Saturday, April 28, 2018

நாலடியார் - பொறுமை

நாலடியார் - பொறுமை 


நமக்கு யாராவது தீங்கு செய்தால், உடனே அவருக்கு ஏதாவது தீங்கு செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. தீங்கு என்றால் பெரிய துன்பம் தர வேண்டும் என்று அல்ல. நாம் சொன்னதை எதிர்த்துச் சொன்னால், நாம் சொல்வதை மதிக்காவிட்டால், நம்மைப் பற்றி சில சமயம் உண்மை சொன்னால் கூட நமக்கு கோபம் வருகிறது.

இப்போது இல்லாவிட்டாலும், வேறு எப்போதாவது அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.

அப்படி இல்லாமல், நமக்கு தீமை செய்தவர்களை, நமக்கு துன்பம் தந்தவர்களை பொறுத்துப் போவது என்பது மிகப் பெரிய நல்ல குணம்.

பொறுமை இல்லாமல் பல காரியங்களை செய்து விட்டு பின்னால் வருந்துவதை விட, கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எவ்வளவோ சிக்கல்களை தவிர்க்கலாம்.

பொறுமை பற்றி நாலடியார் சில கருத்துக்களை கூறுகிறது.

நாம் பொறுமையை கடை பிடிக்க வேண்டும் என்றால், அந்த பொறுமையை நாசம் செய்பவர்களிடம் இருந்து முதலில் விலக வேண்டும்.

சில பேர் இருக்கிறார்கள், நாம் ஒன்று சொன்னால், வேண்டம் என்றே குதர்க்கமாக ஒரு பதில் சொல்வார்கள். நாம் அதற்கு ஒரு பதில் சொல்வோம்.  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நாம் ஏதாவது சொல்லி விடுவோம்.

முட்டாள்களை விட்டு விலகி இருப்பது நலம். அந்த முட்டாள்கள் நாம் சொல்வதை சிதைத்து சொல்வார்கள். திரித்து சொல்வார்கள். அவர்களிடம் இருந்து எப்படியாவது விலகி விட வேண்டும்.

பாடல்


கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.


பொருள்

கோதை யருவிக் = மாலை போல அருவி

(click here to continue reading)

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_71.html

குளிர் = குளிர்ந்து

வரை = மலை (யில் விழும்)

நன்னாட = நல்ல நாட்டை உடையவனே

பேதையோ டியாதும் = போதையோடு ஏதும்

உரையற்க = சொல்லாதே

பேதை = பேதை, அறிவிலி,முட்டாள்

உரைப்பிற் = ஏதாவது நல்லது சொன்னால்

சிதைந்துரைக்கும் = சிதைத்து உரைக்கும். மாற்றிச் சொல்லுவார்கள்.

வகையான் = வழி பார்த்து

வழுக்கிக் = மென்மையாக, (nice ஆகா)

கழிதலே நன்று = விட்டு  விலகி விடுவதே நல்லது .

முட்டாள்கள் எப்போதும் ஏதாவது வாதம்  செய்து கொண்டே  இருப்பார்கள். முன்னுக்கு பின்  முரணாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களை விட்டு விலகுவது நலம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அடிக்கடி பொறுமை இழக்கச் செய்பவர்கள் யார்  யார் என்று. முடிந்தவரை அவர்களை விட்டு விலகி நில்லுங்கள்.




2 comments:

  1. முற்றிலும் சரி.

    ReplyDelete
  2. அப்படிப்பட்ட ஆட்களுடன் முரண் செய்யாமல் "வழுக்கிக்" கழிய வேண்டுமாம்! ஆகா!

    ReplyDelete