Monday, April 30, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - நளிர் மலர்க் கையினன் 


இராமனிடம் அடைக்கலம் என்று வந்த வீடணனை, இராமனின் மந்திரிகள் மறித்து அவனிடம் விவரம்  கேட்டனர். பின், வீடணனை   அங்கேயே நிறுத்தி விட்டு இராமனிடம் சென்று கூறுகிறார்கள் அந்த மந்திரிகள்.

"பின்னால் நடக்கப் போவதை நாங்கள் அறிய மாட்டோம். வந்திருப்பவன் பெயர் வீடணன். குளிர்ந்த மலர் போன்ற கைகளை உடையவன். நான்கு பேரோடு வந்திருக்கிறான். களவும் வஞ்சனையும் கொண்ட இலங்கை வேந்தனின் இளவல்"

என்றனர்.

பாடல்


விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான்.

பொருள்

விளைவினை  = வரப் போகின்ற வினைகளை

அறிந்திலம்; = அறிய மாட்டோம்

வீடணப் பெயர் = வந்திருப்பவன் பெயர் வீடணன்

நளிர் = குளிர்ந்த

மலர்க் = மலர் போன்ற

கையினன், = கைகளை உடையவன்

நால்வரோடு உடன் = நான்கு பேரோடு வந்திருக்கிறான்

களவு இயல் = களவை இயல்பாகக் கொண்ட

வஞ்சனை  = வஞ்சனையான

இலங்கை காவலற்கு = இலங்கை வேந்தனுக்கு

இளவல்,  = இளையவன்

நம் சேனையின்  = நமது சேனையின்

நடுவண் எய்தினான் = நடுவில் வந்து இருக்கிறான். .

நமக்குத் தோன்றும் உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அவயத்தின் மூலம்  வெளிப்படுகின்றன.

கோபம் வந்தால் பல்லைக் கடிப்போம் , கண் சிவக்கும்.

காமம் வந்தால், காது சிவக்கும், இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.

பயம் வந்தால் வயிற்றை என்னவோ செய்யும்.

பொறாமை வந்தால் வயிறு எரியும்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்

என்பார் வள்ளுவர்.

அந்தந்த உணர்ச்சிகள் சரியான படி வெளிப்படாவிட்டால், அவை சம்பந்தப் பட்ட  உடல் அவயங்களை அவை பாதிக்கும்.

"இதயமே வெடித்து விடும் போல இருக்கு" என்று சொல்வதில்லையா.

கள்ளத்தனமும், கயமையும் இருந்தால் உடல் விறைப்பாக இருக்கும். யார் எங்கே வருகிறார்கள் என்று கண் அலையும். இதயம் பட பட என அடித்துக் கொள்ளும். உடல் சூடாகும்.

வீடணன் கை , குளிர்ந்த மலர் போல மென்மையாக இருக்கிறதாம்.

வாள் , வேல் பிடித்து சண்டை போட்டு காய்த்துப் போன கை அல்ல.

மலர் போல மென்மையான கை.

குளிர்ந்த கை. கை குளிர்ந்து இருப்பதால், உடலும் குளிர்ந்து இருக்கும். மனதில் கோபம்,பயம் இல்லை.

அவ்வளவு பெரிய சேனைக்கு நடுவில் தைரியமாக , நாலே நாலு பேரோடு வந்திருக்கிறான்.

தான் செய்வது சரி என்பதில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. இராமனிடம் தூது விடவில்லை. நேரே வந்து  விட்டான்.  இறைவனுக்கும் நமக்கும் நடுவில் தரகர்கள் எதற்கு?

இறைவன் இவ்வளவு சமீபம் வந்த பின்னும், நடுவில் இன்னொரு தரகர் எதற்கு?

களவை இயல்பாகக் கொண்ட, வஞ்ச மனம் படைத்த இராவணனின் தம்பி.

குணம் என்பது குலத்தால் வருவது அல்ல. மூன்று சகோதரர்கள். இராவணன், வீடணன், கும்ப கர்ணன். குணத்தில் எவ்வளவு வேறுபாடு.

குலத்தால் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை என்று கம்பன் எடுத்துக் காட்டும் இடம்.

நான்கு வரியில் எத்தனை பாடம்.

படிக்கத்தான் நேரம் இல்லை.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_30.html

Sunday, April 29, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தகவு உறு சிந்தையன் 



நம் நண்பர்களிடம் நம்மைப் பற்றி கேட்டால் அவர்கள் என்ன சொல்லுவார்கள். "...அவரா...அவர் இன்னது படித்து இருக்கிறார்..இங்கே வேலை செய்கிறார்...கல்யாணம் ஆகி ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் இருக்கிறார்கள்.." என்று நம்மைப் பற்றிச் சொல்லுவார்கள். நம் குணத்தைப் பற்றி என்ன சொல்லுவார்கள்?

உங்கள் நண்பர்கள் , உங்களைப் பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருப்பார்கள் ? உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், உங்கள் கணவன்/மனைவி, உங்கள் பிள்ளைகள் உங்களை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ? கேட்டுப் பாருங்கள் ஒரு நாள். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.

இராவணனை விட்டு விலகி வந்த வீடணன், அமைச்சர்களோடு இராமனை காண வருகிறான். அப்போது, அங்கிருந்த வானரங்கள் எல்லாம், வீடணனை "அடி ,பிடி, கொல் " என்று கோபத்தோடு வந்தனர். அந்த சமயம், அனுமன் அனுப்பிய இரண்டு தூதர்கள் வீடணனிடம் "நீ யார்" என்று கேட்டனர். அதற்கு, வீடணனின் அமைச்சர் பதில் தருகிறான்

"சூரிய குலத்தில் தோன்றிய உலகின் நாயகனான இராமனின் பாதங்களை சரண் அடைந்து, உய்யும் வழி தேடி வந்திருக்கிறான். தகைமை வாய்ந்த மனதை உடையவன், நீதி தர்மம் இவற்றின் வழி நிற்பவன், ப்ரம்மாவின் பேரனின் மகன் " என்றான்.

அவ்வளவு உயர்வாக சொல்கிறான் வீடணனைப் பற்றி.

பாடல்

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன்-
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.

பொருள்

Saturday, April 28, 2018

நாலடியார் - பொறுமை

நாலடியார் - பொறுமை 


நமக்கு யாராவது தீங்கு செய்தால், உடனே அவருக்கு ஏதாவது தீங்கு செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. தீங்கு என்றால் பெரிய துன்பம் தர வேண்டும் என்று அல்ல. நாம் சொன்னதை எதிர்த்துச் சொன்னால், நாம் சொல்வதை மதிக்காவிட்டால், நம்மைப் பற்றி சில சமயம் உண்மை சொன்னால் கூட நமக்கு கோபம் வருகிறது.

இப்போது இல்லாவிட்டாலும், வேறு எப்போதாவது அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

அப்படி இல்லாமல், நமக்கு தீமை செய்தவர்களை, நமக்கு துன்பம் தந்தவர்களை பொறுத்துப் போவது என்பது மிகப் பெரிய நல்ல குணம்.

பொறுமை இல்லாமல் பல காரியங்களை செய்து விட்டு பின்னால் வருந்துவதை விட, கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எவ்வளவோ சிக்கல்களை தவிர்க்கலாம்.

பொறுமை பற்றி நாலடியார் சில கருத்துக்களை கூறுகிறது.

நாம் பொறுமையை கடை பிடிக்க வேண்டும் என்றால், அந்த பொறுமையை நாசம் செய்பவர்களிடம் இருந்து முதலில் விலக வேண்டும்.

சில பேர் இருக்கிறார்கள், நாம் ஒன்று சொன்னால், வேண்டம் என்றே குதர்க்கமாக ஒரு பதில் சொல்வார்கள். நாம் அதற்கு ஒரு பதில் சொல்வோம்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நாம் ஏதாவது சொல்லி விடுவோம்.

முட்டாள்களை விட்டு விலகி இருப்பது நலம். அந்த முட்டாள்கள் நாம் சொல்வதை சிதைத்து சொல்வார்கள். திரித்து சொல்வார்கள். அவர்களிடம் இருந்து எப்படியாவது விலகி விட வேண்டும்.

பாடல்


கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.


பொருள்

கோதை யருவிக் = மாலை போல அருவி

(click here to continue reading)

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_71.html

குளிர் = குளிர்ந்து

வரை = மலை (யில் விழும்)

நன்னாட = நல்ல நாட்டை உடையவனே

பேதையோ டியாதும் = போதையோடு ஏதும்

உரையற்க = சொல்லாதே

பேதை = பேதை, அறிவிலி,முட்டாள்

உரைப்பிற் = ஏதாவது நல்லது சொன்னால்

சிதைந்துரைக்கும் = சிதைத்து உரைக்கும். மாற்றிச் சொல்லுவார்கள்.

வகையான் = வழி பார்த்து

வழுக்கிக் = மென்மையாக, (nice ஆகா)

கழிதலே நன்று = விட்டு  விலகி விடுவதே நல்லது .

முட்டாள்கள் எப்போதும் ஏதாவது வாதம்  செய்து கொண்டே  இருப்பார்கள். முன்னுக்கு பின்  முரணாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை விட்டு விலகுவது நலம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அடிக்கடி பொறுமை இழக்கச் செய்பவர்கள் யார்  யார் என்று. முடிந்தவரை அவர்களை விட்டு விலகி நில்லுங்கள்.




கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அயிர்ப்பு இல் சிந்தையான் 



இலங்கையை விட்டு வீடணன் விலகி வந்து விட்டான்.

அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தான். அவர்களும் இராமனிடம் செல்வதுதான் முறை என்று சொன்னார்கள்.

"சரி, இரவில் செல்வது நன்றாக இருக்காது. விடிந்தபின் செல்வோம்" என்று கூறி, அவர்கள் எல்லோரும் ஒரு சோலையில் தங்கி இரவைக் கழித்தார்கள். இராமனும், மாலையில் கடற்கரை ஓரம் உலவி விட்டு இரவு வெகு நேரம் கழித்து பாசறை அடைகிறான்.

மறு நாள் பொழுது விடிகிறது.

இராமன் பாசறையில் மந்திரிகளோடு இருக்கிறான். அப்போது இராமனைக் காண வீடணன் வருகிறான்.


பாடல்

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான்-
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான்.


