Monday, November 7, 2016

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் ?

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்  ?


 இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு  பெரும்பாலும் அது நாயக நாயகி பாவமாகவே இருந்திருக்கிறது. 

சுந்தரர் ஒருவர் தான் அதை மாற்றினார். இறைவனை தோழனாக பாவித்தார்.

நட்பு அனைத்து உறவுகளிலும் உயர்ந்தது.

நட்பு என்றால் ஏதோ பெயரளவில் அல்ல.

சிவ பெருமானிடம் love லெட்டர் கொடுத்து அனுப்பியவர் சுந்தரர்...அதுவும் முதல் மனைவி இருக்கும் போதே , இரண்டாவது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து அனுப்பினார். சிவ பெருமானும் கொண்டு போனார்.

நட்பு என்றால் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும் அல்லவா.

சுந்தரர் சிவனைப் பார்த்து கேட்கிறார்

"இங்க பாரு, உன் பக்தர்கள் உன் அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று காத்து கிடக்கிறார்கள். நீயோ காலம் தாழ்த்திக் கொண்டே போகிறாய். நீ அருள் செய்வதற்கு முன் அவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வாய் ? அப்புறம் யாருக்கு அருள் செய்வாய் ? அது மட்டும் அல்ல, உனக்கு இருக்கும் அருளுக்கு , இந்த பக்தர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடும்...போ சீக்கிரம் அருள் செய் " கட்டளை இருக்கிறார்.

பாடல்

நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! 
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! 
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

பொருள்


நஞ்சி, = விரும்பி

“இடை இன்று நாளை” = இன்று வரும் , நாளை வரும்

என்று = என்று

 உம்மை  = உன்னை

நச்சுவார் = உள்ளன்போடு விரும்புவார் 


துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

பின்னைச் = அப்புறம்  பின்னால்

செய்வது என்? = என்ன செய்வது ?

அடிகேள், = அடிகளே கேள்

சொலீர் = ஆரவாரம் எழுப்பும் கழல்கள் அணிந்த திருவடிகளை உடையவரே

பஞ்சி = பஞ்சு

இடப் புட்டில் = இட்டு வைத்தால்

கீறுமோ? = உடைந்து விடுமோ

பணியீர், = சொல்வீர்

அருள்! = உம்முடைய அருள்

முஞ்சி இடைச் =  புல்லின் மேல்

சங்கம் = சங்கு

ஆர்க்கும் = சப்தம் எழுப்பும்

சீர் முதுகுன்றரே! = சிறந்த முது குன்று என்ற ஊரில் உள்ளவரே


நச்சி என்றால் விரும்பி , உள்ளன்போடு விரும்பி என்று பொருள். விரும்பப் படாதவன் செல்வம் ஊர் நடுவில் ஒரு நச்சு மரம் பழுத்தது போன்றது என்பார் வள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

யாரிடமும் அனுப்பு செலுத்தாதவன். அவனிடம் யாரும் போக மாட்டார்கள். அவனுக்கு செல்வம்  வந்தால் அது நச்சு மரம் பழுத்தது போலத்தான் என்கிறார்.

மானிட வாழ்வு கொஞ்சம் காலம்தான். சிவனே, உன் அடியார்கள் இறப்பதற்குள் போய் அருள் செய் என்று இறைவனையே பணிக்கிறார்.

துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். 

தமிழிலே மங்கள வழக்கு என்று ஒன்று உண்டு. 

எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும் என்பது தமிழ் மரபு. 

அதிலும் குறிப்பாக மங்கல சொற்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று  விதி செய்து வைத்து இருந்தார்கள். 

சொற்களுக்காக பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் திணறி இருக்கிறார்கள். 

கடைசியில் இறைவனிடமே சென்று , நீயே ஒரு சொல் எடுத்துக் கொடு என்று வேண்டி , வாங்கியும் இருக்கிறார்கள். 

சேக்கிழாருக்கு , அருணகிரி நாதருக்கு, கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு இறைவனே  அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. 

இலக்கியம் படிக்கும் போது இடையிடையே  இலக்கணமும் சற்று படிப்போமே 

இறைவனிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையும் இல்லை. 

உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள். 

தமிழில் அன்று வைதாரையும் வாழ வைத்தோன் என்பார் அருணகிரி நாதர். 

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

என்பது கந்தரலங்காரம் 


சுந்தரர் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர். தேவாரம் என்பது திருநாவுக்கரசர்  பாடிய பாடல்களை மட்டுமே குறிக்கும். எளிதாக அடையாளம் காண  தேவாரம் என்று தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

திருபாட்டை  தேடிப் படியுங்கள் . அத்தனையும் தேன் .


No comments:

Post a Comment