Thursday, May 25, 2017

இராமாயணம் - மீண்டு அரசு செய்க

இராமாயணம் - மீண்டு அரசு செய்க 


கானகத்தில் உள்ள இராமனை காண வந்த பரதன், தயரதன் இறந்த செய்தியை கூறுகிறான். பின், "நீ வந்து ஆட்சியை ஏற்றுக் கொள் " என்று இராமனிடம் கூறுகிறான்.

"உன் தந்தையான தசரதன் செய்த தீமையும், தாயாகிய கைகேயி செய்த தீமையும் நீங்க , என் தந்தை போன்றவனே , நீ மீண்டு வந்து ஆட்சி செய் " என்று கூறுகிறான்.


பாடல்

‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

பொருள்

‘உந்தை = உன் தந்தை (தயரதன்)

தீமையும் = செய்த தீமையும்

உலகு உறாத நோய் =உலகு இது வரை பெறாத நோய்

தந்த = தந்த

தீவினைத் = தீய வினை

தாய் செய் தீமையும் =தாயாகிய கைகேயி செய்த தீமையும்

எந்தை! = என் தந்தை போன்றவனே

நீங்க  = அந்த துன்பங்கள் நீங்க

மீண்டு அரசு செய்க = இந்த கானகத்தில் இருந்து மீண்டு வந்து அரசை ஏற்று நடத்து

‘எனாச் = என்று

சிந்தை யாவதும் = சிந்தை முழுவதும்

தெரியக் கூறினான் = அறியும்படி கூறினான்


தயரதனை , "உன் தந்தை என்கிறான்" .  ஏன் என்றால், தயரதன் பரதனை தன் மகன் அல்ல என்று சொல்லி விட்டு இறந்தான். எனவே, தயரதனை தன் தந்தை என்று பரதன்  கூறவில்லை.

இராமனை , தந்தை இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

தந்தையும் , தாயும் செய்தது தீமை, தீவினை என்கிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று,  பெரியவர்கள் சொன்னால் அப்படியே  கேட்க வேண்டியது என்று ஒரு முறை வைத்திருக்கிறோம்.  

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்று பெற்றோர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பது என்று ஒரு கொள்கை  வைத்து இருக்கிறோம்.

இராமன் அந்தப் பாதையில் தான் செல்கிறான்.

ஆனால், பரதன் அதில் இருந்து விலகுகிறான் .

அறம் அல்லாத ஒன்றை யார் செய்தாலும் அது தவறுதான் என்பது அவன் கொள்கை.

அறத்தின் முன், தாய், தந்தை, என்று யாரும் கிடையாது.

"உந்தை தீமையும்...தாய் செய் தீமையும்"  என்று அவர்கள் இருவரும் செய்தது பெரிய தீமை என்கிறான்.

இராமா, நீ அரசை ஏற்றுக் கொள்ளா விட்டால், அந்த தீமை தொடரும் என்ற குறிப்பில், "தாய் செய் தீமை" என்கிறான்.

செய் தீமை - வினைத் தொகை. செய்த தீமை, செய்கின்ற தீமை , செய்யும் தீமை.

அந்தத் தீமை விலக வேண்டும் என்றால், நீ மீண்டு வந்து ஆட்சி செய் என்று இராமனை அழைக்கிறான்.

யார் செய்வது சரி ?

பெற்றோர் பேச்சை கேட்ட இராமன் செய்வதா ?

யார் சொன்னால் என்ன, அறம் தான் முக்கியம் என்று செயல்படும் பரதன் செயலா ?

யோசித்துக் கொண்டிருங்கள். கம்பன் கடைசியில் தீர்வு தருகிறான்.

அது என்ன என்று வரும் நாட்களில் பார்ப்போம். 

1 comment:

  1. தசரதனும், கைகேயியும் செய்தது தெரியாமல் செய்த தவறு அல்ல, தெரிந்தே செய்த தீமை என்பது முக்கியமான, சுவையான கருத்து, அல்லவா?

    நன்றி.

    ReplyDelete