Monday, October 9, 2017

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல்

கம்ப இராமாயணம் - பூனை வாயில் கிளி போல் 


விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவனை துரத்திக் கொண்டு இராமனும் இலக்குவனும் செல்கிறார்கள். "என்னை யாராலும் கொல்ல முடியாது. இந்த பெண்ணை விட்டு விட்டு ஓடி விடுங்கள் " என்று அவன் சொல்கிறான்.

இராமனும், இலக்குவனும் வில்லை கையில் எடுக்கிறார்கள்.

விராதன், சண்டைக்கு தயாராகிறான். அவன் கையில் அகப்பட்ட சீதை , பூனை கையில் சிக்கிய கிளி போல தவிக்கிறாள்.

பாடல்

வஞ்சகக் கொடிய பூசை நெடு
     வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு
     பாவையை விடா,
நெஞ்சு உளுக்கினன் என, சிறிது
     நின்று நினையா,
அஞ்சனக் கிரி அனான் எதிர்
     அரக்கன் அழலா

பொருள்

வஞ்சகக் = வஞ்சகமான

கொடிய =கொடுமையான

பூசை = பூனை

நெடு வாயில் = பெரிய வாயில்

மறுகும் = சிக்கித் தவிக்கும்

பஞ்சரக் கிளி = கூண்டுக் கிளி

எனக் = போல

கதறு = கதறுகின்ற

பாவையை விடா = பெண்ணாகிய சீதையை விடாமல்

நெஞ்சு உளுக்கினன் என = நெஞ்சம் துணுக்குறவன் போல

சிறிது = கொஞ்ச நேரம்

நின்று =நின்று

நினையா = சிந்தித்தான்

அஞ்சனக் = கரிய

கிரி = மலை

அனான் = போன்ற

எதிர் = எதிரில் நிற்கும் இராமனை

அரக்கன் = அரக்கன்

அழலா = தீப்போல நோக்கினான்


இங்கே "நின்று நினையா " என்ற தொடரில் , நினையா என்றால் நினைக்க மாட்டாமல், அல்லது நினைக்காமல் என்று தான் பொருள் வர வேண்டும் அல்லவா ? எதிர்மறை பொருள் வர வேண்டும். ஓடாத சினிமா படம் என்று கூறுவது போல. 

ஆனால், "நின்று நினைத்து " என்ற பொருளில் வருகிறது. 

என்ன ஒரே குழப்பாக இருக்கிறதே ? நினையா என்றால் நினைத்து என்று எப்படி  பொருள் கொள்வது ?

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

பொதுவாக சொற்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். 

பெயர் சொல் 
வினைச் சொல் 

(இடைச் சொல், உரிச் சொல் என்று இருக்கின்றன. அவற்றை பின்னால் பார்ப்போம்).

இதில் வினைச் சொல் என்பது செயலை குறிக்கும் சொல். 

ஓடு, பாடு, நட , தூங்கு போன்றவை வினைச் சொல். வினையை குறிக்கும் சொல் வினைச் சொல். 

சரி தானே ? இதுவரை சிக்கல் இல்லையே ?

அடுத்த படிக்கு போவோம். 

இந்த வினைச் சொல் சில சமயம் முழுமையாக வராமல் , கொஞ்சம் குறைபட்டு நிற்கும். அதற்கு எச்சம் என்று பெயர். வினையில் குறைபட்டு இருப்பதால் அதை வினையெச்சம் என்போம். (பெயரில் குறைபட்டு நின்றால் அதற்கு பெயரெச்சம் என்று பெயர்).


அதற்கு என்ன உதாரணம் ?

நடந்து 

என்று சொன்னால் , அது முடியவில்லை. 

நடந்து சென்றான் 
வந்து நின்றான் 

நடந்து , வந்து என்பன வினையெச்சம். 

புரிகிறது அல்லவா ?

அது வினையெச்சமாகத்தான் இருக்க வேண்டுமா ? வேறு விதமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். முயன்று பாப்போம். 

நடந்து முருகன்.
வந்து மயில் 


சரியாக இல்லை அல்லவா ? ஏதோ நெருடுகிறது அல்லவா ? 

நடந்து என்பது ஒரு பெயரைக் கொண்டு முடியாது. ஒரு வினையைக் கொண்டுதான் முடியும்.  

எனவே வினையெச்சம்தான் என்று நாம் உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். 

சரி, இந்த வினையச்ச சொற்களை எப்படி உருவாக்குவது ?  எப்படி இனம் கண்டு கொள்வது ? இந்த நடந்து, வந்து போல இன்னும் எவ்வளவோ சொற்கள் இருக்கும் அல்லவா ? இன்னமும் புது புது சொற்களை உண்டாக்க வேண்டி இருக்கலாம் . அதற்கு ஏதாவது விதி இருக்கிறதா ? 

இருக்கிறது. 

அதற்க்கு வாய்பாடுகள் என்று  பெயர். ஆங்கிலத்தில் சொல்வது என்றால் template என்று சொல்லலாம். என்ன செய்ய, தமிழை ஆங்கிலம் மூலம் கற்க வேண்டி இருக்கிறது. 

ஒரு சொல் இந்த மாதிரி இருந்தால் அது வினையெச்சம் என்று கூறலாம். அந்த  "இந்த மாதிரி" என்று சொல்கிறோம் அல்லவா அதற்கு வாய்பாடு என்று பெயர். 

அதற்கு முன்னால் , வினை என்றாலே அதற்கு ஒரு காலம் இருக்க வேண்டும் அல்லவா ? வினை எப்போது செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் அல்லவா ?

எனவே, நமக்கு இரண்டு தேவைகள் இருக்கிறது.

ஒன்று , வினையெச்சம் எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டும். 

இரண்டாவது, வினையெச்சத்தில் காலத்தை எப்படி அறிந்து கொள்வது ?

இதை எல்லாம் சிந்தித்து விடை எழுதி வைத்திருக்கிறார்கள். 

வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் பன்னிரண்டு.  

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் 

என்பது நன்னூல் சூத்திரம். 

ரொம்ப சலிப்பாக இருக்கிறதோ ? என்னடா இராமாயணம் சொல்லச் சொன்னால் இவன் நன்னூல் சொல்லி சலிப்பூட்டுகிறானே என்று தோன்றுகிறதா ?


1 comment:

  1. இந்த இலக்கணத்தின் தொடர்ச்சி எங்கே?

    ReplyDelete