Monday, October 31, 2016

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு கூட இலக்குவனும், சீதையும் போய் விட்டார்கள்.

பாட்டனார் ஊரில் இருந்து பரதன் வருகிறான். வந்தவுடன் , தாயான கைகேயிடம் "அப்பா எங்கே ?" என்று கேட்கிறான்.

அவர் இறந்துவிட்டார் என்று மிகச் சாதாரணமான ஒரு செய்தியை சொல்வதைப் போல சொல்கிறாள் கைகேயி.

துடித்துப் போகிறான் பரதன்.

"கணவன் இறந்தான் என்ற செய்தியை இதை விட சாதாரணமாக சொல்ல உன்னை விட வேறு யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள்" என்று சொல்லி அழுகிறான்.

பாடல்

வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான்.

பொருள்

வாய் = முகம்

ஒளி மழுங்கத் = ஒளி மங்கி வாடிப் போக

தன் = தன்னுடைய

மலர்ந்த தாமரை = மலர்ந்த தாமரை

ஆய் = போன்ற

அலர் நயனங்கள் = மலர் போன்ற கண்கள்

அருவி சோர்தரத் = அருவி போல கொட்ட

‘தீ எரி = எரிகின்ற தீயை

செவியில் = காதில்

வைத்து = வைத்தது

அனைய = போல

தீய சொல் = தீய சொல்லை

நீ அலது = உன்னைத் தவிர

உரைசெய = சொல்வதற்கு

நினைப்பரோ? = நினைப்பார்களோ

‘என்றான் = என்றான்

இராமாயணத்தை விமரிசிக்கும் சிலர், பரதன் , தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து கொண்டு , தாய்க்கு சொல்லிக் கொடுத்து அரசை அபகரித்துக் கொண்டான்  என்ற குற்றச் சாட்டை அவன் மேல் சுமத்துவார்கள்.

கதையில், பரதனின் செயலை உன்னிப்பாக கவனித்தால் அது எந்த அளவுக்கு ஒரு தவறான  குற்றச் சாட்டு என்று புரியும்.

இராமனைப் பொறுத்தவரை , தாயும் தந்தையும் சொல்லிவிட்டால் அது வேத வாக்கு. அது சரியா, தவறா என்றெல்லாம் அவன் ஆராய்ச்சி செய்வது கிடையாது.

"மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ" என்று சொல்லி காட்டுக்கு கிளம்பி விட்டான்.

 ஆனால்,பரதன் அப்படி அல்ல. யார் சொன்னாலும், கேட்பது இல்லை. எது அறமோ, எது தர்மமோ, எது ஞாயமோ  அதில் உறுதியாக நிற்பான்.

தாய் தானே என்று அவன் பார்ப்பது இல்லை.

"இந்த துக்கச் செய்தியை , உன்னைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்ல நினைக்கக் கூட  மாட்டார்கள்" என்று அவள் மேல் கோபம் கொள்கிறான்.

உறவுகளைத் தாண்டி , அறத்தின் பால் உறுதியாக நின்றது பரதனின் ஒரு குணம்.

மேலும் சிந்திப்போம்.



Sunday, October 30, 2016

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன்

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன் 



பரதன் அரசாள வேண்டும். நீ காடாள வேண்டும் என்று கைகேயி சொன்ன பின், கோசாலையை காண இராமன் வருகிறான். இராமனின் கோலத்தைக் கண்டு கோசலை , இராமனைப் பார்த்துக் கேட்டாள்  "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உளதோ" என்று . "முடி புனைய தடை இல்லை, ஆனால் முடி பரதன் புனைகிறான்" என்று சொல்கிறான்.

பங்கமில் குணத்து என் தம்பி, உன் காதல் மைந்தன் பரதன் முடி சூட்டுகிறான் என்று கூறுகிறான்.

கோசலை கலங்கவில்லை.

"அரச முறை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், உங்களை போல மூன்று மடங்கு நல்ல குணங்கள் கொண்டவன். உன்னை விட நல்லவன். ஒரு குறையும் இல்லாதவன் பரதன். அவனே ஆளட்டும் " என்று கூறுகிறாள்.


பாடல்

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

“முறைமை அன்று = அரச முறை இல்லை. மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது அரச தர்மம் இல்லை.

என்பது = என்று

ஒன்று உண்டு; = ஒன்று உண்டு

மும்மையின் = மூன்று மடங்கு

நிறை குணத்தவன் = நிறைந்த குணங்கள் கொண்டவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்; = குறை ஒன்றும் இல்லாதவன்

எனக் கூறினள்,= என்று கூறினாள் . கூறியது யார் ?

நால்வர்க்கும் = நான்கு சகோதரர்களுக்கும்

மறு இல் = குறை இல்லாத

அன்பினில் = அன்பினால்

வேற்றுமை மாற்றினாள் = வேறு பாடு இல்லாத கோசலை

நுணுக்கமாக அறிய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

முதலாவது, தன் மகனுக்கு அரசு இல்லை. தான் சக்ரவர்த்தியின் தாய் இல்லை  என்று அறிந்த கோசலை பேசுகிறாள்.

இரண்டாவது, தாய்மார்கள் பாடம் படிக்க வேண்டிய இடம். பிள்ளை ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலோ, அல்லது ஏதாவது போட்டியில்  வெற்றி பெறவில்லை என்றாலோ, பெரும்பாலும் தாய்மார்கள் பிள்ளைகளை திட்டுவது இயல்பு. சரி படிச்சாதானே, ஒழுங்கா படுகிறதே இல்லை, எந்நேரம் பார்த்தாலும் டிவி என்று கடிந்து கொள்வார்கள். பிள்ளை ஏற்கனவே  மனம் நொந்து வந்திருப்பான். அதற்கு மேல் தாயின் கடிய சொற்கள்.

கோசலை அறிவாள் . ஒரு வேளை இராமன் மனம் துன்பப் பட்டிருக்குமோ , அவனை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது என்று, "பரவாயில்லை, பரதன் உன்னை விட நல்லவன், அவனே ஆளட்டும் " என்று ஆறுதல் சொல்கிறாள்.

மூன்றாவது, அவள் பரதனைப் பற்றி கூறும் சொற்கள்.   மும்மையின் நிறை குணத்தவன் என்கிறாள். உங்கள் மூன்று பேரை காட்டிலும் நிறைந்த குணங்கள்  கொண்டவன் என்பது பொருள்.

நான்காவது, நின்னினும் நல்லன். உன்னை விட நல்லவன் என்கிறான். பரதன்  உயரும் இடம். இராமனை விட ஒரு படி மேலே போய் விட்டான். சொல்வது வேறு யாரும் அல்ல,  கோசலை கூறுகிறாள். இராமனின் தாய். எந்த தாய்க்கும் தன் பிள்ளை  உயர்வுதான். தன் பிள்ளையிடமே இன்னொரு பிள்ளையைப் பற்றி எந்தத் தாயும் பேச மாட்டாள். அதுவும் இராமனைப் போன்ற பிள்ளையை விட  வேறு யார் பெரிய நல்ல குணங்கள் கொண்டிருக்க முடியும் ? பாரதனால் முடிந்தது.  இராமனை விட நல்லவன் என்று கோசலை சான்றிதழ் தருகிறாள்.

ஐந்தாவது, இதுவரை பரதன் எதுவும் சாதித்தாக செய்தி இல்லை. இருந்தும் அவன்  உயர்ந்து நிற்கிறான். எப்படி ? அவன் குணங்கள் . குணத்தால்,மனத்தால் உயர்ந்தவன் பரதன்.

இராமனை விட நல்லவன் என்று இராமனின் தாய் கூறும் அளவுக்கு நல்லவன் பரதன்.

எப்படி அப்படி ஆனான் என்று கம்பர் காட்டுகிறார்.

மேலும் சிந்திப்போம்.



தேவாரம் - காம்பில்லா மூழை போல்

தேவாரம் - காம்பில்லா மூழை போல் 


ஒரு ஊரில் ஒரு தவளை இருந்தது. அந்தத் தவளைக்கு பல ஆசைகள். தான் இருக்கும் அந்தச் சின்ன குளத்தை விட்டு வேறு ஒரு பெரிய குளத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள தாமரை, அல்லி போன்ற மலர்களின் நறுமணத்தை நுகர வேண்டும். அங்குள்ள மற்ற தவளைகள் எப்படி வாழ்கின்றன என்று அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள நல்ல முறைகளை தானும் கடை பிடிக்க வேண்டும் என்று பலப் பல எண்ணங்கள்.

இந்த எண்ணங்கள் எப்போது என்றால், அந்தத் தவளையை ஒரு பாம்பு தன் வாயில் பிடித்துக் கொண்ட பின்.

முட்டாள் தவளை.

பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டால் பிழைக்க முடியுமா ? இருக்கப் போவதோ சில நிமிடங்கள்தான். அதற்குள் , எப்படி பிழைப்பது என்று சிந்திக்காமல் , வேறு எதை எதையோ நினைத்து பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

முட்டாள் தவளை.

தவளை மட்டுமா அப்படி ?

நாம் மட்டும் என்ன வித்தியாசம்.

மரணம் என்ற பாம்பு நம்மை பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் என்று பிறந்தோமோ அன்றே மரணம் நம்மை பிடித்துக் கொள்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது. அந்த இடைப் பட்ட நேரத்தில் என்னவெல்லாம் கனவு காண்கிறோம்....

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், திருமணம், பிள்ளைகள், அவர்கள் படிப்பு,  புகழ், செல்வாக்கு, மதிப்பு என்று ஆயிரம் சிந்தனைகள்....

பாம்பின் வாய் தேரைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சிந்திக்கிறார் நாவுக்கரச ஸ்வாமிகள்.

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

சீர் பிரித்த பின்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளது ஓர்  கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின் வாய் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே .

பொருள்

ஓம்பினேன் = பாதுகாத்தேன்

கூட்டை = இந்த உடல் என்ற கூட்டை

வாளா = அலட்சியமாக

உள்ளது = மனதில்

ஓர்  கொடுமை வைத்துக் = பல தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு

காம்பிலா = காம்பு இல்லாத

மூழை போலக் = அகப்பையைப் போல

கருதிற்றே = கருதினாலும், நினைத்தாலும்

முகக்க மாட்டேன் = முடக்க முடியாததைப் போல

பாம்பின் = பாம்பின்

வாய் = வாயில் அகப்பட்ட

தேரை போலப் = தவளையைப் போல

பலபல = பலவிதமான

நினைக்கின் றேனை = எண்ணங்களை நினைகின்றவனை

ஓம்பி = காத்து

நீ = நீ

உய்யக் கொள்ளாய் = காப்பாற்றி கொள்வாய்

ஒற்றியூர் = திரு ஒற்றியூர் என்ற தலத்தை

உடைய கோவே = உடமையாக கொண்ட அரசனே

அகப்பைக்கு பெரிய காம்பு இருக்கும். சூடானவற்றை அகப்பையில் எடுக்கும் போது , நம் கையில் சூடு அடிக்காமல் இருக்க அந்த நீண்ட கைப்பிடி தேவை. கைப் பிடி இல்லை என்றால் அந்த அகப்பை என்னதான் நினைத்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் , என்ன தான் முயற்சி செய்தாலும், படித்தாலும், பெரியவர்கள் பேசுவதைக் கேட்டாலும், இறைவன் திருவருள் என்ற ஒன்று இல்லாவிட்டால் (கைப்பிடி) ஒன்றும் நடக்காது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லை என்றால், அவன் தாளை வணங்குவதும் நிகழாது.

தவம் உடையவர்க்கே தவம் செய்ய முடியும் என்பார் வள்ளுவர்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 

புத்தகத்தை படித்து விட்டு நானும் தவம் செய்யப் போகிறேன் என்றால் நடக்காது என்கிறார் வள்ளுவர். தவம் என்பது பிறவி தோறும் சேர்த்துக் கொண்டே வருவது என்பது அவர் முடிவு.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது அழுதார். பார்வதி வந்து பால் தந்தாள் என்கிறது பெரிய புராணம். நம் வீட்டுப் பிள்ளைகளும் தான் தினம் அழுகிறது. ஏன், பார்வதி வந்து பால் தரவில்லை ?

முன்பே உன்னை நான் பணிந்து போற்றினேன். நீ அருள் புரிந்தாய், இப்போது என்கிறார் திரு ஞான சம்பந்தர்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


"வாளா உள்ளது". அது என்ன வாளா ? வாளா என்றால் அலட்சியம். ஒரு நோக்கம் இன்மை. குறிக்கோள் இல்லாமல் இருத்தல். அவசரம் தெரியாமல் , முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருத்தல்.

"வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் " என்பார் மணிவாசகர்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

என்பது திருவெம்பாவை

ஒற்றியூர் உடைய கோவே என்று உருகி உருகி நாவுக்கரசர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தேடித் பிடித்துப் படியுங்கள்.

சமயம் தாண்டி, இறை பக்தி தாண்டி, நம்பிக்கைகளைத் தாண்டி, தமிழின் சுவைக்காக படிக்கலாம். படியுங்கள்.






Saturday, October 29, 2016

இராமாயணம் பரதன் 4 - பங்கமில் குணத்து நம்பி

இராமாயணம்  பரதன்  4   - பங்கமில் குணத்து நம்பி 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தீர்மானம் ஆனது. மந்தரை செய்த சூழ்ச்சியால் , கைகேயி வரம் கேட்டு, இராமனுக்கு முடி இல்லை என்று தீர்மானம் ஆகி விட்டது. காட்டுக்குப் போ என்று கைகேயி சொல்லி விட்டாள் . இராமனும் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். கௌசலையை பார்க்க வருகிறான்.

கோசலை கேட்கிறாள் "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உள்ளதோ " என்று. மிக மிக நுணுக்கமான இடங்கள். அதை எல்லாம் விட்டு விடுவோம்.

இராமன் சொல்கிறான், "முடி புனைய ஒரு தடையும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம், நான் முடி புனையவில்லை, பரதன் முடி சூட்டப் போகிறான்" என்கிறான்.

அப்படி சொல்லும் போது , பரதனுக்கு ஒரு அடை மொழி தருகிறான் இராமன்..."ஒரு குற்றமும் இல்லாத குணங்களைக் கொண்ட , என் தம்பி பரதன்" என்கிறான்.

பாடல்


மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி “நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே
துங்க மா முடி சூடுகின்றான்“ என்றான்.