பொருள்

உறைவிடம் எய்தினான் = தங்கும் இடத்துக்குச் சென்றான் (இராமன்)

ஒருங்கு கேள்வியின் = ஒன்று பட்ட அறிவு சார்ந்த

துறை அறி = துறை என்றால் இடம், பகுதி, வழி என்று அர்த்தம். நூல்களின் வழி அறிந்த

துணைவரோடு = மந்திரிகளோடு

இருந்த சூழலில், = இருந்த சூழலில்

முறை படு தானையின் = முறையாக அங்கு இருந்த படையின்

மருங்கு முற்றினான்= அருகில் சென்றான்

அறை கழல் வீடணன் = சப்தம் எழுப்பும் கழல்களை அணிந்த வீடணன்

அயிர்ப்பு இல் சிந்தையான் = சந்தேகம் இல்லாத மனதை உடையவன்


முன்பே சொன்னேன். தீயவர்களுக்கு தீமையில் இருக்கும் உறுதி, நல்லவர்களுக்கு நல்லது செய்வதில் இருப்பதில்லை என்று.

வீடணன் வருகிறான். அவன் மனதில் எவ்வளவு  சந்தேகங்கள் இருக்கலாம்? ஒரு வேளை இராமன் ஏற்றுக் கொள்ளா விட்டால்? இராமன் தன்னை சந்தேகப் பட்டால் ? இராவணனும் இல்லை, இராமனும் இல்லை என்ற நிலை வந்து  விட்டால் என்ன செய்வது?

இராவணனை விட்டு விட்டு வந்து இருக்கக் கூடாதோ?

என்று இப்படி ஆயிரம் சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், வீடணனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

"அயிர்ப்பு இல் சிந்தையான்"

என்கிறான் கம்பன்.  இராமன் மேல் அவ்வளவு நம்பிக்கை. தான் எடுத்த முடிவின் மேல் அவ்வளவு நம்பிக்கை.

எவ்வளவோ படிக்கிறோம். படித்துக் கொண்டே இருக்கிறோம். ஒன்றிலிருந்து மற்றொன்றாக  அது கிளைத்துக் கொண்டே போகிறது. எது சரி, எது தவறு, எதை பின் பற்றுவது, என்று குழம்பித் தவிக்கிறோம். இந்த குழப்பத்தில் இருந்து  விடுபடுவதற்குள் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

படிப்பில் இருந்து ஒரு தெளிவு வர வேண்டும். மேற்செல்லும் பாதை தெரிய வேண்டும். அந்த அறிவைக் கையில் கொண்டு கரை ஏற வேண்டும்.

இராமனிடம் இருந்த அமைச்சர்கள்

"ஒருங்கு கேள்வியின் துறை அறி துணைவரோடு"

துறை அறிந்தவர்கள். 

ஆறு ஓடிக் கொண்டே இருக்கிறது. அதில் இறங்கி, நம் உடலை சுத்தம் செய்து கொள்ள, அதில் இருந்து தண்ணீர் முகந்து கொள்ள, ஒரு சிறிய இடம் செய்து வைத்து இருப்பார்கள். அதில் படி இருக்கும், பிடித்துக் கொள்ள கம்பி இருக்கும். தண்ணீரின் வேகம் இருக்காது. 

அதற்கு படித்துறை என்று பெயர். 

நேரடியாக ஆற்றில் குதித்தால் அடித்துக் கொண்டு போய் விடும். படித்துறை சுகமான  இடம். ஆற்றின் சுகம் அனைத்தும் கிடைக்கும். ஆபத்து இல்லாமல். 

இறைவனை நோக்கி செல்லுகின்ற அந்த உண்மைத் தேடலில் அங்கங்கு உள்ள  படித்துறைகள் தான் வெவ்வேறு சமயங்கள். 

"சைவத் துறை விளங்க " என்பார் சேக்கிழார். 


வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.


திருஞான  சம்பந்தர் அழுததற்கு ஒரு பாடல்!


சைவம் ஒரு துறை.  வைணவம் ஒரு துறை. நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் இறங்கி நீர் மொண்டு கொள்ளலாம். நீராடலாம். ஆற்றின் நீர் என்னவோ ஒன்று தான்.  துறை முக்கியம் அல்ல. ஆற்றின் நீர் முக்கியம். 

இராமனிடம் இருந்த அறிஞர்கள் "துறை அறிந்தவர்கள்". 

துறை அறியாவிட்டால், ஆற்றின் நீர் அடித்துக் கொண்டு போய் விடும். 

புத்தகங்களை படிப்பதன் மூலம்,  துறை அறிந்து, அதில் இறங்கி, உண்மையை தரிசித்துக் கொள்ள வேண்டும்.  ஆயுள் பூராவும் படித்துக் கொண்டே இருப்பேன் என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லை. 

இரண்டு பாடங்கள் இந்தப் பாடலில். 

Thursday, April 26, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - புன் புறப் பிறவியின் பகைவன் 


உள்ளுணர்வு என்று சொல்லுவார்கள்.

அறிவுக்கு அப்பாற்பட்டது அது. தர்க்கத்திற்கு அடங்கியது அல்ல. ஒருவரைப் பார்தவுடன் அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று மனம் முடிவு செய்து விடும். அவரைப் பற்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது அல்ல. பார்த்த ஒரு கணத்தில் மனதில் அந்த எண்ணம் பிறந்து விடும்.

முதல் பார்வையில் காதல் என்பார்கள் (Love at first sight).

இந்த உள்ளுணர்வோடுதான் நாம் எல்லோரும் பிறக்கிறோம். இருந்தும் நாளடைவில் நமது கல்வி முறை, நமது சுற்றுப் புறம் இவற்றின் தாக்கத்தால் இந்த உள்ளுணர்வை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறோம்.

எல்லாமே தர்க்கம் (logical reasoning ) பண்ணித்தான் அறிந்து கொள்கிறோம்.

இதயத்தில் இருந்து விலகி நாம் தலைக்குள் குடி போய் விட்டோம்.

இன்றும் கூட பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகமாக இருப்பதைக் காணலாம். கணவன் எங்காவது ஊர் சுற்றிவிட்டு வந்தால், வந்த ஒரு நொடியில் அவளுக்குத் தெரியும் இவன் எங்கோ ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறான் என்று. பிள்ளகைள் சொல்லும் பொய்களை ஒரு கணத்தில் தாய் கண்டு பிடித்துவிடுவாள்.

கணவன் முகத்திலோ பிள்ளைகள் முகத்திலோ கொஞ்சம் மாறுதல் இருந்தாலும்  போதும், அவர்கள் உடனே ஏதோ சரி இல்லை என்று கண்டு பிடித்து விடுவார்கள்.  அது பெண்மையின் குணம்.

வீடணன் சொல்கிறான்,

"இராமனை நான் முன்னப் பின்ன பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. அவன் மேல் இவ்வளவு அன்பு பிறக்கக் காரணம் என்ன என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. நெஞ்சம் உருகுகிறது. அவன் இந்த பொல்லாத பிறவியின் பகைவன் போலும் "

என்று


பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்


'முன்புறக் கண்டிலென் = முன்பு பார்த்தது இல்லை

கேள்வி முன்பு இலென் = கேள்விப் பட்டதும் இல்லை

அன்பு உறக் காரணம்  = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம்

அறியகிற்றிலேன் = அறிய  மாட்டேன்

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிர்கிறது

 நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அந்த இராமன்

புன் புறப் பிறவியின் = கீழான இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது

காதல் வயப்பட்ட யாரிடமாவது கேட்டுப் பாருங்கள் ..."உனக்கு ஏன் அந்தப்
பெண்ணை அல்லது ஆணை பிடித்து இருக்கிறது" என்று.

"ஏன்னா என்ன சொல்றது. பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்" என்பதுதான் பதிலாக இருக்கும்.

காரணம் எல்லாம் தெரியாது.

காதல், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.

நாளையே இறைவன் உங்கள் முன்னால் வந்து நின்றாலும் உங்களுக்கு நம்பிக்கை வராது. அவர் ஏதாவது magic செய்து கட்டினால் தான் நம்புவீர்கள். காரணம், உள்ளுணர்வு இறந்து விட்டது. எல்லாம் மூளையைப் பற்றி நடக்கிறது.

வீடணன் உருகுகிறான்.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் பாடியத்தைப் போல, "நெஞ்சம் உருகுகிறது" என்கிறான்.

இராமன் மேல் அன்பு பிறக்கிறது. அதற்கு காரணம் தெரியாமல் தவிக்கிறான். முன்னப் பின்ன தெரியாதவர்கள் மேல் இவ்வளவு காதலா ? அனுபவம் இருந்தால் எளிதாகப் புரியும்.

இந்தப் பிறவிச் சுழலை அழித்து ஒழிப்பவன் இந்த இராமன் என்கிறான்.

"புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்."

இந்த பிறவி என்ற பெரிய கடலை யார் நீந்திக் கரை சேர்வார்கள் என்றால், இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டவர்கள். மற்றவர்கள் கரை சேர மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் . நீந்தாதார் இறைவனடி சேராதார்

என்பது வள்ளுவம்.

வீடணன் , இராமனை சென்று அடைந்ததற்கு காரணம் அவனுக்கே தெரியாது. இராமனை அவன் பார்த்தது கூட கிடையாது. அவனைப் பற்றி வீடணனுக்கு ரொம்ப ஒண்ணும் தெரியாது.

ஏதோ ஒரு ஈர்ப்பு.  அவன் உள்ளுணர்வு சொல்கிறது. "அவனிடம் போ, அவன் இந்தப் பிறவிப் பிணியை மாற்றுவான் " என்று.

அவன் செய்தது சரியா தவறா என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளாமல், நாம் செய்ய வேண்டியது என்ன என்று யோசிக்கலாமே ?

உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம், இதயம் சொல்வதைக் கேளுங்கள். அது ஒரு போதும் தவறு செய்யாது என்பது என் முடிவு.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_26.html

Wednesday, April 25, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இப் பிறவி போக்குதும் 


தான் சொல்லியதை இராவணன் கேட்கவில்லை என்பதால் வீடணன் இலங்கையை விட்டு வெளியேறினான். இராம இலக்குவர்களை அடைய வேண்டும் என்பது அவன் எண்ணம். அவனுடைய அமைச்சர்களிடம் கேட்டான். அவர்களும் வீடணன் நினைப்பதே சரி என்றார்கள்.

வீடணன் அந்த அமைச்சர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்

"நல்லது சொன்னீர்கள். இராமனை சென்று சேராமல் இருந்தால் நாமும் அரக்கர்கள் ஆவோம். எல்லை இல்லாத பெரும் கருணை கொண்ட இராமனின் திருவடிகளை நாடி இந்த பிறவிப் பிணியை போக்குவோம் " என்று.


