Wednesday, November 2, 2016

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்


இராமாயணம் போன்ற காப்பியங்களை எழுதுவதின் நோக்கம் ஏதோ கதை சொல்வதற்காக அல்ல. கதை என்று பார்த்தால் இராமாயணம் போன்ற கதைகள் ஆயிரம் இருக்கின்றன. இராமாயணத்தில் என்ன சிறப்பு என்றால் அதன் கதை அல்ல. அந்தக் கதையின் ஊடாக சொல்லப் பட்ட தர்மங்கள், அறங்கள். கதை என்பது மாத்திரையின் மேல் பூசப்பட்ட சர்க்கரை மாதிரி. வெறுமனே அறத்தை மட்டும் எடுத்துச் சொன்னால் கசக்கும். கதையோடு சொல்லும் போது , வாசகன் அறியாமலேயே நல்ல கருத்துக்கள் அவனுள் சென்று சேர்ந்துவிடும்.

தயரதன் இறந்த செய்தியை கேட்டதும் பரதன் அழுது அரற்றுகிறான். அங்கும் கம்பன் பல நல்ல செய்திகளை வைக்கிறான். தயாராதனின் நல்ல குணங்கள் என்று பரதன் பட்டியல் போட்டுச் சொல்கிறான். அது நமக்கும் ஒரு பாடம். அந்த நல்ல குணங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும். அடுத்த சந்ததிக்கும் சொல்லித் தர வேண்டும்.


"சினம் காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து, எல்லோருக்கும் பிடித்த நல் வழியில் செல்பவனே (தயரதனே ) , இன்று அவற்றை விட்டு விட்டு நீ நினைத்த பாதையில் போவது சரி தானா ?"

என்று புலம்புகிறான்.

பாடல்

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘

பொருள்


‘சினக் = சினம் என்ற

 குறும்பு = குறும்பை

எறிந்து = தவிர்த்து

எழு = எழுகின்ற

காமம் = காமம் என்ற

தீ = தீயை

அவித்து = அணைத்து

இனக் = சினம் காமம் போன்றவற்றின் இனமான

குறும்பு யாவையும் = மற்றைய குறும்புகள் அனைத்தையும்

எற்றி = மாற்றி, தவிர்த்து

யாவர்க்கும் = அனைவர்க்கும்

மனக்கு = மனதுக்கு

உறும் = பிடித்த

நெறி செலும் = வழியில் செல்லும்

வள்ளியோய்! = வள்ளலே

மறந்து  = அவற்றை எல்லாம் மறந்து

உனக்கு = உனக்கு

உறும் = பிடித்த

நெறி செலல் = வழியில் போவது

ஒழுக்கின் பாலதோ? = ஒழுக்கத்தின் பாற் பட்டதா ?

குறும்பு என்றால் மீண்டும் மீண்டும் வரும் வந்து துன்பம் தரும் பகை  என்று பொருள். 

மனதளவில்  ஆறு விதமான  பகைகள் மீண்டும் மீண்டும் வரும். 

கோபம். காமம். பேராசை. மானம். உவகை. மதம். 

இதில் கோபமும், காமமும் உள்ளிருந்து வெளியில் செல்பவை என்று சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல, கோபமும் காமம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. 

ஒன்றின் மேல் ஆசை வரும். அது கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும். 

சீதை மேல் இராவணனுக்கு காமம் வந்தது. அவள் அவனுக்கு உடன் படவில்லை என்றபோது  கோபம் வந்தது. அந்த காமமும் கோபமும் அரக்கர் குலத்தையே அழித்தது. 

கோபம் வரும்போது சிந்தித்துப் பாருங்கள். ஆதற்கு முந்தைய காமம் புலப்படும். அடுத்த முறை காமம் வரும்போது , எண்ணிக்கொள்ளுங்கள், கோபம் வரப்போகிறது என்று . 

மற்ற பூதங்கள்  - நீர், காற்று போன்றவை ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு  இடத்துக்கு தூக்கிப் போடும். அதனால் அந்தப் பொருள் கொஞ்சம் சேதம்  அடையலாம். ஆனால், அந்தப் பொருளின் தோற்றமும், வடிவமும் அப்படியே  இருக்கும். ஆனால், தீ அப்படி அல்ல. எரித்து சாம்பலாக்கி விடும்.  உருவமே இல்லாமல் செய்து விடும். எனவே தான் காமத்தை  தீ க்கு ஒப்பிட்டு கூறினார். காமம் வந்தால் ஒருவன் தன் நிலை இழப்பான்.  ஆளே மாறிப்போவான். 

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி'


சினம், காமம் அதற்கு இனமான மற்றைய குறும்புகள் அனைத்தையும் நீக்கி.

இவற்றை நீங்கியதால்  தயரதன் பெரிய சக்ரவர்த்தியாக திகழ்ந்தான். உயர் நிலையை அடைய வேண்டுமென்றால் இந்த குற்றங்களை தவிர்க்க வேண்டும் என்பது பாடம்.

இப்போது இதை எல்லாம் விட்டு விட்டு , நீ பாட்டுக்கு உன் வழியில் போனால் என்ன அர்த்தம்  என்று புலம்புகிறான்.

புலம்பலில் கூட உயர்ந்த கருத்துக்கள்.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல் என்றார் வள்ளுவர்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயனில்லாத சொற்களை பேசுபவன் என்று அதற்கு உரை செய்தார்  பரிமேல் அழகர்.

துக்கத்தில் அழும் போது கூட உயர்ந்த சொற்களை கூறினவன்  பரதன்.


1 comment:

  1. துக்கம் வந்தால் மனமொரு நிலையில் இருக்காது.ஒரே மௌனமாகவோ அல்லது வாயில் வந்ததை பேசுவது மனித இயல்பு. இருப்பினும் பரதன் கோபப்படாமல் தன மனதில் எழுந்த கருத்து செறிந்த கேள்வியை நயமாகவும் தெளிவாகவும் கேட்கும் பாங்கு மனதை தொட்டது

    ReplyDelete