Tuesday, January 17, 2017

இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான்

இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான் 


இராமனை கண்டு அவனை மீண்டும் அழைத்து வந்து மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க என்னை பரதன் அவனைத் தேடி வருகிறான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் தோற்றத்தைக் கண்டு தன் தவற்றை உணர்ந்து கொள்கிறான்.

"பரதனுக்கு ஏதோ ஒரு துன்பம் இருக்கிறது. அவனுக்கு இராமன் மேல் கொண்ட அன்பு குறையவில்லை. அவனைப் போலவே இவனும் தவ வேடம் கொண்டு இருக்கிறான். படை வீரர்களே , நீங்கள் இங்கு வழியை பத்திரமாக பார்த்துக் கொண்டு இருங்கள். நான் மட்டும் போய் அவனைப் போய் பார்த்து விட்டு வருகிறேன் " என்று குகன் தனியே கிளம்பினான்.

பாடல்

உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.

பொருள்


உண்டு இடுக்கண் ஒன்று; உடையான் = துன்பம் ஒன்று உடையான்

உலையாத அன்புடையான் = மாறாத அன்பு உடையான்

கொண்ட தவவேடமே = இராமன் கொண்ட தவ வேடமே

கொண்டிருந்தான் = இவனும் கொண்டிருக்கிறான்

குறிப்பு எல்லாம் = இந்த குறிப்பை எல்லாம்

கண்டு = பார்த்து

உணர்ந்து  = உணர்ந்து

பெயர்கின்றேன் = செல்கிறேன் (அவனைக் காண)

காமின்கள் நெறி; = வழியைப் காவல் காத்துக் கொண்டு இருங்கள்

“ என்னாத் = என்று தன் படைகளிடம் கூறி விட்டு

தண் துறை = குளிர்ந்த துறையில்

ஓர் நாவாயில் = ஒரு படகில்

ஒரு தனியே தான் வந்தான் = தனியே தான் மட்டும் வந்தான்


வாழ்க்கையை அறிவின் மூலமே அறிந்து செலுத்தி விட முயல்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு  அறிவியல் பூர்வமான, தர்க ரீதியான வாதம் செய்கிறோம்.  வாழ்வில் சில விஷயங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, அறிவியலுக்கு அப்பாற்பட்டு, தர்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. 

அன்பு, துன்பம், காதல், பக்தி, பாசம், போன்றவை அறிவுக்கு அப்பாற்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், இவற்றை அறிவு கொண்டு ஆராய முற்பட்டால் தவறாகவே முடியும். 

முதலில் பரதனை தவறாக எடை போடுகிறான். படையோடு வந்திருக்கிறான், இராமனோடு சண்டை போடவே வந்திருக்கிறான் என்று அவன் அறிவு  சொல்கிறது. சண்டைக்குத் தயாராகி விட்டான். 

பின் , அவனைக் கண்டதும் அவன் எண்ணம் மாறுகிறது. தான் பரதனை பற்றி  நினைத்தது தவறு என்று எண்ணுகிறான். 


"கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்" 

என்கிறான். 

கண்டு அறிந்து பெயர்கிறேன் என்று சொல்லவில்லை. கண்டு உணர்ந்து செல்கிறேன் என்கிறான். 

அன்பை உணர முடியும். அறிய முடியாது.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பார் மணிவாசகர் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து

என்பது திருவாசகம்.

பரதனின் உலையாத அன்பை குகன் உணர்ந்தான்.

அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் உள்ள வீரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை போருக்கு தயாராக்கி விட்டான் குகன். ஒரு வேளை அவர்கள் பரதனுக்கு ஏதாவது தீங்கு செய்து விட்டால் என்று அஞ்சி, அவர்களை "நீங்கள் வழியை பார்த்துக் கொண்டு இங்கே இருங்கள் " என்று சொல்லிவிட்டு தான் மட்டும் போகிறான். 


குகன் கண்ட பரதனை மற்ற வீரர்களும் கண்டார்கள். குகனுக்கு மட்டும் பரதனின் நிலையை உணர முடிந்தது. மற்றவர்களால் முடியவில்லை. 

உலகத்தில் உள்ள பொருள்களும் சம்பவங்களும் ஒன்று தான் என்றாலும், பார்ப்பவரின்  பக்குவத்தில் இருக்கிறது எல்லாம். 

கல்லென்று நினைப்பவனுக்கு கல். அதைத் தாண்டி ஏதோ இருக்கிறது என்று உணர்பவனுக்கு  , ஏதோ இருக்கிறது. 

என்ன இருக்கிறது , காண்பி, விளக்கு என்றால் முடிவது இல்லை. 

உணரலாம். அறிய முடியாது. 

1 comment:

  1. அறிவது வேறு, உணர்வது வேறு என்பது யோசிக்கத் தகுந்த விஷயம். நன்றி.

    ReplyDelete