பாடல்

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

பொருள்


'நல்லது சொல்லினீர் = (அமைச்சர்களே) நல்லது சொன்னீர்கள்

நாமும், = நாமும்

வேறு இனி = வேறு ஏதாவது

அல்லது செய்துமேல் = நல்லது அல்லாததைச் செய்தால்

அரக்கர் ஆதுமால் = அரக்கர்கள் ஆவோம் என்பதால்

எல்லை இல் = எல்லை இல்லாத

பெருங் குணத்து = பெரிய குணங்களை உடைய

இராமன் தாள் இணை = இராமனின் திருவடிகளை

புல்லுதும்; = அடைவோம்

புல்லி, = அடைந்து

இப் பிறவி போக்குதும். = இந்த பிறவிப் பிணையில் இருந்து விடு படுவோம்


மாத்திரையின் மேல் சர்க்கரை தடவி இருப்பார்கள். சர்க்கரையை மட்டும் நக்கிப் பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறது என்று மாத்திரையை விட்டு விடக் கூடாது.

கதை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும்.

அது சர்க்கரை போல.

அடியில் உள்ள கருத்து மருந்து போல. பிறவிப் பிணிக்கு மருந்து சொல்கிறான் கம்பன்.  பிணிகளில் பெரிய பிணி இந்தப் பிறவிப் பிணி.


இராமனை சென்று சேராவிட்டால் நாமும் அரக்கர்கள் ஆவோம் என்கிறான்.  அரக்கர் என்பது பிறப்பினால் அல்ல. செய்யும் செயல்களால். இராமனே நேரில் வந்திருக்கிறான். அப்போதும் அவனை சரண் அடையாவிட்டால் அது அரக்க குணம் என்று சொல்கிறான்.

இறைவனை அடைய வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிரார்கள். எப்படி அடைவது. என்னதான் தலை கீழாக நின்றாலும், இறைவன் இருக்கும் இடத்துக்கே போய் விட்டாலும், இறைவனை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தது எல்லாம் நாம் பார்த்த சிலைகள், வீட்டில் உள்ள சில படங்கள். யாரும் இறைவனை நேரில் கண்டு வந்து இந்த சிலைகளையோ படங்களையோ உருவாக்கவில்லை.

எனவே இறைவன் இருக்கும் இடமும் நமக்குத் தெரியாது. அவன் உருவமும் நமக்குத் தெரியாது.

எனவே தான், இறை அவதாரம் எடுத்து நம்மிடம் வருகிறது. நமக்கு இறைவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியுமே. எனவே அவனே நம்மிடம் வருகிறான்.

நம் வினை. நேரில் இறையே வந்தாலும், நாம் அடையாளம் காண முடியாமல் அலைகிறோம்.

இராமனை மானுடன் என்று நினைத்துக் கேட்டான் இராவணன்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கேட்டான் துரியோதனன்

முருகனை பாலன் என்று சொல்லிக் கேட்டான் சூர பத்மன்.

இறைவன் நேரில் வந்து உபதேசம் செய்தும் அவனை அறியமாட்டாமல் விட்டு விட்டார் மணிவாசகர். அந்த ஆதங்கத்தின் புலம்பல் தான் திருவாசகம்.

இராமன் நேரில் வந்த போது , அவன் இறைவன் என்று வீடணன் கண்டு கொண்டான். இராவணன் கண்டு கொள்ள வில்லை.

கண்டு கொண்ட வீடணனை வீபிஷண ஆழ்வார் என்று வைணவம் கொண்டாடுகிறது.

சீதையை தூக்கிச் சென்ற இராவணனின் தம்பி ஆழ்வார் !

காரணம், அவன் இறைவனை அறிந்தான்.

வீடணன் ஏன் இராமனிடம் சென்றான் ?

இலங்கை அரசு வேண்டியா ? புகழ் வேண்டியா ? உயிருக்கு பயந்தா ?

இல்லை, இந்த பிறவி சூழலில் இருந்து விடு பட.

"புல்லி இப் பிறவி போக்குதும்" என்றான்.

அரக்கப் பிறவி போய் ஆழ்வாராக அவதரித்தான்.

"எல்லையில் இல் பெருங் குணத்து "


இராமனுடைய நல்ல குணங்களுக்கு ஒரு எல்லை இல்லை. அது விரிந்து கொண்டே போகிறது என்கிறான்.

நல்லவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப் பிறவியைப் போக்க, அதுவே வழி. அது அல்லாத வழி எல்லாம் அரக்கர்கள் வழி.

வீடணன் செய்தது சரியா தவறா ?


http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_25.html

Tuesday, April 24, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அன்பு பூண்டனென் 


தான் சொன்ன எதையும் இராவணன் கேட்கவில்லை என்றானபின், வீடணன் இல்லங்கையை விட்டு வெளியேறினான்.

அடுத்து என்ன செய்வது என்று அமைச்சர்களிடம் கேட்கிறான் வீடணன்.

இரண்டு விஷயங்களை கூறுகிறான் வீடணன்.

ஒன்று, அறத்தை தலையாகக் கொண்டவர்களிடம் நான் அன்பு கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது, புகழ் அல்லாத வாழ்வு எனக்கு வேண்டாம்

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள். என்று கேட்டான் வீடணன்.

மிக ஆழமான பொருள் கொண்ட பாடல். பார்ப்பதற்கு சாதாரண பாடல் போலத் தெரிந்தாலும், மிகுந்த அர்த்தம் உள்ள பாடல்.

பாடல்

அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்.

பொருள்


அறம்தலை = அறத்தை தலைமை பண்பாகக் கொண்டு

நின்றவர்க்கு = நின்றவர்களிடம் (இராம இலக்குவனர்களிடம்)

அன்பு பூண்டனென்; = அன்பு கொண்டேன்

மறந்தும் = மறந்தும் கூட

 நன் புகழ் அலால்  = நல்ல புகழ் அல்லாத

வாழ்வு வேண்டலென்; = வாழ்வை விரும்ப மாட்டேன்

"பிறந்த என் = என் உடன் பிறந்த இராவணன்

உறுதி நீ பிடிக்கலாய்" எனாத் = தான் கொண்டதைப் போல செய்யும் செயலில் நான் உறுதியாக இல்லை என்று சொன்ன பின்

துறந்தனென்; = அவனைத் துறந்து விட்டேன்

இனிச் செயல் சொல்லுவீர் ' = இனி செய்யும் செயல் என்ன சொல்லுங்கள்

என்றான்.  = என்றான்

தீயவர்களுக்கு தீமை மேல் உள்ள உறுதி, நல்லவர்களுக்கு நல்லவை மேல் இருப்பது இல்லை.

கொஞ்சம் சிக்கல் வந்தாலும், நல்லவர்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒருவேளை நாம் செய்வது தவறோ என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விடுகிறது.

ஆனால், தீயவர்களோ, தாங்கள் செய்யும் தீமையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

உலகில் மிகப் பெரிய சிக்கல் அது தான்.

இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்க ஒரு அதிகாரி முயற்சி செய்கிறார். அவரை மற்றவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். அவரை ஊர் ஊராக மாற்றல் செய்கிறார்கள். கொஞ்ச நாளில் அவருக்கு சந்தேகம் வந்து விடுகிறது...தான் செய்வது சரிதானா என்று. எதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்.  நாமும்  மற்றவர்கள் போல் இலஞ்சம் வாங்கினால் என்ன என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்.

இராவணன் சொல்கிறான் வீடணனைப் பார்த்து

"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்"

என் உடன் பிறந்த நீ, என்னைப் போல உறுதியாக இல்லை என்று. இராவணனுக்கு தான் செய்யும் தீமை மேல் அவ்வளவு உறுதி.

அந்த மாதிரி உறுதி தளரும் வாய்ப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும் ?

தீயவர்களின் சகவாசத்தை விட்டு விலகி விட வேண்டும். அவர்கள் கூடவே இருந்தால் , அவர்கள் நம் உறுதியை குலைத்து நம்மையும் அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள். எப்போதெலலாம் நமக்கு குழப்பம் வருகிறதோ, அப்போது உடனடியாகச் செய்ய வேண்டியது, தீயவர்களை விட்டு விலக வேண்டும்.

"துறந்தனென்"

என்றான்.

அது மட்டும் அல்ல, நல்லவர்கள் பக்கம் சேர வேண்டும்.

வீடணன் சொல்கிறான்

"அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;"

அறத்தை தலையாகக் கொண்டவர்கள் மேல் எனக்கு அன்பு பிறக்கிறது என்று.

அறத்தை யார் தலையாகக் கொள்வார்கள் ? நல்லவர்கள்.

நல்லவர்கள் பால் சேர வேண்டும்.


தீயவர்களை விட்டு விலகி, நல்லவர்கள் பால் ஏன் சேர வேண்டும் என்றால், அப்போதுதான்  "நன் புகழ் " கிடைக்கும். 

இராவணன் கூட இருந்து சண்டை போட்டு உயிர் விட்டாலும் புகழ் கிடைக்கும். அது தீமைக்கு துணை நின்ற புகழ். மாற்றான் மனைவியை கபடமாக  கவர்ந்து வந்த ஒருவனுக்கு துணை நின்றதால் வரும் புகழ் நல்ல புகழா ? 

நல்ல புகழ் இல்லாத வாழ்வை மறந்தும் விரும்ப மாட்டேன் என்கிறான். 

"மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்"

நல்ல புகழ் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்கிறான்.

உங்கள் வாழ்வில் சிக்கலோ, குழப்பமோ வந்தால் முதலில் ,

கெட்டவர்களை விட்டு விலகுங்கள் 
நல்லவர்கள் பால் சேருங்கள் 
எது நீண்ட நல்ல புகழைத் தருமோ அதைச் செய்யுங்கள் 

கெட்டவர்கள் என்றால் தீமை செய்பவர்கள் என்று அர்த்தம் அல்ல. நம் தன்னம்பிக்கையை குலைப்பவர்கள் , நம் மேல் சந்தேகம் கொள்பவர்கள், நம் மீது பொறாமை கொண்டவர்கள்  ...அப்படிப் போன்றவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். தீயவர்கள் தாங்கள் கொண்ட நோக்கத்தில் மிக உறுதியாக இருப்பார்கள். 

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பழமொழி. 

வீடணன் சரணாகதி அடைந்தது சரியா தவறா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். 

