Saturday, June 17, 2017

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் நீங்க 


இன்று ஆன்மீக உலகில் உள்ள பெரிய சிக்கல் என்ன என்றால், ஒவ்வொருவரும் அவர்கள் கொண்ட கொள்கை தான் உண்மையானது, மற்றது எல்லாம் தவறு என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றன. தங்கள் தெய்வம் தான் மற்ற எல்லா தெய்வங்களை விடவும் உயர்ந்தது என்று அடம் பிடிக்கிறார்கள். மதங்கள் மட்டும் அல்ல, மதங்களின் உட் பிரிவில் உள்ளவர்களும் தங்கள் பிரிவே உயர்ந்தது என்று சாதிக்கிறார்கள்.

இதனால்  பல சண்டைகள் , சச்சரவுகள். போர்கள். உயிரிழப்பு. சதா தொல்லை.

அது ஒரு புறம் இருக்க, எது உண்மையை கண்டறியும் வழி ? இறைவனை, இயற்கையை, பிரபஞ்ச சக்தியை அறிய எது வழி ?

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்று பல வித மார்க்கங்களை சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று சாதாரண மனிதன் குழம்புகிறான்.

அத்வைதம், துவைதம், விஷிஷ்டாத் வைதம் என்று பல வித கோட்பாடுகளை சொல்கிறார்கள். இவற்றை படித்து, அறிந்து தெளிய நேரம் இல்லை.

யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது ? எதைப் படித்து அறிந்து கொள்வது ? யாரை நம்புவது ? நாட்டில் பல போலி சாமியார்கள் அலைகிறார்கள். யார் உண்மையானவர் , யார் போலி என்று எப்படி இனம் கண்டு கொள்வது ?

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் விடை தருவது பெரிய புராணம்.

ஒரு நூலை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்டால் அதை எழுதிய ஆசிரியனே ஒரு கணம் திகைப்பான்.

இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும் ? இராமாயணத்தில் ஆயிரம் செய்தி  இருக்கிறது. எதை என்று சொல்லுவது ? சற்று சிக்கலான காரியம்.

திருக்குறளை எதற்குப் படிக்க வேண்டும் ?

கீதையை எதற்குப் படிக்க வேண்டும் ?

என்றெல்லாம் கேட்டால், படித்தால் நல்லது, வழி காட்டும் என்று பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லலாம்.

சேக்கிழார் சொல்கிறார் - பெரிய புராணத்தை எதற்குப் படிக்க வேண்டும் என்று. ஒரே வரியில் சொல்கிறார்.

"அக இருளை நீக்க "

பெரிய புராணம் படிக்க வேண்டும் என்று.

எப்படி சூரியன் புற இருளை நீக்குமோ, அது போல , அக இருளை நீக்க இந்த நூல் உதவும் என்கிறார்.

பாடல்

 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்


 இங்கிதன் = இங்கு இதன் (இந்த புத்தகத்தின்)

 நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

 இவ் உலகத்து  = இந்த உலகில்

முன்னாள்  = முன்பு

 தங்கிருள் =தங்கிய இருள்கள்

இரண்டில் =  இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

இருளை = இருளை

ஏனைப் = மற்றைய

புற இருள் = வெளி இருளை

போக்கு கின்ற = நீக்கு கின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = நீக்கும்

திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்

என்பாம் = என்று சொல்லுவோம்

புற இருளை சூரியன் நீக்குவது போல, அக இருளை நீக்குவது இந்த புராணம்.

தங்கிய இருள் என்கிறார்.

இருள் ரொம்ப நாள் தங்கி இருக்கிறது.

சரி, ரொம்ப நாள் இருண்ட வீடாயிற்றே என்று அதில் வெளிச்சம் கொண்டு வர வேண்டும் என்றால், அதே போல ரொம்ப நாள் ஆகாது. ஒரு தீக்குச்சியை உரசிய மாத்திரத்தில் வெளிச்சம் வரும், இருள் விலகி விடும்.

அறிவு என்ற தீ பற்றிக் கொண்டால், அறிவீனம் என்ற இருள் உடனே விலகி விடும். எத்தனை நாளாக நாம் அறியாமையில் இருந்தோம் என்பதல்ல கேள்வி.

ஒரு நொடியில் அந்த அறியாமை விலகும்.

வெளியில் உள்ள இருளுக்கும், மனதுக்குள் இருக்கும் இருளுக்கும் வித்தியாசமா இருக்கிறது.

"சிந்தையுள் சார்ந்து , நின்று, பொங்கிய" இருள் என்கிறார் சேக்கிழார்.

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து = சார்ந்து

நின்ற = நின்ற

பொங்கிய = பொங்கிய

நமது மனதுக்குள் இருக்கும் இருள் இருக்கிறதே, அது நமது சிந்தனையை சார்ந்து நிற்கிறது. பற்றிக் கொண்டு நிற்கிறது. நிலைத்து நிற்கிறது. உள்ளேயே பொங்குகிறது. 

சற்று சிந்திப்போம். 

முதலில் நமது அறியாமை நமக்குத் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று  நாம் நினைக்கிறோம். நாம் அறிந்தவை தான் சரி என்று வாதிக்கிறோம். என் மதம், என் கடவுள்  என்று சொந்தம் கொண்டாடுகிறோம். அது நமக்கு பிடித்துப் போய் விடுகிறது. எத்தனையோ நாள்  இந்த அறியாமையில் மூழ்கி கிடந்ததால், அது பழகிப் போய் விடுகிறது. அசுத்தத்திற்கு நடுவில் வாழ்பவனுக்கு , அந்த துர் நாற்றம் பழகிப் போய் விடுவதைப் போல , அறியாமை நமக்கு பழகி போய் விடுகிறது. 


யாரவது நம் அறியாமையை சுட்டிக் காட்டினால் , அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அவரை கொல்ல முயல்கிறோம். 

சாகரடீஸ், இயேசு கிறிஸ்து, முகமது நபி, புத்தர் என்று உண்மையை யார் கண்டு சொன்னாலும், அவர்கள் மேல் சாதாரண மக்கள் கோபம் கொள்கிறார்கள்.  காரணம், அவர்கள், அந்த மக்களின் அறியாமை வெளிச்சம் போட்டு  காட்டுகிறார்கள். 

"நின்று "  நம் அறியாமை வந்து வந்து போவது இல்லை. எப்போதும் நம்முடனையே நிலைத்து நிற்கிறது. 

"பொங்கிய" ...இந்த அறியாமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு முட்டாள் சொல்வதை , இன்னொரு முட்டாள் கேட்டு இப்படியே அது  பெரிதாகிக் கொண்டே போகும். 

இதை நீக்கி, அறிவை அடைய இந்த திருத் தொண்டர் புராணம் வந்தது என்கிறார். 

எப்படி என்று பார்ப்போம். 


3 comments:

  1. பாடல் முதலில் படிக்க எளிதாக புலபட்டாலும் அதில் உள்ள ஆழ்ந்த கருத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
  2. இவ்வளவும் சொல்லி விட்டு, "சிவனை தவிர ஆள் இல்லை" என்று சொல்வாரா?!

    ReplyDelete
  3. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete