Saturday, June 23, 2018

திருக்குறள் - மனத்தாலும் தீமை செய்யக் கூடாது

திருக்குறள்  -  மனத்தாலும் தீமை செய்யக் கூடாது 


பாடல்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும்

எஞ்ஞான்றும் = எப்போதும்

யார்க்கும் = ஒருவருக்கும்

மனத்தானாம் = மனதாலும்

மாணா = தீங்கு

செய்யாமை = செய்யாமல் இருந்தல்

தலை = தலை சிறந்த அறம்

அவ்வளவுதான் குறள். இதில் என்ன பெரிய கருத்து. யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வள்ளுவர் வேண்டுமா ?

சிந்திப்போம்.

துன்பம் என்பது வாய் வார்த்தையாலோ , அல்லது செய்கையாலோ உண்டாக்குவது மட்டும் அல்ல. அவன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதாலும் துன்பம் நினைக்கக் கூடாது என்கிறார்.

ஒருவன் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால், அவன் மேல் மற்றவர்களுக்கு பொறாமை வருவது  இயற்கை. அந்தப் பொறாமையில், "என்னமோ அதிஷ்டம் அடித்து விட்டது. எத்தனை நாள் இந்த ஆடம்பரம் என்று பார்க்கலாம். கீழே வராமலா போய் விடுவான் " என்று மனதால் நினைப்பதும் தீங்கு என்கிறார்.

நம்மை விட ஒருவன் கீழாக இருந்தால், அவனுக்கு நாம் தீங்கு செய்து விட முடியும். உதாரணமாக , வீட்டில் வேலை செய்யும் பெண்ணை, நம்மால் எளிதாக திட்ட முடியும், ஏளனம் செய்ய முடியும், உதாசீனப் படுத்த முடியும்.

நம்மை விட உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரை அப்படி செய்ய முடியாது. அவன் நமக்கு துன்பம் செய்தால், மனதளவில் அவனை சபிப்போம்.

மற்றவன் நம்மை விட உயர்ந்தவனாக இருந்தாலும் சரி, தாழ்ந்தவனாக இருந்தாலும் சரி, யாருக்கும் துன்பம் நினைக்கக் கூடாது.

எனவே தான் "யார்க்கும்" என்றார்.

எளியவர், வலியவர், செல்வர், ஏழை, படித்தவன், படிக்காதவன் என்று யாராக இருந்தாலும்  அவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது.

வாக்கினாலும், உடலினாலும் மட்டும் அல்ல மனதாலும் மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கக் கூடாது என்று சொல்ல வந்த

"மனத்தானாம்"

என்றார்.

மனதால் நினைக்கக் கூடாது என்று சொல்லி இருந்தால், வாக்கால், உடலால் செய்யலாமா என்ற கேள்வி வரும். மனதாலு'ம்' என்று ஒரு 'ம்' சேர்த்ததன் மூலம், மற்றவற்றாலும் தீங்கு நினைக்கக் கூடாது என்று கூறுகிறார்.

எஞ்ஞான்றும் ..நாம் நம் நண்பர்களுக்கு, நெருங்கிய உறவுகளுக்கு தீங்கு நினைக்க மாட்டோம். மாறாக, எதிரிக்கு, மாற்றானுக்கு, நமக்கு பிடிக்காதவர்களு  தீங்கு வர வேண்டும் என்று நினைப்போம்.  இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரியாக மாறலாம். அதே போல் இன்று எதிர் அணியில் இருப்பவர்கள் நாளை நம்மோடு சேரலாம். எனவே, எப்போதும் , யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.

வாழ்க்கை யாரை, யாரோடு எப்போது , எப்படி சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, "எப்போதும்" யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.



யாருக்கும், எப்போதும், மனதாலும்/வாக்காலும்/உடலாலும் தீங்கு செய்யக் கூடாது. 

சரி, எல்லா தீங்கும் ஒன்றாகுமா ? கொலை செய்வதும், மற்றவனுக்கு ஒரு தீங்கு வர வேண்டும் என்று மனதில் நினைப்பதும் ஒன்றா ?

ஒன்றுதான் என்கிறார் வள்ளுவர். 

"எனைத்தானும்"

என்றால், எவ்வளவு சிறியதாக இருந்தாலும். தீங்கு என்று வந்து விட்டால், அது பெரிதா சிறிதா என்று பாகுபாடு கிடையாது. 