அந்த சரணாகதியில் நமக்கு கம்பன் தரும் பாடம் என்ன என்று கண்டு, சரி என்றால் அதை கடை பிடிப்பதல்லவா நமக்கு நல்லது ?

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_24.html





Sunday, April 22, 2018

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இலங்கை நீங்குதல்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - இலங்கை நீங்குதல் 


கம்ப இராமாயணத்தில் உள்ள நெருடலான பகுதிகளில் விபீஷண சரணாகதியும் ஒன்று.

வீடணன் செய்தது சரியா? சீதையை தூக்கி வந்த போதே, இராவணனை விட்டு விலகி இருந்தால் அவன் செய்த செய்கை நியாமானதாக இருக்கும். இராமன் படை எடுத்து வரும் வரை அமைதியாக இருந்து விட்டு, இராமன் வந்தவுடன், இராமன் பக்கம் போய் சேர்ந்தது சரியா ?

வீடணனைப் போலவே கும்பகர்ணனனுக்கும் , இராவணன் செய்ததில் உடன்பாடு இல்லை. அவனும் , இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்கவில்லை. அதற்காக கும்பகர்ணன் இராவணனை விட்டு விட்டுப் போய் விடவில்லை. இறுதி வரை அவனோடு இருந்து, அவனுக்காக போர் செய்து, உயிர் தியாகம் செய்தான்.

ஆனால், வீடணனோ, இராவணன் கூட இருந்து விட்டு, சண்டை என்று வந்த போது, எதிரியான  இராமன் பக்கம் சேர்ந்து விட்டான்.

இந்நாள் வரையிலும் அந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதை சரியா , தவறா என்ற கோணத்தில் ஆராயாமல், திறந்த மனத்துடன் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

காப்பியத்துக்குள் போவோம்.

வீடணன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராவணன் கேட்கவில்லை. "நான் எவ்வளவோ சொன்னேன். நீ உணரவில்லை.  என் பிழை பொறுப்பாய்" என்று இராவணனிடம் சொல்லி விட்டு வீடணன் இலங்கையை விட்டு அகன்றான்.

அங்கு ஆர்மபிக்கிறது இந்த சரணாகதிப் படலம்.

பாடல்



‘எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.

பொருள்

‘எத்துணை வகையினும் = எத்தனையோ வழிகளில்

உறுதி எய்தின = உனக்கு நல்லது செய்யக்கூடியவற்றை

ஒத்தன உணர்த்தினேன் = தேவையானவற்றைச் சொன்னேன்

உணர கிற்றிலை = நீ உணரவில்லை

அத்த! = தந்தை போன்றவனே

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே என்பார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

என் பிழை பொறுத்து அருளுவாய் = என் குற்றத்தை பொறுத்து அருள் செய்வாய்

எனா = என்று கூறி விட்டு

உத்தமன் = நல்லவனான வீடணன்

அந்நகர் ஒழியப் போயினான் = அந்த நகரமான இலங்கையை விட்டு விலகிப் போயினான் .

இது மேலோட்டமான பொருள். உட்பொருள் என்ன?

வீடணன் எவ்வளவோ விதங்களில் எடுத்துச் சொன்னான். இராவணன் கேட்கவில்லை.  தான் நினைத்துதான் சரி என்று அடம் பிடித்தான்.

வாழ்க்கை நமக்கு பல விதங்களில் நல்லதை நாளும் எடுத்துச் சொல்கிறது.  நாம் தான் கேட்பது இல்லை. நாம் நினைப்பதே சரி என்று முரட்டுப் பிடிவாதத்தோடு இருக்கிறோம்.  "நான் செய்வது, நினைப்பது எப்படி தவறாக இருக்க முடியும் "  என்று பலதடவை நினைக்கிறோம். மற்றவர்கள் சொல்வது சுத்தமாக தவறு என்று நினைக்கிறோம். அதுதான் அரக்க குணம்.

நல்லவர்கள் சொல்லிப் பார்ப்பார்கள். கேட்கவில்லை என்றால் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள்.

நல்லவர்களோடு நட்பு கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை ஏற்று நடக்க வேண்டும்.

பெரியாரைத் துணை கோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

பெரியவர்கள் சொல்வதை எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டு விட்டு, "இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற நாம் போன வழியிலேயே போய்க் கொண்டிருந்தால் இராவணனுக்கு நேர்ந்ததுதான் நமக்கும்  நேரும் என்பது முதல் பாடம்.

படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_22.html

Friday, April 20, 2018

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும்

திருக்குறள் - நினைத்துப் பார்க்க வேண்டும் 


கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வந்தால் என்ன செய்வது ?

எவ்வளவுதான் அன்யோன்யமாக இருந்தாலும், எங்காவது ஒரு தவறு நிகழத்தான் செய்கிறது.

கணவனுக்கு இன்னொரு பெண்ணின் மேல் ஏதோ ஈர்ப்பு. கொஞ்சம் நெருங்கி பழகுகிறான். தவறுதான். இருந்தாலும், ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, தவறி விடுகிறான்.

அது மனைவிக்குத் தெரிய வருகிறது. அவளுக்கு தாங்க முடியாத கோபம். அவனின் துரோகத்தை அவளால் சகிக்க முடியவில்லை. அவள் இவ்வளவு நாளாக கட்டி காத்து வந்த கோட்டை தகர்த்த வலியை அவளால் பொறுக்க முடியவில்லை. அனைத்தையும் தீ வைத்து கொளுத்தி விடலாமா என்று நினைக்கிறாள். பிள்ளைகள் எப்படியும் போகட்டும். யார் எப்படி போனால் என்ன என்று கோபத்தின், வெறுப்பின் உச்சியில் இருக்கிறாள் அவள்.

அவள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? கணவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அல்லது விவாகரத்து பெற்று தனித்து வேறு வாழ்க்கை தொடங்க வேண்டுமா ? யோசித்துக் கொண்டிருங்கள்.

நெருங்கிய நண்பர்தான். நீண்ட நாள் நண்பர். நீங்கள் அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள். ஏதோ ஒரு ஆசையில், உங்களுக்கு வர வேண்டிய ஒரு வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்கிறார். அல்லது உங்களிடம் சொல்லாமல்  ஏதோ ஒன்றை செய்து விடுகிறார். உங்களால் அதைத் தாங்க முடியவில்லை. "நீ எல்லாம் ஒரு மனுஷனா, உன்னை போய் நம்பினேனே , என்னைச் சொல்ல வேண்டும் " என்று நட்பை உதறி விட வேண்டுமா ? அல்லது, அந்த செயலை சகித்துப் போக வேண்டுமா ?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

இப்படி வாழ்வில் பல சிக்கல் வரலாம்.

கணவன் மனைவி உறவில்
நண்பர்களுக்குள்
உறவினர்களுக்குள்
தொழில் முதலீடு செய்தவர்களுக்குள்
மேலதிகாரியின் துரோகம்

என்று எத்தனையோ வகைகளில் நாம் வஞ்சிக்கப் படலாம்.

அப்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் ? உறவை, நட்பை, தொடர்பை  துண்டித்துக் கொள்ள வேண்டுமா ?

இல்லை.

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்


பொருள்

கொன்றன்ன = கொலைக்கு ஒப்பான

இன்னா செயினும் = துன்பம் செய்யினும்

அவர்செய்த = அவர் செய்த

ஒன்று நன்று = நல்லது ஒன்றை

உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும்

உலகிலேயே ஒருவனுக்கு மிக உயர்ந்தது உயிர் தான். அந்த உயிரை பறிப்பதற்கு ஒப்பான ஒரு காரியத்தைச் செய்யினும், அவர் நமக்கு முன்பு செய்த ஒரு நல்ல காரியத்தை மனதில் நினைத்தால் அந்த தீய காரியத்தால் வந்த  துன்பம் கெடும்.

முதல் உதாரணத்தில், கணவன் செய்தது கொலைக்கு ஒப்பான ஒரு கொடிய காரியம் தான். அவன் செய்த தீய செயலை நினைக்கும் போது , அதற்கு முன் அவன் செய்த நல்ல  காரியங்களை நினைத்தால் , தீய செயலின் துன்பம் கெடும். மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் அவன் எவ்வளவோ நல்லது செய்து இருக்கலாம். எவ்வளவோ அன்பை கொட்டி இருக்கலாம். சுயநலம் இல்லாமல் , தன்னை கரைத்து இருக்கலாம். அதை எண்ணிப் பார்த்தால், இந்தத் தவற்றின் துன்பம் குறையும்.

ஒருவர் செய்த நல்லதை எல்லாம் மறந்து விட்டு, அவர் செய்த ஒரே ஒரு தவறான காரியத்தை மட்டும்  பிடித்துக் கொண்டு மல்லு கட்டக் கூடாது.

அது ஒரு அர்த்தம்.

இன்னொன்று, உறவில் சிக்கல்கள் வரும். தவறுகள் நிகழலாம்.  அது எப்படி சரியாகும் என்றால்,  முன்பு செய்த நல்லதை நினைத்தால். எனவே,  உறவு சரியாக இருக்க வேண்டும் என்றால், நல்லது செய்து கொண்டே இருங்கள். பின்னாளில், ஏதாவது தவறு நிகழ்ந்தால், இந்த நல்லவைகள் , அந்தத் தவற்றின் தாக்கத்தை குறைக்கப் பயன் படும்.

ஒருவர் செய்த தவறை மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உறவுகளில் வரும் பெரும் சிக்கல்களை தீர்க்க ஒண்ணே முக்கால் அடியில் வழி சொல்கிறார் வள்ளுவர்.

யோசித்துப் பாருங்கள். எத்தனை உறவுகளை முறித்துக் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.  இது முன்பே தெரிந்து இருந்தால், அந்த உறவுகள் முறிந்திருக்காது அல்லவா ? இனியேனும் உறவுகள் முறியாமல் பார்த்துக் கொள்ள இந்த குறள் உதவட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_20.html

Sunday, April 15, 2018

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும்

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும் 


பாடல்

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

பொருள்

கதம் = கோபம்

காத்துக் = தடுத்து நிறுத்தி

கற்றடங்கல் = கற்று அடங்குவான்

ஆற்றுவான் = அந்த வழியில் செல்பவன்

செவ்வி = சரியான நேரம் பார்த்து

அறம்பார்க்கும் = அறம் பார்த்துக் கொண்டிருக்கும்

ஆற்றின் நுழைந்து = வழியைப் பார்த்து நுழையும்

கதம் என்றால் கோபம் என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள். வள்ளுவர் பல இடங்களில் வெகுளி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். பின் ஏன் இங்கே கதம் என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும் ?