பொருள்

மங்கை = கோசலை

அம்மொழி கூறலும் = அந்த மொழி கூறலும். அதாவது முடி சூட்டிக் கொள்ள தடை ஏதும் இருக்கிறதா என்ற மொழியை கூறவும்

 மானவன் = உயர்ந்தவன் (இராமன்)

செங்கை = சிவந்த கைகளை

கூப்பி = கூப்பி, வணங்கி

“நின் = உன்னுடைய

காதல் = அன்பான

திரு மகன் = சிறந்த மகன்

பங்கம் இல் = குற்றம் இல்லாத

குணத்து = குணங்களை கொண்ட

எம்பி = என் தம்பி

பரதனே = பரதனே

துங்க மா = பரிசுத்தமான

முடி சூடுகின்றான் = முடி சூட்டுகிறான்

என்றான் = என்றான்.

ஒரு காப்பியத்தில், அதன் கதாநாயன் இன்னொரு பாத்திரத்தை உயர்த்தி பேசுவது என்பது சற்று வித்தியாசமான  விஷயம் தான்.

அதுவும் எப்போது, தனக்கு வர வேண்டிய அரசை பரதனிடம் இழந்து, காட்டுக்கும் போக   வேண்டிய சூழ்நிலையில், இராமன் ,  பரதனைப் பற்றி குற்றமே இல்லாத குணத்தவன் என்று சொல்கிறான் என்றால் பரதனின் குணம் எப்படி இருந்திருக்க வேண்டும்.

பரதன் நல்லவனாகவே இருந்தாலும், இராமனின் இழப்பு மிகப் பெரிய இழப்பு. அரசு  போனது மட்டும் அல்ல, காட்டுக்கும் வேறு போக வேண்டும். கோபம் வருவது  இயற்கை. பரதன் முடி சூட்டப் போகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தாலும் யாரும் இராமன் மேல் குறை காண  முடியாது.

"பங்கமில் குணத்து எம்பி" என்கிறான்.

நல்ல குணங்கள் உள்ள பரதன் என்று சொல்லி இருந்தால் கூட சின்ன சந்தேகம் வரும். நல்ல குணங்கள் இருக்கிறது, அது கூடவே கொஞ்சம்  கெட்ட  குணமும் இருக்குமோ  என்ற சந்தேகம் வரும். எனவே இராமன் சொல்கிறான் "குற்றமே இல்லாதவன்" என்று.

அது மட்டும் அல்ல, 'என் தம்பி' என்று பாசம் காட்டுகிறான்.

"உன் காதல் திருமகன்" என்று தாயிடமும் சொல்கிறான். எங்கே கோசலை பரதன் மேல் கோபித்து விடுவாளோ என்று  நினைத்து,"உன் காதல் மகன்" என்று  சொல்கிறான்.

குற்றமில்லாதவன் என்று இராமன் தரும் முதல் சான்றிதழ். இராமனால் பாராட்டப் பட்டவன் பரதன்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் , என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவன் பரதன்.

மேலும் பார்ப்போம்.



Friday, October 28, 2016

நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்

 நாலடியார் - அவர்கள் செய்த குற்றம்  


காமம் பற்றி பேசுவது என்பது இன்றும் ஒரு சங்கடமான விஷயமாகவே இருக்கிறது. பிள்ளைகள் எந்த வலை தளத்தில் , எதைப் பார்த்து கெட்டுப் போவார்களோ என்ற பயப்படாத பெற்றோர்கள் இல்லை. பிள்ளைகள் சில வலை தளங்களுக்குச் செல்லாமல் தடுக்கவும் எத்தனையோ வழி முறைகள் , மென் பொருள்கள் வந்துள்ளன.

எல்லாம் எதனால் ?

காதல், காமம் பற்றி சரியான ஒரு அணுகுமுறை இல்லாததால்.

திருக்குறள், நாலடியார் போன்ற நூல்கள், காமத்தை எவ்வளவு அழகாகச் சொல்கின்றன.

ஒரு தாயும் மகனும் ஒன்றாக அமர்ந்து , முகம் சுளிக்காமல் அவற்றை படிக்க முடியும்.

ஒரு தந்தையும், மகளும் ஒன்றாக படித்து இன்புற முடியும்.

அப்படி ஒரு பாடல்.

ஒரு பெண் பிரிவுத் துயரால் வாடுகிறாள். அவள் காதலன் பொருள் தேடி வெளியூர் சென்றிருக்கிறான். தன் துயருக்கு நான்கு  பேரை அவள் குற்றம் சாட்டுகிறாள்.

சிவன், காகம், பாம்பு, தாய்.

இந்த மூன்று பேரும்தான் தன்னுடைய துயருக்கு காரணம் என்கிறாள்.

எப்படி ? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே ?

பாடல்

கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

பொருள்

கண்மூன் றுடையானும் = மூன்று கண்கள் உடைய சிவனும்

காக்கையும் = காக்கையும்

பையரவும் = அரவு என்றால் பாம்பு. படம் எடுத்து ஆடும் பாம்பும்

என்னீன்ற யாயும் = என்னை ஈன்ற தாயும்

பிழைத்ததென் = எனக்கு பிழை செய்தார்கள்

பொன்னீன்ற = பொன் போன்ற

கோங்கரும் = முளை விடும் அரும்பு

அன்ன = போன்ற

முலையாய் = மார்பை உடையவளே

பொருள்வயிற் = பொருள் சேர்க்க வேண்டி

பாங்கனார் = தோழர்

சென்ற நெறி = சென்ற வழி

என்ன இது ஒண்ணுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா ?


சிவன், முன்பு ஒரு முறை மன்மதனை எரித்தான் . அப்படியே விட்டிருக்கலாம். ரதியின் மேல் பரிதாபம் கொண்டு, அவனை மீண்டும் உயிர்பித்தான். அப்படி உயிர்ப்பிக்காமல் இருந்திருந்தால், அவன் இப்படி என் மேல் மலர் அம்புகளை ஏவி என்னை  இப்படி வதைக்க மாட்டான் அல்லவா. எனவே, சிவன் முதல் குற்றவாளி.

இந்த காகம் , தன் கூட்டில் உள்ள குயிலின்   முட்டையை அடை காத்து குயிலாக  வெளிக் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தக் குயில் இப்படி இனிமையாகக்  கூவி என் பிரிவுத் துயரை மேலும் துன்பம் உள்ளதாக மாற்றாமல் இருந்திருக்கும். 

பாம்பு. இராகு கேது என்ற பாம்பு , சந்திரனை கிரகணத்தன்று விழுங்கியது. அப்படியே இருந்திருக்கலாம். ஏனோ மீண்டும் வெளியில் விட்டு விட்டது. அப்படி  விட்டதால் தானே இந்த நிலவு என்னை இப்படி சுட்டு எரிக்கிறது. 


தாய். எல்லாவற்றிற்கும் மேல், என் தாய் என்னை பெண்ணாக பெறாமல் இருந்திருந்தால்  எனக்கு இந்த துயர் வருமா என்று கேட்கிறாள். 

யாரிடம் ? தன் தோழியிடம். அவளை எப்படி வருணிக்கிறாள் ? தென்னை மரத்தில்  சின்ன குருத்து வரும். அது போல இளமையான மார்பகங்களை கொண்டவளே  என்று. தானும் அவ்வளவு சின்னப் பெண் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இளமையான, காதல் வயப்பட்ட பெண். பிரிவு அவளை மிகவும் வாட்டுகிறது. 

எவ்வளவு கண்ணியமாகச் சொல்கிறாள். 

பிரிவிலும் ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. 


இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு

இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு


பரதன் பிறந்து தொட்டிலில் குழந்தையாக கிடக்கிறான்.

குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டும். யார் பெயரிடுவது ?

பெற்றோர் பெயரிடலாம், தாத்தா பாட்டி பெயரிடலாம். சில இடங்களில் மாமன் மடியில் வைத்து பெயரிடுவார்கள்.

இப்போதெல்லாம், அரசியல் தலைவர்களை பெயரிடச் சொல்கிறார்கள்.

தசரதன், குல குருவான வசிட்டரிடம் சொல்லி அவரை பெயரிடச் சொல்கிறான். குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. மதிப்பு.

வசிட்டன் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரிடுகிறான். மற்ற பிள்ளைகளின் பெயரிட்ட பாடல்களை விட்டு விடுவோம்.

பரதனுக்கு பெயரிட்ட பாடலை பார்ப்போம்.

தன்னுடைய தவத்தினால் வேதங்களின் உட்பொருளை அறிந்த வசிட்டன், உள்ளங்கை நெல்லிக் கனி போல ஒளி விடும் அவனுக்கு பரதன் என்று பெயர் தந்தான்.

பாடல்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரம் = கை , உள்ளங்கை

தலம் = இடத்தில்

உற்று = சேர்ந்து

ஒளிர் = ஒளிரும் , விளங்கும்

நெல்லி = நெல்லிக் கனியைப்

கடுப்ப = போல , ஒத்த

விரதம் = விரதத்தினால், தவத்தினால்

மறைப் = வேதம் போன்ற உயர் நூல்களின்

பொருள் = பொருளையும்

மெய்ந் நெறி = அவை சொல்லும் உண்மையான வழிகளையும்

கண்ட = கண்ட, அறிந்த

வரதன் = வசிட்டன்

உதித்திடும் = தோன்றிடும்

மற்றைய ஒளியைப் = வேறு ஒளியை

‘பரதன் ‘ = பரதன்

எனப் = என்று

பெயர் =பெயர்

பன்னினன் அன்றே = பண்ணினான் , தந்தான்

சற்று ஆராய்வோம்.

உள்ளங்கை நெல்லிக் கனி - அது என்ன உள்ளங் கை நெல்லிக் கனி போல என்ற தொடர் ? மற்ற கனிகள் உள்ளங்கையில் இருந்தால் தெளிவாகத் தெரியாதா ? மாங்கனி இருந்தால் தெரியாதா ? ஏன் நெல்லிக் கனியை மட்டும்
குறிப்பாகச் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

நெல்லிக் கனியைப் பார்த்தால் தெரியும், அதில் சில வரிகள் இருக்கும். மேலிருந்து கீழாக செல்லும். அந்த வரிகளின் மேல் கத்தியை வைத்து வெட்டிப் பார்த்தால்  , அந்த வரிகளுக்கு நேர் உள்ளே உள்ள விதையிலும் அதே போல  வரிகள் இருக்கும். அதாவது விதையில் எப்படி இருக்கிறதோ அதே போல வெளியிலும் இருக்கும்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அப்படியே வெளியிலும் இருக்கும். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும்.

உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேறுபாடு கிடையாது.

பரதனுக்கு மனமும் செயலும் ஒன்றாக இருந்தது. அல்லது இருக்கும் என்று முதலிலேயே கம்பர் காட்டுகிறார்.

யோசித்துப் பார்ப்போம். நாம் நினைப்பது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா ? நமக்கு மிக மிக நெருங்கியவர்களிடம் கூட நம் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாது.

மனதில் ஒன்றை நினைப்போம், வெளியில் ஒன்றைச் சொல்வோம், செய்வோம்.  கணவன், மனைவி, பிள்ளைகளிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்போம் என்று சொல்லவே வேண்டாம்.

உள்ளும் புறமும் பிரிந்து கிடக்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  இராமலிங்க அடிகளார் .


ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

என்பது திருவருட்பா.

எப்போது உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ?

மனம் தூய்மையாக இருந்தால் , அது அப்படியே வெளிப்படுவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. மனத் தூய்மை இல்லாவிட்டால் தான், அது வெளிப் படுவதை மறைக்க  வேண்டி இருக்கும்.

வள்ளுவரிடம் ஒரு மாணவன் கேட்டான், ஐயா உங்கள் 1330 குறளையும் படித்து அதன் உள் அர்த்தங்களை புரிந்து அதன் படி நடப்பது என்பது இயலாத காரியம்.

குறள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் உள்ள அறங்களை  தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டான்.

வள்ளுவரும், "சொல்லுகிறேன் , நாலே வார்த்தைகளில் சொல்கிறேன் குறித்துக் கொள் " என்றார்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"

அவ்வளவுதான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்பது வள்ளுவம்.

மனதில் எந்த விதமான குற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்து அறங்களும் சேர்ந்த ஒன்று என்றார்.

மனம் தூய்மையாக இருந்து விட்டால் , தவறு எப்படி நிகழும் ?

மனம் செயல் படுவதால் , மனிதன் என்று முன்னொரு பிளாகில் பார்த்தோம்.

மனம் சரியாகச் செயல் பட்டால் , சிறந்த மனிதனாக முடியும்.

அப்படி மனம் உயர்ந்ததால், தான் உயர்ந்தவன் பரதன்.

எப்படி என்று காப்பியத்துக்குள் சென்று பார்ப்போம்.


"உதித்திடும் மற்றைய ஒளியை" - உதித்தல் என்றால் முன்பே இருந்த ஒன்று மீண்டும் வெளிப்படுவது. சூரியன் உதித்தான் என்று சொல்ல வேண்டும். சூரியன் தோன்றினான் என்று   சொல்லக் கூடாது. சூரியன் எப்பவும் உள்ளது. இரவில் மறைந்து  இருந்தது. பகலில் உதித்தது.

ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எப்போதும் உள்ளவன். நெற்றிக் கண்ணில் உதித்தான். எனவே தான் முருக ஜெயந்தி ஒன்று கிடையாது.



அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
    பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்

என்பது கந்த புராணம். ( சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் அடங்கியது இந்தப் பாடல் என்பது பெரியவர்களின் கருத்து).

இராம , இலக்குவன , பரத  மற்றும் சத்ருக்கனன் என்போர் அவதாரம். எப்போதும் உள்ளவர்கள். இங்கு வந்து உதித்தனர் என்ற அவதார இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்லிப் போகிறான் கம்பன்.


"மற்றைய ஒளியை"....இராமனை மெய் பொருள் என்ற கம்பர், பரதனை "மற்றைய ஒளி" என்றார். மெய் பொருளில் இருந்து பிறக்கும் ஞான ஒளி பரதன்.  அஞ்ஞானத்தை இருள் என்று ஞானத்தை ஒளி என்றும் சொல்லுவது மரபு. பரதனை "மற்றைய ஒளி" என்றார்.

அவன் வாழ்க்கையைப் பற்றி மேலும் சிந்திப்போம்.







Thursday, October 27, 2016

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு

நாலடியார் - கீழ் மேலாய் நிற்கும் உலகு 


நல்லவர்கள் துன்பத்தில் , வறுமையில் வாடுவதும், கெட்டவர்கள் செலவச் செழிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதும் நாம் தினமும் காணும் காட்டுச்சியாக இருக்கிறது.

அறம் , நீதி, நேர்மை, கடின உழைப்பு என்று இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாமல் கையால் ஆகாதவன், ஒண்ணுக்கும் உதவாதவன் என்று பட்டம் பெற்று ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் தவிப்பார்கள்.

