Sunday, March 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை


தவறு ஏன் நிகழ்கிறது ?

எது சரி, எது தவறு என்று தெரியாததனால் தவறு நிகழ்கிறது. சிறு வயதில் புகை பிடிப்பது சரியா தவறா என்று தெரியாமல் , அதனால் வரும் பின் விளைவுகள் தெரியாமல் புகை பிடிக்கத் தொடங்கியோர் பலர்.

சில  சமயம்,தவறென்று தெரியும், செய்யக் கூடாது என்று தெரியும், இருந்தும் அதனால் வரும் சந்தோஷம், இன்பம், இவற்றினால் உந்தப் பட்டு தவறு நிகழ்ந்து விடுகிறது.

எனவே வாழ்வில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்  என்றால்,அற வழியில் நடக்க வேண்டும் என்றால் எது சரி , எது தவறு என்று  .தெரிய வேண்டும்.  தெரிந்த பின் அதில் இருந்து துளியும் விலகாமல் நடக்க வேண்டும். எவ்வளவு ஆதாயம் வந்தாலும் தவறான ஒன்றை செய்து விடக் கூடாது.

இராமனைத் தேடி கானகம் வருகிறான்  பரதன். வந்த இடத்தில் பரத்துவாஜ முனிவரை  காண்கிறான்.  முனிவர் கேட்கிறார் "என்ன பரதா , முடி சூட்டிக் கொள்ளவில்லையா " என்று.

கொதித்துப் போகிறான் பரதன்.

"முனிவனே நீ எனக்கு நல்லது சொல்லவில்லை. உன் தவ நெறிக்கு ஏற்ற மொழியும் நீ பேசவில்லை "

என்று முனிவரோடு கோபம் கொள்கிறான் பரதன்.

பாடல்

சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்;
‘உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!’ என்றான்

பொருள்

சினக் = கோபத்தால்

கொடுந் = கொடுமையான

திறல் = வலிமையுடன்

சீற்ற = சீறிக் கிளம்பும்

வெந் தீயினான் = தீபோல கிளம்பி (கோபம் தீ போல கிளம்பியது)

மனக் கடுப்பினன் = மனம் கொதித்து

மா தவத்து  = பெரிய தவத்தினால்

ஓங்கலை = உயர்ந்தவனே

‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்; = எனக்கு உகந்ததை சொல்லவில்லை நீ என்றான்

‘உனக்கு = உனக்கு

அடுப்பது = ஏற்புடையது

அன்றால் = அல்லாதவற்றை

உரவோய்!’ என்றான் = வலிமையானவனே. இங்கு உயர்ந்தவனே என்று கொள்ளலாம். உரவு என்ற அடிச்சொல்லில் இருந்து வந்தது தான் உரம்.


என்னே நீ முடிசூட்டிக் கொள்ளவியல்லையா என்று பரதனிடம் கேட்டவுடன், அவன் அந்த முனிவரைப் பார்த்துச் சொல்கிறான் "நீ எனக்கு தேவையானதையும் சொல்லவில்லை,  உனக்கு ஏற்புடையதையும் சொல்ல வில்லை " என்று.

தான் முடிசூடுவது தவறென்று அவனுக்குத் தெரிகிறது. அந்தத் தவறை யார் செய்யச் சொன்னாலும் அவன் செய்யத் தயாராக  இல்லை.

தயரதன் சொன்னான்.

கைகேயி சொன்னாள்.

அமைச்சர் சுமந்திரன் சொன்னான்.

குலகுரு வசிட்டர் சொன்னார்.

இப்போது பரத்துவாஜ முனிவர் சொல்கிறார்.

ம்ம்ஹும் ...பரதன் ஒரு இம்மி கூட அசையவில்லை.

அதுதான் பரதன். அறநெறியில் வாழ்வதற்கு ஒரு உதாரணம் என்றால் அது பரதன்தான்.

No comments:

Post a Comment