Friday, June 16, 2017

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம்

நளவெண்பா - எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் 


இலக்கியங்களை எதற்கு படிக்க வேண்டும் ?

படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது - அறிவியல், தொழில் நுட்பம், வணிகம், கணிதம், நிர்வாகம், என்று எவ்வளவோ முக்கியமான துறைகள் இருக்கும் போது , அவற்றை எல்லாம் விட்டு விட்டு , எப்பவோ எழுதிய கதைகளை ஏன் படிக்க வேண்டும். அதனால் என்ன பயன் ?

இளையவர்கள் மத்தியில் மட்டும் அல்ல, பெரியவர்கள் மத்தியிலும் இந்த கேள்வி இருக்கிறது.

இலக்கியம் படிக்க பல காரணங்கள் சொல்ல முடியும். அதில் ஒன்று, மன ஆறுதல் பெற.

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி போய்க் கொண்டு இருக்காது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பம் வரும் போது மகிழும் நாம் , துன்பத்தில் துவண்டு போகிறோம்.

துன்பத்தில் தவிக்கும் போது , ஒரு தாயின் மடியாய், மனைவியின் இனிய தோளாய், நண்பனின் ஆதரவான கரமாய் இலக்கியம் இருக்கிறது.

காலங்கள் தாண்டி , தன் கற்பனை விரல்களால் நம் கண்ணீரை துடைத்து விடும் இந்த இலக்கியங்கள்.

மனதுக்கு மருந்து தடவி , சுகம் அளிப்பவை.

நமக்கு துன்பம் வரும் போது , எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சோர்ந்து போகிறோம்.

அந்த சமயத்தில் இலக்கியங்களை புரட்டுங்கள். நம்மை விட ஆயிரம் மடங்கு துன்பப பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களின் கவலை, துயரம் இவற்றை பார்க்கும் போது , நம் துன்பம் ஒன்றும் பெரியதில்லை என்று ஒரு ஆறுதல் பிறக்கும். அவர்களே மீண்டு வந்து விட்டார்கள் , நம்மால் முடியாதா என்று ஒரு தைரியம் பிறக்கும்.  நம்பிக்கை துளிர்விட்டால் , போதும், அது தானே வளரும்.

இலக்கியங்கள் கை கொடுத்து தூக்கி விடும் அந்தக் காரியத்தை செய்கின்றன.

தர்மன், சூதில், நாடு நகரம் எல்லாம் இழந்து, தம்பிகளோடு காட்டில் இருக்கிறான்.

நினைத்துப் பார்க்கிறான். எப்படி இருந்த நான் , இப்படி ஆகி விட்டேனே என்று  மனம் வருந்துகிறான்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

சக்கரவர்த்தி, ஆள், அம்பு, சேனை, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று இருந்த தர்மன் அனைத்தையும் இழந்து, காட்டில் தனியாக தவிக்கிறான். அவன் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரிய துன்பம் ?


அப்போது , அங்கு வந்த முனிவரிடம் கேட்கிறன், அறிவை இழந்து, சூது ஆடி, மண்ணை இழந்து,  கானகம் வந்து ,இப்படி துன்பப் படும் என்னை போல வேறு யாராவது உண்டா என்று கேட்கிறான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறான்.

அதை கேட்ட அந்த முனிவர், "தர்மா கவலைப் படாதே, துன்பம் வருவது இயல்பு. உன்னை விடவும் உயர்ந்த நிலையில் இருந்து , உன்னை விடவும் துன்பப் பட்ட நள மகாராஜாவின் கதையை சொல்கிறேன் கேள் " என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.


பாடல்


கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.


பொருள்


கண்ணிழந்து = கண்ணை இழந்து

மாயக் கவறாடிக் = மாயமான சசூது ஆதி

காவலர்தம் மண்ணிழந்து = காவல் செய்யும் (அரசு செய்யும்) மண்ணை இழந்து

போந்து = போய்

வனம்நண்ணி = காட்டினை அடைந்து

விண்ணிழந்த = விண்ணில் இருந்து வந்த

மின்போலும் = மின்னலைப் போன்ற

 நூன்மார்பா  = நூல் +  மார்ப = பூணூலை அணிந்தவனே

மேதினியில்  = உலகில்

வேறுண்டோ = வேறு ஒருவர் உண்டா?

என்போ லுழந்தா ரிடர். = என் + போல் + உழந்தார் + இடர் = துன்பத்தில் சிக்கித் தவிப்பவர்

கண் இழந்து என்றால் இரண்டு கண்ணையும் இழந்து குருடாகி என்று அர்த்தம் அல்ல.

அதே போல் மண் இழந்து என்றால் ஏதோ கட்டிடம் கட்ட வாங்கி வைத்து இருந்த  இரண்டு வண்டி மணலை இழந்த மாதிரி என்று கொள்ளக் கூடாது. பின் என்ன ?

பின் என்ன அர்த்தம் என்று கேட்டால்,  கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

நிமிர்ந்து உட்காருங்கள்.

ஒரு நீண்ட மூச்சை இழுத்து விடுங்கள்.

விட்டாச்சா ? இப்ப படிப்போம்.

ஆகு பெயர், ஆகு பெயர் என்று ஒன்று உண்டு தமிழ் இலக்கணத்தில்.


ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது , ஆகு பெயர்.

உதாரணமாக,

ஊரே தூங்கிருச்சு என்றால் ஊர் தூங்குவது அல்ல. ஊரில் உள்ள மக்கள் தூங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.


