Friday, October 6, 2017

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல்

கம்ப இராமாயணம் - சீதையை தூக்கிச் செல்லுதல் 


இராவணன் சீதையை தூக்கிச் சென்றான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சீதையை தூக்கிச் செல்வதில் இராவணன் முதல் ஆள் அல்ல. அவனுக்கு முன்னே இன்னொரு அரக்கன் சீதையை தூக்கிச் சென்றான்.

அவன் பெயர் விராதன்.

காட்டில் , சூர்பனகையை எல்லாம் பார்ப்பதற்கு முன் நிகழ்ந்தது இது.

என்ன நடந்தது என்று பார்ப்போம்.

இராமன், இலக்குவன் , மற்றும் சீதை கானகத்தில் நடந்து போகிறார்கள். அப்போது அவர்களை துரத்திக் கொண்டு விராதன் என்ற அந்த அரக்கன் வருகிறான்.

பாடல்


நில்லும், நில்லும் என வந்து, நிணம்
     உண்ட நெடு வெண்
பல்லும், வல் எயிறும், மின்னு பகு
     வாய் முழை திறந்து,
அல்லி புல்லும்அலர் அன்னம்
     அனையாளை, ஒரு கை, 
சொல்லும் எல்லையில், முகந்து உயர்
     விசும்பு தொடர

பொருள்

நில்லும், நில்லும் என வந்து "நில்லுங்கள், நில்லுங்கள் " என்று சொல்லிக் கொண்டே வந்து

நிணம் உண்ட = மாமிசம் உண்ட

நெடு = நீண்ட

வெண் பல்லும் = வெள்ளையான பற்களும்

வல் எயிறும் = வலிமையான கோரை பற்களும்

மின்னு = மின்னும் படி

பகு வாய் = பிளந்த வாயை

முழை திறந்து = குகை போல திறந்து வைத்துக் கொண்டு

அல்லி புல்லும்  = மலர் இதழ்கள் ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்த வண்ணம் நெருங்கி இருக்கும்

அலர் = தாமரை மலரில் இருக்கும்

அன்னம் அனையாளை = அன்னம் போன்றவளை

ஒரு கை = ஒரு கை

சொல்லும் எல்லையில் = செல்லும் எல்லையில், கையின் முடிவில், உள்ளங் கை

முகந்து = நீரை முகப்பது போல முகந்து கொண்டு

உயர் = உயரமான

விசும்பு = வானம்

தொடர = தொடும்படி சென்றான்

விராதன் வந்தான், சீதையை உள்ளங் கையில் தண்ணீரை முகர்வதைப் போல எளிதாக  எடுத்துக் கொண்டு வானில் பறந்து விட்டான்.

அப்புறம் என்ன நடந்தது ?


http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_6.html

No comments:

Post a Comment