Friday, March 30, 2018

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க

திருக்குறள் - துன்பப் படாமல் இருக்க



இன்பம் வரட்டாலும் போகட்டும், துன்பம் இல்லாமல் இருந்தால் சரி என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், துன்பம் இல்லாத ஆள் யாராவது இருக்கிறார்களா என்றால் இல்லை.

துன்பம் எங்கிருந்து வருகிறது ? துன்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி எதிர் கொள்வது? என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

பாடல்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

பொருள்

இன்பம் விழையான் = இன்பத்தை விழையான்

இடும்பை = துன்பத்தை

இயல்பென்பான் = இயல்பானது என்பான்

துன்பம் உறுதல் இலன் = துன்பப் பட மாட்டான்


எல்லா துன்பத்துக்கும் காரணம் இன்பம் வேண்டும் என்று அலைவதுதான்.


அது சரி, இன்பம் வேண்டாமா? இன்பம் இல்லாத வாழ்கை ஒரு வாழ்கையா? பின் எதற்குத்தான் வாழ்வது? என்ற கேள்வி எழலாம்.

வள்ளுவர் சொற்களை தெரிந்து எடுத்து கையாள்கிறார்.


"இன்பம் விழையான்" என்றார். விழைதல் என்றால் மிக விரும்புதல் என்று பொருள்.

இன்பம் வேண்டும்தான். அதற்கு ஒரு அளவு வேண்டும். அளவுக்கு அதிகமாக இன்பம் வேண்டும்  என்று நினைப்பதால் துன்பம் வந்து சேர்கிறது.


நமது புராணங்களில் பார்த்தால் தெரியும்.

இந்த அரக்கர்கள் வரம் பெற்ற பின், அவர்களின் இன்பத் தேடல் அளவு கடந்து போகும்.  அகில உலகங்களையும் ஆள வேண்டும். சாகா வரம் வேண்டும், தேவர்கள்  தங்கள் காலடியில் விழ வேண்டும் என்றெல்லாம் விரும்புவார்கள். கடைசியில்  அடிபட்டு சாவார்கள்.

எந்த இன்பத்துக்கும் ஒரு அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி, வேறு எந்த இன்பமாக இருந்தாலும் சரி,  பேராசை படும் போது துன்பம் வந்து சேர்கிறது.

மேலும் மேலும் என்று அலையும் போது , துன்பம் வருகிறது.

மாம்பழம் நன்றாக இருக்கிறது என்று பத்து மாம்பழம் ஒன்றாகச் சாப்பிட்டால் ?

இன்பத்தின் மேல் அதிக நாட்டம்  துன்பத்துக்கு ஒரு காரணம்.

இன்னொன்று, துன்பத்தைக் கண்டு பயந்து ஓடுவது. என்னமோ துன்பமே வரக்கூடாது என்று நினைப்பது. வந்தால், அது உடனே ஓடி விட வேண்டும் என்று நினைப்பது.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.

தலை இருந்தால் தலைவலி வரும். மூக்கு என்று ஒன்று இருந்தால் அப்பப்ப சளி பிடிக்கும்.


உறவு என்று ஒன்று இருந்தால் உரசல் வரத்தான் செய்யும்.

இலாபம் வரும் போது , நட்டமும் வரும்.

துன்பம் இயல்பு என்று நினைக்க வேண்டும்.


துன்பம் வந்தால் அது ஏதோ வரக்கூடாதது வந்து விட்டது போல தையா தக்கா என்று குதிக்கக் கூடாது.

வராமல் இருந்து வந்தது. வந்த பின் போகும் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக, துன்பம் வந்தால் அப்படியே இருக்கச் சொல்லவில்லை. சரி, இதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொண்டு அதை நிவர்த்திக்க முயல  வேண்டுமே அல்லாமல், ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், கடவுளே உனக்கு கண் இல்லையா என்று புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால்

"துன்பம் உறுதல் இலன்" என்றார்.

உறுதல் என்றால் நிலைத்து நிற்றல், சேர்ந்து நிற்றல், உறுதியான என்று பொருள்.

அப்படி இருந்தால், துன்பம் வரும், ஆனால் வந்த துன்பம் நிலைத்து நிற்காது.

இப்போது இதன் மீதெல்லாம் உங்கள் ஆசை என்று பட்டியல் போடுங்கள். அதனால் வரும் துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.

தெளிவு  பிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/03/blog-post_30.html

Thursday, March 29, 2018

திருக்குறள் - உடம்பும் துன்பமும்

திருக்குறள் - உடம்பும் துன்பமும் 


எது இயற்கை ? இன்பமாக இருப்பதா ? துன்பப் படுவதா ? நம் உடலுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு விட்டால் உடனே நாம் பதறுகிறோம். என்னவோ உடலுக்கு துன்பமே வரக் கூடாது, இப்படி வந்து விட்டதே என்று.

அது நம் மன நிலை. அதை மாற்றி யோசிக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

இந்த உடம்பானது துன்பத்தின் இலக்கு.

துன்பம் என்பது இந்த உடம்பை குறி வைத்தே வரும். அது தான் இயற்கை. துன்பம் வரமால் இருந்தால் அதுதான் ஆச்சரியம்.

இயற்கையான ஒன்றுக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் பெரியவர்கள்.

காலையில் சூரியன் உதிக்கிறது. அதற்காக கவலைப் பட முடியுமா? மாலையில் மறைந்து விடும். ஐயோ, சூரியன் போய் விட்டதே என்று வருந்த முடியுமா ? அது இயற்கை. அது போல, உடம்புக்கு துன்பம் வருவது இயற்கை. அதையே பெரிதாக நினைத்துக் கொண்டு வேலை செய்யாமல் இருந்துவிடக் கூடாது.

சான்றோர், உடம்புக்கு வந்த துன்பத்தை இயற்கையான ஒன்று என்று நினைத்து அதனால் சோர்ந்து விட மாட்டார்கள்.


பாடல்

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

பொருள்

இலக்கம் = இலக்கு, குறி

உடம்புஇடும்பைக்கு = உடம்பானது துன்பத்துக்கு

என்று = என்று

கலக்கத்தைக் = கலக்கத்தை, சோர்வை,

கையாறாக் = கையில்

கொள்ளாதாம் = கொள்ள மாட்டார்கள்

மேல் = மேலோர், சான்றோர், பெரியோர்

உடம்புன்னா அப்படித்தான் இருக்கும். துன்பம் வரத்தான் செய்யும். அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.  வைத்தியம் பார்க்கலாம். மருந்து மாத்திரை சாப்பிடலாம். அது ஒரு பாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும். நாம் நம் வேலையை பார்ப்போம் என்று கிளம்பி விட வேண்டும்.


இன்னும் ஒரு படி மேலே போய் சிந்திப்போம்.

உடம்பு என்றால் கை கால் தலை மட்டும் அல்ல. உடம்பினுள் இருக்கும் மனமும் தான்.

உடல் துன்பப் படுவதைப் போல மனமும் சில சமயம் துன்பப் படும். துக்கம்  வரும். வருத்தம் வரும். மன அழுத்தம், மன சோர்வு, பட படப்பு என்று வரும்.

இவை எல்லாம் இயற்கையானவை என்று எண்ணி மேலே செல்ல வேண்டுமே அல்லாது சோர்ந்து அங்கேயே உட்கார்ந்து விடக் கூடாது.

ஆனால், இது சரி வரும் என்று தோன்றவில்லையே. உலகத்தில் எல்லோரும் உடலுக்கு ஒரு துன்பம் என்றால் அது இயற்கையானது என்று சும்மா இருப்பது இல்லையே. வள்ளுவர் சொல்லுவது சரிதானா என்று தோன்றும் நமக்கு.

வள்ளுவருக்கு அது தெரிந்திருக்கிறது.

எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.

"கொள்ளாதாம் மேல்"

என்கிறார்.

மேலோர் அப்படித்தான் கொள்வார்கள். மற்றவர்கள் உடல் உபாதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்வார்கள்.

"கையறா " என்றால் செயலற்று என்று அர்த்தம். உடலுக்கு ஒரு துன்பம் வந்தால் அப்படியே செயலற்று இருந்து விடமாட்டார்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார் ?


