Friday, August 11, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர்

திருவிளையாடற் புராணம்  - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர் 



திருவிளையாடற் புராணம் இன்றைக்கு சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட நூல். ஆனால், அதில் வரும் கதைகள் , அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முற்பட்டது.

அப்படி ஒரு பழமையான மதுரையை நினைத்துக் கொள்ளுங்கள்.

கார் கிடையாது, மின்சாரம் கிடையாது, தார் ரோடு கிடையாது, செல் போன் கிடையாது, புகை இல்லை, சப்தம் இல்லை, மக்கள் தொகை மிக மிக குறைவு.  எங்கும் நெருக்கடி இல்லை. இயற்கை எழில் எங்கும் தங்கி இருந்த காலம்.

மதுரை மட்டும் அல்ல, எல்லா ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்.

அப்படி இருக்கும் போது , ஒரு நாள், ஒரு அழகிய வேதியன் , தன் மனைவியை அழைத்துக் கொண்டு பச்சிழம் பிள்ளையோடு திருப்பத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

திருப்பத்தூருக்கும் மதுரைக்கும் நடுவில் ஒரு காடு. நம்ப முடிகிறதா ?

மதுரையின் பரப்பு அவ்வளவுதான். ஊரை விட்டு கொஞ்ச தூரம் போனவுடன் காடு வந்து விடும்.

அந்த காட்டின் வழியே திருப்பத்தூரில் இருந்து மதுரை வருகிறான்....

பாடல்

செய்யேந்து திருப்புத்தூர் நின்றுமொரு செழுமறையோன்
பையேந்து மரவல்குன் மனைவியொடும் பானல்வாய்க்
கையேந்து குழவியொடுங் கடம்புகுந்து மாதுலன்பால்
மையேந்து பொழின்மதுரை நகர்நோக்கி வருகின்றான்.


பொருள்


செய்யேந்து = செழுமையான வயல்கள் நிறைந்த

திருப்புத்தூர் = திருப்பத்தூர்

நின்று = அங்கிருந்து

ஒரு = ஒரு

செழுமறையோன் = செழுமையான மறைகளை ஓதிய ஒரு வேதியன்

பையேந்தும் அரவு அல்குல் = படம் எடுத்து பாடும் பாம்பின் முகப்பை போன்ற அல்குலை உடைய

தன்  = தன்னுடைய

மனைவியொடும் =மனைவியோடும்

பானல்வாய்க் = பால் + நல் + வாய் = பால் வடியும் அழகான வாயை உடைய

கையேந்து குழவியொடுங் = கையில் ஏந்தும் குழந்தையோடும்

கடம்புகுந்து = கானகம் புகுந்து

மாதுலன்பால் = மாமன் வீட்டை நோக்கி

மையேந்து = கருமை ஏந்தி

பொழின்மதுரை = பொழியும் மேகங்கள் கொண்ட பொழில் நிறைந்த மதுரை

நகர்நோக்கி வருகின்றான் = நகர் நோக்கி வருகின்றான்

வரும்போது என்ன நிகழ்ந்தது ?

1 comment:

  1. தெரிவதற்கு ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறேன்

    ReplyDelete