கயவர்களோ பெரும் செல்வத்துடன், எல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்வார்கள்.

நாலடியார், இதற்கு ஒரு தீர்வு சொல்லவில்லை. அடுத்த ஜென்மத்தில் அல்லது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் அவரவர்களின் செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள் என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

உலகம் அப்படித்தான் இருக்கிறது. எல்லாமே தலைகீழாக இருக்கிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பணம் படைத்த செல்வந்தர்களும், படித்த சான்றோரும் கெட்டு கீழ் நிலையில் இருக்கவும். வேசிகளும், தீயவர்களும் உயரிய இடத்தில் இருப்பதும் நாளும் நடக்கிறது. குடையில், பயன்படும் துணிப் பகுதி கீழும், கைப்பிடி மேலும் இருப்பதைப் போல என்று  யதார்த்தைப் பேசிச்  செல்கிறது.



பாடல்

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருக்கிக்
கடைக்கால் தலைக்கண்ணதாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு!

பொருள்

உடைப் = உடைய. மற்றவர்களுக்கென்று உடைய 

பெருஞ் செல்வரும் = பெரிய செல்வந்தர்களும் 

சான்றோரும் = சான்றோரும்

கெட்டுப் = கெட்டு , கீழ் நிலை அடைந்து

புடைப்பெண்டிர்  மக்களும் = விலை மகளிரும் 

கீழும் = கீழான கயவர்களும்

பெருக்கிக் = செல்வம் புகழ் இவற்றைப் பெருக்கி

கடைக்கால் =    கீழே உள்ள குச்சி

தலைக்கண்ணதாகிக் = தலைப் பக்கம் வந்து

குடைக்கால்போல் = குடையில் உள்ளது போல

கீழ்மேலாய் = கீழே உள்ளது மேலேயும், மேலே உள்ளது கீழேயும்

நிற்கும் உலகு! = இருக்கும் இந்த உலகம்


உடைப்பெருஞ் செல்வரும் - அறிவுள்ளவர்களிடம் சேர்ந்த செல்வம் , ஊருக்கு பொதுவில் இருக்கும் ஊருணியில் நீர் நிறைந்தால் எப்படி எல்லோருக்கும் பயன் தருமோ அது போல எல்லோருக்கும் பயன் தரும் என்பார் வள்ளுவர்.

ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.

என்பது குறள்


இராமாயணம் - பரதன் 2

இராமாயணம் - பரதன் 2 


இராமாயணம் என்பதே தவறான தலைப்பு. பரதாயணம் என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஏன் ?

உலகில் இந்த ஒரு கதையோ, நாவலோ, இலக்கியமோ அதில் வரும் எந்த ஒரு கதா பாத்திரமும் அதில் வரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு மேலான குண நலன்கள் உள்ளவர்களாக கட்டுவது இல்லை - இராமாயணத்தைத் தவிர.

ஒரு இடத்தில் அல்ல, மூன்று இடத்தில், மூன்று வெவ்வேறு முக்கியமான பாத்திரங்கள் மூலம் பரதன் இராமனைவிட பல மடங்கு உயர்ந்தவன் என்று சொல்ல வைக்கிறான் இராமன்.

கம்பனுக்கு இராமன் மேல் அளவு கடந்த வாஞ்சை உண்டு. இருந்தும், பரதன் இராமனைவிட மிக மிக உயர்ந்தவன் என்று சொல்கிறான்.

சொல்வது யார் ? இராமனின் தாய்.

இராமனின் செயல்களைக் கூட சரியா தவறா என்று வாதம் செய்யலாம்.

தாடகை என்ற பெண்ணைக் கொன்றது,  வாலியை மறைந்து நின்று கொன்றது, சீதையை தீ குளிக்க  சொன்னது, கும்பகரணனோடு சண்டை போடும் போது கை நடுங்கியது,  தந்தை சொன்னார் என்பதற்காக அரச கடமையை துறந்து  கானகம்  சென்றது என்று இராமனின் சில செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது.

பரதனின் ஒரு செயல் கூட , ஒரு நூல் கூட பிறழாதது. அதை பற்றி விரிவாக பார்க்கப்  போகிறோம்.

அதற்கு முன்னால் , ஒரு சின்ன முன்னுரை.

பரதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு விடை சொல்லிவிட்டு அவனைப் பற்றி படிப்போம்.

ஒரு நாள், வள்ளுவரிடம் ஒரு மாணவன் சென்று

மாணவன்: ஐயா, நீங்கள் எதையும் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வீர்கள் தானே.

வள்ளுவர்: ஆமாம்

மா: அப்படியானால், வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் ? எந்தத் துறையானாலும்.....மாணவப் பருவம் ஆனாலும், வேலை செய்தாலும், தொழில் முனைந்தாலும், ஆன்மீகத் துறையில் சென்றாலும், பொது வாழ்வில் ஈடு பட்டாலும் ....முன்னேற என்ன வழி.

வ:  அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்னால் , என்னோடு கூட நடந்து வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு குளத்தைக் காண்பித்தார்.

பார்த்தாயா, எவ்வளவு தாமரை மலர்கள் இருக்கின்றன.

மா: ஆமாம் ஐயா..அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? புரியவில்லையே

வ: புன்னகைத்துக் கொண்டே, தம்பி, அந்த மலர்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன ?

மா: ஐயா அது தண்ணீரில் மிதக்கின்றன...எனவே அவை நீரின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமே இருக்கும்

வ: சரி, அந்த தாமரை மலரை கொஞ்சம் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் ..செய் பார்ப்போம் என்றார்.

மா: இது என்ன பிரமாதம் என்று குளத்தில் இறங்கி, ஒரு மலரை பிடித்து தூக்கிப் பிடித்தான்...அந்தோ, அது தண்டில் இருந்து பிரிந்து வந்து விட்டது.  சரி, இது சரி வராது என்று ஒரு உயரமான குச்சியை நட்டு, ஒரு தாமரை மலரை பிடித்து  உயர்த்தி, அந்த குச்சியின் மேலே வைத்து கட்டினான். பிடித்து இழுத்து கட்டியதில் தாமரை மலரின் இதழ்கள் எல்லாம் உதிர்ந்து அது வாடிப் போய் விட்டது.....

மாணவன் குழம்பிப் போய் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் சிரித்துக் கொண்டே...சரி நாளை வா உன் கேள்விக்கு விடை தருகிறேன் என்றார்.

அன்று இரவு நல்ல மழை பொழிந்தது.   குளத்தின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்து இருந்தது.

மாணவனை அழைத்து வந்து வள்ளுவர் காண்பித்தார்....பார்த்தாயா நேற்று பெய்த மழையில் நீர் மட்டம் உயர்ந்து இருக்குறது என்றார்.

மா: ஆமாம் ஐயா.

வ: பார்த்தாயா, தாமரை மலரின் உயரமும் உயர்ந்து இருக்கிறது .

மா: ஆமாம் ஐயா. அதற்கு என்ன இப்போ. மழை வந்தால் குளம் நிறைவதும், அதனால் பூக்கள் உயர்வதும் இயற்கை தானே என்றான்.

வ: அது தான் உன் கேள்விக்கு விடை.

எப்படி மலரின் உயரம் நீர் மட்டத்தைப் போல இருக்கிறதோ, வாழ்வில் நீ அடையும் உயரம் உன் மனத்தைப் பொறுத்து இருக்கிறது.

வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.

உன்னுடைய உயரம் , உன் உள்ளத்தின் உயரம்.

யோசித்துப் பார், ஒவ்வொரு காரியம் செய்வதற்கு முன்னாலும், நீ அந்தக் காரியத்தைப் பற்றி யோசிப்பாய் , அதை எப்படி செய்வது, எவ்வளவு காலம் ஆகும், என்ன என்ன இடையூறு வரும், யார் துணை செய்வார்கள் என்று எல்லாம்  யோசிப்பாய் அல்லவா. உன் மனம் அந்த வேலையை முடிப்பதைப் பற்றை  சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் முதலில் உயர்ந்து விடுகிறது. பின் வேலை நடக்கிறது. நீ எவ்வளவு நினைத்தாயோ, அவ்வளவு செய்கிறாய்.

மா: ஐயா புரிந்த மாதிரி இருக்கு. முழுவதும் புரியவில்லை.

வ: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பள்ளியில் சேர்கிறான். அவன் மனம் எப்படி இருக்கும் ? நல்லா படிக்கணும், நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும், வகுப்பில் முதல் மாணவனாக வர வேண்டும், நல்ல கல்லூரியில் இடம்  கிடைக்க வேண்டும் என்றெல்லாம்யோசிப்பான் அல்லவா ? பயம் இருக்கும். குழப்பம் இருக்கும். சந்தேகம் இருக்கும். இருந்தும், மனம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறது அல்லவா ? நினைத்தால் மட்டும் நடந்து  விடாது. ஆனால், நினைக்காவிட்டால் நடக்கவே நடக்காது.

மனிதனின் மனம் எவ்வளவுக்கெவ்வளவு உயர்கிறதோ, அவ்வளவுக்கு அளவு அவன் உயர்வான்.

கூர்ந்து சிந்தித்தால் ஒன்று தெரியும்.

வள்ளுவர், மனிதன் எவ்வளவு படிக்கிறானோ, எவ்வளவு உழைக்கிறானோ, எவ்வளவு  மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானோ அவ்வளவு உயர்வான் என்று சொல்ல வில்லை. உயர வேண்டுமானால், மனம் உயர வேண்டும். அவ்வளவு தான்.

பரதன் , உயர்ந்தான், உயர்ந்தான், உயர்ந்து கொண்டே போனான். காப்பியம் பூராவும் அவன் உயர்வை காட்டுகிறது.

பரதனின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல பாடம்.

என்னென்ன பாடங்கள் ?





Wednesday, October 26, 2016

இராமாயணம் - பரதன் - 1

இராமாயணம் - பரதன் - 1


இராமாயணத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு குடும்பச் சண்டை. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு, மூத்த மகனுக்கு சேர வேண்டிய நாட்டை அவனுக்குத் தராமல், இளைய மனைவியின் மகனுக்கு ஒரு அரசன் தந்து விட்டான். அரசன் சொன்னான் என்பதற்காக , அந்த மூத்த மகன் கானகம் போனான். போன இடத்தில் அவனுடைய மனைவியை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். தூக்கிப் போனவனோடு சண்டை இட்டு, மனைவியை மீட்டு வந்தான்.

இவ்வளவுதான் கதை.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதை விட அருமையான கதைகள் எவ்வளவோ இருக்கிறது. இருந்தும் இராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது ?

அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போது இருப்பதை போலத்தான் இருக்கிறது. நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. நல்லவர்களிடமும் சில  தவறுகள் உண்டு. தீயவர்களிடமும் சில நல்ல குணங்கள் உண்டு.

நல்லவர்கள் பாதையில் போகலாம் என்றால் அவர்களும் அங்கங்கே சில சந்தேகத்து  இடமான காரியங்களை செய்து இருக்கிறார்கள். அது சரியா , தவறா என்ற சர்ச்சை இன்று வரை நீள்கிறது.

தீயவர்கள் போன பாதையில் போகக் கூடாது என்று நினைத்தால் , அவர்களும் பல நல்ல  குணங்களுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள்.

எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க.

இராமாயணம் என்பது , என்றோ எப்போதோ ஒரு அரசனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

இராமாயணம் முடிந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டது. சூழ் நிலைகள் மாறி விட்டது.  சமுதாயம், அதன் விதி முறைகள், சட்ட திட்டங்கள் மாறி விட்டன. இன்றும், இராமாயணம் படித்து, அதன் படி வாழ நினைத்தால் சரியாக இருக்குமா ?  சுவாரசியமான கதை என்று படிக்கலாமே தவிர அது நடைமுறைக்கு  வழி காட்டுமா ?

இதை எல்லாம் படிப்பது ஒரு கால விரயம். இராமன் நல்லவன், வல்லவன் என்றே இருந்து விட்டு ப் போகட்டும். ஒவ்வொரு கதையிலும் கதாநாயகன் நல்லவன் வல்லவனாகவே  இருப்பான். செய்ய முடியாத காரியங்களை செய்வான்.  அதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை சம்பவங்கள் . எனவே ஒரு கதையைப் படித்து விட்டு, அதன் படி வாழ நினைப்பது  யதார்த்தத்துக்கு ஒவ்வாத செயல் என்ற நினைப்பது வரும்.

அது இன்னொரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் முன்னேற, மிக உயர்ந்த நிலையை அடைய,  சிறப்பாக வாழ இராமாயணம்  வழி காட்டுகிறது என்பது உண்மை. சத்தியம்.

என்ன ஒரு சிக்கல் என்றால் அதை நேரடியாகச் சொல்லவில்லை.

கதையோடு, கதை மாந்தர்களோடு அதை பிணித்து வைத்திருக்கிறது.

மண்ணில் புதைந்து கிடைக்கும் வைரம் போல அது கிடக்கிறது. கொஞ்சம்  தோண்டித்தான் எடுக்க  வேண்டி இருக்கிறது.

வாருங்கள். இராமாயணம் தரும் வைரங்களை தோண்டி எடுப்போம்.

வாழ்வில் முன்னேற, மிக மிக உறுதியான வழியை பரதன் என்ற பாத்திரத்தின் மூலம் இராமாயணம் சொல்லுகிறது.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான் ? சண்டை போட்டானா ? அரக்கர்களை அழித்தானா ? மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ததாக குறிப்பு ஏதேனும் இருக்கிறதா ?  நாட்டை விரிவு படுத்தினானா ?

அப்படி என்ன தான் பெரிதாக  செய்து விட்டான் ?

வாழ்வின் மிகப் பெரிய இரகசியங்களை உள்ளடக்கியது பரதன் பாத்திரம்.

வாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிவோம்.

  

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?


பிரிவு உறவை ஆழப் படுத்துகிறது. உறவை உறுதிப் படுத்துகிறது.

தலைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியூர் போய் இருக்கிறான். திரும்பி வர நாள் ஆகிறது.

தலைவியைப் பற்றி சிந்திக்கிறான்.

அவள் எப்படியெல்லாம் தன்னைப் பிரிந்து வருந்துவாள் என்று சிந்திக்கிறான்.

தூக்கம் வராமல் விழித்து இருப்பாளோ ? படுக்கையில் படுக்காமல் தரையில் , தன்னுடைய கையையே தலையணையாக வைத்துப் படுத்துக் கிடைப்பாளோ ? பிரிவுத் துயரில் அழுவாளோ ? என்னைப் பற்றி என்னென்ன நினைப்பாள் ? பாவம் அவளுக்காக நான் ஒன்றும் செய்தது இல்லை. ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கிறேன். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பாளோ ? என்று தலைவன் உருகுகிறான்.

