Sunday, January 22, 2017

நாலடியார் - எது அழகு ?

நாலடியார் - எது அழகு ?


அழகு இதில் இருக்கிறது ?

Beauty Parlor , சிகை அலங்காரம், பல விதமான நவீன உடைகள், உதட்டுச் சாயம், முகத்திற்கு பூசும் பொடிகள், என்று பலவிதங்களில் நம்மை அழகு படுத்திக் கொள்கிறோம்.

இதெல்லாம் அழகா ? நீடித்து நிற்கும் அழகா ?

முடியை எத்தனை அழகு செய்தாலும், வெளியே சென்றவுடன் ஒரு காற்று அடித்தால் கலைந்து விடும்.

எத்தனை powder கள் போட்டாலும், ஒரு வியர்வை, ஒரு மழை வந்தால் கரைந்து விட்டும்.

வெளியே செய்யும் அழகு எல்லாம் சில நிமிடங்கள்தான். மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரம்.

உண்மையான அழகு எது தெரியுமா - ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


பொருள்

குஞ்சி யழகும் = குஞ்சி என்றால் ஆண்களின் தலை முடி. முடியின் அழகும் 

இராமன் முடி சூட்டாமல் வருகிறான். அவனை தூரத்தில் இருந்து பார்த்த கோசலை நினைக்கிறாள், மஞ்சன புனித நீரால் இராமனின் முடி நனைய வில்லை என்று...


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.


கொடுந்தானைக் கோட்டழகும் = தானை என்றால் ஆடை. கோட்டம் என்றால் வளைவு.  வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு.

மஞ்சள் அழகும் = மஞ்சளின் அழகும்

அழகல்ல = அழகு அல்ல

நெஞ்சத்து = மனதில்

நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்

என்னும் = என்ற

நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்

கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு


முடி - ஆண்களுக்கு. 

மஞ்சள் - பெண்களுக்கு 

ஆடை - இருவருக்கும் 

எனவே ஆண் பெண் என்ற இருவருக்கும் இந்த வெளி வேடங்களில் அழகு இல்லை. 

கல்வியால் தான் அழகு.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். 



அந்த கல்வியில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது ?

மேலும் சிந்திப்போம். 




4 comments:

  1. தினம் காபி குடிக்கர மாதிரி காலையில் நீங்கள் அருமையாக தேர்ந்து எடுக்கும் ஒரு பாடலும் அதற்கு விளக்கமும் படிக்காவிட்டால் நிறைவு ஏற்படுவது இல்லை

    ReplyDelete
  2. "நாம் நல்லவர்கள், நடு நிலைமை நீங்காதவர்கள்" என்ற எண்ணம் நமது மனதிலேயே படிந்திருக்க வேண்டும் என்பது சிறப்பான கருத்து. நன்றி.

    ReplyDelete
  3. The golden trifecta -kambaramayanam, naaladiyar, thirukkural- in a single post! Touchè!

    ReplyDelete