ஒருவரை ஏளனம் செய்வது, மட்டம் தட்டுவது,  நாலு பேர் முன்னால் கீழ்மையாகப் பேசுவது,  மரியாதை குறைவாகப் பேசுவது இதெல்லாம் கூட பெரிய   தீங்கு தான். 

எவ்வளவு சிறியதாக இருந்தாலும் , அதை நினைக்கக் கூடாது என்கிறார். 

நமக்கு வேண்டுமானால் அது சிறியதாக இருக்கலாம். மற்றவருக்கு அது பெரிய வேதனையைத் தரலாம். எனவே, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு தீங்கு  நினைக்கவோ செய்யவோ கூடாது. 

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமே  இருக்கக் கூடாது .


யாராக இருந்தாலும்,
எப்போதும் 
எவ்வளவு சிறியதாக இருந்தாலும் 
மன வாகு காயங்களால் 
துன்பம் நினைக்கக் கூடாது. 

ஒண்ணே முக்கால் அடிக்குள் இவ்வளவு அர்த்தச் செறிவு.

இன்னும் கூட இருக்கலாம். 


சிந்தித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post.html

Friday, June 8, 2018

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி

அபிராமி அந்தாதி - பாதத்தில் மனம் பற்றி 


ஒரு விவசாயி தன் நிலத்துக்கு நீர் வேண்டும் என்று கிணறு தோண்டினான். ஒரு 25 அடி தோண்டியிருப்பான், நீர் வரவில்லை . சரி, இங்கே நீர் இல்லை போல் இருக்கிறது என்று முடிவு செய்து , தோண்டிய கிணற்றை மூடி விட்டு, மற்றொரு மூலையில் சென்று தோண்டத் தொடங்கினான். அங்கு ஒரு 25 அடி தோண்டிய பின், அங்கும் நீர் வரவில்லை என்று அந்தக் கிணற்றையும் மூடி விட்டு இன்னொரு மூலையில் தோண்டினான். இப்படி நாலு இடத்தில் தோண்டிய பின்னும் நீர் வரவில்லை.

அப்போது அங்கே ஒரு துறவி வந்தார். அவர் அந்த விவசாயியிடம் , "ஏனப்பா இவ்வளவு கவலையாக இருக்கிறாய் " என்று கேட்டார்.

அதற்கு அவன் "ஐயா, நீர் வேண்டி நாலு இடத்தில் கிணறு தோண்டினேன். ஒரு இடத்திலும் நீர் கிடைக்கவில்லை ...என்ன செய்யவது என்று தெரியவில்லை...அதனால் கவலையாக இருக்கிறேன் " என்றான்.

அதற்கு அந்த துறவி சிரித்துக் கொண்டே சொன்னார், நீ ஒரே இடத்தில் தோண்டி இருந்தால் அம்பது அல்லது அறுபது அடியில் நீர் கிடைத்திருக்கும். நீ நாலு இடத்தில் 100 அடி தோண்டியும் நீர் கிடைக்காததன் காரணம் நீ உன் முயற்சியை சிதற அடித்ததனால் " என்றார்.

நாமும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நாள் தேவாரம், ஒரு நாள் திருவாசகம், இன்னொரு நாள் கீதை, மற்றொரு நாள்  திவ்ய பிரபந்தம், அப்புறம் அதற்கு உரை, சொற்பொழிவு என்று மரம் தாவும்  குரங்காய் அலைந்து கொண்டிருக்கிறோம்.

அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்று பட்டினத்தடிகள் சொன்னது போல அலைந்து கொண்டு இருக்கிறோம்.

எதிலும் ஒரு நம்பிக்கை இல்லை. விடா முயற்சி இல்லை.


அபிராமி பட்டர் உருகுகிறார்.

"அபிராமி, உன் பெயரைச் சொன்ன ஒரு நிமிடத்தில் என் மனம் உருகி விட்டது. உன் பாதத்தையே என் மனம் பற்றிக் கொண்டு இருக்கிறது. நீ என்னை உன் வழியில் கொண்டு செல்ல அடிமையாக ஏற்றுக் கொண்டு விட்டாய்.  நீயே வந்து என்னை ஏற்றுக் கொண்டபின் , நான் எதற்கு மற்றவர் கருத்தை கேட்டு குழம்பப் போகிறேன். கேட்க மாட்டேன்.  உன்னைத்தான் அனைத்து தேவர்களும் போற்றுகிறார்கள். உனக்கு மேலே ஒரு கடவுள் இல்லை "

என்று பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்.

