசிப்போம்.

பரதன் தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து  கொண்டு,கைகேயியை தூண்டி விட்டு அரசை பெற்றுக் கொண்டான் என்று சிலர் அவன் மீது பழி சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மையானால், அவன் கைகேயியை பழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரி, அது கூட ஒரு நாடகம் என்று வைத்துக் கொண்டால், அவன் கோசலையை பார்க்க போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்ற உணர்வு இருந்தால் , அவன் கோசலையை பார்க்க நினைத்திருப்பானா ?

பார்க்கப் போனான்.

கீழானவர்கள் எப்போதும் தங்களது கீழ்மையை மற்றவற்றின் மேல் ஏற்றிக் கூறுவார்கள்.

உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அந்த நூல்கள் நம்மை மேலேற்றும் படி நாம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.நம் சிந்தனைகள், எண்ணங்கள் மேலே போக வேண்டும். மாறாக, அந்த நூலை, அதில் சொல்லப் பட்ட உயர்ந்த கருத்துகளை, நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.  நாம் மேலே போக வேண்டுமே அல்லால்  நம்மை விட உயர்ந்தவற்றை நம் நிலைக்கு கீழே கொண்டு வரக் கூடாது.

பாடல்

மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்? ‘என்றாள்.

பொருள்

மை = கருமை, தீய எண்ணங்கள்

அறு = அறுந்த , இல்லாத

மனத்து  = மனதை கொண்டவன் (பரதன்)

ஒரு மாசு = ஒரு குற்றம் கூட

உளான் அலன் = இருப்பவன் அல்லன்

செய்யனே = செம்மையானவன். நேர்மையானவன்

என்பது = என்பதை

தேரும் = தேர்ந்து, ஆராய்ந்து அறிந்த

சிந்தையாள் = மனத்தைக் கொண்டவள் (கோசலை)

‘கைகயர் கோமகள் = கேகேய அரச குமாரி

இழைத்த = செய்த

கைதவம் = வஞ்சனை



ஐய! = ஐயனே 

 நீ = நீ 

அறிந்திலை = அறியவில்லை 

போலுமால்? = போலிருக்கிறது 

‘என்றாள் = என்றாள் 

பரதா , உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள்.  அதில்  மறைந்து நிற்கும் தொனி , உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே.

பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று  அவள் அறிவாள் .

இருந்தும் "உனக்குத் தெரியாதா " என்று ஏன் கேட்டாள் ?

அப்படி கேட்க்காமல் இருந்திருந்தால், பரதனுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்கும்  வாய்ப்பு இல்லாமலேயே போய் இருக்கும்.   ,கோசலை   ஒன்றும் கேட்கவில்லை, ஒரு வேளை அவளுக்கும் பரதன் மேல் வருத்தம் இருந்திருக்குமோ என்று   நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதை சரி செய்கிறான் கம்பன். 


அவள் அப்படி கேட்டவுடன், பரதன் துடித்துப் போகிறான். 

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள்   போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று பாவங்களின் பட்டியல் தருகிறான். 

எதெல்லாம் செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகிறான் கம்பன் , பரதன் வாயிலாக.

அவை என்னென்ன என்று பார்ப்போம். 


No comments:

Post a Comment