காதலின் பிரிவை சொல்லும் , நாலடியார் பாடல்


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள்

செல்சுடர் = செல்லுகின்ற சுடர். சூரியன். சூரியன் சென்று மறையும் மாலை நேரம்.

நோக்கிச் = அதை நோக்கி

சிதரரிக் கண் = செவ்வரி ஓடிய கண்கள். சிவந்த கண்கள்  

கொண்டநீர் = ததும்பிய கண்ணீர்

மெல்விரல் = மெல்லிய விரலால்

ஊழ்தெறியா = முறையாக தெறிக்கும் படி விரலால் சுண்டி

விம்மித்தன் = பிரிவின் துயர் பொறுக்காமல் விம்மி

மெல்விரலின் = மெல்லிய விரலின்

நாள்வைத்து = நாட்களை எண்ணி

நங்குற்றம் = நம்முடைய குற்றங்களை

எண்ணுங்கொல் = நினைப்பாளோ ?

அந்தோதன் = ஐயோ , தன்னுடைய

தோள்  = தோளை யே

வைத்து = வைத்து

அணை மேல்  = தலையணை போல்

கிடந்து = படுத்து

தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு , தலையணை போல் வைத்து  இருக்கிறாள். கண்ணில் நீர் வழிகிறது. அதை விரலால் எடுத்து சுண்டி விடுகிறாள்.

என்று கற்பனை செய்கிறான் தலைவன்.

அவனுக்குத் தன்னிரக்கம் மேலிடுகிறது.  என்னைப் பற்றி பெரிதாக நினைக்க என்ன இருக்கிறது. அவள் மகிழும்படி என்ன செய்து விட்டேன் ? அவளுக்குத் தந்தது எல்லாம் துன்பம் தான். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள் அவள் என்று வருந்துகிறான்.

பிரிவை, அதன் வலியை , அதன் சோகத்தைக் கூட இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா ?

Tuesday, October 25, 2016

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு

தமிழ் கூறும் நல் உலகம் யாரை இழந்தாலும் ஒளவையை இழந்து விடக்  கூடாது.

ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.

கொஞ்சம் படித்து விட்டு ,ஏதோ எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று பேசுபவர்களைக் கண்டு ஒளவை சொல்லுகிறாள்...

"கற்றது கை மண் அளவு.  கல்லாதது உலகளவு. கலை மகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். சும்மா நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்"

பாடல்

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

பொருள்

கற்றது = இதுவரை கற்றது

கைம் மண்ணளவு = கையில் உள்ள மண் அளவு

கல்லா து = கல்லாதது

உலகளவென் (று) = உலகம் அளவு பெரியது

உற்ற = உடைய

கலைமடந்தை = கலைமகளான சரஸ்வதியும்

ஓதுகிறாள் = படிக்கின்றாள்

மெத்த = பெரிய

வெறும் = வெறும்

பந்தயம் = நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம்

கூற வேண்டாம் = கட்ட வேண்டாம்

புலவீர் = புலவர்களே

எறும்பும் = சின்ன எறும்பு கூட

தன் = தன்னுடைய

கையால் = கையால்

எண் சாண் = எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்

நமக்கு ஏதோ ஒரு துறையில் ஏதோ கொஞ்சம் தெரியும் - கணிதமோ, அறிவியலோ , வர்தகமோ ஏதோ ஒன்றில் கொஞ்சம் தெரியும். மற்றவனுக்கு  சமையல்  தெரியலாம், சங்கீதம் தெரியலாம், படம் வரையத் தெரியலாம், நன்றாக விளையாடாத் தெரியலாம். நமக்கு அதில் ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.

ஒவ்வொருவரும், அவர்கள் துறையில் பெரியவர்கள்தான்.

இதைச் சொல்ல வந்த ஒளவை, மூன்று பெரிய விஷயங்களை போகிற போக்கில் சொல்லி விட்டு ப் போகிறாள்.

முதலாவது, இந்த உலகில் கடல் எவ்வளவு பெரியது. அந்த கடலின் கரையிலும், கடலின் அடியிலும் எவ்வளவு மண் இருக்கும். இந்த உலகம் எல்லாமே  மண்ணால் நிறைந்ததுதான். அவ்வளவு மண்ணில், ஒரு பிடி மண் எடுத்தால் எவ்வளவு இருக்கும். இந்த பூமியை மட்டும் ஏன் கொள்ள வேண்டும். இந்த அண்ட சராசரங்களை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வளவு மண் இருக்கும்.  கற்பனை கூட செய்ய முடியாது. அந்த கோடானு கோடி அண்டத்தில், ஒரு பிடி மண்ணை கையில் எடுத்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு நாம் படித்தது. பிடிக்காதது இந்த அண்டத்தில் உள்ள மண்ணின் அளவு.  ஏதாவது தொடர்பு இருக்கிறதா. இதை வைத்துக் கொண்டு நாம் பெரிய ஆள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இரண்டாவது, நமது மதத்தில் ஒரு துறைக்கு ஒரு கடவுள் என்றால் அவர் தான்  அதில் அதிக பட்சம் ஆற்றல் உள்ளவராக இருப்பார். அவருக்கு மேல் ஒன்றும் இல்லை. அவரால் முடியாதது எதுவும் இல்லை. இலக்குமி தான் செல்வத்திற்கு அதிபதி  என்றால், அவளிடம் எல்லாம் இருக்கிறது. அவள் தினமும்  வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியை சொன்ன நம் முன்னவர்கள், அவள்  கூட அனைத்தையும் படித்து முடித்து விடவில்லையாம். இன்னும் படித்துக்  கொண்டுதான் இருக்கிறாளாம். கல்விக் கடவுளே கல்வியை முற்றுமாக அறிந்து கொள்ளவில்லை என்றால் கல்வியின் அகல ஆழத்தை நாம் அறிந்து கொள்ள  வேண்டும்.

கையில் ஏடு உள்ளவள் என்பார் கம்பர்

அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்றுமிலாளை உபநிடதப்
படையாளை எவ்வுயி ரும்படைப் பாளைப் பதுமநறும்
தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே

என்பது சரஸ்வதி அந்தாதி. 

புத்தகம் வித்யார்த்தி இலட்சணம் என்பது வடமொழி வழக்கு.



இந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் ஏண்டா படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருக்கிறாய் என்று  கேட்டால் "எல்லாம் படிச்சாச்சு" என்கிறார்கள்.

சில பெண்களிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டால், "படித்து முடித்து விட்டு சும்மா இருக்கிறேன்" என்பார்கள். படித்து முடிக்க முடியுமா ?

மூன்றாவது, சரஸ்வதி ஏதோ நேரம் கிடைக்காமல் , கிடைத்த நேரத்தில் படிக்கவில்லை. ஓதுகிறாளாம். ஓதுதல் என்றால் திருப்பி திருப்பி சொல்லுதல். மனனம் செய்தல். புரியும்படி சொல்லுதல்.


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், நாம் படித்ததை நாலு பேர் தெரியச் சொன்னால் தானே நமக்குத் பெருமை. இல்லை என்றால் நாம் படித்தது யாருக்குத் தெரியும்  என்று நினைத்து எந்நேரமும், எல்லா விஷயங்களிலும் ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டே இருப்போம். வள்ளுவர் சொல்கிறார், அடக்கமாக இருந்தால்  பெரிய புகழ் வந்து சேரும் என்று.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

என்பது வள்ளுவம். அடக்கம் அளவற்ற பெருமையை தருமாம்.

ஆணவம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து பழகுவோம்.




Monday, October 24, 2016

நாலடியார் - வாழ்வின் தொடக்கம்

நாலடியார் - வாழ்வின் தொடக்கம் 


ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழவைத் தொடங்கப் போகிறார்கள்.

குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும், உறவுகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும், சேமிப்பு, சிக்கனம், என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. விட்டு கொடுத்து போவது, சமரசம் செய்து கொள்வது. இதெல்லாம் எந்த பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லித் தருவது இல்லை.

தட்டு தடுமாறி , இதை வாழ்க்கையில்  நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

தோழி கேட்கிறாள் தலைவியிடம், " செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டாய். நாளை உன் கணவன் பின்னால் கடினமான காட்டு வழியில் போக வேண்டுமே. நடந்து விடுவாயா ? உன்னால் முடியுமா ? "

அதற்கு தலைவி சொல்கிறாள் "ஒருவன் ஒரு குதிரையை வாங்குகிறான் என்றால், வாங்கிய அன்றே அதை எப்படி செலுத்துவது என்று அறிவானா ? கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பழகுவான். அது போலத்தான் வாழ்க்கையும்."

பாடல்



கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.


பொருள்


கடக்கருங் = கடக்க + அருங் = கடக்க கடினமான

கானத்துக் = காட்டில்

காளைபின் = கணவனின் பின்னால் 

நாளை = நாளை

நடக்கவும் = நடந்து செல்ல

வல்லையோ = வல்லமை உள்ளவளா

என்றி ; = என்று கேட்டாய்

சுடர்த்தொடீஇ = சுடர் விடும் வளையல்களை அணிந்தவளே (தோழியே) !

பெற்றானொருவன் = ஒருவன் பெற்றால்

பெருங்குதிரை = பெரிய குதிரை ஒன்றை

அந்நிலையே = அந்த நேரத்திலேயே

கற்றான் = கற்றான்

அஃதூரும் ஆறு = அதை செலுத்தும் வழியை

குதிரையை வாங்கிய அன்றேவா அதை செலுத்தும் வழியும்  தெரியும். தெரியாது. ஆனால், வாங்கிய அந்த நிமிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  அதை செலுத்தும் வழியை அறிந்து கொள்ளுவாள் அல்லவா அது போல   நானும் இந்த திருமண வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும்  என்று அறிந்து கொள்வேன் என்கிறாள்.

யதார்த்தத்தை பேசும் பாடல்



Sunday, October 23, 2016

நாலடியார் - பூம்பாவை செய்த குறி

நாலடியார் - பூம்பாவை செய்த குறி


அந்தப் பெண் அவளுடைய காதலனோடு நாளை ஓடிப் போகப் போகிறாள். ஏதோ காரணத்தினால் அவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்தில் நடக்காது என்று தெரிந்து விட்டது.

காதலனும் காதலியும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது கொள்வது என்று தீர்மானம் செய்து விட்டார்கள்.

அவளுக்கு மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

அவளுடைய தாயை பார்க்கும் போது உணர்ச்சி கொந்தளிக்கிறது.

என்னை எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாள். என்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப் பட்டு இருப்பாள். என்னைப் பற்றி என்னவெல்லாம் கனவு இருப்பாள் ? என்னை மாலையும் கழுத்துமாக காண எவ்வளவு ஆசை பட்டிருப்பாள் ...நானும் என் கணவனும் ஒன்றாக வெளியில் போகும் போது எங்களை பார்த்து எவ்வளவு மகிழ்திருப்பாள் ...அத்தனையையும் கலைத்து விட்டு இப்போது என் காதலனோடு போகப் போகிறேன். நான் இந்த வீட்டை விட்டு போன பின், அவள் மனம் எவ்வளவு பாடு படும் என்று நினைக்கிறாள்.

தாய் பாசம் ஒரு புறம். காதலனோடு செல்ல வேண்டும் என்ற ஆவல் மறுபுறம். அல்லாடுகிறாள்.

அவள், தன்னுடைய தாயை மீண்டும் மீண்டும் இறுக கட்டி அணைத்துக் கொள்கிறாள். தாய்க்கு புரியவில்லை.

மறு நாள். மகள் வீட்டை விட்டு போன மறுநாள். தாய் புலம்புகிறாள். "அவள் என்னை அப்படி மார்பு அழுந்தும் படி, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள முத்து என் உடலில் அழுந்தும்படி, உடல் பூராவும் படும்படி ஏன் கட்டிப் பிடித்தாள் என்று நான் அறியவில்லை. புலிகள் உள்ள காட்டில் மான் செல்லுவதைப் போல அவளும் செல்கிறாள் என்பதை குறிக்கவோ அப்படி செய்தாள் " என்று அறியாமல் புலம்புகிறாள்.

சோகம் ததும்பும் அந்தப் பாடல்

பாடல்

முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும் 
இலக்கணம் யாதும் அறியேன்; -- கலைக்கணம் 
வேங்கை வெருஉம் நெறிசெலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி

பொருள்

முலைக்கண்ணும் = அவளுடைய மார்பும்

முத்தும் = அவள் கழுத்தில் உள்ள மாலையில் உள்ள முத்து, வைரம் போன்றவை

முழுமெய்யும் = முழு உடம்பும்

புல்லும் = அணைத்ததின்

இலக்கணம் = காரணம்

யாதும் = எதுவும்

அறியேன்; = நான் அறிய மாட்டேன்

கலைக்கணம் = கலை என்றால் பெண் மான். பெண் மான்கள்

வேங்கை = புலிகள்

வெருஉம் = கோபித்து அலையும்

நெறிசெலிய = வழியில் செல்வதற்காக

போலும் = போலும்

என் = என்னுடைய

பூம்பாவை = பூ போன்ற பெண்

செய்த குறி = செய்த அடையாளங்கள்

தன்னுடைய பெண்ணை குறிக்கும் போது , பூம் பாவை என்கிறாள். பூ போன்ற பெண் என்கிறாள்.

அவள் போன வழி தாய்க்குத் தெரியாது. இருந்தும், புலிகள் அலையும் காட்டில் மான்கள் செல்வதைப் போல அவளும் போய் இருப்பாளோ என்று பயப்படுகிறான்.

தாயின் மனம்.

என்ன நேர்ந்தது என்று தெரியாது. "இதற்காகத்தானா அப்படி கட்டிப் பிடித்தாள் " என்று  நினைக்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத்தான் மற்றொரு பெண்ணின் மனம் புரியும். அதுவும், ஒரு தாய்க்கு மகளின் மனம் புரியாதா ?

அவள் அப்படி கட்டி பிடித்ததற்கு காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறாள்.

இந்த பாடல் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

இந்த பாடலில் உள்ள நான்கு வரிகளைக் கொண்டு நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்.

காதலை, பிரிவை, பாசப் போராட்டத்தை, எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையை, உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இதை விட அழகாக சொல்ல முடியுமா ?




அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி

அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி


பெரிய உயர்ந்த நூல்களை படிக்கும் போது , பெரியவர்கள் பேசுவதை கேட்கும்போது "அடேயப்பா இதில் இவ்வளவு இருக்கிறதா...இத்தனை நாள் இதெல்லாம் தெரியாமல் இருந்து விட்டோமே ...இன்னும் இதைப் போல எவ்வளவு இருக்கிறதோ " என்ற ஒரு பிரமிப்பு வரும். இதெல்லாம் தெரியாமல் ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல இத்தனை நாள் பேசிக் கொண்டிருந்தோமே என்று ஒரு நாணம் வரும்.

இனிமேலாவது ரொம்ப பேசுவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வர வேண்டும்.

ஒருவன் ஒரு கிளி வளர்த்தான். அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தான். அந்தக் கிளியும் அவன் வீட்டுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும் போதெல்லாம் பேசிக் காட்டி அவர்களை மகிழ்விக்கும். கிளியின் சொந்தக் காரனுக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாள் அவன் வெளியில் சென்றிருந்த சமயம், அவன் வீட்டில் இருந்த ஒரு பூனை , இந்த கிளி இருக்கும் கூட்டை நோக்கி தாவி , கிளியை பற்ற நினைத்தது.

பூனையைக் கண்டவுடன் கிளிக்கு இதுவரை படித்தது எல்லாம் மறந்து விட்டது. தன் சந்த குரலில் கீச் கீச் என்று கத்தத் தொடங்கியது.


பாடல்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

பொருள்

காணாமல் = (கற்றறிந்த பெரியவர்களை) காணாத போது

வேணதெல்லாம் = நமக்கு வேண்டியது எல்லாம்

கத்தலாம் = பேசலாம்

கற்றோர்முன் = கற்றறிந்தவர்கள் முன்

கோணாமல் = வளைந்து நெளிந்து கோணாமல்

வாய்திக்கக் கூடாதே = வாய் திறக்க முடியாது

நாணாமல் = கூச்சம் இல்லாமல்

பேச்சுப்பேச் சென்னும் = எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்

பெரும்பூனை வந்தக்கால் = பெரிய பூனை வந்தபோது

கீச்சுக்கீச் சென்னும் கிளி = கீச் கீச் என்னும் கிளி

கிளி பேசுகிறதே என்றால் அதற்கு அந்த பேச்சுக்கு அர்த்தம் தெரியாது. ஏதோ சத்தம்  உண்டாக்கும். அவ்வளவுதான். அதே போல வாழ்வில் நிறைய பேர் என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம், பேசுவதால் என்ன பயன் என்று அறியாமல்  "கத்தி"க் கொண்டு இருப்பார்கள்.

அர்த்தம் அற்ற பேச்சு அடங்க வேண்டுமானால், அர்த்தம் உள்ள பேச்சுகளை கேட்க வேண்டும். படிக்க வேண்டும்.

அறிவு வளர வளர , அமைதி தோன்றும்.

மௌனம், ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

 அருணகிரியாருக்கு முருகன் சொன்ன உபதேசம் ஒன்றே ஒன்று தான்.


"சும்மா இரு"

அவ்வளவுதான்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

என்பது கந்தர் அனுபூதி.

சும்மா இருப்பது பெரிய விஷயம். அம் "மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார்  அருணகிரியார்.

சும்மா இருக்கும் சுகம் என்பார் வள்ளலார்

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் 
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல 
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து 
சும்மா இருக்கும் சுகம். 

என்பது திருவருட்பா 

நல்ல விஷயங்களை படியுங்கள். கற்றறிந்தவர்கள் பேசுவதைக் கேளுங்கள். பேச்சு குறையும். ஞானம் பெருகும்.

பெருகட்டும்.



Saturday, October 22, 2016

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல்

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல் 


திருஞான சம்பந்தர் குழந்தையாக இருக்கும் போதே பாடல் பாடத் தொடங்கினார். சின்ன பிள்ளை தானே, குரங்கைப் பார்த்தால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. எங்கு போனாலும் குரங்கைப் பற்றி , அது செய்யும் செயல்களை பற்றி பாடுவார்.

திருச்சிராப்பள்ளிக்கு வருகிறார். அங்கே, மலை மேலே ஒரு பெண் குரங்கு, தன்னுடைய துணையான ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு, குட்டிக் குரங்கை தூக்கிக் கொண்டு , முகம் சிவந்து , மரங்களின் ஊடே பாய்கிறது. அப்படிப் பட்ட ஊரில் உள்ள சிவனே நீ ஒன்றுக்கு ஒன்று முரணான பாம்பையும் நிலவையும் தலை மேல் வைத்து இருப்பது பிழை அல்லவா என்று வினவுகிறார்.

பாடல்

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?


 பொருள்


கைம் மகவு = கை பிள்ளையை

ஏந்திக் = எடுத்துக் கொண்டு

கடுவனொடு = ஆண் குரங்கோடு

ஊடிக் = ஊடல் கொண்டு

கழை = மரங்களுக்கு

பாய்வான் = (இடையில்) பாய்ந்து செல்லும்

செம்முக = சிவந்த முகத்தை கொண்ட

மந்தி = பெண் குரங்கு

கரு = கரிய

வரை = மலை

ஏறும் = ஏறும்

சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

வெம் முக = வெம்மையான முகத்தைக் கொண்ட

வேழத்து = யானையின்

ஈர் உரி போர்த்த = தோலினை மேலே போர்த்துக் கொண்ட

விகிர்தா! = தலைவா

நீ = நீ

பைம்முக = படத்துடன் கூடிய முகம் கொண்ட

நாகம் = நாகப் பாம்பையும்

மதி = நிலவையும்

உடன் வைத்தல் = ஒன்றாக வைத்து இருப்பது

பழி அன்றே? = தவறு அல்லவா ?

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று இதை ஒரு பெரிய  தோத்திர பாடல் என்று போற்றி மகிழ்கிறார்கள் ?

குரங்குகளுக்குள் சண்டை வருவதும், சிவன் தலையில் பாம்பையும், நிலவையும்  வைத்து இருப்பதும் என்ன பெரிய செய்தியா ?

சிராப்பள்ளி குன்று இருக்கிறது. அதன் மேல் சிவன் கோவில் இருக்கிறது. அங்கே இருக்கும்  குரங்குக்கு அது எல்லாம் முக்கியம் இல்லை. ஆண் குரங்கும்  பெண் குரங்கும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு இருக்கின்றன.

எது முக்கியம் வாழ்வில் என்று தெரியாமல்.

குரங்கைப் பற்றி சொன்னால் என்ன, நம்மைப் பற்றி சொன்னால் என்ன. அதில் இருந்து வந்தவர்கள் தாமே நாம்.

உலகில் என்னென்னெவோ செய்ய வேண்டியது இருக்கிறது. அதை விட்டு விட்டு, சாப்பாடு, ஊடல், கூடல் , பிள்ளைகள், குடும்பம் என்று அலைகிறோம் .

அந்த குரங்குகளுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா

நாம் அந்த குரங்குகளை பார்த்து சிரிக்கிறோம். திருஞான சம்பந்தர் போன்ற பெரியவர்கள்  நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.

பொருள் சேர்ப்பதும், உண்பதும், உறங்குவதும், பிள்ளை வளர்ப்பதும்...இது மட்டும்தானா  வாழ்க்கை.

மதியையும் பாம்பையும் வைத்து இருக்கிறாயே என்கிறார்.

இருவினை ஒப்பு என்பது சைவ சித்தாந்தத்தில் ஒரு முக்கிய பாடம்.

நன்மை தீமை, உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் முட்டாள், இன்பம் துன்பம்  என்று வாழ்வில் எல்லாம் இரண்டு துருவங்களாக இருக்கிறது.


இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

நன்மை வேண்டும், தீமை வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்


இப்படி நாம் ஒன்று வேண்டும், மற்றது வேண்டாம் என்று இருக்கிறோம்.

ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில்லாமல் மற்றது இல்லை.

பிறப்பு உண்டு என்றால், இறப்பு கட்டாயம் உண்டு.

பதவி உயர் வரும்போது மகிழ்ச்சி என்றால், ஓய்வு பெற்று வீட்டுக்குப் போகும் போது  துன்பம் கட்டாயம் உண்டு.

இன்பம், தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் வாலும் கூடவே வரும்.

துன்பம் வேண்டாம் என்றால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கு  வேண்டும்.

அதற்குத் தான் "இருவினை ஒப்பு" என்று  பெயர்.

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது வள்ளுவம்.

அரசை கொடுத்த போதும் மகிழவில்லை, அது இல்லை காட்டுக்குப் போ என்று சொன்னபோதும் இராமன் துன்பப் படவில்லை.

நடுவில் நில்லுங்கள். இன்பமும் துன்பமும் உங்களை ஒன்றும் செய்யாது.



இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம்

இராமாயணம் - வீடணன் அடைக்கலப் படலம் 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை கூறினான் வீடணன். இராவணன் கேட்டான் இல்லை.  பின்,அவனை விட்டு பிரிந்து வந்து, தன்னுடைய மந்திரிகளிடம் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டான். அவர்களும், இராமனிடம் போய் சேர்வோம் என்று கூறினார்கள்.

வீடணனும், "நல்லது சொன்னீர்கள். இராமனைச் சேர்ந்து இந்த பிறவியை போக்கிக் கொள்ளலாம் " என்று கூறுகிறான்.

இங்கே சற்று நிறுத்தி யோசிப்போம்.

இராவணன் செய்த செய்கை சரி இல்லை என்றால், அவனுக்கு உதவி செய்யாமல் தனித்து நின்றிருக்கலாம். பரசுராமன், விதுரன் போன்றோர் துரியோதனன் செய்தது தவறு என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் பாண்டவர் பக்கம் போக வில்லை. துரியோதனனுக்கு துணை செய்யவில்லை. அவ்வளவுதான். எப்படியோ போ என்று விட்டு விட்டார்கள்.

அதே போல வீடணனும் செய்து இருக்கலாம். எதற்காக இராமன் பக்கம் சேர்ந்து, இராவணனுக்கு எதிராக வேலை செய்ய வேண்டும் ? அது சரியா என்று  வீடணனை ஆழ்வார் என்று கொண்டாடுபவர்கள் கூட மனதுக்குள் சங்கடப்படுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஏன் அப்படி செய்தான் ?

இந்தப் பாடலில் விடை தருகிறான்.

பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்

'நல்லது சொல்லினீர்; = (மந்திரிகளே ) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு இனி

அல்லது செய்துமேல் = மற்றயது எது செய்தாலும்

அரக்கர் ஆதுமால் = அது அரக்க செயலே ஆகும் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் = இராமனின்

தாள் = திருவடிகள்

இணை = இரண்டையும்

புல்லுதும் = அடைவோம்

புல்லி = அடைந்து

இப் பிறவி போக்குதும் = இந்த பிறவியைப் போக்குவோம்

இராமன் திருவடிகளை  சேராமல் வேறு எதைச் செய்தாலும், அது அரக்க குணமே என்று வீடணன் நினைக்கிறான். இராவணனை விட்டு விலகிப் போய் , இராமன் கூட சேராமல் தணிந்து நின்றாலும் அது அரக்க குணமே என்பது அவன் எண்ணம்.

தவறு என்று தெரிந்தால் அதை எதிர்க்க வேண்டுமே அல்லால், நமக்கு என்ன , அவன் பாட்டுக்கு  செய்து விட்டுப் போகட்டும், நம்மை பாதிக்காதவரை நல்லது என்று  ஒதுங்கிப் போகக் கூடாது. அப்படி செய்தால், அது அரக்க குணமே.

அது மட்டும் அல்ல,  வீடணனின் எண்ணம் எல்லாம், இராவணனை தண்டிப்பதோ, சீதையை விடுவிப்பதோ அல்ல.

அவன் இராமனை சேர வேண்டும் நினைத்தது,  அறத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக  அல்ல.

இந்தப் பிறவி என்னும்  சூழலில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு இராமனின்  திருவடிகளே துணை என்று நினைத்து போய் சேர்ந்தான். இராவணனுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பதோ, இராவணன் இறந்தால் தனக்கு  அந்த அரசு கிடைக்கும் என்பதோ அவன் எண்ணம் அல்ல. இந்தப் பிறவி பிணியை போக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

அதற்காக இராமனை சென்று சேர்கிறான்.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும். சலனங்கள் வரும். சூழ்நிலைகள் மாறும். நினைப்பது நடக்காது. நினையாதது நடக்கும்.

என்ன நடந்தாலும், நமக்கு வாழ்வில் என்ன குறிக்கோள் என்பதை மறந்து விடக் கூடாது. அதை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

அலைகள் போல் மேலும் மேலும் எழும் பிறவிகள் நீங்கள் வேண்டும்...ஆர்த்து எழும் பிறவி துயர் நீங்க வேண்டும் என்பார் மணிவாசகர்.


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 



பிறவி பெருங்கடல் நீந்துவர், நீந்தாதார் இறைவனடி சேராதார் என்பது வள்ளுவம்.

இந்த பிறவி என்ற பெருங்கடலில் நம்மை தூக்கி போட்டு இருக்கிறார்கள். சும்மா  போடவில்லை, பந்த பாசம், ஆசை, கோபம், பொறாமை போன்ற கற்களை சேர்த்து  கட்டி தூக்கி போட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து நீந்தி கரை சேர  துணையாய் இருப்பது "நமச்சிவாய" என்ற மந்திரமே என்பார் அப்பரடிகள்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

என்பது தேவாரம்.

"எல்லை இல் பெருங்குணம்" எல்லை இல்லாத பெரிய குணங்கள். இராமனுக்கு  இவ்வளவு தான் உயர்ந்த குணங்கள் என்று ஒரு பட்டியல் போட்டுக் காட்ட  முடியாது. எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும், அதையும் தாண்டி அவன் பெரிய குணங்கள் நீளும்.

இவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் என்று சொல்ல முடியாது , உயர்வு அற உயர் நலம் உடையவன் அவன் என்பார் நம்மாழ்வார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

என்பது பிரபந்தம்.

அவன் திருவடிகளை பற்றினால் இந்த பிறவி என்ற பெருங்கடலை தாண்டலாம்.



