Thursday, January 19, 2017

குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து

 குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து 


பெண்கள் எதையும் நேரடியாகத் சொல்வது இல்லை. கொஞ்சம் சுத்தி வளைத்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பொருள் தேடி வெளியூர் போகப் போகிறான் தலைவன். மனைவியைப் பிரிந்து , அவள் தரும் அன்பை பிரிந்து பொருள் தேடுவதுதான் உயர்ந்தது என்று செல்லும் அவர்தான் அறிவுள்ளவர் என்றால் அவர் அறிவுள்ளவராகவே இருந்து விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்திவிட்டுப் போகிறேன்.

மனைவி மற்றும் உறவுகளை விட்டு விட்டு அயல் நாட்டுக்குப் போகாதே. அது முட்டாள்தனம் என்று நேராகச் சொல்லி விடலாம். சொல்லவில்லை.

அப்படிச் செய்ற நீதான் புத்திசாலி. நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் இந்த குறுந்தொகை கால மனைவி.

பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் போல....

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. 


சீர் பிரித்த பின்

அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோராக
மடவமாக மடந்தை நாமே.

பொருள்


அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

நீங்கி = விட்டுப் பிரிந்து

துணை = மனைவியைத்

துறந்து = விட்டு விலகி

பொருள்வயிற் = பொருள் தேடி

பிரிவோர் = பிரிந்து செல்வோர்

உரவோராயின் = வலிமை உள்ளவர் என்றால்  (உரம் = வலிமை). இங்கே புத்திசாலி, அல்லது அறிவாளி

உரவோர் = புத்திசாலி

உரவோராக = புத்திசாலியாகவே இருந்துவிட்டு போகட்டும்

மடவமாக = மடத்தனம் கொண்ட

மடந்தை நாமே = பெண்கள் நாமே

இதில் உள்ள நுணுக்கமான செய்திகளை பார்க்க வேண்டும்.

அன்பு என்பது நம்மிடம் உறவு உள்ளவர்களிடம் தோன்றும் இரக்கம்.

அருள் என்பது நம்மிடம் உறவு இல்லாதவரிடத்தும் தோன்றும் இரக்கம்.


அருளும் அன்பும் நீங்கி ....

என்கிறாள். மனைவி என்ற அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பெண் துன்பப படுகிறாளே  என்ற அருளாவது இருக்க வேண்டாமா என்பது அவள் கேள்வி.


"துணை துறந்து  பொருள்வயிற் பிரிவோர்....."

பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்வின் குறிக்கோளா ? பணம் வேண்டும்தான். அதற்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோம் என்று  சிந்திக்க வேண்டும் ?

ஆரோக்கியம் ? அன்பு ? உறவு ? அறிவு தேடல் ? என்று எத்தனையோ நல்ல விஷயங்களை  இழந்து விடுகிறோம்.

அயல் நாடு தான் போக வேண்டும் என்று இல்லை.

வீட்டையும், உறவுகளையும் , உடல் ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப் படமால் பணம் பணம்   என்று ஓடி ஓடி சம்பாதிப்பது அறிவான செயல்தானா ?

பொருள் அவசியம் தேவைதான். அதற்காக கொடுக்கும் விலை என்ன என்று யோசிக்கச் சொல்கிறாள். பணம் எல்லாம் சம்பாதித்து விட்டு வந்து பார்த்தால் வயது போயிருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை என்று போயிருப்பார்கள். ஆரோக்கியம் போயிருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அவள் முடிக்கும் போது , "நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லவில்லை.

"மடவமாக மடந்தை நாமே"

நாமே என்று சொல்கிறாள். யார் இந்த "நாம்" ? எல்லா பெண்களும் அப்படித்தான்  நினைப்பார்கள்.

அருளும், அன்பும், துணையும் அவர்களுக்கு பணத்தை விட முக்கியம்.

அப்படி நினைக்கும் எங்களை உலகம் முட்டாகள் என்று சொல்கிறது. அப்படியே இருந்து விட்டு  போகட்டும். நீங்கள் எல்லாம் புத்திசாலியாகவே இருங்கள் என்கிறாள்.

யார் புத்திசாலி ? யார் முட்டாள் ?

விவாதம் தொடர்கிறது. இன்று வரை விடை கிடைக்கவில்லை.

கொஞ்சம் நிறுத்தி , யோசிப்போம். 


2 comments:

  1. நான் பல மனிதர்களை பார்க்கிறேன்.குடும்பத்தை விட்டு தனியாக வேறு ஊர்களில் வேலை நிமித்தம் இருந்துகொண்டு வருடத்தில் ஓரிரு வாரம் தவிர வாழ்நாட்கள் முழுவதும் செலவழிப்பதை கண்டு வருத்தப்படுவதுண்டு.சிலருக்கு தட்ட முடியாத பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் பணம் சம்பாதிப்பது என்கிற ஒரே குறிக்கோளுடன் குடும்பத்தை தனிமையில் விடுவது மடத்தனமோ என்னவோ.
    நல்ல கவிதை.

    ReplyDelete
  2. இந்தப் பாடல் பல நூறாண்டு காலம் கழிந்தும் நமக்கு ஒரு குடும்பக் கதை சொல்கிறது. நம் மனதில் அதை அப்படியே உணர முடிகிறது.

    ReplyDelete