Wednesday, July 19, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி 


அருள் !

அருள் என்றால் என்ன ?

நம் பிள்ளை தடுக்கி கீழே விழுந்து விட்டால் , நம் மனம் பதறுகிறது. அது அன்பு.

அந்த பதற்றம் வேறு ஏதோ பிள்ளை விழும்போதும் வந்தால் அருள்.

தொடர்புடையவர் மேல் வருவது அன்பு. தொடர்பு இல்லாதவர் மேலும் வருவது அருள்.

டிவி யில் எங்கோ ஒரு தேசத்தில் பசித்த சின்ன குழந்தைகளை காட்டும் போது ஐயோ என்று மனம் கேவினால், அது அருள்.

எங்கேயோ குண்டு போட்டு, இடிபாட்டுக்கு இடையில் இருந்து அடிபட்ட பிள்ளையை தூக்கிக் கொண்டு வரும் அந்த பெயர் தெரியாத தந்தையை பார்த்து மனம் வருந்தினால், அது அருள்.

அந்த அருள் இன்னொரு மனிதன் மேல் வரலாம்.

விலங்கின் மேல் வரலாம் . சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தசையை அறுத்துக் கொடுத்தான். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்ற அரசன்.

அந்த அருள் மேலிடும் போது செடி கொடி மேலும் வரும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம்  வாடினேன் என்றார் வள்ளலார். அவர் அருளின் எல்லை அது.

உயிர் இல்லாத கல்லின் மேல் அருள் பிறந்தது கண்ணப்பருக்கு.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என்பார் வள்ளுவர்.

பசுவுக்கு அருள் செய்த மனு நீதி சோழனின் கதையை தெய்வப் புலவர் சேக்கிழார் கூறுகிறார்.

"தர்ம தேவதை , மனு நீதி சோழனின் உண்மையான  மனதை உலகுக்கு காட்ட நினைத்தான். அப்போது, யாரும் பார்ப்பதற்கு முன்னால் , ஒரு இளம் கன்று துள்ளி குதித்து தெருவின் குறுக்கே பாய்ந்தது "

பாடல்

தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன,
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.


பொருள்

தனிப் பெருந் தருமம் = தனி பெரும் தர்மம்

தான் = அது

ஓர் = ஒரு

தயா இன்றித் = கருணை இல்லாமல்

தானை = படை கொண்ட

மன்னன் = மன்னவனின்

பனிப்பு இல் =  நடுக்கம், அச்சம் இல்லாத

சிந்தையினில் = சிந்தனையினில்

உண்மைப் பான்மை = உண்மை தன்மையை

சோதித்தால் என்ன = சோதித்தால் என்ன என்று

மனித்தர் = மனிதர்கள்

தன் = தன்னுடைய

வரவு = வரவை

காணா வண்ணம் = காணாத வகையில்

ஓர் = ஒரு

வண்ணம் நல் = நல்ல வண்ணம் உள்ள

ஆன் = ஆவின், பசுவின்

புனிற்று இளம் கன்று = பிறந்த சில நாட்களே ஆன கன்று

துள்ளிப் போந்தது = துள்ளி போனது

அம் மறுகின் ஊடே. = அந்த தெருவின் ஊடே

எளிமையான பாடல் தான். சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.



"தனிப் பெருந் தருமம்" - உலகிலேயே பெரியது தர்மம்தான். அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அது தனித்துவமானது மட்டும் அல்ல எல்லாவற்றையும் விட உயர்ந்தது தர்மம்.


"தான் ஓர் தயா இன்றித்" = தர்மம் என்பது கருணையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு தாய் தன் பிள்ளையை அடித்து திருத்துவது மாதிரி. அதில் கோபம் இருந்தாலும், அருளே மிகுந்து நிற்கும்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே என்பார் குலசேகர ஆழவார்.


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே


அப்படி அருளோடு இருக்க வேண்டிய தர்மம் அருள் இன்றி , மன்னவனை சோதிக்க எண்ணி.


மனித்தர் தன் வரவு காணா வண்ணம் = கன்று வருவதை மக்கள் காண மாட்டார்களா ? அது என்ன சின்ன எறும்பா, கொசுவா மனிதர்கள் காணாமல் இருக்க ? கன்று வந்தது தெரியும். அது ஏன் வந்தது என்று தெரியாது. தர்மத்தின் செயல்பாடுகள் கண்ணுக்குத் தெரியாது.

யார் பார்க்கப் போகிறார்கள் என்றுதான் எவ்வளவோ தவறுகளை மனிதர்கள் செய்கிறார்கள். அறம் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

கன்று வருவது தெரிகிறது. அது வந்த காரணம் தெரியவில்லை. கண் முன்னால் நடப்பதற்கே காரணம் தெரியவில்லை. கன்னுக்குத் தெரியாமல் நடப்பவற்றை நாம் எவ்வாறு அறிவோம் ?

ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவ்வளவு அர்த்தம்.

கதையை மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_19.html

1 comment:

  1. மனிதர் தன் வரவு காணா வண்ணம் என்பதற்கு வலிந்து பொருள் சொல்வது போல தோன்றுகிறது. நன்றி.

    ReplyDelete