Monday, October 16, 2017

திருக்குறள் - கூடா நட்பு

திருக்குறள் - கூடா நட்பு 


உலகிலேயே சிறந்த உறவு நட்புதான்.

அது எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு ஆபாத்தானதும் கூட.

சரியான நண்பர்கள் நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல உதவுவார்கள்.

நண்பர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டால், அது போன்ற ஆபத்தும் இல்லை.

அதை வள்ளுவர் கூடா நட்பு என்கிறார். அதற்கு 10 பாடல் எழுதி இருக்கிறார் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள  முடியும்.

தவறான நண்பர்கள், நம்மை தீய வழியில் கொண்டு சென்று தாங்க முடியாத துன்பத்தில் அழுத்தி விடுவார்கள்.

"நீங்க பணத்தை மட்டும் போடுங்கள், உழைப்பு என்னது. உங்களுக்கு இலாபத்தில் பங்கு " என்று ஆசை காட்டி நம் பணத்தை கவர்ந்து கொள்வார்கள்.

"இதுல போடுங்க, உங்க பணம் ஒண்ணுக்கு இரண்டாகும் " என்று தேவையில்லாத இடங்களில் நமது பணத்தை முதலீடு செய்ய வைத்து நம்மை நட்டத்தில் கொண்டு செலுத்தி விடுவார்கள்.

இவர்கள் எல்லாம் பார்க்க நல்லவர்கள் போலவும், நண்பர்கள் போலவும்  இருப்பார்கள்.

நம்ம நல்லதுக்குத்தானே சொல்கிறார்கள் என்று நாம் நினைப்போம்.

அந்த மாதிரி ஆள்களை "பட்டடை" போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பட்டடை என்றால் என்ன தெரியுமா ?

இரும்பை சூடாக்கி அடிக்க அந்த சூடான இரும்பின் கீழ் ஒரு இரும்பு பலகையை வைத்து இருப்பார்கள். அதன் மேல் வைத்துதான் இரும்பை அடிப்பார்கள். அந்த அடிப் பலகைக்கு பெயர் பட்டடை.

அந்த பட்டடை இருக்கிறதே, வெளியே இருந்து பார்க்க அது ஏதோ அந்த சூடான இரும்பை தங்குவது போல இருக்கும். ஆனால், உண்மையில், அந்த இரும்புப் பலகையால் தான் , அந்த சூடான இரும்புக்கு எல்லா அடியும்  விழுகிறது. அந்த பட்டடை இல்லாவிட்டால், சூடான இரும்பு துண்டுக்கு ஒரு அடியும் விழுந்திருக்காது.

அது போல சில பேர் நம் வாழ்வில் நமக்கு நல்லது செய்பவர்கள் போல இருப்பார்கள். ஆனால், அவர்களால்தான் நமக்கு அனைத்து துன்பங்களும்  வரும்.

பாடல்

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு.

பொருள்

சீரிடங் காணின் = சரியான இடம் வரும்போது.

எறிதற்குப் = விலக்குவதற்கு

பட்டடை = பட்டடை  போல

நேரா = மனதோடு ஒன்றாதவர்

நிரந்தவர் நட்பு = கூடியவர்கள் நட்பு.


அந்த மாதிரி ஆட்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி  இல்லாத துன்பத்தில் எல்லாம் நம்மை ஆழ்த்தி விடுவார்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்கள் துன்பங்கள் எங்கிருந்து வந்தன என்று. 

உங்கள் வாழ்வில் யாரேனும் அது போன்ற நண்பர்கள் இருந்தால், அவர்களை  விட்டு விலகிச் செல்லுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_16.html


No comments:

Post a Comment