Thursday, October 5, 2017

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள்

திருக்குறள் - பிரிவைச் சொல்லும் வளையல்கள் 




அவள் அவனை காதலிப்பது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். யார் கேட்டாலும், "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ..." என்று சொல்லி மழுப்பி விடுவாள்.

ஆனால், இப்போது , அவளை விட்டு அவன் அயல் நாடு போய் இருக்கிறான்......

"போறதுக்கு முன்னால அவன்  என்ன சொன்னான்" ?

"நீ கவலைப் படாதே, சிறிது நாளில் வந்து விடுவேன்...தைரியமா இரு " என்று தான் சொல்லிவிட்டுச் சென்றான்...

சொல்லி எத்தனை நாள் இருக்கும் ? இரண்டு நாள் ? நாலு நாள் ? பத்து நாள் ?

இல்லை, அவ்வளவு எல்லாம் இருக்காது...நேத்தோ , முந்தா நாளோதான் சொன்னான்.

அப்படியா, அப்படினா இப்பதான் போனானா ? அப்ப திரும்பி வர ரொம்ப நாள் ஆகும்னு சொல்லு...

இல்ல இல்ல , நேத்து சொன்ன மாதிரி இருக்கு , ஆனால் சொல்லி ஒரு பத்து நாள் இருக்கும்.


பத்து நாளா ? இல்லையே அதுக்கு முன்னாடியே சொன்ன மாதிரி இருக்கே....

இப்படி அவன் பிரிவில் , அவள் தவிக்கிறாள். நாள் கணக்கெல்லாம் மறந்து விட்டாள்.

இருந்தும் அவனைக் காணாமல் மனம் ஒன்றிலும் ஒட்டவில்லை. சரியாக சாப்பிடுவது இல்லை,  தூங்குவது இல்லை.

மெலிந்து போனாள். கை மெலிந்து, கையில் உள்ள வளையல் தானே நழுவி கீழே விழுகிறது.

அவள் சொல்லா விட்டாலும், அவள் கையில் இருந்து நெகிழ்ந்து விழும் வளையல் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறது, அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை.

அவள் என்ன செய்வாள் பாவம்.

ஒரு பக்கம், பிரிவு. அதில் வரும் துயரம்.

இன்னொரு பக்கம், அவன் வருவான் நம்பிக்கை.

இன்னொரு புறம், எப்போ வருவானோ என்ற ஏக்கம்.

இதற்கிடையில், இந்த வளையல் வேற , ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறது. வெட்கம் வேறு பிடுங்கி தின்கிறது அவளை.

ஒரு பெண் படும் அவஸ்தை , சொல்லி மாளாது.

இத்தனை உணர்ச்சி குவியலையும் வார்த்தையில் வடிக்க முடியுமா ?

வள்ளுவர் அதையும் செய்திருக்கிறார்...

படித்துப் பாருங்கள், உதட்டோரம் ஒரு சோகம் கலந்த இன்பப் புன்னகை படர்வதை உணர்வீர்கள்....


பாடல்


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


பொருள்

துறைவன் = தலைவன்

துறந்தமை = என்னை விட்டு சென்றமை

தூற்றாகொல் = சொல்லாதோ (தூற்றுதல் = அவதூறாக சொல்லுதல்)

முன்கை = முன் கையில் உள்ள

இறை = மணிக்கட்டு

இறவா = நெகிழாமல்

நின்ற வளை = நின்ற வளையல்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_5.html




1 comment:

  1. இரண்டு வரியில் புன்னகை வரவழைக்கும் பாடல்!

    ReplyDelete