Saturday, March 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?


நமக்குத் பிடித்தவர்கள், வேண்டியவர்கள் கோபம் கொண்டால் அதை எப்படி கையாள்வது ? அவர்கள் கோபம் , அவர்களுக்கு சரி என்று படும். அவர்களோடு விவாதம் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் கோபம் இன்னும் கூடும். தங்கள் கோபத்திற்கு ஞாயம் கற்பிப்பார்கள். அவர்கள் எப்படி சரி, மற்றவர்கள் எப்படி தவறு என்று குரல் மேலும் கூடும்.

சரி, அப்படியே விட்டு விடுவதா என்றால் அதுவும் சரி இல்லை.

சரி, அதுவும் வேண்டாம், பதிலுக்கு நாமும் கோபப் படலாமா என்றால் இரண்டு பக்கமும் கோபம் என்றால் ஒன்றும் சரி ஆகாது.

பின் என்னதான் செய்வது ?

கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, உடன் வேலை செய்பவர்களோ கோபம் கொண்டால் என்ன செய்வது ?

என்ன செய்வது என்று நேரடியாகச் சொல்லாமல், இராமன் என்ன செய்தான் என்று கம்பன் காட்டுகிறான். அதிலிருந்து நாம் ஏதாவது பாடம் படித்துக் கொள்ளலாம் என்று.

இராமனைத் தேடி பரதன் கானகம் வருகிறான். இராமனைக் கண்டு , அரசை அவனிடம் மீனும் ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம்.

தூரத்தில் பரதன் சேனைகளோடு வருவதைக் கண்ட இலக்குவன் , தங்கள் மேல் பரதன் படை எடுத்து வருவதாக எண்ணிக் கொண்டு சண்டைக்கு தயாராகுகிறான்.

"இராமா, இந்த பரதனையும் அவன் படைகளையும் வென்று அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் பார் " என்று ஆற்றொணா கோபத்தோடு கிளம்புகிறான்.

நீண்ட வீர வசனம் பேசுகிறான். கோபத்தின் உச்சியில் நின்று எரிமலையாக வெடிக்கிறான்.

அப்போது இராமன், சாந்தமாகச் சொல்கிறான்

"இலக்குவா, இந்த ஈரேழ் உலகத்தையும் அழிப்பது என்று நீ முடிவு செய்துவிட்டால் அதை யாரால் நிறுத்த முடியும். இருந்தலும் , உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். கேட்பாயா ?"

என்று சொன்னான்.

பாடல்

“இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
“கலக்குவென்” என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்.


பொருள்

“இலக்குவ! = இலக்குவனே

உலகம் ஓர் ஏழும், ஏழும், = ஈரேழு உலகத்தையும்

நீ = நீ

“கலக்குவென்” என்பது கருதினால் = கலக்குவேன் என்று நினைத்து விட்டால்

அது விலக்குவது அரிது = அதை நிறுத்துவது என்பது கடினம்

 அது விளம்பல் வேண்டுமோ? = அது பற்றி சொல்லவே வேண்டாம்

புலக்கு = அறிவுக்கு

உரித்து ஒரு பொருள் = உரிய ஒரு பொருள்

புகலக் கேட்டியால் = சொல்கிறேன், கேட்பாயா

இலக்குவன் கோபத்தை இராமன் எப்படி மாற்றுகிறான் ?

முதலில், அவன் திறமையை, ஆற்றலை மதித்து பேசுகிறான். யாராவது கோபம் கொண்டு  பேசினால் , முதலில் அவர்களை மட்டம் தட்டி பேசக் கூடாது. "ஆமா , கிளிச்சீங்க , உங்கள பத்தி தெரியாதா " என்று ஆரம்பித்தால் வீம்புக்காகாவேணும் எதையாவது செய்து வைப்பார்கள். முதலில் கோபம் கொண்டவர்களை குளிர்விக்க வேண்டும்.

இராமன் சொல்கிறான், "நீ நெனச்சா பதினாலு உலகத்தையும் கலக்கிருவ" என்று சொன்னவுடன் இலக்குவனுக்கு கொஞ்சம் பெருமையும்  , தான் கொண்ட கோபம் வெட்டி கோபம் இல்லை, செயல் படுத்த முடியும் என்றும் தோன்றும்.

கோபம் கொண்டவர்களின் நல்ல குணங்களை முதலில் சொல்ல வேண்டும். "உங்களுக்கு கோபமே வராதே...என்ன ஆச்சு இன்னிக்கு " என்று ஆரம்பிக்க வேண்டும்.

அவர்கள் கொஞ்சம் கோபம் தணிந்தவுடன் மேற்கொண்டு சொல்ல வேண்டும்.


கோபத்திற்கு, கோபம் பதில் இல்லை.

சரி, நீ சொன்ன மாதிரியே இவனுகள ஒரு கலக்கு கலக்கிட்டு வர்றேன் அப்படினு கிளம்பிட்டா என்ன பண்றது.

அடுத்து இராமன் சொல்கிறான், "அறிவுக்கு உகந்த ஒன்றை சொல்கிறேன் கேட்பாயா " என்கிறான்.

கேட்க மாட்டேன் என்று சொன்னால், தனக்கு அறிவு இல்லை என்று ஆகிவிடும். கேட்டுத்தான் ஆக விடும். அப்படி ஒரு கேள்வியை போடுகிறான் இராமன்.

நமக்கு எப்படி அறிவு வளர்கிறது ?


படித்து , வாசித்து (கண்), ஆசிரியரும் மற்றவர்களும் சொல்வதைக் கேட்டு (காது), தொட்டு உணர்ந்து (தோல்), முகர்ந்து பார்த்து (மூக்கு), வாயில் போட்டு பார்த்து  (நாக்கு), சிந்தித்து (மனம்) என்ற இந்த ஆறு புலன்கள் வழியாக அறிவு நமக்குள் வருகிறது.

அறிவை வளர்ப்பது புலன்கள்.

புலக்கு என்றால் அறிவுக்கு என்று பொருள்.

கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே என்பார் மணிவாசகர்.

ஏதோ அறிவு பூர்வமான விஷயம் சொல்லப் போகிறான் இராமன் என்று கேட்கத் தொடங்குகிறான் இலக்குவன்.

அவன் என்ன கேட்டான் என்று மேலும் பார்ப்போம். 

No comments:

Post a Comment