துன்பம் வந்த போது , முடங்கிக் கிடந்தால், அந்தத் துன்பம் இன்னும் பெரிதாகுமே அன்றி குறையாது. நாள் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு இருக்கச் சொல்லும். வந்த துன்பத்துக்கு கண் காது மூக்கு வைத்து அதை பெரிதாக நினைக்கச் சொல்லும்.

நமக்கு யாரும் உதவி செய்யவில்லையே என்று எல்லோரையும் திட்டத் தோன்றும். ஒரு தன்னிரக்கம் வரும்.

எனவே, இவற்றையெல்லாம் மாற்றி , வந்த துன்பத்தைப் போக்க, அது இயற்கை தான் என்று எண்ணிக் கொண்டு எப்போதும் போல செயலாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_29.html



Wednesday, March 28, 2018

திருக்குறள் - அற்றதும் பெற்றதும்

திருக்குறள் - அற்றதும் பெற்றதும் 


செல்வம் வந்த போது அதை நன்றாக பாதுகாக்கத் தெரியாதவர்கள் அதை இழந்த போது எதற்கு வருந்த வேண்டும் ?

பாடல்

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்

பொருள்

அற்றேம்என்று  = இழந்தோம் என்று

அல்லற் படுபவோ = துன்பப் படுபவர்கள்

பெற்றேம்என்று  = அந்த செல்வத்தைப் பெற்ற போது

ஓம்புதல் = பாதுகாத்தல்

தேற்றா தவர் = செய்யாதவர்

.எல்லா உரைகளிலும் இவ்வளவுதான் இருக்கிறது. இதற்கு வள்ளுவர் மெனக்கெட்டு ஒரு குறள் எழுதுவாரா ?

ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அற்றேம் , பெற்றேம்  என்று சொல்லும் போது எதை என்று வள்ளுவர் சொல்லவில்லை.

செல்வத்தை என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள்.

நம்மிடம் ஆரோக்கியம் இருக்கும் போது அதைப் பற்றி நாம் கவலைப் படுவது  கிடையாது.  அதை இழந்து நோய் வாய்ப் படும் போது அப்படி செய்திருக்கலாமே, இப்படி செய்திருக்கலாமே என்று நொந்து என்ன பயன்.
மருத்துவர் எவ்வளவோ சொன்னார். கேக்காம கண்டதையும் உண்பது. அப்புறம், இரத்தத்தில் சர்க்கரை கூடிவிட்டது என்று அல்லல் படுவது. உடம்பு பருத்து விட்டதே என்று  வருந்துவது. நடந்தால் மூச்சு வாங்கும் . படி ஏறினால் மூச்சு வாங்கும். படுக்கப் போகும் போது பல் விளக்குவது கிடையாது. அப்புறம் பல் சொத்தை வந்து, பல்லை பிடுங்கச் சொன்னால் , வலிக்கிறதே என்று நோவது ஏன்.


நம்மிடம் நேரம் இருக்கும் போது அதை வெட்டித்தனமாக செலவழிப்பது. டிவி, Whatsapp , நண்பர்களோடு அரட்டை, ஊர் சுற்றுவது என்று நேரத்தை வீணடிப்பது. அப்புறம், வருந்துவது.  அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே என்று.

உறவும், நட்பும் நம்மிடம் இருக்கும் போது அவற்றை உதாசீனப் படுத்துவது. ஒவ்வொன்றாகப் போன பின், எனக்கென்று யாரும் இல்லையே என்று வருந்துவது.


நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை சரியான  படி  உபயோகப் படுத்துகிறோமா என்று அறிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சரியான படி உபயோகப் படுத்த வேண்டும்.

நல்லபடி உபயோகப் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, ஐயோ, சரியான படி உபயோகப் படுத்தவில்லையே என்று பின்னால்  புலம்பாதீர்கள் என்கிறார் வள்ளுவர்.

இருப்பதை நல்லபடி பயன்படுத்துங்கள்.  பின்னால் வரும் புலம்பலை அது தவிர்க்க உதவும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_28.html




Monday, March 26, 2018

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து 


துன்பம் இல்லாமல் இருந்தால் நல்லது.

ஆனால், அப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், ஏதோ நமக்கு மட்டும்தான் துன்பம்  வருகிறது.மற்றவர்கள் எல்லோரும் மிக மகழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அது தவறு. எல்லோருக்கும் ஏதோ ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் பார்க்கும் போது வேண்டுமானால் அவர்களுக்கு துன்பம் இல்லாமல் இருக்கலாம். முன்பு இருந்திருக்கலாம். இனி வரலாம். எனவே துன்பமே இல்லாத வாழ்க்கை என்பது இல்லவே இல்லை.

சரி, துன்பம் வருவதை தவிர்க்க முடியாது. வந்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

துவண்டு போகலாம். சலித்துக் கொள்ளலாம். அங்கலாய்க்கலாம். எல்லோரிடமும் சொல்லி கொஞ்சம் பரிதாபம் சேர்க்கலாம்.

இது எல்லாவற்றையும் விட இன்னொரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

துன்பத்திற்கே துன்பம் தரலாம்.

எப்படி ?

ஒரு பொதி மாடு இருக்கிறது. அதை வண்டியில் பூட்டி விடுகிறார்கள்.


வண்டியை இழுத்துக் கொண்டு போக வேண்டும். துன்பம் தான். பேசாமல் ஒரு இடத்தில் இருந்து வைக்கோலை தின்று கொண்டு, மரத்தடியில்  தூங்கிக் கொண்டிருந்தால் சுகம் தான்.

என்ன செய்வது ? வண்டியில் பூட்டி விட்டார்கள்.

ஐயோ, என்னை வண்டியில் பூட்டி விட்டார்களே, என்ன செய்வேன் என்று அந்த மாடு அழுது கொண்டு நிற்பதில்லை. அப்படியே நின்றாலும், யாரும் அதை விடப் போவது இல்லை. சாட்டையால் இரண்டு அடி கொடுத்து அதை நகர வைப்பார்கள்.

எனவே, அந்த மாடு , அந்த வண்டியை இழுத்துக் கொண்டு போகும்.

போகிற வழி எல்லாம், நல்ல இராஜ பாட்டை மாதிரி இருக்குமா ? சாலை சில இடங்களில்  வழ வழப்பாக இருக்கும். வண்டியை இழுப்பது எளிதாக இருக்கும். சில இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும். இழுக்க சிரமப் பட வேண்டும். சில சமயம் சேறும் சகதியுமாக இருக்கும். சக்கரம் சிக்கிக் கொள்ளும்.

ஐயோ, சாலை இப்படி இருக்கிறதே என்று மாடு நின்று விடுவதில்லை. இழுத்துக் கொண்டு போகும்.

அப்படி போகும் போது பார்த்தால் தெரியும், அந்த வண்டி நிலை குலையும். இந்தப் பக்கம்  சரியும். அந்தப் பக்கம் சரியும். கட்டு நெகிழும். சக்கரம் தேயும்.

கடைசியில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்.

சேர்ந்தபின், அதை வண்டியில் இருந்து கழட்டி விடுவார்கள்.

எப்படி எருது தன் மேல் பூட்டப்பட்ட வண்டியை எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு போய் , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கிறதோ, அது போல  துன்பம் வந்த காலத்து அதைக் கண்டு கலங்காமல் வினையாற்றுபவனை கண்டு துன்பமே துன்பப் பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


பொருள்

மடுத்தவாய் = தடை ஏற்படும் இடங்களில்

எல்லாம்  = எல்லாம்

பகடன்னான்  = எருது போன்றவன்

உற்ற = தனக்கு ஏற்பட்ட

இடுக்கண் = துன்பம்

இடர்ப்பாடு உடைத்து = துன்பம் உடையது

துன்பத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. நாம் பாட்டுக்கு நம் வேலையை, கடமையை செய்து கொண்டே போக வேண்டும். அப்படிச் செய்தால், துன்பம் தானே விலகும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_26.html

Saturday, March 24, 2018

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம்

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம் 


துன்பம் இல்லாத ஆள்  யார். பிரச்சனை இல்லாத வாழ்க்கை எது? எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை, ஒரு தடங்கல், ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பணப் பிரச்சனை, மனப் பிரச்சனை, ஆரோக்கியம், அலுவலகம், பிள்ளைகள், உறவு, நட்பு, என்று எங்கோ ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

சிலர் துன்பம் வந்தால் துவண்டு விடுவார்கள். சிலர், எனக்கு ஏன் மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள், சிலர் கொஞ்சம் போராடுவார்கள் அப்புறம் "இதற்கு மேல் நம்மால் முடியாது " என்று கையை உயர்த்தி விடுவார்கள்.

