Tuesday, January 10, 2017

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?


யாரிடம் எப்படி பேச வேண்டும் தெரியாமல்தான் நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்.

கணவன்/ மனைவியிடம்  எப்படி பேச வேண்டும், பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும், நண்பர்களிடம், உறவினர்களிடம், மேலதிகாரிகளிடம், கீழே வேலை பார்ப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்.

அவை அறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். அவை என்றால் ஏதோ பெரிய கூட்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆள் இருந்தால் கூட அவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதற்கு அதில் குறிப்பு இருக்கிறது.

"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

பாடல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்


பொருள்

ஒளியார்முன்  =அறிவு ஒளி பொருந்தியவர் முன்

ஒள்ளிய ராதல் = அறிவோடு இருக்க வேண்டும்

வெளியார்முன் = ஒன்றும் அறியாதவர் முன்

வான்சுதை = வானம் போல சுண்ணாம்பு

வண்ணம் கொளல் = வண்ணம் கொள்ள வேண்டும்

என்ன ஒண்ணும் புரியலையே .... அறிவாளிங்க முன்னாடி அறிவோட பேசணும், மத்தவங்க முன்னாடி சுண்ணாம்பு மாதிரி இருக்கணும்னா என்ன அர்த்தம் ?

முதலாவது, நாம் யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். அவர்களின் தரம்  என்ன, அறிவின் ஆழம் என்ன, அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி சொன்னால் புரியும் என்று அறிந்து பேச வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

இரண்டாவது, அறிவுள்ளவர்கள் நாம் சொல்வதை வெகு எளிதாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்களின் நிலைக்கு நாம் இறங்கி வந்து பேச வேண்டும். "நான் சொல்வதை என் பிள்ளைகள் கேட்பதே இல்லை " என்று  பெரும்பாலான பெற்றோர்கள் குறை பட்டுக் கொள்வார்கள். காரணம், அவர்கள்  அந்த பிள்ளைகளின் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும்படி பேச வேண்டும்.

மூன்றாவது, சற்று அறிவு குறைந்தவர்களிடம் பேசும்போது அவர்கள் அறிந்து கொள்ளும்படி பேசாவிட்டால், நாம் சொல்வதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு வேறு விதமாக விதமாக நடக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே, அவர்களுக்கு புரியும்படி எளிமையாக பேச வேண்டும்.

நான்காவது, வான்சுதை வண்ணம் கொள்ளல் என்றால் என்ன ? சுதை என்றால் சுண்ணாம்பு. சுண்ணாம்பு போல இருக்க வேண்டும் என்பது நேரடி அர்த்தம். அது என்ன சுண்னாம்பு ? சுண்ணாம்பு போல வெண்மையாக இருப்பது மேகம். அந்த மேகத்திடம் நீர் இருக்கிறது. அந்த நீர் கீழிறங்கி வந்தால்தான் அதனால் ஒரு பயன் உண்டு. அது போல, நாம் எவ்வளவு கற்று இருந்தாலும், கல்வி அறிவு இல்லாதவர்களும்  அறிந்து கொள்ளும்படி கீழிறங்கி வந்து சொன்னால்தான் அதனால் ஒரு பயன் உண்டு.

ஐந்தாவது, மேகத்தில் உள்ள நீர் இருக்கிறதே, அது எந்த நிலத்தை சேர்கிறதோ அந்த நிறம் பெறும் . அது போல, யாரிடம் பேசுகிறோமோ அவர்களது தரம் அறிந்து , அவர்களோடு கலந்து பேச வேண்டும்.

மனைவியிடம் பேசும்போது ஒரு கணவனாக, பிள்ளைகளிடம் பேசும் போது ஒரு தகப்பனாக, அதிகாரியிடம் பேசும் போது ஒரு ஊழியனாக, ஊழியர்களிடம் பேசும் போது ஒரு அதிகாரியாக பேச வேண்டும்.

அதிகாரியிடம் போய் , "நான் சொல்வதை நீ கேள் " என்றால் அவர் கோபம் கொண்டு நம்மை வேலையை விட்டு தூக்கி விடுவார்.

ஊழியரிடம் "நீ சொல்வது போல நான் கேட்கிறேன் என்று சொன்னால்" வேலை ஆகாது.

ஒரு மருத்துவர், ஒரு நோயாளியின் நோயையை பற்றி இன்னொரு மருத்துவரிடம் பேசும் போது ஒரு மாதிரி பேசுவார், அதே நோயையை அந்த நோயாளியிடம் பேசும் போது வேறு மாதிரி பேசுவார், அந்த நோயாளியின் உறவினர்களிடம் பேசும்போது இன்னொரு மாதிரி பேசுவார்.

மாற்றி பேசினால் சிக்கல் தான்.

குறள் சொல்வது இருவரை பற்றி மட்டும்தான். அறிவுள்ளவர், இல்லாதவர்.

ஆனால், நாம் அதை நீட்டிக் கொள்ளலாம். யாரிடம் பேசுகிறோமோ, அவரைகளை நன்கு  அறிந்து பேச வேண்டும்.

சிந்தித்துப் பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

என்ன ? சரிதானே ?

No comments:

Post a Comment