Wednesday, June 21, 2017

திருக்குறள் - உலகை ஆளலாம்

திருக்குறள் - உலகை ஆளலாம் 


எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தால் கூட சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

மூன்று விடயங்களை கைக் கொண்டால் எந்த பெரிய காரியத்தையும் செய்து விடலாம்.

அது என்ன மூன்று ?

ஒன்று - காலம்
இரண்டாவது - இடம்
மூன்றாவது - செயல்

பாடல்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

பொருள்

ஞாலம் = உலகம்

கருதினும் = நினைத்தாலும்,

கைகூடும் = கிடைக்கும்

காலம் = காலம்

கருதி = தேர்ந்து

இடத்தான் = இடத்தால்

செயின் = செய்தால்

மேலோட்டமாக பார்த்தால் இடமும் காலமும் அறிந்து செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து.

சற்றே ஆழ்ந்து சிந்திப்போம்.


ஞாலம் கருதினும் = இதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. ஞாலம் கருத்தின் கை கூடும் என்று சொல்லி இருக்கலாம். அப்படிச் சொல்லாமல், ஞாலம் கருதினும் என்று வலிந்து ஒரு  உம் மை சேர்க்கிறார். அப்படி என்றால், உலகை வெல்வது கடினம். ஆனால் , இடமும் காலமும் அறிந்து செய்தால் அதுவும் கூட  முடியும் என்று அர்த்தம். அப்படி என்றால்,  வேறு எல்லாமும் முடியும் என்றுதானே அர்த்தம். மலையையே தூக்கி விடுவான் என்றால், சின்ன கல்லை தூக்க மாட்டானா ?

கை கூடும் = கையில் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார். சந்தேகம் இல்லை.  கை கூடலாம் என்று சந்தேகமாகச் சொல்ல வில்லை.  கை கூடும் என்று  வரையறுத்துச் சொல்கிறார்.

காலம் கருதி இடத்தான் செய்யின் = காலம் புரிகிறது. அது என்ன இடம்.  இடம் என்றால் நிலத்தின் ஒரு பகுதியா ? பின்னால்  இடனறிதல் என்று ஒரு அதிகாரம் வருகிறது.  சொற் சிக்கனம் கொண்ட வள்ளுவர் ஒரே கருத்தை இரண்டு இடத்தில் சொல்வாரா ? அப்படி என்றால் காலமறிதல் என்ற இந்த அதிகாரத்தில்  இடத்தைப் பற்றி ஏன் கூறுகிறார் ?

இடம் என்றால் நிலை. தற்போதைய நிலை.

"நான் இப்போது சரியான இடத்தில் தான் இருக்கிறேன் " என்று ஒருவர் கூறினால், அவர் நல்ல நிலப் பகுதியில் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. இருக்கின்ற பதவி, அவருக்கு மற்றவரின் தொடர்பு, செல்வாக்கு,

"நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்று தெரியுமா ? இருக்கும் இடம் தெரிந்து பேசு "என்று சொல்வது இருக்கின்ற நிலை அறிந்து பேசு என்ற பொருளில்.

காலம் சரியாக இருந்தாலும், நாம் இருக்கும் நிலையை அறிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

நம்முடைய நிலை, மாற்றான் நிலை, துணைவர்களின் நிலை என்று அனைத்தையும் ஆராய்ந்து


"கருதி" = கணக்கில் கொண்டு. ஆராய்ந்து. எது சரி , எது தவறு என்று ஆராய்ந்து....

"செயின் "...இறுதியில் செய்ய வேண்டும். சில பேர் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். செயல் ஒன்றும் இருக்காது. அப்படி இருந்தால் வெற்றி வராது.

செயல் பட வேண்டும்.

காலம் - இடம் - ஆராய்ச்சி (planning ) - செயல் (execution )  என்று இருந்தால் வெற்றி நிச்சயம்.

அடுத்த முறை ஏதாவது பெரிய செயல் வரும்போது , சற்று நிதானமாக இவற்றை கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்.

வெற்றியே வரும்.



1 comment:

  1. சிந்தனையைத் தூண்டும் குறள். நன்றி.

    ReplyDelete