துன்பம் வந்தால் என்ன செய்வது ? எப்படித்தான் போராடுவது ?

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

பொருள்

இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை படுப்பர் = துன்பம் தருவார்கள்

இடும்பைக்கு = துன்பத்துக்கு

இடும்பை படாஅ தவர் = துன்பப் படாதவர்கள்

7 வார்த்தையில், 4 வார்த்தை இடும்பை.

இதற்கு என்ன அர்த்தம்.

துன்பம் வந்தபோது அதைக் கண்டு துன்பப் படாதவர்கள், அந்த துன்பத்துக்கே  துன்பம் தருவார்கள்.


புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கே. என்னதான் சொல்ல வருகிறார் வள்ளுவர் ?

துன்பம் என்று வந்து விட்டால், "ஆஹா, துன்பமே வந்து விட்டாயா...உனக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தேன். உன்னை என்ன செய்கிறேன் பார் " என்று  அந்த துன்பத்தை போட்டு துவட்டி எடுக்க வேண்டும்.

எப்படியெல்லாம் அந்த துன்பத்தை வருத்த முடியுமோ அப்படியெல்லாம் அதை வருத்த வேண்டும்.

சில உதாரணம் பார்ப்போம்.

பரீட்சை வருகிறது. அதை விட பெரிய துன்பம் என்ன இருக்க முடியும் மாணவர்களுக்கு ? அந்த துன்பத்தை எப்படி எதிர் கொள்வது ? "ஹேய் பரிட்சையே உன்னை என்ன செய்கிறேன் பார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பது. ஒரு அடி . Tuition க்கு போவது. இன்னொரு  அடி. முந்தைய வருட வினாத் தாள்களை எடுத்து அவற்றை செய்து பார்ப்பது. மற்றுமொரு அடி. நண்பர்களோடு படித்தவற்றை விவாதிப்பது" என்று பல விதங்களில் அந்த துன்பத்துக்கு அடி கொடுப்பது. அந்த துன்பம், "ஐயோ இவன் கிட்ட வந்து மாட்டிக் கொண்டோமே " என்று அடிபட்டு ஓடி விடும்.

வேலை கிடைக்கவில்லை. "வேலையின்மையே , என்னிடமா உன் வேலையை காட்டுகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று, வேலை தேடித் தரும் நிறுவனங்களில் (head hunting agency) எல்லாம் பதிவு செய்வது, தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் சொல்லி வைப்பது, செய்தித் தாள், வார, மாத பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களுக்கு பதில் போடுவது, online  portal களில் பதிவு செய்வது " என்று முடிந்த வழிகளில் எல்லாம் அந்த வேலையின்மை என்று  துன்பத்தை வாட்டி வதைக்க வேண்டும். அப்போது அது துன்பப் பட்டு விடும்.

ஆரோக்கிய குறைவு. கணவன் மனைவி உறவில் விரிசல். அலுவலகத்தில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எது என்றாலும் இது தான் வழி.

துன்பத்தை கண்டு ஓட க் கூடாது. துன்பமே வா, உனக்காச்சு எனக்காச்சு என்று அந்த துன்பத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

அந்த போராட்டமே ஒரு விளையாட்டாகப் போய் விடும்.

பணம் இல்லையா. எத்தனை வழிகளில் பணம் புரட்ட முடியும் என்று யோசிக்க வேண்டும். அத்தனை வழியிலும் முயற்சி செய்ய வேண்டும்.

அந்த முயற்சியில் , துன்பம் மறந்து போகும். முடிவில் துன்பம் , துன்பப் பட்டு ஓடி விடும்.

துன்பத்தைக் கண்டு , பயந்து, ஒடுங்கி நின்றால் அது நம்மை மேலும் பயமுறுத்தும். நாம் அதை விட பெரிய உருவம் எடுத்தால், அது நம்மை கண்டு பயந்து ஓடி விடும்.

உங்கள் துன்பங்களை , அடித்து விரட்டுங்கள். அவை வலியால் , உங்கள் பக்கமே தலை வைத்து படுக்கக் கூட அஞ்சி ஓடி விடும்.

என்ன சரிதானே ?

 
http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_24.html

Friday, March 23, 2018

நாலடியார் - பயனில் பொழுதாக் கழிப்பரே

நாலடியார் - பயனில் பொழுதாக் கழிப்பரே 


படித்தவர்கள், அறிஞர்கள், பெரியவர்கள் இவர்களின் நட்பு கிடைப்பதே கடினம். அப்படியே கிடைத்தாலும் அந்த நட்பை சிறந்த வழியில் பயன் படுத்தாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கும், அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விட்டு, அருமையான காலத்தை வீணாக கழிப்பவர்கள் அறிவில்லாத மடையர்கள் என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

பொருள்

பொன்னே கொடுத்தும் = பொன் (தங்கம்) கொடுத்தும்

புணர்தற் கரியாரைக் = புணர்தற்கு அரியாரை = கூட பழக முடியாதவர்களை

கொன்னே = ஒன்றும் கொடுக்காமல்

தலைக்கூடப் பெற்றிருந்தும் = ஒன்றாக இருக்க பெற்றாலும்

அன்னோ = ஐயோ

பயனில் = பயன் படாத

பொழுதாக் கழிப்பரே  = பொழுதை கழிப்பார்கள்

நல்ல = நல்ல

நயமில் அறிவி னவர் = நன்மை இல்லாத அறிவற்றவர்கள்

பெரியவர்களின் நட்பு, செல்வத்தை விட உயர்ந்தது. பொன் கொடுத்தாலும் அந்த நட்பைப் பெற வேண்டும். சிலருக்கு அப்படி பட்ட வாய்ப்பு ஒரு செலவு இல்லாமலே கிடைத்திருக்கும். அதை சரியான படி பயன் படுத்தாமல் வீணாக பொழுதை கழிப்பார்கள் அறிவற்ற மூடர்கள்.

அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார்.

பணம் சேர்பதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ளக் கூடாது. சம்பாதித்த   பணத்தை செல்வழித்தாவது உயர்ந்தவர்களின் நட்பைப் பெற வேண்டும். ஒரு வேளை அந்த மாதிரியான  நட்பு எளிதில் கிடைத்தால், அதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

பொழுதை வீணாக செல்வழிக்கக் கூடாது.

தேடுங்கள். நல்லவர்களை. படித்தவர்களை. அறிஞர்களை. சான்றோரை. அவர்கள் சொல்வதை கேட்டு நடங்கள். அது உங்களை மேலும் அறிவுள்ளவர்களாகச் செய்யும்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_23.html

Sunday, March 18, 2018

திருக்குறள் - மாறல்ல துய்க்க

திருக்குறள் - மாறல்ல துய்க்க 


மிகினும், குறையினும் நோய் செய்யும் என்றார்.

அற்றது அளவறிந்து உண்ணச் சொன்னார்.

ஆனால், எதை சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லையே.

இங்கே சொல்கிறார்.

பாடல்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து.

பொருள்

அற்றது = முன்பு உண்டது செரித்து உடலை விட்டு நீங்கியதை

அறிந்து = அறிந்து, தெரிந்து கொண்டு

கடைப்பிடித்து  = கடை பிடித்து

மாறல்ல = மாற்றம் அல்லாத

துய்க்க = உண்க

துவரப்  =  மிக

பசித்து = பசித்த பின்னால்

எப்போது உணவு உண்ண வேண்டும் என்றால் - "துவர பசித்தப்பின்"

துவர என்றால்  மிக மிக என்று அர்த்தம்.

ரொம்ப பசித்தபின் தான் உணவு உண்ண வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து  உணவு உண்ணக் கூடாது.   நேரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பசிக்கிறதா ?  ரொம்ப பசிக்கிறதா ? அப்போதுதான் உண்ண வேண்டும்.