ஊர் என்ற இடம், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது.

அரிசி எவ்வளவு  என்று கடை காரரிடம் கேட்கிறோம். அவர் படி அம்பது ரூபாய் என்கிறார். அரிசி என்ன விலை என்று கேட்டல் படிக்கு விலை சொல்கிறாரே என்று  நினைப்பது இல்லை. படி அம்பது ரூபாய் என்றால் ஒரு படி அரிசியின் விலை அம்பது ரூபாய் என்று அர்த்தம்.

படி இங்கே அரிசிக்கு ஆகி வந்தது.

நல்ல தமிழ் படிக்க வேண்டுமா , கம்பனை  வாசி என்று சொல்கிறோம். கம்பன்  என்ற ஒரு கவிஞனின் பெயர் அவர் எழுதிய கவிதைகளுக்கு ஆகி வந்தது.

புரிகிறது அல்லவா.

இந்த ஆகு பெயர்  18 வகைப்படும் என்று சொல்கிறது நன்னூல்

பொருள் முதல் ஆறோடு அளவைசொல் தானி
         கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
         ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
         தொன்முறை உரைப்பன ஆகுபெயரே"

அவையாவன


  1. பொருளாகு பெயர் = சந்தனம் போல மணம் = சந்தன மரக் கட்டைக்கு பதிலாக சந்தனம் என்ற பொருள் வந்தது
  2. சினையாகு பெயர் = கூட்டத்துக்கு வருவது என்றால் , தலைக்கு நூறு ரூபாய், ஒரு பிரியாணி பொட்டலம் தர வேண்டும் என்றால் தலைக்கு தருவது அல்ல. தலை உள்ள ஆளுக்கு தருவது (தலை , சினை )
  3. காலவாகு பெயர் = கோடை வாட்டுகிறது. கோடை காலத்தில் உள்ள வெப்பம் வாட்டுகிறது
  4. இடவாகு பெயர் = இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது. இந்தியா என்ற இடத்தில் இருந்து சென்ற அணி வென்றது
  5. பண்பாகு பெயர் = என்ன மாதிரி துண்டு வேண்டும் ? அந்த சிவப்புல ஒண்ணு , பச்சையில ஒண்ணு குடு 
  6. தொழிலாகு பெயர் = அந்த பணத்தை அப்பவே நம்ம கணக்கு கிட்ட குடுத்து அனுப்பி விட்டேனே (கணக்கு = கணக்க பிள்ளை) 
  7. எண்ணலளவையாகு பெயர் = இரண்டு போட்டா எல்லாம் சரியா போகும் 
  8. எடுத்தலளவையாகு பெயர் = கத்தரிக்காய் எவ்வளவு வாங்கட்டும். மூணு கிலோ வாங்கிட்டு வா 
  9. முகத்தலளவையாகு பெயர் = இரண்டு லிட்டர் வாங்கிட்டு வா, ஒரு குவாட்டர் போட்டா சரியாயிரும் 
  10. நீட்டலளவையாகு பெயர் = ஒரு மீட்டர் போடு 
  11. சொல்லாகு பெயர் = அபிராமி அந்தாதி எனக்கு மனப்பாடம். அதில் உள்ள பாடல்கள் எனக்கு மனப்பாடம் என்பதற்கு ஆகி வந்தது 
  12. காரியவாகு பெயர் = நான் நல்லா type அடிப்பேன் (எனக்கு type writer என்ற இயந்திரத்தை நன்றாக இயக்க வரும் )
  13. கருத்தாவாகு பெயர் = அவரு கம்பன்ல பெரிய ஆளு. (கம்ப இராமாயணம் நன்றாக கற்றவர் )
  14. உவமையாகு பெயர் = மயில் வந்தாள் 
  15. அடை அடுத்த ஆகுபெயர் = மா நட்டான்.
  16. தானியாகுபெயர் = தானி என்றால் இடம். விளக்கு முறிந்தது என்றால் , விளக்கின் தண்டு முறிந்தது என்று பொருள். 
  17. இருபடியாகு பெயர் =  முகில் வந்தது என்றால் மேகத்தை தாண்டி அதற்கு பின் உள்ள மழையை குறிப்பது. 
  18. மும்மடியாகு பெயர் = கார் வந்தது என்றால், கருமையான நிறத்தைத் தாண்டி, அதை உள்ள மேகத்தைத் தாண்டி, மழை வந்தது என்பதை குறிப்பது. 

இங்கே கண்ணிழந்து , மண்ணிழந்து என்றால் எப்படி கண் எது எப்படி என்று காட்டுமோ அதுபோல் காட்டும் அறிவை இழந்து என்று பொருள். 

மண் என்பது அதில் வாழும் மக்களை குறிப்பது. இடவாகு பெயர் 


இன்னும் கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம். இன்று இவ்வளவு போதும். 

மேலும் நாளை சிந்திப்போம் 

சரியா ?







1 comment:

  1. திடீரென இப்படி இலக்கணம் படிப்பும் என்று நான் நினைக்கவே இல்லை. அருமையான உதாரணங்கள். நன்று.

    பாடலைப் படிக்கும் போது "விண் இழந்த மி‌ன்" என்றால், விண்ணில் இருந்து கீழே விழுந்த மின்னல் என்று தன்னைத் தானே சொல்லிக் செல்கிறான் பரதன் என்று எண்ணினேன். அப்படிக் கொண்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete