Wednesday, December 14, 2016

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?

இராமாயணம் - யார் ஆட்சி செய்வது ?


ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார். அவருக்குப் பின் யார் ஆட்சி செய்வது என்று பெரிய  குழப்பம் நிகழ்கிறது. இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது ?

இராமாயணம் போன்ற நூல்களை ஊன்றிப்  படித்தால்     இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கைகேயி வரம் கேட்டாள் . தசரதன் தந்து விட்டான். அதன்படி பரதன் அரசாள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி   இராமனிடம் கூறுகிறாள். அவனும் சரி என்று காட்டுக்கு கிளம்பி விட்டான். அரசு எனக்குத் தான் சொந்தம். பாட்டனார் சொத்து, அரச தர்மப்படி எனக்குத்தான் வர வேண்டும், தசரதன் யார் இதை பரதனுக்கு கொடுக்க என்று அவன் வாதம் பண்ணவில்லை. அரசை விட தந்தை சொல் முக்கியம் என்று இருந்தான் அவன்.

இராமன் கானகம் போன பின், பரதன் வருகிறான். தாயும், அமைச்சர்களும் அவனை அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அவன் ஏற்றுக் கொண்டிருந்தால் அவனை யாரும் குறை சொல்ல முடியாது.  அவன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.  அண்ணன் இருக்கும் போது தான் அரசை ஏற்றுக் கொள்ளுவது  அறம் அல்ல என்று நினைக்கிறான்.

அவனை அரசை ஏற்றுக் கொள்ளும் படி சொன்ன அமைச்சர்களிடம்

"பெரிய கொடுமையைச் செய்த என் அன்னையின் செயலை நல்லது என்று நீங்கள் கூறினால் , இது கலி காலம் தான் வந்து விட்டதோ என்று எண்ணும்படி இருக்கிறது " என்கிறான்.

பாடல்


‘அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் தீ  நெறி்க் கலியின் ஆட்சியோ!


பொருள்

‘அடைவு = அடைய முடியாத. எங்கும் காணாத என்று பொருள்

அருங் கொடுமை = பெரிய கொடுமையை

என் அன்னை = என் தாயின்

செய்கையை = செயலை

நடைவரும் = உயர்ந்த ஒழுக்கத்தை

தன்மை நீர், = இயல்பாகக் கொண்ட நீரங்கள் (அமைச்சர்கள்)

“நன்று இது” = அது நல்லது

என்றிரேல் = என்று கூறினால்

இடை வரும் காலம் = இடையில் வரும் காலம்

ஈண்டு = இங்கு

இரண்டும் நீத்து, = இரண்டையும் தவிர்த்து

இது = இந்தக் காலம்

கடை வரும் = கடைசியில் வரும்

 தீ நெறி்க் = தீய வழியில் செல்லும்

கலியின் ஆட்சியோ! = கலிகாலத்தில் ஆட்சியோ , அல்லது கலி புருடனின் ஆட்சியோ


இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து என்றால் என்ன ?  

இராமாயணம் நடந்தது கிரேதாயுகம். அதற்குப் பின் திரேதாயுகம், துவாபர யுகம் என்று  இரண்டு யுகங்கள் வரவேண்டும். அதற்குப் பின் கலியுகம் வரும். நீங்கள்  சொல்வதைப் பார்த்தால் இப்போதே அந்த இரண்டு யுகங்களும் கழிந்து கலி யுகம்  வந்து விட்டது போலத் தெரிகிறது என்கிறான். 

ஆண்டது போதும் , அரசை இராமானுக்குத் தரலாம் என்று தயரதன் நினைத்தான். சாகும் வரை தானே ஆள வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அரசின் மேல் அவனுக்கு பற்று இல்லை. 

தந்தை சொல்லே உயர்ந்தது என்று நாட்டை விட்டு கானகம் போனான் இராமன். அவனுக்கும் அரசின் மேல் பற்று இல்லை. 

தந்தை சொல் கொண்டு தாய் தந்த அரசை வேண்டாம் என்கிறான் பரதன்.  அவனுக்கும் அரசின் மேல் ஆசை இல்லை. 

இராஜ்யத்தை ஆள்வதை விட மற்றவற்றை உயர்ததாக அவர்கள் கருதினார்கள். 

இவர்களாவது பரவாயில்லை. படித்தவர்கள். அறம் அறிந்தவர்கள். 

குகன், ஒரு வேடன், படகு ஓட்டுப்பவன். இராமனை கண்ட மாத்திரம் , அரசும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம், உன் கூடவே இருந்து விடுகிறேன். அந்த அரசு துன்பத்தின் இருப்பிடம்  என்கிறான். 

அரச பதவி என்பது "இன்னலின் இருக்கை " என்கிறான். 

கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

என்பது கம்பர் வாக்கு. 

பதவி மோகம் அவர்களுக்கு இல்லை. 

பதவி பதவி என்று அலைவோர் பாடம் படிக்க வேண்டும். 


1 comment:

  1. இதுவரை பரதன் பற்றி எழுதியதைப் படித்தால் அவன் பெருமை கண்டு ஆச்சரியமாக இருக்கிறது.

    இதுவரை எழுதியதற்கு நன்றி - இன்னும் எழுதினால் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    ReplyDelete