நன்றாக கவனித்துப் பாருங்கள்.

சில நாள் ஏதோ வேலை முனைப்பில் இருந்திருப்பீர்கள். நேரம் போனதே தெரியாது.  நிமிர்ந்து பார்த்தால் மணி மூன்றாகி ஆகி இருக்கும். பசி வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. என்ன ஆயிற்று ? பசி இல்லை. நாம் தினமும் ஒரு மணிக்கு சாப்பிடுவது பசித்து அல்ல. அது ஒரு conditioned reflex.

பாவ்லோவ் என்று ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் தினமும் தன்னுடைய நாய்க்கு  உணவு வைப்பார். உணவின் வாசம் வந்ததும், நாய் வாலை ஆட்டும், அதன் வாயில் நீர் ஊறும்.

சிறிது நாள் கழித்து, உணவு வருதற்கு சில நொடிகள் முன், ஒரு மணி அடிப்பார். மணி அடித்தவுடன், சில நொடிகளில் உணவு வரும். நாய்க்கு எச்சில் ஒழுகும். வாலை ஆட்டும்.

இன்னும் சிறிது நாள் கழித்து, மணி மட்டும் அடிக்கும், ஆனால் உணவு வராது. இருந்தும், நாய்க்கு எச்சில் ஒழுக ஆரம்பிக்கும், வால் ஆடும்.

அதாவது, மணி அடித்தால், உணவு வரும். உணவு வந்தால் அதை சாப்பிடலாம் என்ற எதிர்பார்ப்பில் உமிழ் நீர் தானாகவே சுரக்க ஆரம்பித்து விடுகிறது.

அது போல நாமும் ஆகி விட்டோம். மணி அடித்தால் சோறு என்று பழக்கப் படுத்தி விட்டோம்.

அப்படி சாப்பிடக் கூடாது. நன்றாக பசித்தபின் தான் சாப்பிட வேண்டும்.

இரண்டாவது, "மாறல்ல துய்க்க" என்றால் என்ன ?

மாறுபாடு இல்லாமல் உண்ண வேண்டும்.

எதோடு மாறுபாடு கூடாது ?

சுவையாலும், அளவாலும், வீரியத்தால், கால நிலையாலும், உணவுகள் ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமலும், உடல் வாகுக்கு மாறுபாடு இல்லாமலும்  இருக்க வேண்டும்.


சற்று விரிவாக பார்ப்போம்.


சுவையால் மாறுபடக் கூடாது.  சிலருக்கு காரம் அதிகம் வேண்டி இருக்கும். சிலருக்கு  கொஞ்சம் காரம் இருந்தாலே விக்கல் வரும், கண்ணில் நீர் வரும். யார் எந்த சுவையில் பழக்கப் பட்டு இருக்கிறார்களோ, அந்த சுவை மாறுபாடு கூடாது.

அளவு. எப்போதும் ஒரே அளவாக சாப்பிட வேண்டும். ஒரு நாள் தானே என்று பத்து தோசை தின்னக் கூடாது. சாப்பாட்டில் நிதானம் வேண்டும்.

வீரியம் - வீரியம் என்றால் சக்தி. ஒவ்வொரு உணவுக்கும் ஒரு வித சக்தி இருக்கும். கொழுப்பு,  புரதம், கால்சியம் என்று ஒரு சக்தி இருக்கும். அந்த வீரியம் மாறக் கூடாது. அளவோடு இருக்க வேண்டும்.

கால நிலை. தமிழர்கள் காலத்தை பெரும் பொழுது, சிறு பொழுது என்று பிரித்தார்கள்.

ஒரு ஆண்டின் பகுதியை பெரும் பொழுது என்பார்கள்.

ஒரு நாளின் பகுதியை சிறு பொழுது என்பார்கள்.

பெரும்பொழுது
காா்காலம்ஆவணி, புரட்டாசி
கூதிா்காலம்ஐப்பசி, காா்த்திகை
முன்பனிகாலம்மாா்கழி, தை
பின்பனிகாலம்மாசி, பங்குனி
இளவேனில்சித்திரை, வைகாசி
முதுவேனில்ஆனி, ஆடி
சிறுபொழுது
காலைகாலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை
நண்பகல்10.00 மணிமுதல் 2.00 மணிவரை
எற்பாடு2.00 மணிமுதல் 6.00 மணிவரை
மாலை6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை
யாமம்இரவு 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
வைகறைஇரவு 2.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை
ஒரு ஆண்டில் , ஒவ்வொரு மாதத்திலும் என்னென்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இருக்கிறது. 

அதே போல ஒரு நாளில், சிறு பொழுதில் என்னென்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இருக்கிறது. 

அதற்கு மாறுபாடு இல்லாமல் சாப்பிட வேண்டும். 

உணவுகள் ஒன்றுக்கொன்று மாறுபாடு கொண்டவை. தேனும் நெய்யும் ஒத்து வராது. ஒன்றை ஒன்று முறிக்கும். இவற்றை அறிந்து உண்ண வேண்டும். 

உடல் வாகு - சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது. சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டாலும் சட்டென்று எடை கூடி விடும். 

காரணம் என்ன - உடல் வாகை மூன்றாகப் பிரிகிறார்கள். 

நெருப்பு (பித்தம்), வாதம் (காற்று ), சிலேத்துமம் (நீர் ). 

பித்த உடம்பு உணவை வேகமாக எரிக்கும். 

உடம்பின் வாகை அறிந்து அதற்கு மாறுபாடு இல்லாமால் உண்ண வேண்டும். 

"கடை பிடித்து" : இது எளிதில் வராது. உணவைப் பார்த்ததும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் ஓடி விடும். இதை வலு கட்டாயமாக கடை பிடிக்க வேண்டும்.  எளிதில், தானாக அமையாது.  சாலை விதிகளை கடைபிடிப்பது , சட்ட ஒழுங்கை  கடை பிடிப்பது மாதிரி உணவு ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும். 

நாக்கு இந்த கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும். அதை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டும் . 



கண்டதையும், கண்ட நேரத்திலும் உண்டு ஏதோ உணவு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆரோக்கிய வாழ்வின், நீண்ட ஆயுளின் இரகசியம் உணவில் இருக்கிறது. 

இன்று முதல் உண்ணும் போது யோசித்து உண்ணுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_18.html


Thursday, March 15, 2018

திருக்குறள் - நீண்ட நாள் வாழ

திருக்குறள் - நீண்ட நாள் வாழ 


நோய் இல்லாமல் வாழ்வது சரி. நோய் இல்லாமல் குறைந்த வயதில் இறந்து போனால் ? நோய் இன்றியும் இருக்க வேண்டும். நீண்ட ஆயுளோடும் இருக்க வேண்டும் அல்லவா ?

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி ?

அதற்கும் உணவுதான் காரணம் என்கிறார் தெய்வப் புலவர்.

பாடல்

அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு 
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்

அற்றால்  = முன்பு உண்ட உணவு முழுமையாக சீரணம் ஆனபின்

அளவறிந்து =அளவு அறிந்து

உண்க = சாப்பிடுக

அஃது = அது

உடம்பு = உடம்பு

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நீண்ட நாள் வாழும்

ஆறு = வழி .


முதலில் உண்ட உணவு நன்றாக சீரணம் ஆனதை அறிந்து கொண்டு, அளவோடு சாப்பிட்டால்  நீண்ட நாள் வாழலாம். 

பட்டம் விடுகிறோம். திடீரென்று நூல் "அறுந்து" போகிறது. பட்டம் கை விட்டுப் போகிறது. 

அறுதல் என்றால் தொடர்பு விட்டுப் போதல். முன்பு உண்ட உணவுக்கும் நமக்கும்  உள்ள தொடர்பு விட்டுப் போக வேண்டும். அது உடம்பை விட்டு நீங்க வேண்டும். அது வரை அடுத்த உணவை தொடக் கூடாது. 

நாம் ஏதோ கணக்கு வைத்திருக்கிறோம் - ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று.  மனித வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் தெரியும், வெகு நீண்ட காலமாக ,  ஒரு வேளை உண்டால், அடுத்த வேளை உணவு எப்போது என்று ஒரு உத்தரவாதமும் கிடையாது. 

விவசாயம் என்பது வந்த பின், உணவு உற்பத்தி அதிகமான பின், உணவு சேமிக்கும் முறை  வளர்ந்த பின் தான் இந்த மூன்று வேளை உணவு என்பது வந்தது.  நம் உடல் மூன்று வேளை உணவு இல்லாமல் தானாகவே சமாளிக்கும். அது அப்படித்தான் படைக்கப் பட்டிருக்கிறது. மூன்று வேளை உணவு என்பது  நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. 

நன்றாக சாப்பிட வேண்டும். நன்றாக வேலை செய்ய வேண்டும். உண்ட உணவு சீரணம் ஆகி, உடலை விட்டு வெளியேறிய பின், அடுத்த உணவு சாப்பிட வேண்டும். 

இது நடக்கிற காரியமா என்றால் கோடிக்கணக்கான ஆண்டுகள் அப்படித்தான்  நடந்து வந்தது. நாம் அதை மாற்றி விட்டு, அப்படி முடியுமா என்று சந்தேகம் கொள்கிறோம். 

உடலை விட்டு முன் உண்ட உணவு வெளியேறிய பின், 

"அளவு அறிந்து "

உண்ண வேண்டும். 

இது தான் முக்கியமானது. 

என்ன அளவு ? இரன்டு தோசை, மூன்று இட்லி என்ற அளவா ?

இல்லை. 

நம்மால் எவ்வளவு சீரணம் செய்ய முடியும் என்ற அளவு. 

சீரணம் என்பது பல காரணிகளை கொண்டது. 

- வயது 
- தட்ப வெப்ப நிலை 
- உடல் உழைப்பு 
- உணவின் தன்மை 
- மன நிலை 

என்று இவற்றைப் பொறுத்தது. 

சிறு வயதில் எதை உண்டாலும் சட்டென்று சீரணம் ஆகும். வயதாக வயதாக  சீரண  சக்தி குறையும். அப்போது உணவை குறைக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது 10 பூரி தின்பேன் என்று 60 வயதிலும் அதே 10 பூரி  தின்னக் கூடாது. 

உடல் உழைப்பு. சிலருக்கு வேலையே உடல் உழைப்பு சார்ந்திருக்கும். மூட்டை தூக்குவது, மரம் வெட்டுவது, தொழிற்சாலையில் நாளெல்லாம் அங்கும் இங்கும்  நடப்பது என்று. அவர்களுக்கு உணவு அதிகம் வேண்டும். சிலர், இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வார்கள். அவர்களுக்கு உணவு  கொஞ்சம் போதும். 


சில உணவு சீக்கிரம் சீரணம் ஆகும். சில உணவு நேரம் பிடிக்கும். 

இப்படி பல கோணங்களில் ஆராய்ந்து, அளவோடு உண்ண வேண்டும். 

கல்யாண வீட்டில் தடபுடலான விருந்து என்று ஒரு கட்டு கட்டக் கூடாது. 

அளவு அறிந்து உண்ண வேண்டும். 

வருடம் பூராவுமா கல்யாணம் வருகிறது. எப்போதோ ஒன்று வருகிறது. இன்று ஒரு நாள்  கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒன்றும் குடி முழுகி போய் விடாது என்று சாப்பிடுவது. 

அப்புறம், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று மத சம்பந்தப் பட்ட  பண்டிகைகள் வரும். 

பிறந்த நாள், திருமண நாள் என்று முக்கிய தினங்கள் வரும். 

வேலை செய்யும் இடத்தில் பார்ட்டி இருக்கும். 

இப்படி ஏதோ ஒரு காரணத்தால் அளவுக்கு அதிகமாக உண்பது வாடிக்கையாகிப் போகிறது. 


ஒரு நாள் தானே என்று 100 kg மூட்டையை தூக்க முடியுமா ? எலும்பும், தசையும் கூட ஒரு அளவுதான் வேலை செய்யும். அப்படி இருக்கும் போது மென்மையான வயிறு அளவுக்கு அதிகமாக  எப்படி வேலை செய்யும்?



அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். 

அப்படி அளவு அறிந்து உண்டால் 

"நெடிதுய்க்கும் ஆறு"

நீண்ட நாள் வாழும் வழி என்கிறார். ஆறு என்றால் வழி.  

யாருக்குத்தான் அற்ப ஆயுளில் போக ஆசை இருக்கும். எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ ஆசைதான்.  

இந்த மனித உடல் என்பது அற்புதமான ஒன்று. கிடைப்பதற்கு அரியது. கிடைத்த உடலை போற்றி நீண்ட நாள் வாழும் வழியை காண வேண்டும். 

உணவு என்பது நோயை எதிர்க்கும் வழி மட்டும் அல்ல, ஆயுளையும் நீட்டும். 

"அரிது அரிது மானிடராதல் அரிது" என்றால் ஒளவை பாட்டி. 

"உடல் வளர்த்தார் உயிர் வளர்த்தாரே" என்பார் திருமூலர். 

உடலினை உறுதி செய் என்பான் பாரதி. 

"அளவு அறிந்து உண்க " என்று கட்டளையாகச் சொல்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் சொல்லை மீறலாமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_15.html




Wednesday, March 14, 2018

திருக்குறள் - மருந்தே வேண்டாம்

திருக்குறள் - மருந்தே வேண்டாம் 


இன்று எந்த கடைத் தெருவுக்குப் போனாலும், பல மருந்துக் கடைகளை காண முடிகிறது. மருத்துவர்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மருத்துவ மனைகள் என்று எங்கு பார்த்தாலும் நோயும், மருந்துமாக இருக்கிறது.

இதற்கு காரணம் என்ன. ஏன் நோய் இவ்வளவு மலிந்து கிடக்கிறது ?

நோய் வருவதற்கு சாப்பாடு ஒரு காரணம் என்று பார்த்தோம்.

எதை உண்பது, எவ்வளவு உண்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது.

அந்த டயட், இந்த டயட் என்று குழப்புகிறார்கள்.

அதைச் சாப்பிட்டால் எடை கூடும், இதைச் சாப்பிட்டால் கேன்சர் வரும், அது நெஞ்செரிச்சல் தரும் என்று ஏகத்துக்கு குழப்புகிறார்கள்.

இதற்கிடையில் மாமிசம் சாப்பிடலாமா கூடாதா என்று காலம் காலமாய் வரும் ஒரு வாதம்.

ஆகக் கூடி குழப்பம் தான் மிஞ்சுகிறது.

வள்ளுவர் அதைத் தெளிவாக்குகிறார்.

பாடல்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

பொருள்

மருந்தென = மருந்து என்ற ஒன்று

வேண்டாவாம் = தேவையில்லை

யாக்கைக்கு  = உடலுக்கு

அருந்தியது = உண்டது

அற்றது = காலியான பின்

போற்றி  = அறிந்து

உணின் = உண்டால்

இந்த உடம்புக்கு மருந்தே வேண்டாம் ,எப்போது என்றால், முன்பு உண்டது செரிமானமாகி விட்டதா என்று அறிந்து உண்டால்.

கொஞ்சம் விரித்துப் பொருள் காண்போம்.


மருந்தென வேண்டாவாம் = மருந்து என்ற ஒன்றே வேண்டாம். மருந்து யார் தருவார். மருத்துவர் தருவார். மருந்து வேண்டாம் என்றால், மருத்துவரும் வேண்டாம். மருத்துவர் வேண்டாம் என்றால் அவர் செய்யும் சிகிச்சையும் வேண்டாம். மருத்துவமனை பக்கமே போக வேண்டாம்.

எப்போது ?

அருந்தியது அற்றது போற்றி உணின்:

ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்து எடுத்துக் போட்டிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

அருந்தியது = உண்டது என்று சொல்லாமல் அருந்தியது என்கிறார். ஏன் ? உணவை வாயில் வைத்து நன்றாக பல்லால் கடித்து, உமிழ் நீரால் கரைத்து அருந்த வேண்டும்.

அவசரம் அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு போகக் கூடாது.

