Tuesday, January 24, 2017

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் 


அரக்கர் என்பவர் ஏதோ பெரிய உருவத்துடன், பெரிய பற்களுடன் , கருப்பாய், இருப்பவர்கள் அல்ல.  சில குணங்கள் நம்மை அரக்கர்களாக்கும். சில குணங்கள் நம்மை தெய்வமாக்கும்.

எந்த குணங்கள் அரக்க குணங்கள் ?

வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமை, பணியாமல் இருப்பது, விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமை ஒரு அரக்க குணம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

இனிமையாக பேசாமல் இருப்பது இன்னொரு அரக்க குணம். பேச்சில் இனிமை வேண்டும்.

இராவணன் நல்லது சொன்னால் கூட அருகில் இருப்பவர்கள் பயப்படுவார்களாம்.


பாடல்

அன்னவன் அமைச்சரை நோக்கி, 
     ஆண்டு ஒரு 
நல் மொழி பகரினும் 
     நடுங்கும் சிந்தையர், 
'என்னைகொல் பணி?' 
     என இறைஞ்சுகின்றனர். 
கின்னரர், பெரும் 

    பயம் கிடந்த நெஞ்சினர்.


பொருள்

அன்னவன் = இராவணன்

அமைச்சரை நோக்கி = அமைச்சர்களை பார்த்து

ஆண்டு  = அங்கு

ஒரு = ஒரு

நல் மொழி =நல்ல வார்த்தை

பகரினும் = சொன்னாலும்

நடுங்கும் சிந்தையர் = நடுக்கம் கொள்ளும் மனம் கொண்டவர்

'என்னைகொல் பணி?' = சொன்ன வேலை என்ன

என இறைஞ்சுகின்றனர் = என்று கெஞ்சி, கேட்பார்கள் .

கின்னரர் = தேவர்கள்

பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் = பெரிய பயத்தை உடைய மனம் கொண்டவர்கள்

பேசும் போது இனிமையாக பேச வேண்டும். நல்லது சொல்லும் போது கூட மற்றவர்கள் பயப்படும்படி பேசுவானாம் இராவணன்.

சரி, இராவணன் அப்படி பேசுகிறான். அது கெட்ட குணம்தான்.

எப்படி இனிமையாகப் பேசுவது ?

நமக்கு வாழ்வில் என்ன சிக்கல் , துன்பம், பிரச்சனை வந்தாலும், அதை கேள்வியாக மாற்றி, வள்ளுவரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் தருவார்.

எப்படி இனிமையாக பேசுவது ? என்று வள்ளுவரிடம் கேட்டால், அவரிடம் வரும் பதில்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.

ஒருவனின் முகத்தை பார்த்து, இனிது  நோக்கி, நல்ல மனத்தோடு இனிய சொற்களை சொல்லுவதே அறம் என்கிறார்.

இனிய சொல் என்று ஒரு சொல் கிடையாது.

"உடம்பு எப்படி இருக்கிறது " என்ற மூன்று சொல்லை எப்படியும் சொல்லலாம்.

வள்ளுவர் சொல்கிறார்,

வந்தவனின் முகம் பார்த்து அறிய வேண்டும். அவனுக்கு என்ன சிக்கல் என்று. பசித்து வந்து இருக்கிறானா, பொருள் வேண்டி வந்திருக்கிறானா, வேறு ஏதாவது குடும்பச் சிக்கலா ? உடல் ஆரோக்கியம் சரி இல்லையா என்று முகம் பார்த்து அறிய வேண்டும்.

கனிவோடு அவனை பார்க்க வேண்டும். நம் முகத்தில் ஒரு கோபத்தையும், வெறுப்பையும், வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும் அது இனிய சொல் ஆகாது.

அவனது மனம் மகிழும்படி சொல்ல வேண்டும்.

ஒரு ஆறுதல், ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு உற்சாகம் வரும்படி பேச வேண்டும்.

சொல் மட்டும் அல்ல. என்ன சொல்கிறோம் என்பது மட்டும் அல்ல, எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.

இராவணன் நல்லது தான் சொன்னான். அவன் சொன்ன விதம் மற்றவர்களை பயம் கொள்ளச் செய்கிறது.

முகம் பார்த்து பேசுங்கள். மற்றவர்கள் மகிழும்படி பேசுங்கள்.

அப்படி பேசாமல் இருப்பது அரக்க குணம்.

இராவணன் அப்படி பேசினான். அவன் ஒரு அரக்கன்.

இராமன் எப்படி பேசினான் ? வள்ளுவர் கூறிய மாதிரி இராமன் பேசினானா ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்.









No comments:

Post a Comment