Tuesday, March 28, 2017

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு


நாளும் பல பேரை சந்திக்கிறோம். இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படி அறிந்து கொள்வது ?

சில பேரை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடுகிறது. சிலரை பார்த்தாலே பிடிப்பதில்லை.

ஒருவரை நம்பி பணம் கொடுக்கலாமா ? நம்பி சில இரகசியங்களைச் சொல்லலாமா ?

ஏன், சில பேரை பார்த்து அவர்களுடன் பழகி காதல், திருமணம் என்று கூட போய் விடுகிறது. அப்படி திருமணம் செய்தவர்கள் பின்னாளில் யோசிப்பது உண்டு, எங்கே போயிற்று அந்த காதல் என்று. காதல் போய் வெறுப்பு நிறைந்த வாழ்க்கை , அவர்கள் எடுத்த முடிவை சிந்திக்க வைக்கும்.

யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ?

சிக்கல் தான். இதற்கு ஒரு தெளிவான விடை இல்லை. இருக்கவும் முடியாது.

மற்றவர்கள் மனதில் இருப்பதை நாம் ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது என்கிறது நாலடியார்.


பாடல்

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.


பொருள்

யாஅர் ஒருவர் = யார் ?

ஒருவர்தம் உள்ளத்தைத் = மற்றொருவரின்  உள்ளத்தை

தேருந் துணைமை யுடையவர் = தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் ?

சாரல் = மலைச் சாரலில்

கனமணி = பெரிய மணிகள்

நின்றிமைக்கும் = நின்று ஒளி விடும்

நாட! = நாட்டை உடையவனே

கேள்; = கேள்

மக்கள் = மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு = நினைப்பது ஒன்று , செய்வது மற்றொன்றாக இருக்கும்


நல்லது செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. ஊருக்கு நாலு நல்லது செய்து விட்டு  அதன் பின்னணியில் பல தீய செயல்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அது போல தீய செயல் செய்பவரின் மனத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம்.

வழிப்பறி செய்துகொண்டிருந்த வாலமீகிக்குள் தான் பெரிய துறவி இருந்தார்.

சாத்திரம் அத்தனையும் கரைத்துக் குடித்த இராவணணுக்குள்தான் மாற்றான் மனைவியை  விரும்பும் தீய குணம் இருந்தது.

செயலை வைத்து ஒருவரை முழுவதும் எடை போட முடியாது. தீர ஆராய வேண்டும் என்கிறது நாலடியார்.

சரிதானே ?

 

No comments:

Post a Comment