கதம் என்ற சொல் எங்கிருந்து வந்தது ? கோபப் பட்டால் உடம்பு சூடாகும். கண் சிவக்கும்.

உடம்பு கத கதப்பாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் இல்லையா?

கோபம் வந்தால் மட்டும் அல்ல, காமம் வந்தாலும் உடல் கொதிக்கும்.  பொறாமை வந்தால்  "வயிறு எரியும்".  அன்பில் உடம்பு கொதிக்காது. காமத்தில் கொதிக்கும்.  நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் இந்தத் தீயை இவள் எங்கு பெற்றாள் என்பார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

என்னை விட பெரிய ஆள் யார் என்று ஆணவம் வரும்போது, உடல் கொதிக்கும். 

கோபம், காமம், பொறாமை என்ற பல காரணங்களால் உடல் சூடாகலாம். எனவே அவை அனைத்தையும் சேர்த்து "கதம் காத்து" என்றார்.  ஒரு குறளில் எத்தனை குணங்களை சொல்ல முடியும் ? எனவே அனைத்துக்கும் சேர்த்து ஒரே வார்த்தை "கதம்" என்று சொல்லி விட்டார்.  

அடுத்தது, "கற்று அடங்கி"

கல்வி கற்க கற்க அடக்கம் வர வேண்டும்.  அடக்கம் என்றால் மற்றவர்களை பார்த்து  உடல் வளைந்து, வாய் பொத்தி இருப்பது அல்ல. 

புலன்கள் அடங்க வேண்டும். எது சரி, எது தவறு , எது எந்த அளவு சரி என்று அறியும் அறிவு  வேண்டும்.

உணர்ச்சி மிகும் போது அறிவு வேலை செய்யாது.  அறிவு வேலை செய்யாவிட்டால் அவன் முட்டாள் தானே? புலனடக்கம் இல்லாவிட்டால் அறிவு இருந்தும் பயன் இல்லை. 

மேலும், 

நாம் நிரம்ப படித்து விட்டோம் என்ற ஆணவம் வரலாம். எனவே, "கற்று அடங்கல்" என்று கூறினார். 

"ஆற்றுவான்" வழியில் செல்பவன். ஆறு செல்வதற்கு யாரும் பாதை போட்டுக் கொடுப்பதில்லை. அது தன் இயல்பில் செல்கிறது. 

அது போல, இயல்பாக இருப்பவன். கோபம் வரும் , அதை அடக்க முயலுதல், அது மேலும்  சீறிக் கிளம்பும்...அது அல்ல இயல்பு. கோபமே வராமல் இருப்பது. வலிந்து  கட்டுப் படுத்தக் கூடாது. இயல்பாகவே அது அமைய வேண்டும். 

அப்படி இருப்பவன் வீட்டுக்கு வருவதற்கு அறக் கடவுள் நேரத்தையும், வழியையும் பார்த்துக் கொண்டு இருப்பாராம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_27.html



திருவாசகம் - போற்றி

திருவாசகம் - போற்றி 


பாடல்

ஈசனடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பொருள்

ஈசனடிபோற்றி = ஈசன் அடி போற்றி. ஈசனின் திருவடிகளுக்கு வாழ்த்து. ஈசன் என்ற சொல்லுக்கு தலைவன், குரு, இறைவன், அரசன், மூத்தவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஈசன் மனைவி ஈஸ்வரி.

எந்தை அடி போற்றி = என் தந்தையின் அடி போற்றி.

தேசன் அடிபோற்றி = தேசு என்றால் ஒளி. தேசன், ஒளி நிறைந்தவன். பொன்னைப் போல ஒளி நிறைந்தவன் என்பார் சுந்தரர்.

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

 செந்தழல் புரை திரு மேனியும் காட்டி  என்பார் மணிவாசகர்.


முந்திய முதல் நாடு இறுதியும் ஆனாய் ,
மூவரும் அறிகிலர் , யாவர் மற்றறிவார் ,
பண்டனை விரலியும் நீயும் நின் அடியார் ,
பழம் குடில் தொருன் எழுந்தருளிய பரனே ,
செந்தழல் புரை திரு மேனியும் காட்டி ,
அந்தணன் ஆவதும் கட்டி வந்து ஆண்டி ,
ஆரமுதே பள்ளி  எழுந்தருளாயே


சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி = நேயம் என்றால் அன்பு, கருணை, இரக்கம் என்று அர்த்தம். மலம் என்றால் குற்றம், தவறு. நி -மலன் என்றால் குற்றம் இல்லாதவன். கருணை நிறைந்த குற்றமற்றவன்.


மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி =  மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னன் அடி போற்றி. அது என்ன மாயம் ? பிறவி என்பது உண்மை தானே. பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். இதில் இன்ன மாயம் இருக்கிறது?  நாம் தான் பிறக்கிறோம், இறக்கிறோம் , மீண்டும் பிறக்கிறோம் என்பது தெரியாமல் அது நிகழ்கிறது. எனவே மாயப் பிறப்பு. இந்த பிறவி இன்பமானது போலத் தெரியும். ஆனால், துன்பத்தின் இருப்பிடம் இது. அது தெரியாமல் இருப்பதுதான் மாயம்.


சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி = சிறந்த , திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறையும் (வாழும்) நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தீராத இன்பம் அருளும் மலை போற்றி

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_15.html




Friday, April 13, 2018

திருக்குறள் - நல்லவை கேட்க

திருக்குறள் - நல்லவை கேட்க 


பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு ஆயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = அந்த அளவுக்கு

ஆன்ற = சிறந்த, மாட்சிமை பட்ட,  நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லது கேட்டால் நமக்கு நல்லது வரும் என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? நமக்கே தெரியுமே. இந்த மேலோட்டமான அர்த்தம் தவிர இதில் ஆழ்ந்த கருத்துகள் ஏதாவது இருக்குமா?

எனைத்தானும் என்றால் என்ன?

காலம் மற்றும் பொருளால் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

எவ்வளவு நேரம் கேட்கிறோம் என்று அல்ல கணக்கு. ஒரு நாளில் ஒரு சில நிமிடங்கள் கூட போதும். "அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கிறது" என்று அங்கலாய்ப்பதை விட்டு விட்டு, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அது எவ்வளவு சிறிய காலமாக இருந்தாலும், நல்லவற்றை கேட்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நல்லது என்றால் ஏதோ மிகப் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று அல்ல. சின்ன விஷயம் கூட போதும். நல்லவற்றில் பெரியது சின்னது  என்று விலக்கத் தேவை இல்லை.

அனைத்தானும், அந்த அளவுக்கு பெரிய பெருமை தரும். கேட்டா நிறைய கேக்கணும், இல்லாட்டி கேக்கவே கூடாது என்று நினைக்கக் கூடாது. எவ்வளவு கொஞ்சம் கேட்டாலும், அது நல்லது.

அது மட்டும் அல்ல.

கொஞ்சமாக கேட்டால் , கொஞ்சம் பெருமை. நிறைய கேட்டால் நிறைய பெருமை என்று நாம் நினைக்கலாம். எனவே, நிறைய கேட்க வேண்டும் என்று நாம் முடிவும் எடுக்கலாம்.

ஆனால், வள்ளுவர் சொல்லுகிறார், "ஆன்ற பெருமை தரும்" என்று.

கொஞ்சமாகக் கேட்டாலும், சிறந்த பெருமையைத் தரும் என்கிறார். 

சரி. நாம் எவ்வளவோ நல்ல விஷயங்களை கேட்கிறோம். படிக்கிறோம். ஆனால், அப்படி ஒன்றும் ஆன்ற பெருமை வந்து சேர்ந்த மாதிரி தெரியவில்லையே.

நிறைய பேர் தினம் தோறும் விடாமல் டிவி யில் பல பெரியவர்கள் சொல்லும் கருத்துகளை கேட்பார்கள். எத்தனை நாள் கேட்டாலும், பெரிய பெருமை ஒன்றும் வந்த சேர்ந்த மாதிரி இல்லையே.

ஒரு வேளை வள்ளுவர் தவறாகச் சொல்லி இருப்பாரோ ? இல்லை, இருக்கட்டும் என்று கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லி இருப்பாரோ ?


நல்லவை கேட்டால் பெருமை வரும்.

நல்லவை அல்லாததை கேட்டால் ?

சிறுமை வரும் தானே ?

தீயதை, வேண்டாததை, தவறானதை எவ்வளவு குறைந்த நேரம் கேட்டாலும், எவ்வளவு  குறைவாக கேட்டாலும், பெரிய தீமை வந்து சேரும் என்பது நாம் சிந்தித்து உணர வேண்டிய கருத்து.

எனைத்தானும் அல்லவை கேட்க
அனைத்தானும் ஆன்ற சிறுமை தரும்

என்பது பெறப்பட்ட குறள் .

நாம் எவ்வளவு வேண்டாதவற்றை கேட்கிறோம் ? அளவு இருக்கிறதா ?

டிவி யில், வாட்சப்பிஸ் , மெயிலில் , தொலைபேசியில், வெட்டி அரட்டை அடிப்பதில், எவ்வளவு தீயவற்றை கேட்கிறோம்.

தீயவை என்றால் ஏதோ கொலை, கொள்ளை செய்ய திட்டம்  தீட்டுவது பற்றிய செய்தி அல்ல.

பயனற்றவை எல்லாமே நல்லவை அல்லாதவை தான்.

இம்மைக்கும், மறுமைக்கும் பயனுள்ளவை நல்லவை.

அது அல்லாதவை, தீயவை.

அப்படி என்றால், நாம் கேட்கும் தீயனவற்றிற்கு எவ்வளவு தீமை வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

நமது நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் சில பேர், நம் தன்னம்பிக்கை தளரும் படி பேசுவார்கள். "உன்னால் முடியாது, அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது " என்று சொல்லுவார்கள். அதை கேட்டு, நம் நம்பிக்கை தளரும்.

பொறாமை கொண்டவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள், புறம் கூறுபவர்கள், பயனற்ற வெற்றுச் சொற்களை பேசுபவர்கள், வதந்திகளை பரப்புவார்கள் என்று நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு  நாம் தீய வழியில் செல்ல நேரிடலாம். அல்லது, நாம் செய்யக் கூடியவற்றை செய்யாமல் விடலாம்.

நல்லது அல்லாததை கேட்பதில்லை என்று முடிவு எடுங்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது அல்லாதவற்றை கேட்பதை குறைக்கிறீர்களோ, உங்களுக்கு பெரிய நன்மை வந்து சேரும்.

