Friday, May 19, 2017

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்

தேவாரம் - பாழுக்கே நீர் இறைத்தேன்


வாழ் நாள் எல்லாம் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம். படிப்பு, வேலை, திருமணம், பிள்ளை வளர்ப்பு, ஆட்டம், பாட்டம், என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எதற்கு ?

எதை சாதிக்க ? எதை அடைய ? நமக்கு முன்னால் இப்படி ஆடி ஓடி அலைந்தவர்கள் தாங்கள் தேடியதை அடைந்து விட்டார்களா ?

நெல்லுக்கு நீர் இறைத்தால் , ஒரு காலத்தில் நெல் விளையும். ஒன்றும் முளைக்காத கட்டாந்தரைக்கு நீர் வார்த்தால் , எவ்வளவு தான் நீர் வார்த்தாலும் ஒன்றும் வராது.

அது மட்டும் அல்ல,  வாழ்வில்  நல்லது  எதன் மீதும் பற்று கிடையாது.இருந்தாலும் கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் மனம் மற்றவற்றை தேடி ஓடும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டார்கள். படித்து விட்டு "ஹா...இதெல்லாம் ரொம்ப கஷ்டம்...நடை முறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி வைத்து விட்டு , நமக்கு பிடித்ததை செய்ய போய் விடுகிறோம். பின்னால் வருந்தி என்ன பயன்? அறிவுள்ளவர்கள் , படித்தும் கேட்டும் அறிந்து கொள்வார்கள். அந்த அறிவு இல்லாதவர்கள், பட்டுத் தெளிந்தால் தான் உண்டு. அவர்களாகவே சென்று முட்டி மோதி கடினமான வழியில் தான்  அறிவை அடைவார்கள்.

அதுக்கு முன்னால் என்ன சொன்னாலும், "அதெல்லாம் சரி, ஆனால் ரொம்ப கஷ்டம் " என்று ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இப்படி வாழ்ந்து, கடைசி காலத்தில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று ஒரு வழியும் அறியாமல் தவிப்பார்கள். நானும் அப்படி ஆகி விட்டேனே என்று சொல்கிறார் நாவுக்கரசு சுவாமிகள்.


பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


சீர் பிரித்த பின்

பற்று இல்லா  வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்
உற்று அல்லால்  கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன்
எற்று உள்ளேன் என் செய்கேன் நான் இடும்பையால்  ஞானம் ஏதும்
கற்றிலேன் களை கண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.


பொருள்

பற்று இல்லா = பற்று இல்லாத

வாழ்க்கை வாழ்ந்து = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பயனில்லாத இடத்துக்கு

நீர் இறைத்தேன் = நீர் வார்த்தேன்

உற்று அல்லால் = பட்டால் அல்லால்

கயவர் தேறார் = கயவர்கள் அறிய மாட்டார்கள்

என்னும் = என்ற

கட்டுரையோடு = சொல்லுக்கு

ஒத்தேன் = ஏற்றவாறு வாழ்ந்தேன்

எற்று உள்ளேன் = எதற்க்காக இருக்கிறேன்

என் செய்கேன் = என்ன செய்வேன்

நான் = நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானம் ஏதும் = அறிவு எதுவும் இல்லாமல்

கற்றிலேன் = எதையும் கற்காமல் இருக்கிறேன்

களை கண்காணேன் = இந்த துன்பங்களை களைந்து , இதிலிலிருந்து மீள வழி காண மாட்டேன் 

கடவூர்வீ ரட்டனீரே. = திருக் கடவூர் என்ற திருத்தலத்தில் இருப்பவரே


எதற்காக இருக்கிறேன் ? என்ன செய்யப் போகிறேன் என்று தவிக்கிறார்.

நாமும் சிந்திப்போம். என்ன செய்கிறோம். எதற்காக செய்கிறோம்.

நெல்லுக்கு நீர் இறைக்கிறோமா ? பாழுக்கு நீர் இறைக்கிறோமா என்று அறிந்து நீர்  இறைப்போம்.

வாழ்வின் அர்த்தத்தை கண்டு பிடிப்போம்.


2 comments:

  1. படித்தால் சற்று விரக்தி தான் தோன்றுகிறது. எல்லாம் புரிகிறது இருப்பினும் மாற முடியவில்லையே.

    ReplyDelete
  2. நல்ல பாடல்தான், நல்ல உரைதான்.

    அனால், இப்படி விரக்தி ததும்பும் பாடல்களையே தேர்ந்தெடுப்பதன் காரணம் என்ன?

    ReplyDelete