இன்னும் பலர் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டே உணவு உட்கொள்வார்கள். சிலர் புத்தகம் படித்துக் கொண்டே. சிலர் செய்தித் தாள் வாசித்துக் கொண்டே. மற்றும் சிலர் பேசிக் கொண்டே உணவு உண்பார்கள்.

இவை அனைத்துமே தவிர்க்க வேண்டியவை.

உணவை கண்ணால் காண வேண்டும். கையால் அதை ஸ்பரிசிக்க வேண்டும். தொட்டு உணர வேண்டும். அதை வாயின் அருகில் கொண்டு செல்லும் போது அதில் இருந்து வரும் மணம் மூக்கில் ஏற வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து வாயில் உமிழ் நீரை சுரக்கச் செய்யும். அப்போது உணவை நன்றாக அரைத்துத் தின்றால், அது கிட்டத்தட்ட ஒரு கட்டியான திரவ வடிவில் ஆகி விடும். அதை அருந்த வேண்டும்.

மேலும், நாம் உண்ணும் போது, வயிறு நிறைந்து விட்டது என்று மூளை உணர்வதற்கு சில ஹார்மோன்கள் சுரக்க வேண்டும். அந்த ஹார்மோன்கள் சுரக்க கிட்டத்தட்ட வயிறு நிறைந்த பின் 20 நிமிடம் ஆகும் என்கிறார்கள்.

அதாவது, வயிறு நிறைந்த பின்னும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம்,வேகா வேகமாக சாப்பிட்டால். மெல்ல சாப்பிட்டால், வயிறு நிறைந்தவுடன் உடனே நிறுத்த முடியும். எனவே தான் வாயில் வைத்து நன்றாக அரைத்து நிதானமாக சாப்பிட வேண்டும்.


"அற்றது" : அற்றது என்றால் அற்றுப் போய் விட வேண்டும். அதாவது, உண்ட உணவு செரிமானமாகி வெளியேற வேண்டும். உணவு வெளியேறுமுன் மேலும் மேலும் உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தால், கழிவுகளோடு நல்ல உணவும் சேரும். அது நல்லதல்ல.

எதை வேண்டுமானாலும் சாப்பிடு. சர்க்கரையா, கொழுப்பா, எண்ணையா கவலை இல்லை. சாப்பிட்டபின் நன்கு வேலை செய்ய வேண்டும். உண்ட உணவில் உள்ள அனைத்து சத்துகளும் உடலில் சேர்ந்த பின், சக்கை வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும். பின் அடுத்த உணவை உண்ண வேண்டும்.

சில உணவு வகைகள் சீக்கிரம் செரித்து விடும். சில உணவு வகைகள் நீண்ட நேரம் பிடிக்கும் செரிமானம் ஆக. அவசரப் படக்கூடாது. என்ன சாப்பிட்டாலும், நேரத்துக்கு சாப்பிடுவது என்பதை தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக, பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை இரவில் உண்டால், மறு நாள் காலை செரிமானம் ஆகி வெளியேறாது. மதியம் அல்லது மாலை ஆகும். அது வரை காத்திருக்கத் தான் வேண்டும். அது வெளியேறும் முன்பே மேலும் மேலும் உள்ளே தள்ளக் கூடாது.

நமக்கு அனைத்து விதமான உணவும் வேண்டும். உப்பும் வேண்டும், சர்க்கரையும் வேண்டும், காரமும் வேண்டும், புளிப்பும் வேண்டும். அது நல்லது, இது கெட்டது என்று இல்லை. எதை சாப்பிட்டாலும், அது நன்றாக செரிமானம் ஆகும் வரை காத்திருந்து, நன்றாக பசி எடுத்த பின் அடுத்த உணவை உண்ண வேண்டும்.

உணவு எப்படி சீரணம் ஆகும் ? வேலை செய்ய வேண்டும். சும்மா சாப்பிட்டு விட்டு படுத்து கிடந்தால் சீரணம் ஆகாது. உடல் உழைப்பு வேண்டும்.

அப்படி இருந்தால், மருந்தே வேண்டாம்.

இந்த உணவு செரிமானம் ஆகி வெளியேறுவது எவ்வளவு நல்லது என்று வள்ளுவர் கூறுகிறார் தெரியுமா ?

கூடல் இனிதுதான். அதை விட இனிது எது தெரியுமா, மனைவி ஊடல் கொள்வது. அது எப்படி என்றால், சாப்பிடுவது இனிமையானது தான், அதை விட இனிமையானது உண்டது செரித்து வெளியேறுவது என்கிறார்.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்ன இது வள்ளுவர் இப்படி சொல்கிறார். செரித்து வெளியே செல்வது என்ன பெரிய விஷயமா என்று நினைக்கலாம். இரண்டு நாள் வெளியேறாவிட்டால் தெரியும். உணவைப் பார்த்தாலே வாந்தி வரும்.

அடுத்தது,

"போற்றி உணின்": உணவை போற்ற வேண்டும். உணவு உயிரைத் தருகிறது. அறிவைத் தருகிறது. உலகில் உள்ள இன்பங்களை எல்லாம் அனுபவிக்க வழி வகுக்கிறது. அந்த உணவை போற்ற வேண்டும். "என்னது எப்ப பார்த்தாலும் இதே உணவா, இதில் அது சரியில்ல, அதில் இது சரியில்லை " என்று அலுத்துக் கொள்ளாமல், உணவை போற்றி உண்ண வேண்டும்.

அப்படியெல்லாம் செய்தால், மருந்தே வேண்டாம்.

இல்லை என்றால், மருந்து தான், மருத்துவமனை தான், மருத்துவர் தான்...துன்பம்தான்.

வள்ளுவர் இவ்வளவு கஷ்டப் பட்டு சொன்னதை, அந்தக் கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டு போய் விட்டாள்

பசித்துப் புசி

என்று.

என்னத்தச் சொல்ல ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_14.html





Monday, March 12, 2018

திருக்குறள் - நோய் செய்யும் மூன்று

திருக்குறள் - நோய் செய்யும் மூன்று 




மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

நோய் எதனால் வருகிறது?

முதலில் தெய்வ குற்றம் என்று சொன்னார்கள். மாரியாத்தா கோபம் கொண்டால் அம்மை நோய் வரும், அய்யனார் குத்தம், குல தெய்வ குத்தம் என்று கூறிவந்தார்கள்.

பின், நுண்ணுயிரி வாதம் (germ theory ). அதன் படி, நோய் என்பது கிருமிகளால் வருகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளே நோய்க்கு காரணம் என்று கண்டு சொன்னார்கள். எந்த நுண்ணுயிரி எந்த நோய் தரும், அதை எப்படி கொல்லலாம் என்று ஆராய்ந்து சொன்னார்கள்.

பின், கிருமிகள் தான் நோய்க்கு காரணம் என்றால், எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டும் அல்லவா ?  மழையில் நனைந்தால் சிலருக்கு காய்ச்சல் வருகிறது, சிலருக்கு வருவதில்லை. ஏன் ? அதே கிருமிதானே ?

அது அல்ல, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், நுண்ணுயிரிகள் செயல் பட்டு, நோயை உண்டாக்குகின்றன என்றார்கள்.

சரி, நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது ?

அது பற்றி சரியான கருத்து இல்லை. நல்ல சாப்பாடு, உடற் பயிற்சி, உறக்கம், தண்ணீர் அருந்துவது என்று சொல்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்

மிகினும் = அதிகமானாலும்

குறையினும் = குறைந்தாலும்

நோய்செய்யும் = நோய் உண்டாக்கும்

நூலோர் = படித்தவர்கள்

வளி = காற்று

முதலா = முதலாக

எண்ணிய மூன்று = நினைத்த மூன்று

ஏதாவது புரிகிறதா ?

பரிமேலழகர் உரை இல்லாமல் இது புரியாது.

மிகினும் குறையினும் - எது மிகுந்தால், எது குறைந்தால் ?

உணவும், செயலும் ஒரு சம நிலையில் இருக்க வேண்டும்.

அதிகமாக வேலை செய்து விட்டு, குறைவாக உண்டாலும்,

குறைவாக வேலை செய்து விட்டு, அதிகமாக உண்டாலும்

நோய் வரும்.