வெட்டிப் பேச்சை கேட்பதை குறையுங்கள்.

எனவே, அப்படி பேசுவதையும் குறையுங்கள். நீங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுத் தானே ஆக வேண்டும்.

எனவே நல்லதை கேட்பது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு நல்லது , நல்லது  அல்லாததை கேட்காமல் இருப்பது.

வெளியில் உள்ள குப்பையை அள்ளிக் கொண்டு வந்து வீட்டுக்குள் யாராவது போடுவார்களா ?

குப்பைகளை ஏன் மண்டைக்குள் திணிக்க வேண்டும் ?

பட்டியல் போடுங்கள். யார் யார் சொல்வதை எல்லாம் கேட்கப் போவதில்லை என்று. எதையெல்லாம் தவிர்க்கப் போகிறீர்கள் என்று (டிவி சீரியல், வாட்சப் அரட்டை...).

இரண்டையும் செய்தால், இரட்டிப்பு நன்மை.

செய்து பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_13.html

Tuesday, April 10, 2018

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்

திருவாசகம் - புறத்தார்க்குச் சேயோன்


புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க



"புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க"

புறம் என்றால் வெளியே

சேய்மை என்றால் தூரத்தில் என்று அர்த்தம். அண்மை என்றால் பக்கத்தில் என்று அர்த்தம்.

புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன். அவனுடைய மலர் போன்ற பாதங்கள் வெல்க.

அது என்ன புறத்தில் உள்ளவர்களுக்கு தூரமானவன்?

இறைவன் எங்கிருக்கிறான் என்று மனிதன் தேடி அலைகிறான். காடு மேடெல்லாம் ஓடுகிறான். மலை ஏறுகிறான். புண்ணிய தலங்கள் தோறும் செல்கிறான். இங்கெல்லாம் இல்லை என்று கைலாயம், வைகுண்டம் என்று கற்பனை செய்து கொண்டு, இந்த வாழ்வில் அல்ல, இறந்த பின் அங்கே போய்ச் சேர்வேன் என்று நினைக்கிறான்.

ஆனால், இறைவவன் அவனுக்குள்ளேயே இருப்பதை அவன் அறிந்தானில்லை. உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ தொலை தூரத்திற்கு சென்று விடுகிறான்.

இறைவன் அவனை விட்டு விட்டு தூர போவதில்லை. மனிதன் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ போய் விடுகிறான். எனவே, உள்ளே இருக்கும் இறைவனை விட்டு விட்டு வெளியே வெகு தூரம் போய் விட்டவர்களுக்கு அவன் தூரத்தில் தான் இருப்பான்.

அது மட்டும் அல்ல,  இறைவன் அவனுக்குள் இருக்கிறான் என்று அறிந்தால், அதே இறைவன்  எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பான் என்று அறிவான். தனக்குள் இறைவன் இருப்பதை அறியாதவன் மற்ற உயிர்களுக்குள்ளும் இறைவன்  உறைவதை அறிய மாட்டான்.

தனக்குள் இறைவனை கண்டவன் எங்கும் இறைவனைக் காண்பான். தனக்குள்  இறைவனை காணாதவன் எங்கும் காண மாட்டான். தனக்குள் இல்லாதது போல்  எதற்குள்ளும் இறைவன் இருக்க மாட்டான் என்று நினைப்பான். எனவே, இங்கு உள்ளதை எல்லாம் விட்டு விட்டு வைகுண்டம், கைலாயம், பரமபதம் என்று இறைவனைத் தள்ளி வைக்கிறான்.

இறைவன் தள்ளிப் போவதில்லை. மனிதன் இறைவனை தள்ளி வைக்கிறான்.

புறத்தார்க்கு சேயோன்.

அகத்தாற்கு அண்மையோன்.

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க"

இறைவனை எங்கும் காண்பவன் எல்லாவற்றையும் வணங்குவான். இந்த உலகமே  போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியதாக நினைப்பான். எல்லாமே இறைவன்தான் என்று அறிவான். எல்லாம் சிவமயம் என்பது புலப்படும். எதிரில் உள்ளவர்களை பார்த்தால் கரம் குவித்து வணங்குவான். அப்படி வணங்குவது ஏதோ பயத்தினாலோ அல்லது பணிவினாலோ அல்ல. எங்கும் நிறைந்த அந்த சக்தியை அறிந்ததனால். அந்த அறிவினால் பிறந்த ஆனந்தத்தால்.

அந்தத் தரிசனம் பெற்ற அபிராமி பட்டார் கூறுவார் "களி நின்ற வெள்ளம் கரை கண்டது இல்லை " என்று ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறார்.


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

விஸ்வரூபம் என்று சொல்கிறார்களே அது என்ன.

ஏதோ ஒருவர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக  ஒரு நொடியில் வளர்ந்து நிற்பது அல்ல.

இந்த உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் , அனைத்து உயிர்களுக்குள்ளும் உறையும் இறையை தரிசித்தவர் சொல்வதுதான் அந்த உருவம்.

அத்தனை உயிர்களும் ஒன்று சேர்ந்த ஒரு உருவம் ....எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை தலைகள், எத்தனை உருவம்...எல்லாம் சேர்ந்த ஒன்று தான் விஸ்வ ரூபம். அந்தத் தரிசனம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. அறிவு வேண்டுமானால் அதை ஏற்றுக் கொள்ளும். அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.

நானும், நீங்களும், இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று தான் என்ற வேற்றுமை அற்ற தரிசனமே விஸ்வரூப தரிசனம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி, காடு மலை எங்கள் கூட்டம் என்று அனைத்தையும் ஒன்றாக கண்டான் பாரதி. அது விஸ்வ ரூப தரிசனம்.


நான் வேறு, நீ வேறு என்று இனம் பிரித்துச் சொல்லும் புத்தி உருகி, பெருகி தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரம் என்பார் அருணகிரி.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

எல்லோரும் ஒன்றென்று உணரும் போது பிறக்கும் மகிழ்ச்சி. பேதங்கள், பிரிவினைகள் மறையும் போது பிறக்கும் ஆனந்தம்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க.

அருகில் உள்ளவர்களை கை கூப்பி வணங்கி விடலாம். அவர்களும் அதை பார்க்க முடியும்.

தள்ளி இருப்பவர்களை, இந்த உலகம் அனைத்தையும் எப்படி வணங்குவது.

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி எல்லோருக்கும் வணக்கம் என்று சொல்லலாம். அது எல்லோருக்கும் தெரியாது தான். இருந்தும் நம் மனதுக்குத் தெரியுமே. இந்த உலகம் முழுவதும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்று.

அது யாராக இருந்தால் என்ன? எங்கிருந்தால் என்ன? என்ன நிறம், ஜாதி, குலமாக இருந்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.

அப்படி பட்ட ஞானம் பெற்றவர்களை மேலும் சிறப்படைய செய்யும் சீரோன் கழல்கள் வெல்க என்கிறார்.

இறை தரிசனத்தின் வெளிப்பாடு.

இது சரிதானா ? இல்லை வலிந்து பொருள் சொல்லும் உத்தியா என்று என்னை நானே கேட்டுப் பார்த்தேன்.

பொருள்களும் , சக்தியும் ஒன்றுதான். வேறு இல்லை என்று நவீன இயற்பியல் கூறுகிறது.

பொருளை சக்தியாக மாற்றலாம். சக்தியை பொருளாக மாற்றலாம். பொருள் என்று சொன்னால் எல்லா பொருளும் தான். நான், நீங்கள், இந்த கணிப்பொறி, கண்ணாடி, மேஜை,நாற்காலி, காக்கை, குருவி, மேகம், சூரியன், என்று அனைத்தும் சக்தியின் வெளிப்பாடு அல்லது மறு உருவம் என்கிறது நவீன இயற்பியல்.

E = M C^2 = M x C x C

என்பது ஐன்ஸ்டினின் மிக பிரபலமான கோட்பாடு.

E என்பது சக்தி, energy

M என்பது பொருள்

C என்பது ஒரு எண் (ஒளியின் வேகம்).

மாணிக்க வாசகருக்கு நவீன இயற்பியல் தெரியும் என்று சொல்ல வரவில்லை.

அனைத்தும் ஒரு சக்தியின் வடிவம் என்று அவர் சொல்கிறார். நவீன அறிவியலும் சொல்கிறது.

அந்த சக்தியை அவர் வழிபட்டார். நாம் அந்த சக்தியை பல விதங்களில் பயன் படுத்துகிறோம்.

அது ஒரு பார்வை, ஒரு perspective என்ற முறையில் சிந்தித்துப் பார்ப்போமே.

வலிந்து பொருள் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று சொல்ல வருகிறேன்.

அதில் ஒரு சுகம் இருக்கிறது. ஒரு ஆனந்தம் இருக்கிறது.

பிரிவினை குறையும் போது மகிழ்ச்சி வருகிறது தானே.

காதலியோடு, மனைவியோடு அன்பு மேலிடும் போது , அவள் வேறு தான் வேறு என்ற பேதம் மறைந்து, இரண்டும் ஒன்றாகும் போது மகிழ்ச்சி வருகிறதா இல்லையா. ஆனால், அது சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விடும்.

பிள்ளைகள் கட்டி அணைக்கும் போது உயிர் உருகுகிறதா இல்லையா ?

பேரப்  பிள்ளைகள் மேலே வந்து விழும் போது, ஈருயிர் ஓருயிராகிறதா இல்லையா? அப்போது எவ்வளவு சந்தோஷம் பிறக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உடன் பிறப்புகளை பார்க்கும் போது, அவரக்ளை கட்டி அணைத்துக் கொள்ளும் போது ஒன்றிப் போகிறோமா இல்லையா? அதில் ஒரு ஆனந்தம் பிறக்கிறதா இல்லையா ?

இந்த உலகமே நம் துணை, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று தோன்றினால் எவ்வளவு இன்பம் பிறக்கும்.

அந்த இன்பம் மறையவே மறையாது. எங்கெங்கு பார்த்தாலும் என் துணை, என் உடன் பிறப்பு, என் பிள்ளைகள், என் பேரப் பிள்ளைகள் என்றால் அந்த ஆனந்தத்துக்கு  அளவு ஏது.

அதுவே பேரின்பம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/04/blog-post_10.html

Monday, April 9, 2018

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

திருவாசகம் - வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பாடல்

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

"வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க"


அது என்ன வேகம் கெடுத்தல்? எதன் வேகத்தை கெடுத்தார் ?