Friday, October 21, 2016

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

நன்மைகளை உடையவனை. தீமைகள் இல்லாதவனை. உமையை தன்னுடைய இடப் பாகம் கொண்டவனை. வெண்மையான எருது ஒன்றைக் கொண்டவனை.  சம்பாதிக்காத செல்வம் உடையவனை. திருச்சிராப்பள்ளியில் உள்ள மலை மேல் இருப்பவனை பற்றி பேச என் உள்ளம் குளிரும் என்கிறார் ஞான சம்பந்தர்

பாடல்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

சீர் பிரித்த பின்

நன்று உடையானைத் தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானை
சென்று அடையாத  திரு உடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

பொருள்

நன்று உடையானைத் = நல்லவைகளை, நன்மைகளை உடையவனை

தீயது இலானை = தீமைகள் இல்லாதவனை

நரை வெள்ளேறு= வெண்மையான எருது

ஒன்று உடையானை = ஒன்றை உடையவனை

உமை ஒரு பாகம் உடையானை = உமையை ஒரு பாகத்தில் கொண்டவனை

சென்று அடையாத  = அவனை சென்று அடையாத

திரு உடையானைச் = செல்வம் உடையவனை

சிராப்பள்ளிக் = திருச்சிராப்பள்ளி

குன்று உடையானைக் = மலையை உடையவனை

கூற = பற்றி பேச

என் உள்ளம் குளிரும்மே = என் மனம் குளிரும்

சிவனுக்கு சில அடையாளங்களை கூறி, அவனை பற்றி நினைக்க என் உள்ளம் குளிரும் என்கிறார்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? நாம் அதில் இருந்து பெறும் செய்தி என்ன ?

நன்று உடையானை என்று சொன்னால் மட்டும் போதாதா ? உடனே ஏன் தீயது இல்லானை என்கிறார் ?

மற்ற சமயங்களில் உள்ள கடவுள்கள் , கோபம் உள்ளவர்கள். பழி வாங்கும் குணம் உள்ளவர்கள். தண்டிக்கும் நோக்கம் உள்ளவர்கள். தன்னை வணங்காதவர்களை, தன் சொல் கேளாதவர்களை கொல்லச் சொல்லும் குணம் வாய்ந்தவர்கள். தன்னை சேர்ந்தவர்களுக்கு நல்லதும், சேராதவர்களுக்கு தீமையும் செய்யும்  குணம் கொண்டவர்கள்.

சிவன் அப்படி அல்ல.

நல்லது உள்ளவன். நல்லது இருக்கு சரி. அதோடு கொஞ்சம் தீய குணமும் இருக்குமோ என்றால். இல்லை.   தீய குணங்கள் எதுவும் கிடையாது அவனிடம். கருணையே வடிவாகக்  கொண்டவன். அன்பு நிறைந்தவன். நல்லது மட்டுமே உள்ளவன்.

அவன் எல்லோருக்கும் பொதுவானவன். தன்னை மதிக்காதவர்களுக்கும் அருள்  செய்வான்.  நல்லவர்களுக்கும்,கெட்டவர்களுக்கும் சம தூரத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

நரை வெள்ளேறு ஒன்று உடையானை - வெள்ளையான ஒரு எருது வச்சிருக்காரு. நிறைய பேர் கிட்ட இருக்கு. எல்லா விவசாயிகிட்டயும் இருக்கு. இது ஒரு பெரிய விஷயமா ?

எருதுக்கு , விடை என்று ஒரு பெயர் உண்டு.

"விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி" என்பார் ஞான சம்பந்தர்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விடை என்றால் , தீர்வு , முடிவு. கேள்விக்கு என்ன விடை என்று கேட்போம் அல்லவா ?

உலகில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லை. இராமர் கூட சீதை போனாள் , இலக்குவன் கூட ஊர்மிளை ஏன் போகவில்லை.

முருகன் ஏன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை ?

நாலு முகம், ஆறு முகம், பத்து முகம் என்றெல்லாம் இருந்தால் எப்படி படுத்து உறங்குவது ?

நல்லவன் துன்பப் படுகிறான். கெட்டவன் இன்பமாக இருக்கிறான் - ஏன் ?

இப்படி ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடையை கொண்டிருப்பவன் அவன்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து போகும். அறம் மட்டும் அழியாது. அது விடையின் வடிவில் நிலைத்து நிற்கும் என்று நம் தமிழ் வேதம் பேசுகிறது.

பொருள்களால் ஆன உலகம் அழியலாம். அவற்றை செலுத்தும் தத்துவங்கள் அழியாது. அவை சாஸ்வதமானவை.

அந்த விடையை தன்னிடம் கொண்டவன் அவன்.


உமை ஒரு பாகம் உடையானை.

நாம் , நம்முடைய தந்தை மற்றும் தாய் இருவரின் கலப்பில் பிறக்கிறோம்.  தந்தையின்  குணமும், தாயின் குணமும் எல்லோரிடமும் இருக்கும். ஒவ்வொரு  ஆணுக்குள்ளும், ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. இந்த சமுதாயம் , ஒரு ஆணிடம் உள்ள பெண்ணை  மழுங்க அடிக்கிறது. "என்னடா, பொம்பள புள்ள மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்து கேலி செய்து பெண் உணர்ச்சிகளை மழுங்க அடித்து  விடுகிறது.அதே போல் பெண் கொஞ்சம் கம்பீரமாக நடந்தால் "என்ன இப்படி  திம்மு திம்மு னு ஆம்புள புள்ள மாதிரி நடக்குற. மெல்லமா நட  " என்று பெண்ணுக்குள்  இருக்கும் ஆணை மழுங்க அடிக்கிறது.

இப்படி மழுங்க அடிக்கப் பட்டதால், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை இழந்து விட்டு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே இருக்கும் பெண் போல   வெளியே ஒன்று  தெரிந்தால் அவள் பால் காதலில் விழுகிறான் ஆண். பெண்ணும் அதே போல் தான்.

தனக்கு வந்த மனைவி, அவனுக்குள்  இருக்கும் பெண்ணை போல இல்லை என்றால்  அவன்   தேடல் தொடர்கிறது.

தனக்குள் இருக்கும் பெண்ணோடு ஆண்  சேர்வதும், தனக்குள் இருக்கும் ஆணோடு பெண் சேர்வதும் தான்  உண்மையான திருமணம். அதுவே முழுமையைத்  தரும்.வெளியே உள்ள ஆணும் பெண்ணும் ஒரு காலத்திலும் உள்ளே இருக்கும் ஆண் மற்றும் பெண் போல வராது.

இதை புரிந்து கொண்ட நம் முன்னவர்கள்  அர்த்த நாரி என்று  வைத்தார்கள்.

அர்த் என்றால் பாதி.

உமை வெளியில் இருந்தால் சரி வராது. ஒன்றாக கலக்க வேண்டும். பாதி பாதியாக.

உமை ஒரு பாகம் உடையானை

சென்று அடையாத திரு உடையானை.

நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் நம்மிடம் வந்தது. உழைத்து சம்பாதித்து வந்தது  அல்லது முன்னோர்கள் தேடி சேர்த்து வைத்து விட்டுப் போனது. எப்படியோ  நம்மிடம் வந்தவை. நாம் வரும்போது ஒண்ணும் கொண்டு வரவில்லை.

வந்தவை , கட்டாயம் போகும்.

அதன் பெயரே 'செல்வம்' . எப்போது வேண்டுமானாலும் செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இறைவனிடம் இருப்பது வெளியில் இருந்து வந்தது அல்ல. உள்ளேயே இருப்பது.

உண்மையான , நிரந்தரமான செல்வம் உள்ளே இருப்பது.

அதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

  என்னமோ தெரியல ...ரேவா, இந்து, உஷா ...எல்லோரும் இதே போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.


உடம்பு எப்போது சூடாகும் ? கோபம் வரும்போது, காமம் வரும் போது , பொறாமை வரும் போது...இரத்தக் கொதிப்பு என்கிறோம். பொறாமை தீயில் வேகிறான் என்கிறோம். கோபத்தில் கண்ணில் கனல் பறக்கிறது என்கிறோம்.

அப்படி கொதித்த மனம் குளிர  என்ன செய்ய வேண்டும்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்,

"சீராப்பள்ளி குன்றுடையானை சொல்லுங்கள்" உள்ளம் குளிரும் என்கிறார் ஞானசம்பந்தர்.


 அரி என்ற பேரரவம் உள்ளத்தில் புகுந்தால் குளிரும் என்கிறாள் ஆண்டாள்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

சொல்லிப் பாருங்கள். குளிரும். 

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?

திருக்கடை காப்பு - ஏதிலர் கண்டால் இகழாரோ ?



அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

அரப்பள்ளியானும் = அரவணையில், பாம்பு அணையில் துயிலும் திருமாலும்

அலர் உறைவானும் = மலரின் மேல் வாழும் பிரம்மாவும்

அறியாமைக் = அறியாமல்

கரப்பு = மறைந்து இருப்பதை

உள்ளி = எண்ணி

நாடிக் = தேடி

கண்டிலரேனும் = காணவில்லை என்றாலும்

கல் சூழ்ந்த = கற்கள் நிறைந்த

சிரப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

மேய = வாழும்

வார்சடைச் = நீண்ட சடை முடியை கொண்ட

செல்வர் = செல்வர்

மனைதோறும் = வீடு வீடாக சென்று

இரப்பு உள்ளீர்;= பிச்சை பெற்று கொண்டு இருந்தால்

உம்மை  = உன்னை

ஏதிலர் = மற்றவர்கள்

கண்டால் = பார்த்தால்

இகழாரே? = பரிகாசம் செய்ய மாட்டார்களா

ஏதிலார் என்றால் மற்றவர்கள் என்று பொருள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் திருவள்ளுவர்.

மற்றவர்கள் குற்றத்தைப் பார்க்கும் போது , தன்னுடைய குற்றத்தையும் சிந்தித்தால்  இந்த உலகில் எந்த தீமையும் நிகழாது என்கிறார் வள்ளுவர்.

 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

எல்லோரும் இருக்கும் போது, காதலனும் காதலியும் எதோ மற்றவரக்ளை பார்ப்பது போல  பார்த்துக் கொள்வார்கள். தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப் படுத்த மாட்டார்கள்.

ஏன் ஏதிலார் என்றார் ?

சிவ பெருமான் பெரிய ஆள். எல்லாம் வல்லவர் என்று அவரை வணங்குபவர்களுக்குத் தெரியும். ஆனால் அவரை வணங்காத மற்ற சமயத்தவர்களுக்கு  என்னடா இவர் பெரிய ஆள் என்கிறார்கள் வீடு வீடாக போய்  பிச்சை வாங்குகிறாரே என்று பரிகாசம் செய்வார்கள் அல்லவா. அதனால் ஏதிலார் என்றார்.

சிவனுக்கு பெரிய மலை கோட்டையே இருக்கிறது. அவ்வளவு பெரிய வீடு இருக்கும் ஆள் எதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று நகைப்பார்கள்.

திருமாலும், பிரமனும் ஆண்டவனின் அடியையும் முடியையும் காணச் சென்றார்கள். காணமுடியாமல் வந்தார்கள் என்ற இந்த கதையை வைத்துக் கொண்டு  சிவனா, திருமாலா யார் பெரியவன் என்ற சர்ச்சை தொடங்கி விட்டது.

இந்த கதைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன ?

முதலாவது, திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகளின் கணவன். ப்ரம்மா அறிவுக்கு அதிபதி. காலை மகளின் கணவன். இறைவனை அறிவினாலோ, செல்வத்தாலோ  காண முடியாது , பக்தி ஒன்றே அவனை அறியும் வழி என்று சொல்லுவது  முதல் அர்த்தம்.

இரண்டாவது, மாலும் அயனும் ஏன் அடி முடி தேடிச் செல்ல வேண்டும் ? சிவன் எங்காவது சென்று  ஒளிந்து கொண்டு எங்கே என்னை கண்டு பிடியுங்கள்  என்று சொல்லி இருக்கலாமே ? அடி முடி காணச் சென்றார்கள் என்றால், இறைவன் என்பவன் இவ்வளவுதான் என்று வரையறை செய்யச் சென்றார்கள் என்று அர்த்தம். இங்கே தொடங்கி, இங்கே முடிவது தான் இறை என்று  வரையறை செய்யச் சென்றார்கள்.


இறைவன் நம் சிந்தனைக்கு உட்பட்டவன் அல்ல. இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

என்பார் மணிவாசகர். 

 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே


இராமனைக்

இராமனைப் பற்றி சொல்ல வந்த கம்பர் சொல்கிறார்,

"யாரே முடியக் கண்டார் " என்று. யாரும் இராமனை முழுமையாக காணவில்லை என்று.

மிதிலை நகர் பெண்கள் எல்லாம் இராமனின் தோளைக் கண்டவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள், அவன் திருவடியைப் பார்த்தவர்கள் அதை மட்டுமே பார்த்தார்கள்

தோள் கண்டார். தோளே கண்டார்.
   தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
   தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
   வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்.
.
ஏன் இறைவனை முழுமையாக அறுதியிட்டு சொல்ல முடியாது ?

வெளியே இருக்கும் ஒன்று என்றால் அதை பார்த்து, தொட்டு உணர்ந்து, இது இப்படி இப்படி  இருக்கிறது என்று சொல்லி விடலாம். உள்ளே இருக்கும் ஒன்றை எப்படி அறிந்து கொள்வது. உள்ளே இருக்கும் ஒன்றே வெளியே தேடினால் எப்படி கிடைக்கும் ?

இறைவன் உள்ளே இருக்கிறான்.

"கரப்பு உள்ளி"

அப்படி என்றால் ஏன் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எப்படித்தான் தெரிந்து கொள்வது.

நாவுக்கரசர் சொல்கிறார்.

பாலில் நெய் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிகிறதா ? தெரியவில்லை.

கன்னுக்குத் தெரியவில்லை என்பதால் பாலில் நெய் இல்லை என்று  சொல்ல முடியுமா ?

விறகின் உள்ளே தீ இருக்கிறது. தொட்டுப் பார்த்தால் சுடுமா என்றால் சுடாது. தீ என்றால்  சுட வேண்டுமே ? எனவே விறகில் தீ இல்லை என்று சொல்ல முடியுமா ?

பின் எப்படி நெய்யும், தீயும் இருக்கிறது என்று நாம் அறிகிறோம்.

பாலை காய்ச்சி, உறை விட்டு, அதை தயிராகச் செய்து, பின் அதை கடைந்து எடுத்தால்  வெண்ணை வரும். அந்த வெண்ணையை உருக்கினால் நெய் வரும்.

அதை போல, விறகை கடைந்தால் தீ வரும்.

அது போல இறைவனை எப்படி காண்பது ?

உறவு கோல் நாட்டு, உணர்வு கயிற்றினால் முறுக  வாங்கி கடைய முன்

நிற்கும் என்கிறார் நாவுக்கரசர்.

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால் 
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே





Thursday, October 20, 2016

திருவாசகம் - யானை மாதிரி

திருவாசகம் - யானை மாதிரி

மனிதன் என்றால் மனதால் செலுத்துப் படுபவன், மனம் வேலை செய்யும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்.

