Monday, November 6, 2017

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ

இராமாயணம் - விராதன் வதை படலம் - அறிவு வந்து உதவ


இராமன், இலக்குவன், மற்றும் சீதை கானகத்தில் செல்லும் போது , விராதன் என்ற அரக்கன் சீதையை தூக்கிச் சென்று விடுகிறான். விராதனை தடுத்து இராமனும், இலக்குவனும் போர் புரிகிறார்கள். கடைசியில் இராமன் காலால் உதைக்க, விராதன் தோற்று கீழே விழுகிறான். விழுந்தவன், சாப விமோச்சனம் பெற்று மீண்டும் கந்தர்வனாகிறான்.


 வானுலகம் செல்வதன் முன் சிலச் சொல்லி விட்டு செல்லுகிறான்.

பாடல்

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,
நெறியின் ஒன்றி நிலை நின்ற
     நினைவு உண்டதனினும்,
பிறிவு இல் அன்பு நனி பண்டு
     உடைய பெற்றிதனினும்,
அறிவு வந்து உதவ, நம்பனை
     அறிந்து, பகர்வான்.

பொருள்


பொறியின் ஒன்றி = பொறி என்றால் கருவி. பொறி வைத்து பிடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. நாம் அறிவை இந்த பொறிகளால் பெறுகிறோம். பொறி என்றால் புலன்கள். கண், காது , மூக்கு போன்ற புலன்கள். இந்த புலன்களில் அறிவு ஒன்றி.


அயல்சென்று = வெளியில் சென்று

திரி = திரிந்து

புந்தி உணரா = புத்தி உணராமல்


நெறியின் ஒன்றி = நல்ல வழியில் ஒன்று பட்டு

நிலை நின்ற = நிலை பெற்ற

நினைவு உண்டதனினும் = நினைவு இருந்தாலும்

பிறிவு இல் அன்பு = பிரிதல் இல்லாத அன்பு , பக்தி

நனி  = மிகுந்த

பண்டு  = பழைய

உடைய பெற்றிதனினும் = உடமையாக பெற்றிருந்ததாலும்

அறிவு வந்து உதவ = அறிவும் வந்து உதவ

நம்பனை = தலைவனான இராமனை

அறிந்து = அறிந்து

பகர்வான் = சொல்லுவான்

அவனுக்கு முன்பு செய்த அன்பினாலும் (பக்தியாலும்), பழைய ஒழுக்கத்தாலும்  (நெறியின் ஒன்றி நிலை நின்ற ) அவனுக்கு அறிவு உதவி செய்தததால்  இராமனை அவன் அறிந்தான் என்கிறான் கம்பன்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் ....

முதலாவது, மிக மிக மோசமானவன் என்று நாம் நினைப்பவனுக்கு பின்னால் மிக உயர்ந்த  குணமுள்ளவன் ஒருவன் இருக்கிறான். சாப விமோசனம் அடைவதற்கு முன்னால் பெரிய கொடூர அரக்கனாக இருந்தவன் பின்னால் உயர்ந்த தேவனாக மாறுகிறான்.  யாருக்குத் தெரியும் , யாருக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று ? இது விராதனுக்கு மட்டும் அல்ல , எல்லா கொடியவனுக்கு பின்னாலும் ஏதோ நல்லவன் மறைந்து கிடக்கிறான்.


இரண்டாவது, கெட்டவர்கள், கொடியவர்கள் "இனி நமக்கு விதித்தது இதுதான் போலும் என்று எண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த கொடியவனுக்கும் ஒரு சாப விமோச்சனம் இருக்கும். அந்த நம்பிக்கை வேண்டும். சாப விமோசனத்தை தேடி செல்ல வேண்டுமே அல்லால், மேலும் மேலும் தவறுகளை செய்து கொண்டே போகக் கூடாது. எந்த பாவிக்கும் ஒரு கடைந்தேற்றுதல் உண்டு .

மூன்றாவது, கெட்டவர்களுக்கும் சில சமயம் நல்லவர்கள் சாவகாசம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதை பெற்றுக் கொண்டு , பாவங்களில் இருந்து விடு பட முயற்சி செய்ய வேண்டும் . அதை விட்டு விட்டு அந்த  நல்லவர்களுக்கும் தீமை செய்ய முயற்சி செய்யக் கூடாது.

நான்காவது, மிக முக்கியமானது, இராமன் திருவடி பட்டதால் அவனுக்கு அறிவு உதவி  செய்ய அவன் சாப விமோச்சனம் பெற்றான். அதற்கு முக்கிய காரணம்  முன்பு செய்த இடையறாத அன்பும், நல்ல ஒழுக்கமும். யாருக்குத் தெரியும் பின்னாளில் நாம் என்னவாக ஆவோம் என்று. இப்போதே நல்ல ஒழுக்கத்தை கடை பிடித்தால் , பின்னாளில் ஏதோ ஒரு சமயத்தில் இது கை கொடுக்கும்.

ஐந்தாவது, அரக்கன் என்பவன் யார் ? புலன்கள் பின்னால் அறிவை செலுத்துபவன்.

பொறியின் ஒன்றி, அயல்சென்று
     திரி புந்தி உணரா,

அறிவின் பின்னால் புலன்கள் சென்றால் அவன் மனிதன், தேவன். புலன்கள் பின்னால் அறிவு சென்றால் அவன் அரக்கன். அவ்வளவுதான்.

பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது, சாப்பிட்டு விடுவது.

அழகான பெண்ணைக் கண்டால், உடனே தவறாக நினைப்பது, தவறான  செயல்களில் ஈடுபடுவது.

இதெல்லாம் அரக்க குணம்.

நாம் அரக்க குணங்களில் இருந்து மாறுபட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறிய மாதிரி, முடியும் போதெல்லாம் நல்லது செய்து வைப்போம் . என்றேனும் உதவும்.

விராதன் வதைப் படலத்தில் இப்படி பல ஆழ்ந்த கருத்துகள் உள்ள பாடல்கள் உள்ளன.

நேரம் இருப்பின், மூலத்தை படித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post.html

2 comments:

  1. நல்ல விளக்கம். கொஞ்ச நாட்களாக இங்கு வர முடியவில்லை.அடுத்த மாதத்திலிருந்து தவறாது வருவேன்.விட்டு போன பழைய பதிவுகளையும் படிப்பேன்.

    ReplyDelete
  2. இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு. அனால், "பழைய நிலை பெற்ற நினைவு", "அன்பு" இதெல்லாம் எல்லாருக்கும் இருப்பது மாதிரி தெரியலையே! ஹிட்லருக்கு இருந்ததா என்ன?!

    ReplyDelete