Friday, June 23, 2017

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு

இராமாயணம் - மன்ன ! போந்து நீ மகுடம் சூடு 


ஆசை இல்லாத மனிதன் யார் ?

ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கு மட்டும் அல்ல பாவங்களுக்கும் காரணமாய் இருக்கிறது.

இல்லாத  மேல் ஆசைப் பட்டு மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று அனைத்தையும் அடைய ஆசை பட்டு துன்பப் படுகிறார்கள்.

ஆசையை விட முடியுமா ? ஆசை இல்லாத வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கிறதா ? ஆசைதானே நம் முன்னேற்றத்திற்கு காரணம். ஆசை இல்லாத மனிதன் ஒரு மனிதனா ? என்று நாம் நினைக்கலாம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்...நம்மிடம் எவ்வளவு ஆசைகள் இருக்கின்றன. பணம், செல்வாக்கு, பதவி, சொத்து, சுகம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்பு, என்று எண்ணில் அடங்கா ஆசைகள்.

அத்தனை ஆசைகளையும் தூர எறிந்து விட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?

உப்பு சப்பு இல்லாமல் வெறுமையாக இருக்கும் அல்லவா ? அப்படித்தானே நினைக்கிறீர்கள் ?

 இல்லை.

ஆசை இல்லாமலும் முடியும். ஆசை இல்லாத வாழ்விலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. சுகம் இருக்கிறது என்று காட்டுவதற்குத் தான் இந்த திருவடி சூட்டு படலம் என்ற ஒன்றை வைத்து இருக்கிறார் கம்பர்.

மிகப் பெரிய இராஜ்யம்.  ஞானிகளையும் பாவ வழியில் செல்லத் தூண்டும் செல்வம் என்பாள் கூனி. அவ்வளவு செல்வம். கணக்கில் அடங்காத செல்வம். அதிகாரம்.  பெயர். புகழ். ஆள். அம்பு. சேனை.  சுகம்

அத்தனையும் காலடியில் கிடக்கிறது.

இராமனும் பரதனும் அதை வேண்டாம் என்கிறார்கள்.

பத்து ரூபாய் காணாமல் போனால் இரண்டு நாள் தூக்கம் வராது
நமக்கு.

எனக்கு இந்த அரசு வேண்டாம் என்று பரதன் சொல்கிறான். இராமா, நீ இதை வைத்துக் கொள் என்கிறான்.

இல்லை, இல்லை, எனக்கு வேண்டாம். நீயே அரசாள் என்று பரதனிடம் இராமன் கூறுகிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பரதன் கூறுகிறான், "இந்த மூன்று உலகிலும் உனக்கு நிகரான ஒருவன் யாரும் இல்லை. எனக்கு முன் பிறந்தவன் நீ. நீ அந்த அரசை எனக்குத் தந்து விட்டாய் அல்லவா. இப்போது அது என்னுடைய சொந்தமான அரசு தானே ? அதை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா ?" என்று இராமனிடம் கேட்கிறான்.

இராமன் : "ஆம், அது உன்னுடைய அரசு. அதை நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீ தான் சக்கரவர்த்தி "

பரதன்: சரி அப்படினா, என் அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ ஆண்டு கொள் என்கிறான்.

பாடல்


‘முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு ‘எனா.

பொருள்


‘முன்னர் = எனக்கு முன்னால்

வந்து = வந்து

உதித்து = நீ உதித்து

உலகம் மூன்றினும் = இந்த மூன்று மூன்று உலகிலும்

நின்னை = உன்னை

ஒப்பு இலா = இணை இல்லா

நீ பிறந்த பார் = இந்த பிறந்த இந்த உலகில்

என்னது ஆகில் = என்னுடையது என்று நீ சொன்னால்

யான்  = நான்

இன்று தந்தனென் = இன்று அதை உனக்குத் தந்து விட்டேன்

மன்ன! = மன்னா

போந்து = போய்

நீ மகுடம் சூடு ‘எனா = நீ மகுடம் சூட்டு என்றான்

நீ எனக்கு முன் இந்த பாரில் பிறந்தாய். இந்த மூன்று உலகிலும் உனக்கு இணையானவன் யாரும் இல்லை. நீ எனக்குத் தந்த அரசை நான் உனக்குத் தருகிறேன். நீ போய் முடி சூட்டிக் கொள்

என்கிறான் பரதன்.

அரச முறைப் படி - நீ முதலில் பிறந்தவன். எனவே நீ தான் ஆள வேண்டும்.

மூன்று உலகிலும் நீ திறமையானாவான் = எனவே ஆள நீயே சரியான ஆள்.

நீ எனக்குத் தந்தாய். நான் ஏற்றுக் கொண்டேன். இப்போது அந்த அரசு என்னுடையது. என்னுடைய அரசை நான் உனக்குத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

அப்படி பார்த்தால், இது தயரதனின் அரசு அல்ல. என் அரசு. அதை நான் உனக்குத் தருகிறேன். அதை ஏற்றுக் கொள்வதில் உனக்கு ஒரு தடையும் இல்லை.

ஒரு அரசை எப்படி ஒரு அண்ணணனும் தம்பியும் எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்  என்று சொல்கிறார்கள்.

அப்படியும் வாழ முடியும்.

வாழ்திருக்கிறார்கள். 

1 comment:

  1. அறத்தை முதலாவதாக நிறுத்தி வைக்க இருவருக்குமே அவ்வளவு நிச்சயம்! ஆகா!

    ReplyDelete