எது வேகாமாகச் செல்கிறதோ, அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

எது மிக வேகமாகச் செல்லும் ?

அனுமனின் வேகத்திற்கு ஒரு உதாரணம் தேடினார் கம்பர். மின்னல் போல் வேகம் என்று சொல்லலாமா  என்று யோசித்தார். அதுதான் எல்லோரும் சொல்கிறார்களே. அதை விட வேகமான ஒன்றை உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

மனம் தான் மிகுந்த வேகத்தோடு செல்வது. நினைத்த மாத்திரத்தில் சந்திரனுக்கு சென்று விடலாம். ஒரு நொடி கூட ஆகாது. அந்த மனதின் வேகத்தை விட வேகமாகச் சென்றான் என்பார் கம்பர்.

"தன் மனதின் முன் செல்வான் " என்பது கம்பர் வாக்கு.

முந்துஅரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில்வாச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம்பலகடந்து, தன்மனத்தின்முன் செல்வான்
இந்திரன் சிறைஇருந்த வாயிலின் கடை எதிர்ந்தான்.

நமது மனம்தான். மனோ வேகம் என்று சொல்லுவார்கள். இங்கே இருந்து கொண்டே வைகுண்டம் என்று சொன்னால் போதும் வைகுண்டம் போய்  விடும். பாற்கடல், ஆதி சேஷன், பெருமாள், இலக்குமி என்று அங்கே போய் சேர்ந்து விடும்.

கைலாயம் என்று சொன்னால் போதும். உடனே மனம் அங்கே போய் விடும். குளிர்ந்த  மலை உச்சி, சிவன், பார்வதி, காளை வாகனம் என்று.

எந்நேரமும் ஒரு இடத்தில் நிற்காது. இங்கிருக்கும் போது அங்கே ஓடும். அங்கே இருக்கும் போது இங்கே தாவும். அங்கே பிள்ளை என்ன செய்கிறானோ என்று பிள்ளை இருக்கும் இடத்துக்குப் போகும். அங்கே அவர்  என்ன செய்கிறாரோ என்று கணவன் இருக்கும் இடம் ஓடும். அவ இப்ப என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று காதலி இருக்கும் இடம்  நாடும். "அந்தக் காலத்தில் " என்று பின்னோக்கி ஓடும். எனக்கு மட்டும் அது கிடைத்தால் என்று எதிர் காலம் நோக்கி ஓடும்.

ஒரு நாள் அமைதியாகி இருந்து கவனித்துப் பாருங்கள். உங்கள் மனம் என்ன ஓட்டம் ஓடுகிறது என்று தெரியும். இடம் விட்டு இடம் மட்டும் அல்ல, காலம் விட்டு காலமும் ஓடும். கற்பனையான இடங்களுக்குப் போகும்.

அதை கொஞ்சம் வேகத்தை நிறுத்தி, ஒரு நிலையில் வைக்க முடியுமா ?

மிக மிக கடினம்.

அருணகிரிநாதர் , முருகன் அருள் கிடைக்க வில்லை என்று கோவில் கோபுரத்தில் ஏறி  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். குதித்தும் விட்டார். பாதி வழியில், முருகன் கையில் ஏந்திக்  கொண்டான். அருணகிரிக்கு இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் உபதேசம் செய்தான் முருகன். "சும்மா இரு". உடல் சும்மா இருந்து விடும். மனம் சும்மா இருக்குமா ?

மனதை கட்டுப் படுத்த நினைத்தால் அது இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு ஓடும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமது அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம். எவ்வளவு பரபரப்பு. ஓட்டம். படபடப்பு.

மனைவியோடு அன்பாக இருந்து பேச நேரம் இல்லை.

பிள்ளைகளை கொஞ்ச நேரம் இல்லை.

மழையில் நனைய, நல்ல கவிதை வாசிக்க, புல் தரையின் இதம் உணர, மென்மையான இசை கேட்க, உணவை இரசித்து உண்ண , கணவன் தலை கோத , மனைவியின் விரல் பற்றி நடக்க .....எதற்காவது நேரம் இருக்கிறதா ?

ஒரே ஓட்டம் தான்.

வாழ்க்கையே புரியாத போது, இறை எங்கே புரியப் போகிறது?

ஓடும் மனதின் வேகத்தைக் குறைத்து, அதை அலை பாய விடாமல் நிறுத்தி என்னை ஆண்டு கொண்ட தலைவன் அடி வாழ்க.

இதைத்தான் பதஞ்சலியும் தன் யோக சாத்திரத்தில் கூறுவார்

"சித்த விருத்தி நிரோதம்" என்று. யோக சூத்தரத்தின் முதல் சூத்திரம் அது.  ஓடும் மனதை நிலை நிறுத்த வேண்டும்.

அடுத்த வரிக்குப் போவோமா ?

"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க"

வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் தெரியும். சில சமயம் அவசரத்தில் ஈரத் தலையோடு முடியை அவசரமாக முடிந்து கொண்டு போவார்கள். மறு நாள் பார்த்தால், ஒரே சிக்காக இருக்கும். "ஈரத்தோட தலையை முடிந்தால் இப்படித் தான் பிசுக்குப் பிடித்து சிக்கலாக இருக்கும் " என்று அம்மாவிடம் பாட்டு வாங்குவார்கள். அந்த ஈரப் பிசுக்குத் தான் "பிஞ்சு" என்று ஆனது.

சிவன் தலையில் எந்நேரமும் நீர். கங்கை. அதோடு கூட முடி போட்டால் சிக்கல் ஆகி பிசுக்கு பிடிக்காமல் என்ன செய்யும் ?

எனவே "பிஞ்சகன்"

பிறப்பறுக்கும் பிஞ்சகன்.

மரணம் இல்லாமல் வாழ வழி இருக்கிறது. அதற்கு ஒரே வழி பிறக்காமல் இருப்பதுதான். பிறந்தது எல்லாம் இறந்தே தீரும். இறக்காமல் இருக்க வேண்டும் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

"பிரபு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்" என்பார் அபிராமி பட்டர்.

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

என்பது அபிராமி அந்தாதி.

நாம் மறுபடி மறுபடி பிறப்பதால் நமக்கு மட்டுமா துன்பம் ? நம்மை பெறுவதற்கு ஒரு தாய் வேண்டும். அவளுக்கு எவ்வளவு துன்பம்? பிரசவ வேதனை என்றால் சாதாரணமா?  நோய் என்றால் , அடி  கிடி பட்டு விட்டால்  உடம்பில்  ஏதோ ஓரிரண்டு இடத்தில் தான் வலிக்கும். பிள்ளை பெறுவது என்றால் உடம்பு அத்தனையும் வலிக்கும். "அங்கமெல்லாம் நொந்து பெற்றாள் " என்பார் பட்டினத்தார்.  அது அம்மாவுக்கு உண்டான வலி. இந்த பிரம்மன் இருக்கிறானே, நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் நமக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். அவனுக்கு கை வலிக்காதா? எத்தனை தடவைதான் எழுதுவான்?

"இன்னும் ஓர் கருப்பையிலே வாராமல் கா " என்று வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

இந்த பிறவிப் பிணியில்  இருந்து விடுதலை தருபவன் ஈசன்.

பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க


மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_9.html

Thursday, April 5, 2018

திருக்குறள் - மாத்தி யோசி

திருக்குறள் - மாத்தி யோசி 



பாடல்

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

பொருள்

பீலிபெய் = மயில் பீலி (தோகை )

சாகாடும் = சகடம், வண்டியின் சக்கரம்

அச்சுஇறும் = அதை இணைக்கும் அச்சு,

அப்பண்டம் = அந்த பண்டம், அதாவது மயில் தோகை

சால = அதிகமாக

மிகுத்துப் = மிகுதியாக

பெயின் = ஏற்றினால்

மயிலின் தோகை மிக மிக மென்மையானது. எடை குறைந்தது. லேசானது. எடை குறைவாகத் தானே இருக்குறது என்று அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது அரசர்களுக்குச் சொன்னது.

சின்ன பகைதானே என்று சேர்த்துக் கொண்டே போனால், ஒரு நாள் அந்த சின்ன பகை எல்லாம்  ஒன்றாக சேர்ந்து கொண்டு உன்னை அழித்து விடும் என்று மன்னர்களுக்கு எச்சரிக்கை செய்தார் வள்ளுவர்.

இதனையே நாம் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன ?

நல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே வந்தால், அது பெரிய  தீமையை வீழ்த்தி விடும்.

அது எப்படி ? சில உதாரணங்கள் பார்ப்போம்.


உடல் எடை என்பது பெரும்பாலானோருக்கு ஒரு பெரிய தலை வலி. என்ன செய்தாலும்  அது குறைவது இல்லை. அதிக எடை என்பது ஒரு தீமை தான். அந்தத் தீமையை எப்படி மாற்றுவது ?

சின்ன சின்ன நல்ல விஷயங்களாக செய்து கொண்டே போனால், எடை பருமன் என்பது  முற்றாக வீழ்ந்து விடும்.

முதலில் தினமும் 30 நிமிடம் நடப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டாம். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம்  நடக்க வேண்டும். ஒரு மாடி, இரண்டு மாடி என்றால் லிப்ட் உபயோகப் படுத்தாமல் படி ஏறி போக வேண்டும். வீடு அல்லது அலுவலகம் ஐந்தாவது மாடியில் இருக்கிறதா ? இரண்டு மாடி ஏறிப் போய் அங்கிருந்து லிப்ட் பிடித்து போகலாம். காரை நிறுத்தி விட்டு, கொஞ்சம் சுத்தி  போகலாம்.

காப்பி டீயில் போடும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்க வேண்டும்.

எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவற்றை உண்ண விரும்பினால் ஒன்றுக்கு மேல் சாப்பிடுவது இல்லை என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் அளவை கொஞ்சம் குறைக்க வேண்டும். மூன்று தோசை சாப்பிடும் இடத்தில்  இரண்டு சாப்பிட வேண்டும்.

பணம் சேர்க்க வேண்டும். என்ன செய்யலாம் ?

எவ்வளவோ வெட்டி செலவு இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். வெளியில் சாப்பிடும் அளவை குறைக்க வேண்டும். மாதம் இரண்டு முறை என்றால், ஒரு முறையாக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அவசரப்படாமல், நிதானமாக யோசித்து நல்ல விலையில் பொருள்களை வாங்க வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக   நல்ல விஷயங்களை செய்து கொண்டே வந்தால், பணத் தட்டுப்பாடு என்ற வண்டியின் அச்சு முறிந்து போகும். அதாவது அந்த பிரச்சனை அகன்று விடும்.