நமக்கு பெரும்பாலும் இரண்டாவதுதான் பொருந்தும். கொஞ்சம் வேலை, அதிக உணவு.

சாதாரணமாகவே, சனி ஞாயிற்று கிழமைகளில் வேலை குறைவாக இருக்கும். நீண்ட நேர தூக்கம், எழுந்து உணவை ஒரு பிடி  பிடிப்பது.வேலை குறைந்தால் உணவும் குறைய வேண்டும். நாம் தலைகீழாக செய்கிறோம்.

அது மட்டும் அல்ல, வேலைக்கு தக்க உணவு என்றால், அது அளவை மட்டும் குறிக்குமா ? ஒரு இட்டலியும் , ஒரு தோசையும் ஒரே கணக்கா ?

உணவு சுவை வீரியங்களாலும், அளவாலும் ஒத்து போக வேண்டும் என்கிறார்.

அதிகமான காரம், அதிக உப்பு, அதிக இனிப்பு, போன்றவை இருக்கக் கூடாது.

சரி, அதற்காக உப்பே போடாமல் சாப்பிடலாமா ? காரமே வேண்டாம் என்று ஒதுக்கி விடலாமா ?

இரண்டும் கூடாது. வீரியம் கூடினாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.

சம நிலை வேண்டும். நாம் செய்யும் வேலைக்கு தகுந்தவாறு, நம் உடல் நிலைக்கு ஏற்றவாறு  உணவில் சுவையின் அளவு மிதமாக இருக்க வேண்டும்.

சரி சுவையின் அளவு மட்டும் சம நிலையில் இருந்தால் போதுமா ?

சரியான அளவில் உப்பு காரம் இருக்கிறது என்று ஒரு அண்டா சாம்பார் விட்டு சாப்பிடலாமா என்றால், அளவும் சம நிலையில் இருக்க வேண்டும்.

அளவு மிகினும், குறையினும் நோய் செய்யும்.

அளவும் மிதமாக இருக்க வேண்டும், சுவையும் மிதமாக இருக்க வேண்டும்.

நாம் வெளியில் , ஓட்டல்களில், திரை அரங்குகளில் சாப்பிடும் போது என்ன நிகழ்கிறது. நாம் நிறைய உண்டால் தான் அவர்களுக்கு வருமானம் பெருகும். எனவே, உணவில் உப்பையும், காரத்தையும் அதிகமாக சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கும் போது , ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் போல இருக்கும். உடனே அது கூடவே குளிர்பானம் தருவார்கள். அதில் இனிப்பு அதிகமாக இருக்கும். நாம் உப்பு, காரம், இனிப்பு என்று அனைத்தையும் அளவுக்கு அதிகமாக நம்மை அறியாமலேயே உட்கொள்கிறோம்.

நோய் வராமல் என்ன செய்யும்?

சரி சுவை, அளவு இரண்டும் அளவோடு இருக்க வேண்டும் என்று சொன்னால், எது அளவு ? எவ்வளவு உப்பு போடுவது, எவ்வளவு காரம் போடுவது ?

வேலைக்குத் தகுந்தவாறு உணவில் சுவையும் அளவும் இருக்க வேண்டும்.

வேலை என்பது மன , மொழி, மெய்யால் செய்வது. சிலருக்கு உடல் (மெய் ) உழைப்பு அதிகம் இருக்கும். சிலருக்கு அதிகம் பேச வேண்டி இருக்கும். எந்நேரம் பார்த்தாலும் மீட்டிங், lecture என்று இருக்கும். சிலருக்கு அதிகம் சிந்தனை செய்யும் வேலையாக இருக்கும். இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு சிந்தனை செய்யும் வேலையாக இருக்கும்.

வேலையின் தன்மையை பொறுத்து உணவின் அளவும் , சுவையும் இருக்க வேண்டும்.

ஓடி ஆடி வேலை செய்பவன் கொஞ்சம் அதிகமாக இனிப்பு சேர்த்தாலும் அவன் உடம்பு அதை ஜீரணம் செய்து விடும். எரித்து விடும். உடகார்ந்த இடத்திலேயே இருப்பவனுக்கு இனிப்பு அதிகம் கூடாது.

ஒரு உதாரணம் சொன்னேன். மேலும் நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

வளி முதலான = நமது உடம்பிலே மூன்று சக்திகள் இயங்குகின்றன. நீர், நெருப்பு, காற்று.

குளிர்ச்சி, சூடு இது இரண்டுக்கும் இடைப்பட்ட காற்று. வாதம், பித்தம், சிலேத்துமம் என்பார்கள்.

ஒவ்வொரு உணவும் ஒன்றைத் தரும், சில உணவு உடலின் சூட்டை அதிகரிக்கும், சில உணவு வகைகள் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும். சில காற்றின் அளவை அதிகரிக்கும்.

சில உணவை சாப்பிட்டால் வாயு பிரிந்து கொண்டே இருக்கும். .

சில உணவு வகைகளை சாப்பிட்டால் நெஞ்சில் எரிச்சல் வரும். எரியும்.

சில உணவு வகைகளை உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். சில உணவு வகைகள் நீரை சுருக்கும். சில, நீரை பெருக்கும் . உதாரணமாக காபி, டீ போன்றவை நீரை சுருக்கும்.

நமது உடல் நிலை எதை உண்டால் எப்படி மாறுகிறது என்று நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். Sensitivity  என்று சொல்வார்களே அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணிய மூன்று = அவர்கள் எண்ணிப் பார்த்து சொன்ன  மூன்று.

இன்னொரு மூன்றும் இருக்கிறது.

சத்வம், தமோ, ரஜோ குணம் என்று.

சத்வம் அல்லது சாத்வீக மன நிலை. அமைதியான மனம். உயர்ந்த சிந்தனை. அன்பு, அருள் போன்ற மனம்.

ரஜோ குணம் - வேலைக்கு முனைப்பு காட்டும் குணம், ஏதாவது செய்ய வேண்டும் என்று உந்தும் மனம்.

தமோ குணம் அல்லது தமஸ் என்று சொல்வது சோம்பேறித்தனம், செயலின்மை, தரும் குணம்.

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு மன நிலையை தரும்.

மது அருந்தினால் வேகம் பிறக்கும். ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்.  காப்பி, டீ போன்ற வஸ்த்துக்களும் அப்படித்தான்.

புளி, எண்ணெய்  போன்ற உணவு வகைகள் சோம்பேறித்தனத்தை தரும். நல்ல நிறைய நெய் விட்டு செய்த பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் கட்டாயம் வரும்.

பால், மோர், காய் கறிகள், பழ வகைகள் சாத்வீக குணத்தைத் தரும்.

மாமிச உணவு, அதிக காரம், மசாலா, உப்பு இவை ரஜோ குணத்தை தூண்டும்.

உணவு உண்ட சிறிது நேரம் கழித்து உங்கள் மன நிலை எப்படி மாறுகிறது என்று பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை நீங்கள் உணர முடியும்..உங்கள் நுண்ணர்வை கூர்மை படுத்தி வைத்துக் கொண்டால்.


மூன்று குணங்களும் வேண்டும். ஓய்வும் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது ரஜோ குணம் தரும் உணவை உட்கொண்டால் தூக்கம் வராது. புரண்டு புரண்டு படுக்கத் தோன்றும்.

இவை மூன்றில் எது கூடினாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.

நோய் வருவது தெய்வ குற்றத்தால் அல்ல, நுண்ணுயிர் கிருமிகளால் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தியால் அல்ல. உணவினால்.

உணவு சரி இல்லை என்றால் நோய் வரும்.


உணவை கண்டால் , நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு போகக் கூடாது. 

உணவை உண்பதற்கு முன் சிந்திக்க வேண்டும். 

என்ன வேலை செய்தோம், என்ன வேலை செய்யப் போகிறோம், என காலம் இது, எது நமக்கு சரியானது, எவ்வளவு சாப்பிடலாம் என்று திட்டமிட்டு உண்ண வேண்டும். 

பெரிய ஓட்டல்களில்  வரிசை வரிசையாக வைத்திருப்பார்கள். பார்த்தவுடன் எல்லாமே  நன்றாக இருக்கும். எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கக் கூடாது. 