குழந்தை பிறந்த சில காலம் வரை, நாம் அந்தக் குழந்தையை "அது" என்று தான் சொல்லுவோம். "அது அப்படித்தான், பசிச்சா ஒரே சத்தம் போடும்" "அது படுக்கையை நனைக்கும்" என்று சொல்கிறோம்.

அது என்பது விலங்குகளுக்கு போடும் சொல். ஏன் மனிதக் குழந்தைக்கு அதை போடுகிறோம் ?

ஏன் என்றால் குழந்தைகளுக்கு மனம் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை.

அதே போல், மிக வயதாகி, ஞாபகம் தவறி, புலன்கள் தடுமாறி மனம் சரியாக வேலை செய்யாமல் இருக்கும் வயதானவர்களை "அதுக்கு வேற வேலை இல்லை , ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும்" என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

மனம் சரியாக வேலை செய்யும் வரைதான் மனிதன். இல்லை என்றால் அவன் மனிதன் இல்லை.

மாணிக்க வாசகர் தன்னை யானை என்று உருவகித்து பாடல் தருகிறார்.

யானையைப் போல இருந்தேன். என் மனம் என்ன என்று நான் அறிய மாட்டேன். கண்டதெல்லாம் துன்பமே. வருக என்று என்று என்னை கட்டளை இட்டாய். வலிமையில்லாதவன் நான். புலன் இன்பங்களை அனுபவிக்க என்றே பிறந்த நான்என்கிறார்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இரு கை யானையை ஒத்திருந்த என் உள்ளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உள்ளோருக்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இரு கை = இரண்டு கைகளை உடைய

யானையை = யானையை

ஒத்திருந்த = போல் இருந்த

என் = என்னுடைய

உள்ளக் = உள்ளத்தின்

கருவை = உள் நிலையை

யான் = நான்

கண்டிலேன் = காணவில்லை

கண்டது = கண்டது எல்லாம்

எவ்வமே = துன்பமே

வருக என்று = என்னை வா என்று

பணித்தனை = கட்டளை இட்டாய்

வான் உள்ளோருக்கு = வானில் உள்ள தேவர்களுக்கு

ஒருவனே = சிறந்தவனே

கிற்றிலேன் = வலிமை இல்லாதவன் நான்

கிற்பன் உண்ணவே = உண்பதற்கு மட்டும் வலிமை உள்ளவன்

சரி, இதில் எதற்கு யானையை குறிப்பிட்டு மாணிக்க வாசகர் கூறுகிறார் ?

யானைக்கும் நமக்கும்  பல ஒற்றுமை உண்டு.

யானை என்நேரமும் எதையாவது தின்று  கொண்டே இருக்கும். யானைக்கு வயறு தான் எல்லாம். வாயில் ஒன்றை வைத்துக் கொண்டே தும்பிக்கையில் இன்னொன்றை பற்றிக் கொண்டு இருக்கும். "இரு கை " என்று   கூறியது,இரு பக்கம்  என்ற பொருளில். சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதர்களில் பலர் அப்படித்தான். காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் காப்பி  , டீ குடிப்பது. அப்புறம் சிற்றுண்டி, அப்புறம் பதினோரு மணிக்கு இரு காப்பி அல்லது டீ....என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

யானை, தன்னை கட்டுவதற்கு சங்கிலியை எடுத்து யானை பாகன் கையில் தரும்.

நாமும் அப்படித்தானே, இருவினை என்ற சங்கிலியை எடுத்து நாமே பூட்டிக் கொள்கிறோம்.

யானை, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும். மனிதர்களும் அப்படித்தான். அவரக்ளை பாவம் செய்யச் சொல்லி தூண்டுவது யார். அவர்களே வலியச் சென்று செய்வார்கள்.

யானைக்கு தனக்கு மேல் ஒரு பாகன் அமர்ந்து இருக்கிறான் என்று தெரியாது.  அது போல மனிதர்களும் , தனக்கு மேல் ஒன்று உண்டு என்று அறிவது  இல்லை என்கிறார் மணிவாசகர்.

எனவே யானைக்கு தன்னை உதாரணமாகச் சொன்னார்.

இறை அருள் என்பது ஏதோ நாம் தேடிப் போய் அடைவது அல்ல. அதற்கு உரிய நேரமும், பக்குவமும், முன் முயற்சியும் இருந்தால் அல்லாது நிகாழாது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மணிவாசகர்.

தவமும் தவம் உடையவர்க்கே ஆகுமாம் என்பார் வள்ளுவர். தவம் செய்வதற்கு தவம் செய்திருக்க வேண்டும்.

எனவே தான் :"வருக என்று பணித்தனை" என்கிறார் மணிவாசகர்.

 
"என் உள்ளக் கருவை யான் கண்டிலேன்"

நான் யார். நம் உள்ளம் என்ன. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நம் ஆசைகள், அச்சங்கள் என்ன ? நம்மை தூண்டுவது எது ? இதெல்லாம் நமக்குத் தெரியாது.  சாவி கொடுக்கப் பட்ட  பொம்மை போல இயங்குகிறோம். பிறந்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளை பெற்றோம் என்று இயந்திர கதியில் வாழ்க்கையை நடத்துகிறோம்.

உள்ளே சென்று ஆராய வேண்டும். நம்மை நாம் அறிய வேண்டும். நாம் அறிந்தது எல்லாம் யார் யாரோ சொன்னது. நம் சொந்த அனுபவம், ஆராய்ச்சி என்று ஒன்றும் கிடையாது.  இவற்றை தாண்டி நான் யார் என்று அறிய வேண்டும்.

நான் யார் என்ற அறிவு வரும் வரை, வாழ்க்கை துன்பம் நிறைந்தே இருக்கும். நம்மை நாம் அறியும் போது , துன்பம் விலகி இன்பம் பிறக்கும்.

அதை அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.

வீட்டில் தாய்மார்கள் சூடான பொருட்களை தூக்க  கிடுக்கியை உபயோகப் படுத்துவார்கள். அது அனைத்து பாத்திரங்களையும் தூக்கப் பயன்படும். ஆனால், தன்னைத் தானே அதனால் தூக்க முடியாது. அதற்கு இன்னொரு கிடுக்கி வேண்டும்.

அது போல, நாம் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், நம்மை நாம் அறிய ஒரு குருவின் துணை வேண்டும்.


புலன் இன்பங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு எதற்கும் எனக்கு சக்தி இல்லை. நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.


Wednesday, October 19, 2016

திருக்குறள் - நட்பு

திருக்குறள் - நட்பு 


நண்பர்கள் என்றால் ஒருவரோடு கூடி மகிழ்வது , பேசி, பாடி, ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது நண்பன் துன்பத்தில் இருந்தால், அவனை மகிழ்ச்சி படுத்துவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அது மட்டும் அல்ல, நண்பனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது, முடிந்த வரை அவனுக்கு பணமோ அல்லது ஆறுதலோ சொல்லி அவனைத் தேற்றுவது நம் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது எல்லாம் நண்பர்களின் கடமை அல்ல என்கிறார் வள்ளுவர்.

நட்புக்கு புது இலக்கணம் வகுக்கிறார்.

பாடல்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற் பொருட்டு

பொருள்


நகுதற் = சிரித்தல் அல்லது மகிழ்தல்

பொருட்டன்று = அதற்காக அல்ல

நட்டல் = நட்பு கொள்வது

மிகுதிக்கண் = அதிகமான இடத்தில்

மேற்சென்று = மேலே சென்று

இடித்தற் பொருட்டு = தடுத்து நிறுத்துவதற்கு

நண்பர்களோடு சேர்ந்து  மகிழ்வதற்காக அல்ல நட்பு என்பது. அவர்கள் வரம்பு மீறிச் செல்லும் போது  அவர்களை கடிந்து தடுத்து நிறுத்துவதே நட்பின் இலக்கணம் என்கிறார் வள்ளுவர்.

சற்று சிந்திப்போம்.

"நகுதற் பொருட்டன்று"....சந்தோஷத்திற்காகவே அல்ல என்று ஒரே போடாக போடுகிறார்.  ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது, சினிமா, பீச், என்று சுத்துவது என்பதற்காக அல்ல நட்பு.  நாம் ஒருவர்க்கு நண்பராக இருக்கிறோம் என்றால் அது சந்தோஷத்திற்காக அல்ல. பின் எதற்காக ?

மிகுதிக் கண் - மிக மிக யோசித்து எந்த வார்த்தையை கையாள்கிறார் வள்ளுவர். வரம்பு மீறி போகும் போது என்று கூறும் போது அது சட்ட வரம்பு மட்டும் அல்ல அது எந்த வரம்பாக இருந்தாலும் , அதை தாண்டினால் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு நண்பன் அதிகமாக உணவு உட்கொள்கிறான் என்று  வையுங்கள் அதனால் யாருக்கும் ஒரு துன்பமும் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமான உணவு அவனுக்கே கேடாய் முடியும். எனவே, எந்த விதத்தில் அளவை மீறினாலும், என்று பொருள் கொள்ள வேண்டும். அதிகமாக உடற் பயிற்சி செய்தாலும் தவறு தான். எதையும் ஒரு அளவுக்குள் வைக்க வேண்டும். சரி அப்படி என்றால், இரண்டு மூணு கிளாஸ் மது அருந்திய பின், அல்லது ஒரு நாளைக்கு பத்து சிகரெட் பிடித்த பின் என்று கொள்ளலாமா என்றால் அதற்கு அடுத்த சொல்லில் விடை தருகிறார். 

"மேற் சென்று" மேற் சென்று என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் என்று அர்த்தம். அதாவது, அவன் வரம்பு மீறிய செயல்களை செய்த பின், அவனை திருத்துவது சரி அல்ல. அவன் அதை செய்ய ஆரம்பிக்கும் முன்னே அவனை தடுத்து நிறுத்த வேண்டும். தண்ணி அடிக்கிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்னேயே சென்று நிறுத்தி விட வேண்டும். ஒரு பெக் தானே என்று  இருக்கக் கூடாது. நண்பன் சூதாடப் போகிறான் என்றால், அதை அவன் தொடங்கும் முன்பே நிறுத்தி விடவேண்டும்.


"இடித்தற் பொருட்டு" - அன்பாக , நட்பாக சொன்னால் சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  "வேண்டாண்டா, அது நல்லது இல்லை " என்று மென்மையாகச் சொன்னால்  கேட்க மாட்டார்கள். ஒரு ரவுண்டு தானே , என்று சொல்லுவார்கள். அவர்களை திட்டி, ஏன் , தேவை என்றால் இரண்டு அடி கூட போட்டு  அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.  இடித்தற் பொருட்டு என்றால் கடிந்து சொல்லி , முரட்டுத் தனமாக தோன்றினாலும் பரவாயில்லை என்று   கடினமான   முறைகளை கையாண்டு என்று பொருள்.

நண்பர்கள் என்ன செய்கிறார்கள் , என்ன செய்ய நினைக்கிறார்கள் என்று அறிந்து, அது தவறான வழி என்று தோன்றினால், உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி செய்யா விட்டால் அது நட்பே அல்ல.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அவனுக்கு நல்ல நண்பர்கள் இல்லை என்று அர்த்தம்.

அது மட்டும் அல்ல, நம்மை தவறு செய்வதில் இருந்து தடுத்து நிறத்த வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்று தெரிய வேண்டும் அல்லவா ? அப்படி, நல்லது கெட்டது தெரிந்த நண்பர்களை தேர்ந்து எடுங்கள்.  உங்கள் வாழ்க்கை இனிமையாக அமையும்.


அப்படி செய்தால் என்ன ஆகும் ?

நம்மால் , நம் நண்பர்கள் தவறு செய்வது தடுத்து நிறுத்தப் படும்.

நம் நண்பர்களால் நாம் தவறு செய்வது செய்வது தடுத்து நிறுத்தப் படும்

தவறு செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமுதாயம்  மிக அமைதியாக,  இன்பமாக இருக்கும்.

இப்படி நட்பின் மூலம், ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறார் வள்ளுவர்.


Tuesday, October 18, 2016

திருக்குறள் - ஈன்ற பொழுதினும்

திருக்குறள் - ஈன்ற பொழுதினும் 


திருக்குறள் போன்ற நூல்களை படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

பாடல்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய் 

பொருள்

ஈன்ற பொழுதிற் = பிள்ளையை பெற்ற நேரத்தை விட

பெரிதுவக்கும் = மிகவும் மகிழும்

தன்மகனைச் = தன் மகனை

சான்றோன்= சான்றோன்

எனக்கேட்ட தாய் = என கேள்விப் பட்ட தாய்

பிள்ளையை பெற்ற போது மகிழ்ததை விட அவன் சான்றோன் என்று மற்றவர்கள் கேட்ட பொழுது தாய் மிக மகிழுவாள்.


இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது ? இது எல்லோருக்கும் தெரிந்தது தான். தன் பிள்ளை பெரிய ஆளாகி விட்டான் என்றால் எல்லா  தாயும் மகிழ்ச்சி கொள்வது இயற்கை தானே. இதைச் சொல்ல ஒரு வள்ளுவர்   வேண்டுமா ? என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம். ஒவ்வொரு வார்த்தையாக சிந்திப்போம்.

ஈன்ற - ஏன் ஈன்ற என்ற சொல்லை போட்டார் ? பெற்ற பொழுதின் என்று சொல்லி இருக்கலாம் தானே ? ஈதல் என்றால் கொடுத்தல். பெறுதல் என்றால்  பெற்றுக் கொள்ளுதல். ஒரு தாய் மகனை தருகிறாள். யாருக்குத் தருகிறாள் ? அவளுடைய குடும்பத்துக்கு, அவன்  வாழும் சமுதாயத்துக்கு, அவன் வாழும் நாட்டுக்குத் தருகிறாள்.  தருகிறாள் என்றால் ஏதோ விலைக்கு தருவது இல்லை. ஈதல் என்றால் கொடையாகத் தருதல் என்று பொருள். பெரிய செல்வந்தர்கள்  தங்கள் சொத்தில் கொஞ்சத்தை நன்கொடையாக தருவது ஈதல்.  

தாய் ஒரு மகனைப் பெறுவது சுயநலத்தால் அல்ல. அவனால் வீடும், நாடும்  சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தால். அவள் அவ்வளவு துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு , இந்த நாடும், மனித குலமும் சிறக்க  ஒரு மகனைப் பெற்றுத் தருகிறார்கள்.

உலகத்தில் உள்ள அத்தனை பெரியோர்களையும் பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே ?