பரீட்சைக்கு படிக்க வேண்டுமா. அரட்டை அடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். whatsapp நேரத்தை குறைக்க வேண்டும். ஊர் சுற்றுவதை குறைக்க வேண்டும். இப்படி தவறான வழியில் செல்லும் நேரத்தை குறைத்து அதை படிப்பில் செலவழித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்

"சால மிகுத்து பெயின்"

சாலை என்றால் அதிகம் என்று பொருள். சால , உறு , தவ, நனி , கூர், கழி என்பன  "அதிகமான" என்ற ஒரு பொருளை குறிக்கும் பல உரிச்சொற்கள்.

சால மிகுத்துப் பெயின் என்று சொல்லும் போது மிக அதிகமாக செய்ய வேண்டும் என்கிறார்.

சின்ன சின்ன நல்ல காரியங்களை மிக அதிகமாச் செய்தால் , தீமை அழிந்து போகும்.

கொஞ்சம் நடக்கனும் , கொஞ்சம் படி ஏற வேண்டும், கொஞ்சம் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும், கொஞ்சம் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும் ..இப்படி செய்து வந்தால், எடை அதிகம் என்ற வண்டி அச்சு முறிந்து விடும்.


தினமும் நடக்கிறேன், எடையே குறைய மாட்டேன் என்கிறதே என்று அலுத்துக் கொள்ளக் கூடாது. நடப்பது நல்லது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் முனேற்றம். அவ்வளவுதான்.  ஆனால், நிறைய  விஷயங்களில் அந்த சின்ன சின்ன முன்னேற்றம் இருக்க வேண்டும்.


நாலு டீ குடிக்கும் இடத்தில், மூணு டீ குடிக்கலாம். அந்த மூணு டீயிலும் , முழு  கிளாஸ் குடிப்பதற்கு பதில் , முக்கால் கிளாஸ் குடிக்கலாம். அந்த முக்கால் கிளாஸிலும் , இரண்டு தேக்கரண்டி சர்கரைக்குப் பதில் ஒரு தேக்கரண்டி மட்டும் போட்டுக் கொள்ளலாம். அருகில் உள்ள கடையில் குடிப்பதற்கு பதில் நாலு கடை தள்ளி நடந்து சென்றும் குடித்து விட்டு வரலாம். போகும் போதும் வரும் போதும் லிப்ட் உபயோகிக்காமல் படி இறங்கி ஏறலாம்.

சின்ன சின்ன முன்னேற்றம் என்பது கடினமாக இருக்காது.

யோசித்துப் பாருங்கள்.

எளிய வழியில், பெரிய சிக்கல்களை விடுவிக்கும் வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_5.html




Wednesday, April 4, 2018

திருக்குறள் - துன்பத்துள் இன்பம்

திருக்குறள் - துன்பத்துள் இன்பம் 


துன்பத்தையே இன்பமாக கருதி விட்டால், பகைவரும் போற்றும் சிறப்பு உண்டாகும் என்கிறார் வள்ளுவர்.

அது எப்படி துன்பத்தையே , இன்பமாக கருதுவது ? அப்புறம் துன்பத்துக்கும் இன்பத்துக்கும் என்ன வேறுபாடு. இந்த வள்ளுவர்  எதையாவது சொல்கிறார். இதெல்லாம் நடை முறைக்கு சரிப் படாது என்று வழக்கம் போல நினைப்போம்.

சிந்திப்போம்.

ஒரு மாணவன் படிக்கிறான். படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஊர் சுத்தலாம். நண்பர்களோடு விளையாடலாம். அரட்டை அடிக்கலாம். சினிமாவுக்குப் போகலாம். இப்படி எவ்வளவோ சந்தோஷமான காரியங்களை விட்டு விட்டு, படிப்பது என்பது கடினமான செயல் தான். முதுகு வலிக்கும். கழுத்து வலிக்கும். தூக்கம் போகும். உடல் சோர்ந்து போகும்.  துன்பம் தரக் கூடியதுதான்.

ஆனால்,

அந்த படிப்பையே, "ஆஹா, எவ்வளவு பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. இதை எல்லாம் அறிந்து கொண்டால் எவ்வளவு நல்லது, மார்க் வருவது ஒரு புறம் இருக்கட்டும், இது எவ்வளவு பயனுள்ளது, எப்படியாவது இதை படித்து இதில் சிறந்து விளங்க வேண்டும்" என்று ஆர்வத்தோடு படிப்பது இன்னொரு  வகை.

அந்த துன்பத்தில் உள்ள இன்பத்தை அறிந்து கொண்டால், சந்தோஷப் பட்டால், அவனுக்கு எவ்வளவு பெரிய சிறப்பு உண்டாகும் ?

கண்ணில் பட்டதை எல்லாம் சுவைத்துப் பார்ப்பது சுகம் தான். இனிமை தான். அதை விடுத்து,  நேரத்துக்கு சாப்பிடுவது, நல்லதை மட்டும் சாப்பிடுவது. தேவையான அளவு சாப்பிடுவது என்று வரை முறை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் அது துன்பம் தான். ஆனால், அப்படி வரை முறையோடு உண்ணும் போது  "இதனால் நான் எடை கூட மாட்டேன், மெலிந்து அழகாக இருப்பேன்.  ஆரோக்கியமாக இருப்பேன். சுறு சுறுப்பாக இருப்பேன். இப்படி சாப்பாட்டில் கட்டுப் பாடோடு இருப்பது எவ்வளவு நல்லது தெரியுமா " என்று அதையே சந்தோஷமாக செய்யப் பழகி விட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அலுவலகத்தில் ரொம்பவும் எதிர் பார்த்த பதவி உயர்வு வரவில்லை. ஏமாற்றம் தான்.  வருத்தம் தான். துன்பம் தான். அதையே துன்பமாக நினைக்காமல் "சரி, இந்த முறை தப்பி விட்டது. அடுத்த முறை விட மாட்டேன். நான் இன்னனது சாதிக்கப் போகிறேன். அதற்கப்புறம் எப்படி எனக்கு பதவி உயர்வு தர மாட்டேன் என்று சொல்லுவார்கள் என்று  பார்ப்போம் " என்று முனைந்து பல செயல்களை ஆர்வத்தோடு செய்தால் பதவி உயர்வு தானே வந்துவிட்டுப் போகிறது.

துன்பம் வரும் போது, அதை எதிர் கொள்ளும் வினைகளை எவன் ஒருவன் ஆர்வத்தோடு செய்கிறானோ, அவன் பகைவர்களும் போற்றும் பெருமையை அடைவான்.

ஒவ்வொரு துன்பமும் , பெரிய செயல்களை செய்ய நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று நினைத்து சந்தோஷமாக , வந்த துன்பத்தை முறியடிக்கும் செயல்களை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், பெரும் புகழ் கிடைக்கும்.

பாடல்


இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு


பொருள்

இன்னாமை = துன்பம்

இன்பம் எனக்கொளின் = இன்பம் என்று கொண்டால்

ஆகும் = ஆகும்

தன் = தன்னுடைய

ஒன்னார் = பகைவர்

விழையும் = மிக விரும்பும் அல்லது பாராட்டும்

சிறப்பு = சிறப்பு

நமக்கு நெருங்கியவர்கள் நம்மை பாராட்டுவது பெரிய விஷயம் அல்ல. நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் கூட நம்மை பாராட்டுவார்கள் என்கிறார்  வள்ளுவர்.

உங்கள் துன்பம் என்ன இப்போது ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_4.html



Tuesday, April 3, 2018

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க

திருக்குறள் - துன்பத்தில் துன்பப் படமால் இருக்க 


வேலை கிடைத்து விட்டது, உடனே நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டி.

பிறந்த நாள் என்றால்  கொண்டாட்டம்.

பதவி உயர்வு என்றால்  பெரிய விருந்து.

என்று இன்பம் வந்தால் தலை கால் புரியாமல் கொண்டாடுவது. அதில் தப்பில்லை. நல்லது நடந்தால் மகிழ்ச்சி தானே.

அதே சமயம், retire ஆகி விட்டால், சோகம். வேலை போய் விட்டால் துக்கம்.

பதவி வந்த போது, ஏதோ தான் தான் பெரிதாக சாதித்து விட்டதாக இறுமாந்து இருந்தால், பதவி போகும் போது துக்கம் நெஞ்சை அடைக்கத்தான் செய்யும்.

சரி, அதற்காக வீட்டில் ஒரு நல்லது நடந்தால் அதை கொண்டாட வேண்டாமா என்றால், கொண்டாடுங்கள். அதில் நிதானம் வேண்டும்.

இன்பமும் துன்பமும் வாழ்வில் இயற்கையாக நிகழ்பவை. இன்பம் வந்த போது தையா தக்கா என்று குதித்தால் , துக்கம் தாள முடியாததாக இருக்கும்.

இன்று நல்ல விஷயம் நடந்திருக்கிறது.  நல்லது. சந்தோஷம் என்று அதை இயல்பாக எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும்.

அப்படி இருந்தால், துன்பம் வரும் போது, அது நமக்கு துன்பமாகத் தெரியாது.

பாடல்


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்


பொருள்

இன்பத்துள் = இன்பம் வந்த போது

இன்பம் விழையாதான் = இன்பம் அடையாதவன்

துன்பத்துள் = துன்பம் வந்த போது

துன்பம் உறுதல் இலன் = துன்பம் அடைய மாட்டான்

 விழைதல் என்றால் மிக விரும்புதல். அதீதமாக கொண்டாடுவது. பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது போல.

பதவி வரும். போகும்.

வேலை வரும். போகும்.

மதிப்பு வரும். போகும்.

இன்பத்துள் ரொம்பவும் தலை கால் புரியாமல் திளைத்து ஆடாமல் இருந்தால், துன்பம் வந்தாலும் அது பெரிதாகத் தெரியாது.

நம்மிடம் என்ன சிக்கல் என்றால், இன்பம் மட்டுமே வேண்டும். அது வந்த போதெல்லாம் கொண்டாட வேண்டும் . துன்பம் வரவே கூடாது என்று நினைக்கிறோம்.

அது யதார்த்தம் அல்ல. கற்பனை வாழ்க்கை.

இன்பத்தில் ரொம்பவும் ஆட்டம் போடாமல் இருந்தால், துன்பத்தில் ரொம்ப வருந்த  வேண்டி இருக்காது.

நிதானமாக இருக்கப் பழக வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post.html