Wednesday, January 11, 2017

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்


இராமனை வழி அனுப்பிவிட்டு வந்த , கங்கை ஆற்றின் கரையில் நிற்கிறான். மறு கரையில் இராமனை நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த  பரதன் நிற்கிறான்.  படையோடு வந்த பரதனை , அவன் இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டானோ என்று தவறாக எண்ணிய குகன் பரதனை எதிர்த்து போர் புரிய துணிந்து விட்டான்.

பரதனின் அமைச்சன் சுமந்திரன் , குகனைப் பற்றி பரதனிடம் சொல்கிறான். இராமன் மேல் கரை காணா காதல் கொண்டவன் என்று குகனை அறிமுகம் செய்கிறான்.

"இந்த குகன் இராமன் மேல் அன்புகொண்டவனா, இராமனை தழுவிக் கொண்டவனா...அப்படி என்றால் அவனை நானே சென்று பார்ப்பது தான் முறையாக இருக்கும் " என்று நினைத்து எழுந்து குகனைப் பார்க்கச் செல்கிறான்.

பாடல்

தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.

பொருள்


தன் முன்னே = தனக்கு எதிரில்

அவன் = குகன்

தன்மை = தன்மைகளை

தந்தை துணை = தந்தையின் துணைவனான சுமந்திரன் (அவன் தசரதனின் மந்திரி)

முந்து உரைத்த = முன்பு உரைத்த

சொல் முன்னே = சொல் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்கு முன்னே

உவக்கின்ற = மகிழ்கின்ற

துரிசு இலாத் = குற்றமற்ற

திரு மனத்தான் = உயர்ந்த மனத்தைக் கொண்ட பரதன்

‘மன் = மன்னவனான இராமன்

முன்னே = முன்பே

தழீஇக் = தழுவிக்

கொண்ட= கொண்ட

மனக்கு = மனதுக்கு

இனிய துணைவனேல் = இனிய துணைவன் என்றால்

என் முன்னே = அவனுக்கு முன்னால்

அவற் காண்பென் = அவனைக் காண்பேன் என்று
,
யானே சென்று’ = நானே சென்று

என எழுந்தான் = என்று எழுந்தான்

பரதனின் இனிய மனதுக்கு , கம்பனின் வார்த்தைகள் வந்து விழுகிறது.

.
"சொல் முன்னே உவக்கின்ற" சொல்லி முடிக்கவில்லை அதற்குள் பரதனின்  ஆவல்  பொங்குகிறது. "இராமனுக்கு நண்பனா, உடனே போய் பார்க்க வேண்டும்" என்று கிளம்பி விட்டான். 

" துரிசு இலாத் திரு மனத்தான்"  குற்றமற்ற உயர்ந்த மனத்தைக் கொண்டவன். குகன் பரதனோடு போர் செய்ய தயாராக நிற்கிறான். அதெல்லாம் பரதனுக்கு தெரியவில்லை.  குகனின் கோபம் தெரியவில்லை. அவன் படைகள் போருக்கு தயாராக இருப்பது தெரியவில்லை. 

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் ஒரே மகழ்ச்சி பரதனுக்கு. 

"என் முன்னே அவற் காண்பென்"  

எனக்கு முன்னே அவனை போய் நான் காண்பேன் என்று சொன்னால் அர்த்தம் இடிக்கும். அவனுக்கு முன்னால் நான் போவேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு முன்னே நான் போவேன் என்பது எப்படி சரியாக இருக்கும் ?

உள் அர்த்தம் என்ன என்றால், "என் முன்னே" என்றால் எனக்கு முன்னவன், என்னுடைய  அண்ணன் என்று பொருள். 

இராமன் குகனிடம் என்ன சொன்னான் ?


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

இலக்குவன் உனக்குத் தம்பி என்றான். "இளவல் உன் இளையான்". இலக்குவனுக்கு அண்ணன் என்றால் பரதனுக்கும் அண்ணன் தானே. 

சரி, இராமன் குகனிடம் சொன்னது பரதனுக்கு எப்படித் தெரியும் ? 

என்னவென்று சொல்லுவது ? 

பால் நினைந்து ஊட்டும் தாய் என்று மணிவாசகர் சொன்னது போல, குழந்தை அழவில்லை, பால் வேண்டும் என்று கேட்க வில்லை, இருந்தும் தாய்க்குத் தெரியும்  குழந்தைக்கு என்ன வேண்டும் என்று. 

எப்படி ?

இராமன்   மனதில் இருந்ததை பரதன் அறிந்தான். 

அறிந்தது மட்டும் அல்ல...அதை செயல் படுத்தவும் செய்கிறான். 

குகன் அண்ணன் என்றால், அவனை தான் சென்று பார்ப்பதுதான் முறை என்று குகனைக் காண பரதன் எழுந்தான். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். 

பரதன் பெரிய சக்ரவர்த்தி. குகன் , ஒரு ஓடம் விடும் ஆள். நினைத்துப் பார்க்க முடியுமா ? ஒரு சக்கரவர்த்தி, ஓடக்காரனை காண தானே எழுந்து போவது ?

பரதனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இராமனின் அன்புக்குப் பாத்திரமானவன், அவ்வளவுதான். அது போதும் அவனுக்கு. 

இது இப்படி இருக்க, அந்தக் கரையில் குகனின் நிலை என்ன தெரியுமா ?


 

1 comment:

  1. பரதனின் குற்றமில்லாத நெஞ்சை இந்தப் பாடலில் உணர முடிகிறது. நன்றி.

    ReplyDelete