பாடல்

பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே


பொருள்

பதத்தே = ஒரு வார்த்தையில்

உருகி = உருகி. மனம் உருகி

நின் பாதத்திலே = உன் திருவடிகளில்

மனம் பற்றி = மனம் பற்றி

உந்தன் = உன்னுடைய


இதத்தே = திருவுளப் பாடிய

ஒழுக = நான் வாழ

அடிமை கொண்டாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்

இனி யான் = இனிமேல் நான்

ஒருவர் = மற்றவர்

மதத்தே மதி மயங்கேன் = மாதங்களில் மதி மயங்க மாட்டேன்

அவர் போன வழியும் செல்லேன் = அவர் போகின்ற வழியில் செல்லவும் மாட்டேன்

முதல் தேவர் = மூல தேவர்கள்

மூவரும் = மும் மூர்த்திகள்

யாவரும் = அனைவரும்

போற்றும் = போற்றும்

முகிழ்நகையே = மலரும் சிரிப்பை உடையவளே


பாட்டு வேண்டாம், பூஜை வேண்டாம், ஒன்றும் வேண்டாம்..."அபிராமி" என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்...மனம் அப்படியே உருகி விடுகிறது.  ஒரே ஒரு பதம்  போதும்.

மனம் உருகி ஓடி , அவள் பாதங்களில் சென்று அடைந்து விடுகிறது. நதி நீர் கடலை செண்டு அடைவதைப் போல.

ஒரே கடவுள் - அபிராமி.  அவ்வளவுதான். வேறு எங்கும் மனம் செல்லாமல் அவளிடமே  தஞ்சம் அடைந்து விட்டார்.

எவ்வளவு சுகம்.  தாயின் தோளில் தூங்கும் குழந்தையைப் போல...ஒரு கவலையும் இல்லை. அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை.

ஒரு மானிடத் தாயின் மேல் அவள் குழந்தைக்கு அவ்வளவு நம்பிக்கை.

அபிராமியிடம் விட்டு விட வேண்டும். மதத்ததைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.

எனக்கு என் அபிராமி. அவ்வளவுதான்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_85.html

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின்

குறுந்தொகை - இனிது என்று கணவன் உண்டலின் 


உணவு என்பது உடலுக்கு சக்தி தரும் பொருள் மட்டும் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது.

பல வீடுகளில், உணவு சமைக்கப் பட்டு, மேஜையின் மேல் வைத்து விடுவார்கள். அவரவர் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் போட்டு சாப்பிட்டு விட்டு போவார்கள்.

மாட்டுக்கு வைக்கோல் போடுவதைப் போல, போட்டு விட்டுப் போய் விட வேண்டியது. மாடு எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பது மாதிரி.

ஒன்றாக இருந்து உண்ண வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, பல வீடுகளில் கணவனும் சரி பிள்ளைகளும் சரி போட்டதை சாப்பிட்டுவிட்டு போவார்கள். சாப்பாட்டைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்வது கிடையாது. மணிக்கணக்கில் சூட்டில் நின்று சமைத்ததை, ஏதோ கடனே என்று அள்ளிப் போட்டுக் கொண்டு போவது நல்லாவா இருக்கு. இரசித்துச் சாப்பிட வேண்டும். உணவு தயார் செய்த அம்மாவை, மனைவியை பாராட்ட வேண்டும். உணவு ருசியாக இருந்தால், "இன்னிக்கு இது ரொம்ப பிரமாதம் ..உன் கை பக்குவமே அலாதி தான் " என்று உளப் பூர்வமாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு நேரம் பட்ட பாடெலாம் அந்த ஒரு வார்த்தையில் கரைந்து போகும்.

அவள் அப்போதுதான் திருமணம் ஆகி வந்திருக்கிறாள். கணவனும் மனைவியும்  மட்டும் இருக்கிறார்கள். அவனுக்கு நல்ல உணவு தயாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை. புதுப் பெண். உணவு தயாரித்து பழக்கம் இல்லை. நல்ல சேலை ஒன்றை உடுத்திக் கொண்டு சமையல் ஆரம்பிக்கிறாள்.  அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தயிர் சாதம் செய்து விடலாம் என்று தயிர் சாதம் பிசைந்து கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் அடுப்பில் வைத்த உணவு கொதித்து விட்டது. தயிர் சாதம் பிசைந்த கை. வெளியில் போய் கழுவி விட்டு வர நேரம் இல்லை. கையை அப்படியே அந்த நல்ல சேலையில் துடைத்துக் கொள்கிறார்கள். அடுப்பில் இருந்த உணவை கவனிக்கிறாள். புகை அடிக்கிறது. அந்தக் காலத்தில் gas அடுப்பு ஏது. நெற்றியில் வழியும் வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொள்கிறாள்.

