Wednesday, June 28, 2017

இராமாயணம் - வாய்மையும் தீமையும்

இராமாயணம் - வாய்மையும் தீமையும்


தயரதன் ஆணை கொண்டு இராமன் கானகம் போனான். போன இராமனைத் தேடி பரதன் வருகிறான். வந்தவன், இராமனை பார்த்துச் சொல்கிறான், "நடந்தது எல்லாம் தவறு. நீ வந்து அரசை ஏற்றுக் கொள் " என்கிறான்.

அதற்கு இராமன், "அதெல்லாம் முடியாது. எனக்கு என் தந்தை சொல்லை காப்பதுதான் தர்மம். அவர் சொன்ன சொல் தான் எனக்கு வேத வாக்கு" என்று சொல்கிறான்.

பரதனுக்கு சொல்லும் மறுமொழியில் இராமன் ஒரு மிகப் பெரிய உண்மையை உலகுக்கு எடுத்து உரைக்கிறான்.

தீமை என்றால் என்ன ? கெட்டது என்று எதைச் சொல்வது ?

சத்தியத்தில் இருந்து விலகுவதுதான் தீமை என்கிறான் இராமன்.

சத்தியத்தின் வழி நடப்பதுதான் தூய்மையான வழி என்று சொல்கிறான்.

பாடல்

வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
“தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே?


பொருள்


வாய்மை என்னும் ஈது அன்றி = வாய்மை என்ற இது அல்லாது

வையகம் = உலகம்

“தூய்மை” என்றும் = தூய்மையான என்று

ஒன்று = ஒன்று உண்டென்று

உண்மை சொல்லுமோ? = ஒரு உண்மையைச் சொல்லுமோ ?

தீமைதான், = தீமை என்பது எது என்றால்

அதின் தீர்தல் அன்றியே = அதின் என்றால் அந்த வாய்மையின். சத்தியத்திற்கு புறம்பாக

ஆய் மெய்யாக = போவது அன்றி உண்மையிலேயே

வேறு = வேறு ஏதாவது

அறையல்  = சொல்ல

ஆவதே? = முடியுமா ?

வாய்மை, உண்மை, மெய்மை என்ற மூன்று சொற்களை சொல்கிறான் இராமன்.


இந்த மூன்றும் ஒரு பொருளை குறிப்பது தானே ? எதற்காக மூன்று சொற்கள் ?

மூன்றுக்கும் வேறுபாடு  இருக்கிறது.

மன , மொழி, மெய்யால் குற்றமில்லாமல் ஒருவன் ஒருவன் இருக்க வேண்டும். (மெய் , வாக்கு, காயம் என்று வட மொழியில் சொல்லுவார்கள் ).

உள்ளத்தில் (மனம்) இருந்து வருவது = உள்  + மை  = உண்மை
வாயில் இருந்து வருவது = வாக்கு + மை  = வாய்மை
மெய்யில் (உடல்) இருந்து வருவது = மெய் + மை  = மெய்மை

பரதா , நீ சொல்கிறாய் , "இப்போது நான் தானே அரசன் ? அப்படி என்றால் என் அரசை உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள் " என்று.

அது வாதத்திற்கு சரியாக இருக்கலாம்.

ஆனால், உன்னுடைய உள்ளத்திற்கும், என் மனதிற்கும் தெரியும் அது சரி இல்லை என்று.

மன , மொழி, மெய்யால் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறான் இராமன்.

அதுதான்  தூய்மை. அதை அன்றி தூய்மை வேறு இல்லை.

புறத்தூய்மை நீரான் அமையும், அகத் தூய்மை வாய்மையால் காணப்படும் என்பார்  வள்ளுவர்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

என்பதும் அவர் வாக்கே.

எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறான் இராமன். 

2 comments:

  1. உண்மை, வாய்மை மெய்மை என்று மூன்று விதம் இருப்பதையும், அவற்றின் பொருட்களையும் இப்போதுதான் அறிந்தேன். அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. One word, man!
    அருமை!

    ReplyDelete