அளவோடு, ஆய்ந்து அறிந்து உண்ண வேண்டும். 

உணவு சக்தியை மட்டும் அல்ல, நோயையும் தரும். 

ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு மேல எப்படி சொல்வது?

என்ன சரிதானே ?

Tuesday, March 6, 2018

கம்ப இராமாயணம் - நிலமும் மனிதர்களும்

கம்ப இராமாயணம் - நிலமும் மனிதர்களும் 


மனித மனத்தை அவன் வாழும் நிலம் பெருமளவு பாதிக்கிறது. மனிதன் அதை நேரடியாக உணர்வதில்லை. நிலம் , நம் வாழ்வோடு  பின்னி பிணைந்து கிடக்கிறது. தமிழரின் வாழ்வை சொல்ல வந்த நம் இலக்கியம் வாழ்வை அகம் புறம் என பிரித்ததோடு நில்லாமல், அவர்கள் வாழ்ந்த இடத்தையும் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தது.

வாழும் நிலம் எப்படி இருக்கிறதோ , மனித மனமும் அப்படியே இருக்கிறது. மண்ணின் வளம், அங்குள்ள நீர் ஆதாரம், விளையும் பொருள்கள் அனைத்தும் மனித மனதை வெகுவாக பாதிக்கிறது.

இராமயாயனம் போன்ற பெரும் காப்பியம் எழுத முனைந்த புலவனுக்கு நில வருணனை செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. கம்பனும் விடவில்லை. அனைத்து சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி நில வருணனையை தருகிறான்.

என்ன நில வருணனை தானே, அதில் என்ன இருந்து விடப் போகிறது, மனிதர்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை...இந்த நில வருணனையில் என்ன இருக்கிறது என்று பெரும்பாலான சமயங்களில் அவற்றை நாம் தள்ளிவிட்டு கதைக்குள் போய் விடுகிறோம்.

அது தவறென்று படுகிறது. நில வருணனையில் ஆயிரம் செய்தி இருக்கிறது.

என்னவென்று பார்ப்போம்.


அயோத்தி !

இராமன் பிறப்பதற்கு முன்னால்.

கம்பன் அங்கே போய் விடுகிறான்.

இராமன் பிறக்கப் போகிற பூமி. அது எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

எங்கிருந்து ஆரம்பிப்பது ?

ஊரை பார்த்துக் கொண்டே வந்த கம்பன், ஊர் எல்லைக்கே வந்து விட்டான்.

ஊர் எல்லையில் ஆறு ஓடி வருகிறது.

சரி, ஆற்றில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறான்.

சரி, ஆறு எங்கே ஆரம்பிக்கிறது என்று சிந்திக்கிறான்....ஆறு மலையில் உதிக்கிறது.

சரி, மலையில் இருந்து ஆரம்பிப்போம் என்று நினைக்கிறான்.

இல்லையே, ஆறு மலையில் இருந்து தொடங்கவில்லை, அது மேகத்தில் இருந்து தொடங்குகிறது என்று நினைக்கிறான்.

சரி, மேகத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்று நினைக்கிறான்.

பின், சிந்திக்கிறான், இல்லையே, ஆறு மேகத்தில் இருந்து தொடங்கவில்லை, கடலில் இருந்து  தொடங்குகிறது என்று நினைக்கிறான்...

அவன் நினைவுகள் இப்படியே பின்னோக்கி போய் கொண்டே இருக்கிறது.

என்னதான் செய்தான் ?

ஆற்றைப் பற்றி கூறுகிறேன் என்று ஆரம்பிக்கிறான்....



பாடல்

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.


பொருள்


ஆசு = குற்றம்

அலம் புரி = துன்பம் புரிகின்ற

ஐம்பொறி = ஐந்து புலன்கள் என்ற

வாளியும் = அம்பும்

காசு அலம்பு = காசு என்பது ஒரு வித ஆபரணம். அது மேனியில் ஆடுகின்ற

முலையவர் = மார்புகளை கொண்ட பெண்களின்

கண் எனும் = கண் என்ற

பூசல் அம்பும் = போர் தொழில் செய்கின்ற அம்பும்

நெறியின் புறம் செலாக் = நல்ல நெறியை விட்டு வெளியே செல்லாத

கோசலம் = கோசல நாடு

புனை = அணிந்து இருக்கும்

ஆற்று அணி கூறுவாம் =ஆற்றின் (சரயு நதியின்) அழகை கூறுவாம்


நில வருணனைதான், இருந்தும் கம்பன் எங்கெல்லாம் தொட்டுச் செல்கிறான்.

ஆசு என்றால் குற்றம் என்று பார்த்தோம்.

வள்ளுவர் கூறுவார்,

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

எவ்வளவு அரிய நூல்களை குற்றமில்லாமல் கற்றாலும், ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றம் இருக்கும்.

குற்றம் அற்றவர்களே இந்த உலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். 

இராமாயணத்துக்கு வருவோம். 

ஆடவர்களுக்கு ஐம்புலனும் நெறியல்லா வழியில் செல்லாது. பெண்களின் கண்கள் நெறியல்லா வழியில் செல்லாது என்கிறார். 

ஏன் குறிப்பாக பெண்களின் கண்ணை மற்றும் சொல்கிறார்?

பின்னாளில், காப்பிய போக்கை மாற்றவும், பேரழிவுக்கும் காரணமாய் இருக்கப் போவது ஒரு பெண்ணின் கண்ணசைவு. 

சூர்ப்பனகை என்ற பெண்ணின் கண்ணசைவினால் அரக்க குலமே வேரோடு சாய்ந்தது. 

முக்கோடி தேவர்கள் செய்ய முடியாதை, மும்மூர்த்திகள் செய்ய முடியாததை, சூர்ப்பனகையின் கண்ணசைவு செய்தது. அரக்கர் குலத்தை வேரறுத்தது.

அதற்கு கட்டியம் கூறுவது போல , கோசல நாட்டின் பெண்களின் கண்கள் நெறியல்லா வழியில் செல்லாது என்கிறார் கம்பர். 

அது மட்டும் அல்ல, ஒரு நாட்டிலோ, வீட்டிலோ அறம் நிலைக்க வேண்டும் என்றால் அது பெண்ணால் தான் முடியும். பெண் ஒரு இழை தவறினாலும் , அறம் தவறும். இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்ல. பெண்ணுக்குத் தரும் உச்சபட்ச மரியாதை. 


வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்திருக்கிறார். அந்த வீட்டின் பெண் மனது வைத்தால்தான் விருந்து சிறக்கும். ஒன்றும் வேண்டாம், வந்தவருக்கு தண்ணீர் தருகிறேன் என்று அந்த தண்ணீர் குவளையை நங் என்று வைத்தால் வந்த விருந்தினர் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடுவார். விருந்து என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால் பெண்ணின் தயவு இல்லாமல் முடியாது. 

அறம் சிறக்க அன்பும், கருணையும் வேண்டும். அந்த அன்பும் கருணையும் மனதில் இருந்தால் அது கண் வழியே வெளிப்படும். 

பெண்களுக்கு நெற்றி சுருங்கி இருக்குமாம் ஏன் என்றால் அருளையும் கருணையையும் வெளிப்படுத்தும் கண்கள் விரிந்து இருப்பதால். 

அவள் பெயர் விசாலாட்சி. விசாலமான கண்களை உடையவள். 

கோசல நாட்டின் பெண்களின் கண்கள் நெறி தவறாது என்று சொன்னால், அந்த நாட்டில் அறம் சிறந்து விளங்குகிறது என்று பொருள். 

பெண் சரியாக இருக்கிறாள் என்றால் நாடும் வீடும் சரியாக இருக்கிறது என்று பொருள். 

பெண் சோகமாக இருக்கிறாள், கோபமாக இருக்கிறாள் என்றால் அந்த நாடும் வீடும்  சரி இல்லை என்று பொருள். 

நாட்டு வருணனையில் எவ்வளவு நுட்பமான பொருளை வைக்கிறான் கம்பன். 

நாட்டையும், வீட்டையும் சரியாக கொண்டு செல்ல வேண்டுமா ? பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். மற்றதெல்லாம் தானாகவே சரியாகும்.

மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post.html