எல்லாம் தயார் ஆகி விட்டது.

கணவனும் வந்து விட்டான். உணவு பரிமாறுகிறாள்.

மனைவியைப் பார்க்கிறான். சற்றே கலைந்த தலை. தயிர் படிந்த சேலைத் தலைப்பு. புகை படிந்த முகம். இருந்தும் அவனுக்கு உணவு செய்து விட்டோம் என்ற  சந்தோஷம் மற்றும் காதல்.

அவனுக்கும் மனதில் காதல் பொங்குகிறது. உன் சமையல் பிரமாதம் என்கிறான். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. முகம் பிரகாசமாக மாறி விடுகிறது.

குறுந்தொகை காட்டும் காட்சி.

பாடல்


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!

பொருள்

முளிதயிர் = கட்டித் தயிர்

பிசைந்த = பிசைந்த

காந்தள் = காந்தள் மலர் போன்ற

மெல் விரல் = மெல்லிய விரல்களை

கழுவுறு = துடைத்துக் கொண்ட

கலிங்கம் = சிறந்த ஆடை சேலை)

கழாஅது உடீஇ = மாற்றாமல் அதையே உடுத்துக் கொண்டு

குவளை உண் கண் = குவளை மலரைப் போன்ற குவிந்த கண்கள்

குய்ப்புகை கழுமத் = புகை நிறைந்த

தான் துழந்து = அவள் கையில் பிசைந்த

அட்ட தீம் புளிப் பாகர் = லேசாக புளித்த தயிர் சாதம்

‘இனிது’ எனக் = நன்றாக இருக்கிறது என்று

கணவன் உண்டலின் = சொல்லி கணவன் உண்டதைக்

நுண்ணிதின் = நுண்ணிய

மகிழ்ந்தன்று = மகிழ்ந்த

ஒள் நுதல் முகனே! = ஒளி நிறைந்த முகம் உடையவள்

முகத்தில் ஒளி வருமா ? சந்தோஷம் நிறைந்து இருத்தால், மனதில் அன்பு நிறைந்து இருந்தால் ஒளி உண்டாகும்.

அந்தக் காலத்தில் ப்ரதீப மஹாராஜா என்று ஒருவர் இருந்தார். இராமரின் முன்னோர். அவர் உடம்பில் இருந்து ஒளி வீசிக் கொண்டிருக்குமாம்.

இராமர் கறுப்புதான். இராமர் உடம்பில் இருந்து ஒளி வீசியதாம். கரிய உடலில் இருந்து ஒளியா ? அதுவும் எப்படி பட்ட ஒளி? சூரியனை மிஞ்சும் ஒளியாம்.

கம்பர் சொல்கிறார்.


வெய்யோன் ஒளிதன் மேனியின் விரி சோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

சூரிய ஒளி, இராமரின் மேல் இருந்து வரும் ஒளியில் மறைந்து விட்டதாம். அவ்வளவு ஒளி பொருந்திய உடல்.

மனைவியை பாராட்டிப் பாருங்கள். அவள் மகிழும் போது, அவள் நாணும் போது ஒளி விடுவதைக் காண்பீர்கள். 

கணவனுக்கு அருகில் இருந்து உணவு பரிமாறிப் பாருங்கள். உறவு பலப்படும். 

இலக்கியங்கள் நம் வாழ்வை மெருகூட்டும். மேலும் சிறப்படையச் செய்யும். 

அன்பு பலப்படட்டும். குடும்பங்கள் சிறக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_8.html

Wednesday, June 6, 2018

தேவாரம் - அஞ்சினேன்

தேவாரம் - அஞ்சினேன் 


எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாழ்க்கையை வேண்டாம் என்று யாரும் சொல்லுவது இல்லை. பொறுக்க முடியாத துன்பம் என்று சொன்னாலும், பொறுத்துக் கொண்டு வாழத்தான் ஆசைப்படுவோமே தவிர, வாழ்வை யாரும் முடித்துக் கொள்ள விரும்புவதில்லை.

அதில் தவறு ஒன்றும் இல்லை. வாழ்க்கை வாழத்தானே.

ஆனால், இந்த உடல் மேலும்,  இந்த உலக வாழ்க்கை மேலும் கொண்ட பற்றினால், இதை விட உயர்ந்தவற்றை மறந்து போய் விடுகிறோம்.  உணவு, உறக்கம், உறவுகள் என்று வாழ்க்கை போய் விடுகிறது. இந்த அர்த்தமில்லாத வாழ்வை கண்டு அஞ்சினேன் என்கிறார் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.