ஒரு இராம கிருஷ்ண பரம ஹம்சரை, ஒரு நியூட்டனை, ஒரு வள்ளுவரை, ஒரு கம்பரை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசனை, காந்தியை , மாணிக்க வாசகரை என்று அத்தனை பெரியவர்களையும்  பெற்றுத் தந்தது ஒரு தாய் தானே. அவள் தந்த கொடை தானே. அவள் வலி பொறுக்காமல் இருந்திருந்தால், நமக்கு  அவர்கள்  கிடைத்து இருப்பார்களா ?

எனவே "ஈன்ற" என்ற சொல்லை போடுகிறார் வள்ளுவர். ஒவ்வொரு தாயும்   இந்த உலகுக்கு ஒரு கொடையாளி தான்.

பிள்ளை பெற்றாள் என்று சொல்லக் கூடாது. பிள்ளை ஈன்றாள் என்று சொல்ல  வேண்டும்.

பொழுது  - ஒரு பிள்ளை பிறந்து, தவழ்ந்து, பேசி, பள்ளிக்கூடம் போய் , இப்படி அவன் செய்யும் ஒவ்வொவரு செயலும் தாய்க்கு மகிழ்ச்சி  தருவது தான் . இருந்தாலும், ஏன், அந்த ஈன்ற பொழுதை மட்டும்  வள்ளுவர் குறிப்பாகச் சொல்கிறார் ? மற்றைய பொழுதுகள்  சிறந்தவை இல்லையா ?

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பிள்ளை பிறக்கும் அந்த கணம் வரை அவள் தாய் அல்ல. அவள் மகளாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கலாம். தாய் என்ற  நிலை பிள்ளை பெறும் அந்த கணத்தில் நிகழ்வது. அது மட்டும் அல்ல,  மற்ற அனைத்து நிலைகளும் அவளால் நிகழ்ந்தவை அல்ல.  அவள் யாருக்கோ மகளாகப் பிறந்தாள், சகோதரியாக ஆனால்,  வாழ்க்கைப் பட்டு மனைவியானாள். அவளுடைய செயல் இதில்  மிகக் குறைவு.

ஆனால் , தாய் என்ற ஒரு நிலைக்கு வர, முழுக்க முழுக்க அவள் செய்த அர்பணிப்புகள்  ஏராளம்.

தூக்கம் போகும், பசி போகும், உணவை கண்டால் குமட்டும், சாம்பல், மாங்காய் போன்ற சுவை அற்ற உணவு பிடிக்கும், தலை சுத்தும், வாந்தி வரும்...இப்படி எத்தனையோ துன்பங்களை தாங்கி அவள் குழந்தையை பெற்று எடுக்கிறாள்.  ஈனுகிறாள்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஒரு தலைவலி, பல் வலி, கண் வலி என்றால்  அந்த அவயம் மட்டுமே வலிக்கும். பிள்ளை பேறு என்றால் உடம்பில் அத்தனை அவயங்களும் வலிக்கும்.

"அங்கமெல்லாம் நொந்து" என்பார் பட்டினத்தார். அத்தனை அங்கமும்  வலிக்கும்.

எனவே, அந்த ஒரு கணம் பிள்ளை மட்டும் தோன்றவில்லை. ஒரு தாயும்  தோன்றுகிறாள். மனைவி என்று இருந்தவள், தாயாக மாறும் தருணம்  அந்த பொழுது. எனவே அதை சிறப்பித்துக் கூறுகிறார்.

இன் : ஈன்ற பொழு தின்  என்று ஒரு "இன்' என்ற வார்த்தையைப் போடுகிறார்.  போடாவிட்டால் குறள் எப்படி இருக்கும் ?

ஈன்ற பொழுது பெரிது உனக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று அமையும்.

அதாவது, மகன் சான்றோன் என்று ஆகி விட்டால், அவன் பிறந்த அந்த நேரத்தை எண்ணி பெரிதும் மகிழுவாள் என்று அர்த்தம் ஆகும். அப்படி என்றால், வேறு எந்த நேரத்தை நினைத்தும் மகிழ மாட்டாள் என்று ஆகும்.

இன் அந்த வார்த்தையால், பொழுதினும் என்று அமைகிறது. மற்ற பொழுதும் மகிழ்தாள் . மற்ற எல்லா நேரங்களை விடவும் ஈன்ற பொழுதில் மகிழ்ந்தாள். ஆனால், சான்றோன் எனக் கேட்ட போது , ஈன்ற பொழுதை விட மிக  மகிழ்ந்தாள் என்று ஆகிறது. இன் என்ற ஒரு வார்த்தை  செய்யும் மாயம்.

பெரிது - என்ற இந்த வார்த்தை இல்லாவிட்டால் என்ன ஆகும் ? ஈன்ற பொழுதின் உவக்கும் என்று இருக்கும். அப்படி என்றால் மகனின் வாழ்வில் இரண்டே இரண்டு மகிழ்ச்சியான தருணங்கள் தான் இருக்க முடியும். பிறந்த பொழுது, சான்றோன் என்று கேட்ட பொழுது. பெரிது என்ற வார்த்தையால், மற்ற நிகழ்வுகளும் உண்டு, அதை விட  பெரிய நிகழ்வு ஈன்ற பொழுது என்று ஆகும்.

உவக்கும் - உவக்கும் என்ற சொல்லுக்கு அளவற்ற மகிழ்ச்சி என்று பொருள்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

என்பார் தொல்காப்பியர்.

கட்டற்ற மகிழ்ச்சி. அன்பு கலந்த மகிழ்ச்சி.

தன் மகனை - அது என்ன தன் மகனை ? வெறுமனே மகனை என்று சொல்லி இருந்தால் போதாதா ?

அவன் சான்றோனாகும் போதுதான் அவனை தன் மகன் என்று ஒரு தாய் நினைப்பாள். பெருமை படுவாள். ஒருவன் களவாணியாக, காமுகனாக,  பித்தலாட்டம் செய்பவனாக, தீவிர வாதியாக இருந்தால், அவனை தன்னுடைய மகன் என்று சொல்ல ஒரு தாய்  வெட்கப் படுவாள். சொல்லாமல் இருப்பதே நலம் என்று நினைப்பாள். தன்னால், தான் பெட்ற மகனால் இப்படி ஒரு கேடு வந்து விட்டதே என்று  நினைத்து வருந்துவாள் . இப்படி ஒரு பிள்ளையை பெறாமலேயே  இருந்திருக்கலாம் என்று நினைப்பாள் அல்லவா ? தான் ஒரு மலடியாகவே இருந்து விட்டுப் போய்  இருக்கலாம், இப்படி ஒரு பிள்ளையை பெற்றதை விட என்று ஒரு தாய்  நினைப்பது இயல்பு தானே.

எனவே தான், "தன் மகனை " என்றார்.

"மகனை" - அது என்ன மகனுக்கு மட்டும் தான் சிறப்பா ? மகள் என்றால் இல்லையா ? மகள் என்பவள் அவளுடைய இளமையான வயதில் திருமணம் முடித்து இன்னொரு வீட்டுக்குப் போய்  விடுவாள். அதற்குப் பின் , அவளுடைய சாதனைகள் புகுந்த வீட்டைப் பொறுத்தே அமையும் . அவள் பிறந்த வீட்டார் பங்கு அதில் அதிகம் இருக்காது. ஆனால், மகன் என்பவன் தாயின் இறுதிக் காலம் வரை  அவளுடனேயே இருப்பவன். எனவே, மகன் என்றார்.

"சான்றோன்" ஒருவரை புகழ வேண்டும் என்றால் , அவரை சான்றோன் என்று சொன்னால் போதும். அதற்கு மேல் ஒரு உயர்ந்த வார்த்தை கிடையாது. சான்றோன் என்பவன் யார் என்று வள்ளுவர் கூறுகிறார்.

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை

என்ற இந்த ஐந்து குணங்களும் நிறைந்தவனே சான்றோன் ஆவான்.  அதிலும், முதலில் அன்பைச் சொன்னார் வள்ளுவர்.

"கேட்ட தாய்" ...தன் மகன் பெரிய ஆள் என்று எல்லா தாய்க்கும் ஒரு அபிப்ராயம் உண்டு. அப்படி மற்ற தாய்மார்களும் நினைப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அவன் உண்மையிலேயே சான்றோன் தானா , அல்லது தனது தாய்மை என்ற அன்பினால் அப்படி தோன்றுகிறதா  என்ற அவளுக்குத் தெரியாது. எனவே, மற்றவர்கள்  உன் மகன் சான்றோன் என்று சொல்லக் கேட்ட தாய் மகிழ்வாள் என்றார்.

அது மட்டும் அல்ல, ஒரு மகன் எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும், தாய்க்கு அவன் சின்ன பிள்ளை தான்...நல்லா சாப்பிடு, பார்த்து சாலையை கட என்று அவனுக்கு சின்ன பிள்ளைக்கு சொல்லுவதைப் போல  சொல்லுவாள். அது தாய்மையின் குணம். அவன்  பெரிய ஆள் என்பதெல்லாம் ஊருக்கு. அவளை பொறுத்தவரை  அவன் சிறு பிள்ளை தான். எனவே, மற்றவர்கள் சொல்லும்போது  அவளுக்கு  மகிழ்ச்சி உண்டாகிறது.

மேலும், ஒரு மகன் தானே சான்றோன் ஆகி விட முடியாது. "அவையத்து முந்தி இருப்பச் செயல்" தந்தையின் கடமை. எனவே, மகன் சான்றோன் என்றால், கணவன் தன் கடமையை சரி வர செய்திருக்கிறான் என்று பொருள். அவன் அப்படி செய்ய வாழ்க்கை துணைவியான  தானும் உறுதுணையாக இருந்திருக்கோம் என்று அவள் நினைப்பாள். ஒரு பெற்றோராக தங்களது கடைமையை தாங்கள்  ஒழுங்காக செய்து விட்டோம் என்று மகிழ்வாள்.

ஒரு குறளுக்கு இவ்வளவு அர்த்தம், ஆழம். இப்படி 1330 குறள்.

சிந்திக்க சிந்திக்க ஊற்றெடுக்கும் அர்த்தம்.

நம் முன்னவர்கள் நமக்காக தேடி சேர்த்து வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். 


 

Friday, October 14, 2016

திருக்குறள் - குற்றமற்றவர் செயல்

திருக்குறள் - குற்றமற்றவர் செயல் 


எப்படி பேச வேண்டும் ? எப்படி கேட்க வேண்டும் ?

பேசத் தெரியாமல் பேசி, பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம், நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம், உறவுகளை துன்பப் படுத்தி விடுகிறோம்.

அதே போல, யார் சொல்வதை கேட்பது, எப்படி கேட்பது, என்று தெரியாமல் கண்டதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். டிவி இல் பேசுவதை, whatsapp ல் பலர் உளறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எப்படி பேச வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று ஒண்ணே முக்கால் அடியில் சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

பாடல்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற்பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.

பொருள்

வேட்பத்தாஞ் = விரும்பும்படி

சொல்லிப் = சொல்லி

பிறர் = மற்றவர்கள்

சொற் = சொல்லுவதில்

பயன் = பயன்களை

கோடன் = கண்டு பிடித்து கொள்வது 

மாட்சியின் = பெருமை உடையவர்களின்

மாசற்றார் = குற்றமற்ற

கோள் =  முடிவு , உறுதி

மற்றவர்கள் விரும்பும்படி  பேச வேண்டும். மற்றவர்கள் சொல்வதில் உள்ள நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான்.

கொஞ்சம் ஆழ்ந்து பொருள் தேடுவோம்.

மற்றவர்கள் விரும்பும் படி என்றால்,

முதலாவது, அவர்கள் நாம் சொல்வதை , சொல்லும் போது விருமப வேண்டும்.

இரண்டாவது, மீண்டும் நம்மிடம் வந்து கேட்க விரும்ப வேண்டும். அவர் கிட்ட போய் பேசுனா ஏதாவது நல்லது சொல்லுவார், புதுமையான ஏதாவது சொல்லுவார் என்று விரும்பி கேட்க வர வேண்டும்.

அப்படி நிகழ வேண்டும் என்றால், யாரிடம் பேசுகிறோமோ, அவர்களுக்கு என்ன தேவை, என்ன பிரச்சனை, அதற்கு என்ன தீர்வு,  அந்த தீர்வை செய்வதில் என்ன சிக்கல்கள் , அந்த சிக்கல்களை எப்படி  தாண்டுவது என்று சிந்தித்து, அதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி  எளிமையாக சொல்ல வேண்டும். அவர்கள் மனதை  உறுத்தாமல், அவர்கள் சங்கடப் படாமல் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். நல்லதைப் பேச வேண்டும். நம்பிக்கை ஊட்டும்  படி பேச வேண்டும்.

அப்படி பேசினால் அவர்கள் நாம் பேசுவதை விரும்புவார்கள்.

அதற்கு , ஆழ்ந்த படிப்பும், நல்ல  சிந்தனையும்,உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமும்   வேண்டும். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நலம்.

இரண்டாவது, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ நம்மிடம் சொல்கிறார்கள். சில சமயம் அது நமக்கு உபயோகமாக இருக்கும். சில சமயம் அபத்தமாக இருக்கும்.

அவர்கள் சொல்வதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாததை விட்டு விட வேண்டும். சொன்னவர்களை கோபிக்கக்  கூடாது.

அதே நேரத்தில், சொல்பவர் பெரியவர், வயதில் மூத்தவர் , ஒரு நிறுவனத்தின் தலைவர் என்பதால் அவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அவர்கள் சொல்வதில் நமக்கு என்ன பயன் என்று அறிந்து , அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசுவது உயர்ந்த கருத்துகளாக இருக்கலாம். அதனால் நமக்கு என்ன பயன் என்று அறிந்து அதை கேட்க வேண்டும்.


உண்மையா பொய்யா என்று ஆராய  வேண்டாம். பயன் உள்ளதா, பயன் அற்றதா என்று ஆராய வேண்டும். பயன் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள  வேண்டும். பயன் இல்லாதவற்றை விட்டு விட வேண்டும்.

காரண காரியம் இல்லாமல் பேசுவதும், கேட்பதும் கூடாது.

வெட்டிப் பேச்சு,  திண்ணைப் பேச்சு, வம்புப் பேச்சு இவற்றை தவிர்ப்பது நலம்.


பேசுவதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும். இப்படி பேசினால் கேட்பவர்களுக்கு பிடிக்குமா என்று.

கேட்பதற்கு முன்னால் சிந்திக்க வேண்டும், எதற்காக அந்த பேச்சை கேட்கப் போகிறோம் என்று.

நல்லதைப் பேசுவோம். பயனுள்ளவற்றை கேட்போம்.

வாழ்கை பயனுள்ளதாக இருக்கும். இருக்கட்டும்.