பாடல்


இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, 
பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, 
திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, 
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

இறைகளோடு = பட்டம் பதவிகளோடு

இசைந்த இன்பம் = பொருந்திய இன்பம்

இன்பத்தோடு = அந்த இன்பத்துக்கு

இசைந்த வாழ்வு = ஏற்ப ஒன்றிய வாழ்வு

பறை கிழித்தனைய = பறை என்ற தோல் இசைக் கருவி கிழிந்ததைப் போல

போர்வை = போர்வை போர்த்திய இந்த உடலை

பற்றி யான் = பற்றிக் கொண்டு நான்

நோக்கினேற்கு = பார்த்தால்

திறை கொணர்ந்து = கப்பம் கொண்டு வந்து தந்து

ஈண்டி = அருகில் வந்து

தேவர் = தேவர்கள்

செம்பொனும் = சிறந்த பொன்னும்

மணியும் = மணியும்

தூவி = தூவி

அறை கழல் = ஒலி எழுப்பும் கழல்களை

இறைஞ்சும் = போற்றும்

ஆரூர் = திருவாரூரில்

அப்பனே! = உள்ள என் தந்தை போன்றவனே

அஞ்சினேனே = நான் அஞ்சினேன்

வாழ்க்கையை கண்டு அஞ்சவில்லை.  வாழ்க்கை வீணாகப் போவதைக் கண்டு அஞ்சுகிறார்.  வாழ்க்கையை அர்த்தம் இல்லாமல் கழிப்பதை கண்டு அஞ்சுகிறார்.

பறை என்பது ஒரு தோல் இசைக் கருவி. மத்தளம் போன்றது. அதன் மேல் உள்ள தோலில் அடித்தால் சப்தம் வரும். அந்த தோல் கிழிந்து போனால் அது எதற்கும் உதவாது.

நமது உடலும் தோலினால் போர்த்திய ஒன்று தான். ஒரே ஒரு வித்தியாசம், இது கிழிந்திருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் வெளியேற வேண்டும் அல்லவா ?

பறை கிழிந்தனைய உடல். அந்த உடல் வேண்டும் சுகத்துக்கு இவ்வளவு அலைச்சல். வாழ் நாள் எல்லாம் இந்த உடல் வேண்டும் சுகத்துக்காக செலவிடுகிறோம். எவ்வளவு பெரிய வீண் வேலை.

அரிதினும் அரிதான இந்த வாழ்க்கையை பெற்று, பின் அதை அர்த்தம் இல்லாமல்  கழிப்பதை கண்டு அவர் அச்சப் படுகிறார்.

அவர் அச்சம் சரிதானே?

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_6.html



Friday, June 1, 2018

திருக்குறள் - பெருமை வேண்டுமா?

திருக்குறள்  - பெருமை வேண்டுமா?


பெருமையோடு வாழ வேண்டும் என்று விரும்பாதவர் யார்? எல்லோரும் பெருமையோடு, சிறப்பாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். மற்றவர்களை விட செல்வத்தில், அறிவில், பதவியில் என்று ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை விட சிறந்து விளங்கவே விரும்புகிறார்கள்.

ஆனால், எப்படி அந்தப்  பெருமையை பெறுவது? அதற்கு என்ன வழி?

அதை அறிவதற்கு முன், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

திருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. பெருவாரியான பெண்கள் நிலை அது. விதி விலக்குகள் இருக்கலாம். இருக்கிறது.

கணவன் மேல் ஆயிரம் குறைகள்  சொல்லுவார்கள். கணவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அப்பாவி, சோம்பேறி, என்றெல்லாம் கூறுவார்கள். இருந்தும், கணவனை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் "ஒருமை மகளிர்" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.

அது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.

உயர்ந்த ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும். குறிக்கோளில் உறுதி வேண்டும்.

பாடல்

ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு


பொருள்

ஒருமை மகளிரே போலப் = ஒருமை மகளிரைப் போல

பெருமையும்  = பெருமையானது

தன்னைத்தான் = ஒருவன் தன்னைத் தான்

கொண்டுஒழுகின் = ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்

 உண்டு = வரும்.

பெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.

எவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது.

ஒழுகின் - அற வழியில் , இடை விடாமல் முயற்சி செய்தால்

அது படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, பெருமை அடைய இதுவே வழி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/06/blog-post_1.html